Tuesday, October 30, 2018

முள்வேலிக்குள் அகப்பட்ட இதயம் ஒன்றின் அழுகுரல்



இரு இதயங்கள் துடிக்கும் சத்தம் தான் கேட்கின்றது
ஒரு இதயம் தியாகம் செய்யும் தொனியுடனும் 
மறு இதயம் குற்றம் செய்த தொனியுடனும்
நடுவே ஒரு முள்வேலி
ஆம் முள்வேலிக்குள் அகப்பட்ட இதயம் ஒன்றின் அழுகுரல்
தான் இங்கு வரிகளாக காட்சிப்படுத்தப்படுகிறது
அழகான குக்கிராமம் அதிகாலைச் சூரியனும் கண் வைத்துவிடும்
மலர்களோ வாசனை வீசி மங்கையரைக் கவர்ந்திடும்
பச்சை வயலோ காற்றில் தலையசைத்திடும்
வண்ணச் சேலைகளோ காற்றில் உலர்ந்திடும்
பூஜைகள் சிறப்பாய் நடந்திடவே கோவில் மணி அடித்திடும்
மூன்று வேளைக்குமாய் அன்னம் அடுப்பில் அவிந்திடும்
வெட்டிப்பேச்சுக்காய் மாலை திண்ணை நிரம்பிடும்
இந்த இன்பம் போதுமென்றே சூரியனும் மறைந்திடும்
இதுதான் என் கிராமம்
நான் தான் தியாகம் செய்யும் இதயம் பேசுகின்றேன்
உடையவன் இன்றி மாற்றான் கைப்பற்றிய பின்
இறக்க இருக்கும் தறுவாயில் கடைசியாக பேசுகின்றேன்
மலர் சூடிய மங்கையரே உம் கணவரிக் இறுதிச்சடங்கை
நிறைவேற்றக்கூட வழியின்றி ஒரு மலராவது அவர் நினைவாய் வாடட்டும் எனக் கொய்கின்றீரோ
இங்கு மலர் முழுவதும் இரத்த வாடை வீசுகிறது
தப்பித்து ஓடிவிடும்
பச்சை வயலோ கருகி சாம்பலாகிவிட்டது இனி எங்கு
அறுவடை செய்ய ஊரார் உறவுடன் பந்தல் நாட்டுவது
வண்ணச் சேலைகள் இரண்டைப் பத்திரமாக எடுத்து வையுங்கள் நாடோடியாய் ஓடும் இடங்களில் தரையில் விரிப்பதற்கு ஒன்று
கிடைக்கும் மரக்கிளைகளில் குழந்தை உறங்க ஏணை கட்டுவதற்கு மற்றொன்று
கோவில் மணியை ஒருபடியாகக் கண்டு கொண்டேன்
ஆனால் கோவில்களும் விக்கிரங்களும் தான் காணாமற்ப் போய்விட்டன
ஒரு மூட்டை அரிசி ஒவ்வொருவர் கைகளிலும் இருக்கட்டும் ஒருவேளையவது உப்புக் கஞ்சி குடித்து உயிர் வாழ உதவிடும்
திண்ணைகளில் கால் வலிப்பதாய் அமர்ந்துவிடாதீர்கள்
உயிர்பறிக்கும் வெடிப்பொருட்கள் புதைக்கப்பட்டு இருக்கலாம்
இன்று எம் துயர் தாங்காத சூரியன் சோகமாய் மறைந்துவிட்டது
நானோ முள் வேலிக்கு உள்ளே என் உயிரைத் தியாகம் செய்து என் குடும்பத்தை ஏதோ ஓர் மூலையில் வாழ வழிவகுக்கின்றேன்
என்னைப் பெற்றவளோ பெற்ற கடனுக்கு செய்யாக்குற்றம் தன்னை தன்மேல் சுமத்தி கண்ணீரால் கெஞ்சிக்கொண்டு வேலியின் மறுபுறம் நிற்கின்றாள்

நான் என்பது சமூகத்தின் பிரதிபலிப்புக்களே




நான் சற்று கடினமானவள் தான்
என்னைச் சுற்றி போலியாய் சிரிக்கும் 
முகங்கள் பல கண்டும் புன்முறுவல் செய்யும்
முகத்துடன் கடந்து செல்கையில்
நான் சற்று திமிர் பிடித்தவள் தான்
சுயமரியாதையற்று சீவிக்கும்
சில சமூகங்களிடமிருந்து
சற்று விலகிச் செல்கையில்
நான் சற்று எளிமையானவள் தான்
ஆடம்பரத்தில் தான் அழகு இருப்பதாக
தங்களைத் தாங்களே ஏமாற்றும்
ஒரு கூட்டம் கண்டு உள்ளூரச்சிரிக்கையில்
நான் சற்று வேடிக்கையானவள் தான்
உண்மையை நான் அறிந்ததை அறிந்திராமல்
அதை மெருகூட்டுவதற்குப் பல பொய்களைச்
சொல்லி கதை ஆசிரியர் ஆவோர் பல மத்தியில்
நான் சற்று கோபக்காரி தான்
உண்மை நேர்மை சத்தியம் இதையணைத்தையும்
ஏளனமாய் ஓரம்கட்டி அதை ஏற்பதில்
என் மனம் சம்மதிக்காமல் வார்தைகளை கொட்டும் வேளையில்
நான் சற்று தனிமையானவள் தான்
அனைத்து உயிர்களும் அவர் அவர் கடமைகள் முடிந்தபின்
விலகிடும் தற்காலிகமான ஒரு பிணைப்புத் தான் இந்த
உறவுகள் என்று அறிந்த வேளையில்
நான் சற்று துணிந்தவள் தான்
ஆண் துணையற்ற பெண்ணின் வாழ்க்கை
சமூகத்தின் பார்வையில் இருந்து பாதுகாப்பாய்
விலகி நடக்க மனித ஓநாய்கள் பல தோன்றிய சந்தர்ப்பத்தில்
நான் சற்று விரக்தியானவள் தான்
இறப்பும் பிறப்பும் நிலையானது என்பது போல்
என் வாழ்வில் எதிலும் ஏமாற்றம் என அறிந்தும்
முயற்ச்சிகளைக் கைவிடாது விரைந்து செயற்படுகையில்
நான் சற்று அன்பானவள் தான்
ஒவ்வொரு உயிருக்கும் உண்டான மதிப்பை
அவர்களுக்காக பிறர் சிந்திடும் கண்ணீரின்
வலியை நன்கு அறிந்தமையினால்
நான் சற்று ஏமாளி தான்
அன்பெனும் போர்வை போர்த்திய விஷப்பாம்புகள்
எனத் தெரிந்திருந்தும் அன்பால் சாதித்துவிடலாம்
என இன்னும் நம்பிக்கை எனும் மாயையில் சஞ்சரிக்கையில்
இங்கு நான் என்பது சமூகத்தின் பிரதிபலிப்புக்களே
இதில் குறை தெரிந்தால் மாற்றவேண்டும் இந்த சமூகத்தையே

Sunday, October 28, 2018

யார் உனக்கு அதிகாரம் தந்தது?


என்னை வருடிச் செல்லும் மெல்லிய தென்றல் காற்றே!
அவன் நினைவுகளைத் தாங்கிடும் இந்த தேகத்தை
கூதல் செய்து செல்ல
யார் உனக்கு அதிகாரம் தந்தது?
என் நெற்றி வழி வழிந்தோடிய வியர்வைத் துளி
அவன் உதடுகளால் ஒற்றி எடுக்கும் நொடி
பூவாய் மலர்ந்திட அதை உதிர வைக்க
யார் உனக்கு அதிகாரம் தந்தது?
அவன் பார்வையில் உருகிவிடும் சந்தனத்தேகம்
அதைப் பொக்கிஷமாய் பாதுகாத்திடும்
பட்டுப் புடவை அதை மெதுவாய் நகர வைக்க
யார் உனக்கு அதிகாரம் தந்தது?
பாதத்திலாடிடும் வெள்ளிக் கொளுசுமணி
அவன் பார்வை என் திசை திரும்பும்படி
காற்றில் அவன் மேல் கொண்ட காதல் கீதம் இசைத்திட
அவன் இல்லா நேரத்தில் அதை இரசிப்பதற்கு
யார் உனக்கு அதிகாரம் தந்தது?
அந்திசாயும் வேளையில் நித்தமும்
ஏனோ ஏக்கமாய் அவன் வாங்கித்தந்த
வாசம் வீசும் கொடி மல்லிகை மாலை
அவன் மயங்கிக்கிடக்க ஆசையாய்
நான் சூட்டி அழகு பார்க்கையில்
அதன் வாசனை சற்று களவாடிச் செல்ல
யார் உனக்கு அதிகாரம் தந்தது?
இத்தனை இலட்சணமாய் அலங்கரித்து
பெண்ணாணவள் உனக்காய் உருகி உருகிக் காத்திருந்து
கண்ணீர் கன்னம் வழியே வழிந்தோடிட அதைத் துடைப்பதற்கு
யார் உனக்கு அதிகாரம் தந்தது?
உன் நினைவாலே வாடிய இந்த மலர்
உன் நிரந்தரப் பிரிவைத் துயர் தாங்காது
உயிர் நீக்க
அவ்வுயிரை காற்றோடு சங்கமிக்க
என் காதலனே உன்னைத் தவிர
இந்தக் காற்றுக்கு
யார் அதிகாரம் தந்தது?

Saturday, October 27, 2018

உன் செல்லமான சண்டைக்காரி


குழந்தைத்தனமான சிறு சண்டை
கொஞ்சும் மொழியில் பின் கெஞ்சல்கள்
வாட்டிவிடும் மௌனங்கள்
கர்வம் நிறைந்த காதல் பார்வைகள்
பேசிவிடத்துடிக்கும் இதயங்கள்
இடைவெளி குறையும் தூரங்கள்
வெட்கம் கொட்டும் பார்வைகள்
அதை இரசிக்கும் இரட்சகன் நீ
உன் அணைப்பில் மெய் மறந்த நான்
இந்த ஒரு நொடிக்காய் தான் என் இத்தனை நிமிட
வாக்கு வாதங்கள்
உன் செல்லமான சண்டைக்காரி நான்
அர்த்தமற்றதாய் அரும்பிடும் வாதங்களில்
உன்னை வெல்பவளாய் தினமும் புதிதாய்
சண்டைகள் பிடித்திடவே காத்திருப்பேன்
என்ன புதிதாய் பார்க்கிறாய்?
காதலில் இருக்கத்தானே வேண்டும்
சண்டைகளும் பின் தழுவல்கள் நிறைந்த சமாதானமும்
கட்டியணைத்து நீ பார்க்கும் பார்வையில் தெரியுமடா
ஓராயிரம் மன்னிப்புகள்
அதில் இலயித்துப்போகவே என் குறும்புத்தனமான சண்டைகள்
வேடிக்கையான இந்தத் தழுவலில் என்ன சுகம் இருக்கிறது
என விநோதமாய் பல முறை கேட்டிருப்பாய்
நீண்ட நேரம் திட்டித்தீர்த்த உதடுகள் களைத்திருக்கும்
நீண்ட நேரம் சொரிந்த கண்ணீரால் கண்கள் வற்றிப்போயிருக்கும்
காதலையும் உன்னையும் சுமக்கும் தேகமோ சோர்வடைந்திருக்கும்
கரங்களோ பற்றிக்கொள்ள ஒரு துணை தேடும்
அச்சந்தர்ப்பத்தில் நீ என்னைக் கட்டியணைக்கும்
ஒவ்வொரு நொடியும் இன்னும் கொஞ்ச நேரம் எனக்
கேட்கும் தேவாமிர்த நொடிகளே
காலங்களும் கடந்து போயின
நம் காதலும் திருமணபந்தத்தில் கனிந்தது
பொறுப்பான கணவனாக இன்று நீ
உன்னைச் சீண்டிப் பார்க்கும் அதே
செல்லமான சண்டைக்காரி நான்
இம்முறை என் சண்டைகள் அனைத்தும்
உன்மீது அக்கறை கொள்பவையே
வெகுநேரத்தின் பின்னான உறக்கம்
தட்டிக்களிக்கும் என்னுடனான நேரம்
கால்வாசி வயிறு நிரம்பிடா உணவு
உன்னை நீயே திட்டிக்கொள்ள தனிமை
எப்படி ஏற்றுக்கொள்ளும் என் மனம்?
அன்பே துணைவி எனும் மரியாதை ஊரார் அறிய
நீ எனக்குத் தந்த பொக்கிஷம்
அதைவிட என்றும் உன் காதலியாய் துணை நிற்கவே
விரும்புகிறேன்
பொறுப்புகளாளும் சொல்ல முடியா வேதனைகளாளும் என்னை ஓரம் கட்டி விடாதே
அதே காதலுடன் உன்னிடம் உன் காதல் நிரம்பிய தழுவலுக்காய் உன்னிடம் சண்டை போடக்காத்திருக்கின்றேன்
உன் செல்லமான சண்டைக்காரி

Wednesday, October 24, 2018

சிகரெட் காதலி


இரு விரல்கள் நடுவில் காதலோடு 
என்னைப் பற்றிக் கொண்டாய் 
எனக்கு கதகதப்பளிக்கவே 

காதல் தீயும் மூட்டினாய்
கிடைக்கும் சந்தர்ப்பங்கள் எல்லாம் உன் உதட்டு ரேகையை 

என்மேல் பதிய வைத்தாய்
யாருமற்ற சந்தர்ப்பங்கள் மட்டுமின்றி ஊரார் முன்னும் தைரியமாக அவ்வப்போது 
என்னை அறிமுகம் செய்து வைத்தாய்
எத்தனை பேர் கூறியும் மன்றாடியும் பற்றிய உன் கரம் நழுவவில்லை
இதை விட வேறு என்ன பாக்கியம் தான் இந்தக்காதலிக்கு கிடைத்து விடப்போகிறது?
இன்று உன்னை விட நான் உன்னைக் காதல் செய்கின்றேன்
என் காதல் பிணைப்பினால் நான் இல்லாத ஒரு வாழ்வை நீ கனவிலும் காணமாட்டாய்
இன்னும் அதீதமாக உன்னைக் காதல் செய்ய உன் உயிர் சுவாசம் எங்கும் ஊடுருவி முன்னேறிச் செல்கின்றேன்
உன் ஆன்மாவுடன் ஒன்றோடு ஒன்றாய்க் கலக்க உன் சுவாசப்பையை நெருங்கிவிட்டேன்
எனக்கு ஓர் ஆசை
உன் இதயத்தில் என்னைப் பற்றிய நினைவுகள் அனைத்தையும் ஒருமுறை முத்தமிட்டு கட்டியணைப்பதற்கு
வேகமாய் நிதானமற்று குருதியுடன் கலந்து உன் இதயவறைகளை எட்டிப் பார்க்கின்றேன்
நீ என்னை ஏமாற்றிவிட்டாய்
உன்னை மட்டுமே மனப்பூர்வமாய் ஏற்றுக்கொண்ட என்னை விட கசப்பான பழைய நினைவுகள் உன் இதயத்தில் சுட்டெரித்துக்கொண்டு இருப்பதைக் கண்ட என் மனம்
எவ்வளவு துடித்திருக்கும் என்பதை அறிந்திராமல் நீயோ
பழைய நினைவுகளிடம் இருந்து தப்பிக் உன்னை நீயே என்மேல் காதல் என்று ஒரு வடிவம் கொடுத்து ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றாய்.
உன்னை நேசித்த இதயமல்லவா எப்படி உன்னை நீங்கிச் செல்வேன்? 

ஏமாற்றப்பட்டதை அறிந்தும் 
உன் விரல்கள் நடுவில் வாழும் 
சிகரெட் காதலி

Tuesday, October 23, 2018

அவள் தான் என் அம்மா


ஆங்கிலம் பெரிதாய் தெரிந்திராதவள்
என் ஆசைக்காய் முயற்சித்து உச்சரித்து விடுவாள்
என் விருப்பங்கள் பெரிதாய் அறிந்திராதவள்
விரும்பியதை வாங்கித் தந்து என்னை சமாதானம் செய்திடுவாள்
தன்விருப்பத்தில் தெரிவுகளை மேற்கொள்ளாதவள்
என் விருப்பத்தை எப்பொழுதும் ஏற்றிடுவாள்
தன் பசி அறியாது அடுப்படியில்
என் பசி போக்க காய்ந்திடுவாள்
வண்ணங்களில் சேலை அணிந்திடாதவள்
வண்ணமயமாய் என் வாழ்வை மாற்றிட போராடிடுவாள்
துன்பங்கள் பல சகித்துக்கொண்டவள்
என் முகம் துவண்டதைக்கண்டு
கண்ணில் உதிரம் வடிப்பாள்
கணவன் அவன் உயிர்துறக்கையில் கைம்பெண்ணாய்
தந்தையுமாகி நின்றவள் அவள்
பெற்றகடனுக்கு நான் பெரிதாய் உனக்கு
ஏதும் செய்யவில்லை எனினும்
மற்றோர் முன் என்றும் உயர்வாய்க்கூறிடுவாள்
தூய்மை அது வெண்மை மட்டுமில்லை
அதை நான் அச்சொட்டாய்க் கண்டதில்லை
கருமை நிறத் தேகத்திலும் தூயவள்
அவள் தான் என் அம்மா

அடுப்படியில் அம்மா உன் நேசம்


அடுப்படியில் அம்மா உன் நேசம் கண்டு
எத்தனைமுறைதான் நான் வியப்பது?
அதிகாலை எந்த வேலையும் இல்லாத சேவல் கூட
உறங்கிக்கிடக்கையில் பாத்திரம் தேய்க்கும் சத்தம் 
கேட்டு தான் நான் பல முறை விழித்தெழுவேன்
கொட்டும் பனியில் எனக்காய் ஆகாரம் செய்திட
பாத்திரங்கள் சுத்தம் செய்வதில் என்னை கவனித்திருக்கமாட்டாய்
ஒரு சாண் வயிற்றுக்கேற்ப உண்டு நீர் அருந்திடவேண்டும்
என்பேன் பாடசாலைச் சீருடையுடன்
இன்னுமொரு தோசை அடுப்பில் இருக்கிறது
என்றே மன்றாடி ஊட்டிவிடுவாய்
பரீட்சைகாலம் நெருங்கவே உண்ண உறங்க மனமின்றி
என் சிந்தனை எதயோ நாட
ஊட்டச்சத்து உணவின்றி என் மகள் ஊக்கம் குறைந்தது என்பாய்
கோபம் உன்னில் காட்டிட சந்தர்ப்பமாய் பட்டினி
கிடந்திடுவேன்
கண்கலங்கிய நீயோ ஊட்டிவிட முன்னும் பின்னுமாய்
கெஞ்சிடுவாய்
அன்பை வெளிக்காட்டிட நீ வாய்மொழியால் என்னிடம்
சொல்லாவிட்டாலும்
கரி படிந்த அடுப்படிச் சுவர் இன்னும்
தீயாய் என்னைச் சுட்டுக்கொண்டிருகிறது அம்மா
உன் கையால் ஊட்டிவிடும் சோற்றுருண்டையில்
அறுசுவை தெரியவில்லை மாறாக
உன் அடுப்படி நேசம் தெரிகிறதம்மா

Monday, October 22, 2018

யாருமற்ற வாழ்க்கையை வாழ பழகிக்கொள்வீர்கள்


காதல் கொண்டு ஆசையாய் கட்டிய மனைவி
கடைசிவரை உறுதுணையாய் உன்னைக் காப்பேன் என
அக்கினி குண்டம் வலம் வந்தேன்
செய்த சத்தியம் பொய்யாய்ப் போய்விட
உன் பெற்றோருக்கு நான் அளித்த வாக்கு மங்கும் படி
என் உயிர் இவ்வுலகம் விட்டு போகப் போகிறது
எண்ணும் எழுத்தும் கண்ணாய்
பிள்ளைகள் நால்வரைப் பெற்றேன்
கல்வி எனும் கடலில் கரைதாண்டி
பட்டம் பெற ஆனந்தமாய் நானும் கண்ணீர் மல்க
கனவுகள் தான் பல நெஞ்சில் சுமந்தேன்
நீங்கள் வாங்கும் முதல் மாத சம்பளத்தில்
வேண்டுதல்கள் பல நிறைவேற்றிட தெய்வம்
அருள்புரிய வேண்டி நின்றேன்
நல்ல இடமாய் மாமா என அழைத்தாலும்
பெறாமக்களாய் என் அன்பைச் சொரிந்திட
ஊர்ஊராய் ஊர்வலம் சொந்தங்களுடன் கூடியே
என் மக்களுக்கு கனவில் திருமணமும் நிகழ்த்தி விட்டேன்
எத்தனை கடை தான் ஏறி இறங்கினாலும் பிஞ்சு மொழியால்
தாத்தா இன்னும் ஒன்று வாங்கி தாங்க என்று சொல்லும்
பேரக்குழந்தைகளையும் ஒருமுறையாவது தூக்கி சுமந்துவிடுவேன்
இப்படி ஆசைகளை மூட்டை கட்டி வயதுபோன நாற்காலியில்
இளம் வயதோடு போகப் போகும் என் உயிருக்காய் நான்
நிமிடங்களை எண்ணி களைப்புற்று விட்டேன்
பிறக்கையில் மரணத்தின் விதையை நாட்டி விட்டு
இம்மண்ணுலகில் ஏன் பிற உயிர்களோடு பந்தங்களை
ஏற்படுத்துகின்றோம்
அவர்களின் நீங்காத துயர் மூலமும் நினைவு வரும் வேளையில் கண்ணீர்த்துளி மூலமும் பிறப்பெடுப்பதற்கா?
இறப்பு என்பது எத்தகைய
கொடியது என இறக்கும் தறுவாயில்
துடித்த இதயங்களிடம் கேட்டுப்பாருங்கள்
யாருமற்ற வாழ்க்கையை வாழ பழகிக்கொள்வீர்கள்

Sunday, October 21, 2018

பழைய புத்தகத்தில் நடுப்பக்கத்து மயிலிறகாய்


விதிகளைத் தளர்த்தெறிந்த 
வரைமுறையற்ற பார்வை வீச்சினால்
வன்முறைகள் பல செய்கிறாய்
தூரம் நான் தேடி நின்றாலும்
என் பேர் சொல்லிய வெப்பம் நிரம்பிய
உன் சுவாசக்காற்றால்
வலிமை இழக்கச் செய்கிறாய்
ஆணுக்கான திமிர் நிறைந்த தோரணையில்
எப்பக்கமும் சாயாக் கொடி என்னை
மெழுகுசிலையாய் உருக வைத்தாய்
இத்தனை அழகாய் சொல்லாக்காதலை
ஒரு சொல்லில் உதட்டோடு வருடிவிட
எத்தனை வருடமாய் நானும் காத்திருக்க
இது உன் விதி என எழுதி வைக்கா என் காதல் காவியத்தை
முடித்து வைத்தது காலம் எனும் விதி
இனி எங்கு சொல்லப் போகிறாய்
சொல்லா உன் காதல் கதையின் கதாநாயகி
பழைய புத்தகத்தில் நடுப்பக்கத்து மயிலிறகாய்
உன் நினைவுடன் மடிந்து கிடக்கின்றேன்

Thursday, October 18, 2018

கலியுகத்திலும் இன்னும் தசரதர்கள்


எழில் கொஞ்சும் அன்னம் அது
உன் நடையழகை சாயல் கொண்டு
மெல்ல வர அதனழகில் காதல் வயப்பட்டு
அந்நாளில் பெண் மேல் காதல் புரிந்தானொருவன்
விரிந்த செந்தாமரை இதழ் மென்மையில்
இடையழகை வர்ணித்து ஒப்பீடுகளில்
வரைமுறை பேணி பெண் மேல் காதல் புரிந்தானொருவன்
சிவதனுசை வில்லொடித்து மணமாலை மணமகன்
சூட்டிட சுயம்வர வேளையில் வீரமகன் வதனம் கண்டு
வெட்கத்தால் அவள் சிவந்திட வீரம் கொண்டு
வில்லொடித்து பெண் மேல் காதல் புரிந்தானொருவன்
இப்படி இதிகாசங்களிலும் புராணங்களிலும் காதல் கற்பு
நெறி தவறாமல் உரைத்து நின்ற பெருமான்களே
உம்போல் உரைப்பதற்குப் பலர் இருந்தும் கேளாய்ச் சமூகமாய் மாறிவிட்டார்கள் எம்மவர்கள்
விதைத்தவன் நன்கு செழித்து வளரந்த பயிரை உரிய முறையில் அறுவடை செய்யக்காத்திருக்கும் வேளை
தீ மூட்டி அதில் குளிர்காய்ந்து கருக வைத்த பாவிகள்
வாழும் உலகம் இது
பாவம் நாளை அவர்கள் விதைக்கையில் அவர்களின் பயிர்களுக்கும் இதே கதி என்பதை மறந்துவிட்டார்கள்
இராமவதாராம் முடிந்தும் கலியுகத்திலும் இன்னும் தசரதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்
இதயத்தால் காதல் கற்பற்ற கன்னியர்கள் நினைவில்
நீங்காச் சிலை எழுத்துப்போல

Monday, October 15, 2018

ஓடாதே என் ஆசைக் கணவா


ஓடாதே என் ஆசைக் கணவா
அன்று தொட்ட காலம் முதல் 
உன் மீது கொண்ட காதல்
பூமாலை மணக்கோலம் தாண்டி
இப்பூவுலகில் இருவரின் பாதமும் 
ஒருமித்தப் பதிந்திட தவம் இல்லா
வரம் ஒன்று கைகளில் ஏந்தியும்
எல்லையில்லா மகிழ்ச்சியை
விழிகளால் வழிந்தோடிடும் கண்ணீரும்
உரைத்து நிற்கும்
என் வாழ்நாள் முழுவதும் சேர்த்துவைத்த
ஆசை எல்லாம் திகட்டத்திகட்ட
பாசமாய் ஊட்டிவிட உன் மார்பின் அருகில்
சற்று இடம் தந்து
என்னை அணைத்துக் கொள்
கழுத்தில் நீ கட்டிய மாங்கல்யம்
வேலி மட்டுமல்ல உன் மீது நான் கொண்ட
அதீத காதலையும் கர்வத்துடன் தினமும்
நினைவூட்டி நிற்கும் எவ்வேளையும்
வேலை மக்கள் குடும்பம் என்று ஓடிவிடாது
என்னைக் கொஞ்சம் அணைத்துக் கொண்டு
அமைதியாய் இரு
அந்த நிசப்பத்தில் எனக்காக மட்டும் துடிக்கும் உன்
இதயத் துடிப்பை கேட்டுக் கொண்டே என் வாழ்நாளைக்
கழித்துவிட ஒரு கணம் ஓடாதே என் ஆசைக் கணவா

ஏன் இன்னும் இந்த இடைவெளி?


பதிவுத் திருமணமும் முடிந்துவிட்டது
சட்ட ரீதியாக மட்டும் மனைவி ஆகிவிட்டேன்
ஊர் அறிய உறவறிய திருமணத்திற்கு நாள் பார்க்கிறாள்
உன் மாமியார்
தடபுடலாய் சமையலுக்கு ஆள் தேடுகின்றான் உன் மூத்த மச்சான்
மண்டபம் அலங்காரம் பத்திரிகையில் நேரத்தைப் போக்காட்டுகின்றான் உன் இளைய மச்சான்
அறிவுரையும் சமையல் கலையும் அழகுக்கலையிலும் நிபுணத்துவம் பெறுகிறாள் உன் மைத்துனி
நான் மட்டும் உன் நினைவாய் எம் சந்திப்பிற்காய் காத்திருக்கின்றேன்
அனைவரும் கோவில் சென்றுவிட்டார்கள்
நான் மட்டும் தனிமையில் உன் நினைவுகளோடு
எதேற்சையாய் நீயும் வந்தாய் இது கனவல்ல மறக்க முடியா நினைவு
காதல் புரிய இதுவல்லவோ சிறந்த நேரம் என நான் நாணம் கொட்ட என் அருகில் வந்த நீயோ என் கண்களை தின்பதாய் பார்க்கிறாய்
நாணம் கொஞ்சம் வெட்கமாய் மாறிட என் பெண்மைக்கான கூச்சத்தை ஓரம் கட்டி உன்னிடம் கேட்டேன்
“ ஏன் இன்னும் இந்த இடைவெளி?”
செல்லமாய் என் கன்னத்தைத் தட்டியவாறு கூறினாய்
“ஊரார் ஆசியுடன் உன்னை மனைவி ஆக்கிய பின் இனி ஏது இந்த இடைவெளி “
கண்கலங்கிய என் கண்மடலைத் துடைத்தபடியே பார்க்கின்றாய்
அதில் தெரிந்ததோ உன் ஆண்மையின் அடையாளம்

Saturday, October 13, 2018

அம்மா எனக்கோர் மாப்பிள்ளை பாருங்கள்


அம்மா எனக்கோர் மாப்பிள்ளை பாருங்கள்
திருமணவயதை ஓரளவு அடைந்துவிட்டேன்
உங்கள் கைப்பக்குவத்தில் அறுசுவை விருந்தளிப்பேன்
இல்லத்தரசிக்கேற்ப ஓடியாடி உங்கள் பெயரைக் காப்பாற்ற 
மாமியார் வீட்டில் வேலை செய்வேன்
சடங்கு சம்பிரதாயங்களைக் கொஞ்சம் சொல்லித்தாருங்கள் போகும் இடத்தில் கடைப்பிடிக்க
மாப்பிள்ளை அவர் உங்கள் விருப்பம்
உங்களின் எந்தத் தெரிவையும் நான் ஏற்றுக்கொள்வேன்
உயரம் வயது நிறம் குணம் அழகு படிப்பு பதவி பணம் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை
ஏனெனில் பார்த்துப் பார்த்து நான் தேடிய தேடலில் ஏமாற்றப்பட்டுவிட்டேன்
அவன் நிறம் சற்று கறுப்பு அதில் எனக்கோர் விருப்பு
அவன் வார்த்தைகளால் மட்டுமல்ல அவ்வப்போது பார்வைகளாலும் என்னை வளைத்துவிடுவான்
எனக்கேற்ற உயரம்தான் அதை அளந்துபார்க்க அருகில் பலமுறை நின்றிருப்பேன்
அவன் மொழி தமிழ்தான் ஆதலால் தமிழ் மேல் அதீத பற்றுக் கொண்டேன்
அவன் குணம் குழந்தைத்தனமானதுதான் என் கோபத்திலும் இரசித்திருந்தேன்
அவனுடனான நேரம் எல்லாம் புன்னகை மட்டும்தான் அதனால் செல்லச்சண்டை போட்டு வாக்குவாதின் பின் அவன் சமாதானத்திற்காய் காத்திருந்தேன்
இத்தனையுமாய் அவனை நான் இரசிக்கையில் இரசிப்பதற்கு மட்டும் என்னை தேர்ந்தெடுத்து
பின் இரசிக்கப்பட்ட பொருளாக மாற்றிவிட்டான்
இத்தனை காலம் பொறுமையாய் இருந்து தேர்ந்தெடுத்த தெரிவு என்னை ஏளமாய் பார்க்கையில் உங்கள் தெரிவு எதுவாக இருந்தாலும் மனமில்லாத நிலையில் ஏற்றுக்கொள்கின்றேன் அம்மா

உன் வருகைக்காக காத்திருக்கும் நான்


எத்தனை தவங்கள்
எத்தனை மன்றாடல்கள்
எத்தனை கெஞ்சல்களின் பின் 
நீ என்னிடம் வந்து சேர்ந்தாய்
அத்தனையும் பொய்யாக்கியது போல மறுபடியும்
என்னை உதாசீனப்படுத்திவிட்டாய்
இருவரின் கைகளும் கோர்க்கப்பட்டு
கனவுகள் பிணைக்கப்பட்டு
வார்த்தைகள் உரசப்பட்டு
எம் எதிர்காலத்தை வர்ணம் தீட்டினோமே
யாரும் வரையாத கோலமாய் எம் இருவரின் வாழ்க்கையை சித்தரிக்க
அதை அலங்கோலமாக்கியது ஏனோ?
நிழலாய் வேண்டாம் ஒளியுடன் போய்விடும்
கனவாய் வேண்டாம் துயில் எழுந்தபின் கலைந்திடும்
உயிராய் வேண்டாம் உடல் இறந்தபின் தொலைந்திடும்
மணமாய் வேண்டாம் மலர் வாடியபின் உறங்கிடும்
சுவையாய் வேண்டாம் புலன் அற்றதும் மறத்துப்போய்விடும்
காற்றாய் வேண்டாம் பூமியோடு செறிவு குறைந்திடும்
திங்களாய் வேண்டாம் ஞாயிறு வந்திடும்
நீராய் வேண்டாம் நிலை மாறிடும்
இரயிலாய் வேண்டாம் தடம் புரண்டிடும்
கால் தடங்களாய் வேண்டாம் பாதை மாறிடும்
எதுவாய் என்னை நீ இருக்கச் சொல்கின்றாயோ
உன்னைப் பிரியாவண்ணம் உன்னைத் தொடர
புதிதாக ஒன்றைக் கண்டு பிடித்து வந்திடு
வரமாட்டாய் என அறிந்தும் உன் வருகைக்காக காத்திருக்கும் நான்

Friday, October 12, 2018

என்னளவில் அகரம்

அன்பு
நான் வாழ்வதற்கு ஆதாரம்
அழகு
உள்ளதில் காணவேண்டிய பண்பு
அறிவு
மற்றவர்முன் என்னை உயர்த்துவது
அடக்கம்
சான்றோரின் முன் காட்டவேண்டியது
அகம்பாவம்
அழிவிற்கு ஆரம்பம்
ஆக்கம்
என்னுள் உள்ள படைப்பு
ஆதரவு
தளர்ந்துபோன இதயத்திற்கு
ஆசை
நான் கனவில் தீர்த்துக்கொள்வது
ஆடம்பரம்
விருந்தோம்பலில் இருக்க வேண்டியது
இசை
தனிமையின் துணை
இறைவன்
மனிதரை மனிதராய் மதிப்பவன்
ஈட்டி
நீ அடுத்தவரை சொல்லால் வைக்கும் குறி
உண்மை
அரிதாய் கிடைக்கும் அழிவற்ற சக்தி
உணவு
சிலருக்கு கிடைக்காத பலர் வீணாக்கும் கொடை
ஊக்கம்
கை விடக்கூடாத ஒன்று
எளிமை
உன்னை அலங்கரிக்கும் அணிகலன்
எண்ணம்
சக்திவாய்ந்த ஆயுதம்
ஏமாற்றம்
நான் பெற்ற வரம்
ஏளனம்
தன்னிலை மறந்த பலர் செய்யும் செயல்
ஏக்கம்
ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரி
ஐயம்
உறவுக்கு கேடு
ஒன்று
ஒரு செயலில் மனம் இருக்க வேண்டியது
ஒழுக்கம்
தாய் தந்தையின் வளர்ப்பை குறிப்பது
ஓடம்
நான் வாழும் வாழ்க்கை
ஔவியம்
ஔவை சொன்ன மொழி                                                                                                                             
அம்மா என்னுடன் வாழும் என்னை வாழ வைக்கும் தெய்வம்                                                                                  அப்பா நான் சிறுவயதில் தொலைத்த பொக்கிஷம்

காதல் அகதி

உன் பார்வைப் போரில் சிக்குண்டு
உன் இதயத்தில் நிரந்தரமாய்க் குடியேறிட
என் கோபம் திமிர் கர்வம் உடைமைகளைக் கழைந்துவிட்டு
உன் நிழல் மட்டுமே என் சொந்தம் என்று
அன்பை மட்டும் பாத்திரமாய் ஏந்தி 
ஆயுள் முழுவதும் உன் வசமாக்கிட
காதல் அகதி ஆனேனே

ஞாபக மறதி அனைவருக்கும் கிடைக்காத வரம்

ஞாபக மறதி அனைவருக்கும் கிடைக்காத வரம்
சிலரின் செயலை
சிலரின் ஞாபகங்களை
சிலரின் வார்த்தைகளை
சிலரின் கோபங்களை
சிலரின் பிரிவை
சிலரின் வரவை
சிலரின் மௌனங்களை
சிலரின் புன்னகையை
சிலரின் அனுதாபங்களை
சிலரின் சவால்களை
சிலரின் சுயநலத்தை
சிலரின் அன்பை
சிலரின் நேசத்தை
சிலரின் வலியை
இன்னும் ஞாபகப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது.

எப்படிக்கூறுவேன்



எப்படிக்கூறுவேன்
உன் கை விரல்களுக்கு துணை என் கை விரல்கள் என்று
உன் காலடி வழி என் பாதசுவடுகள் என்று
உன் தலையணையாக என் மடி என்று
உன் தலைமுடி கோத என் கைவிரல்கள் என்று
உன் தேகம் தழுவ என் ஸ்பரிசம் என்று
உன் பார்வைக்கு மறுமொழி என் மௌனம் என்று
உன் இரவுகள் நீள என் கதை என்று
உன் உதடு வழி பருக்கை என் அமிர்தம் என்று
உன் நெற்றி வியர்வை என் சேலையில் என்று
உன் அரவணைப்பு என் காலைத் தேநீர் என்று
உன் முத்தச்சுவடு என் கன்னம் பெற்ற பொக்கிஷம் என்று
உன் அசைவுக்கு முன் என் இசைவு என்று
உன் குறும்புகளுக்கு குழந்தை என் கூச்சம் என்று
உன் புன்னகை எல்லாம் என் தவம் என்று
உன் சோர்வை தணிக்கும் என் தாய்மை என்று
உன் பசிக்கு ஆகாரம் என் காதல் என்று
உன் முதுமையில் இளமை நான் தான் என்று
உன் கேள்வியின் பதிலே நீ தான் என்று

அதுவோ காதல்



முடித்துக்கொள்ள எண்ணித் துணிகையில்
அரும்பியது உன்மேல் புது நேசம்
பாவம் இவள் பைத்தியக்காரி
அதற்கு பெயர் வைத்தாள் அதுவோ காதல்
ஓடும் திசை தெரியாப் பறவையாக 
காற்றைக் கிழித்துக் கொண்டு செல்கின்றேன் நான்
இறக்கைகளும் வலிக்கின்றன
ஓய்வெடுக்க தங்குமடங்கள் பல உண்டு
மனம்தான் இல்லை.
மனம் வைத்து நேசித்தேன் உன்னை
மறுபடியும் திசையறியாமல் பறக்கச் செய்தாய் என்னை
முடித்துக்கொள்ள துணிந்துவிட்டேன் என் பயணத்தை
இதுதான் இந்தப் பறவையின் வாழ்க்கை

மாற்றாள் காதலன்

ஆண்மகனே!
உன்னிடம் வேண்டுதல் விடுக்கவும் கோரிக்கை வைக்கவும்
என்னிடம் தகுதி இல்லை
ஆனால் ஒன்றைக் கூறுகின்றேன் சற்று
செவிமடுத்தால் போதும்
என்றொரு பெண்ணை நீ உள்ளத்தாலும் உடலாலும்
நேசிக்கத் தொடங்கினாயோ
அன்றே அவள் மனதில் தாழி கட்டா கணவன் எனும்
மதிப்பை அடைந்துவிட்டாய்
அதன்பின் அவள் அழைப்புகளும் நடத்தைகளும்
உன்னைத் தாங்கிடும் வண்ணமே இருக்கும்
நீ கவலை கொண்டால் அவள் கண்ணீர் வடிப்பாள்
நீ கோபம் கொண்டால் அவள் பணிந்து போவாள்
நீ பசி கொண்டால் அவள் ஆகாரமாகுவாள்
நீ சோர்வு கொண்டால் அவள் புத்துணர்வாக்குவாள்
இப்படி உனாக்காக தன்நிலையை மாற்றிக் கொள்வாள்
ஆனால் உன்னால் உருவாகும் பந்தத்தில் ஏமாற்றம் வந்தால் அதைத் தாங்கமாட்டாள்
பெண்களின் குணநிலையில் இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, உறைப்பு, உவர்ப்பு எனப் பாகுபாடு உண்டுதான்
ஆனால் உள்ளத்தில் உனக்காக உள்ள அன்பு மட்டும் என்றும் ஒன்றுதான்
தெரிவு செய்வதில் நிதானம் கொள் அல்லது தெரிவினை தள்ளிவை
புதியன புகுதலிலும் பழையன கழிவதிலும் காதலைப் பிரயோகிக்காதே
உன் அன்னையை மதிக்காதவனாய் நீ இருக்கலாம்
உன் சகோதரிகளுக்கு பொறுப்பற்றவனாய் இருக்கலாம்
உன் காதலிக்கு ஏமாற்றுக்காரனாயும் இருக்கலாம்
ஆனால் நாளை பிறக்க இருக்கும் உன் பெண்குழந்தைக்கு
உண்மையான தந்தையாய் இருப்பதை மட்டும் ஒரு கணம்
சிந்தித்துப்பார்
ஆணின் மனநிலையைப் புரிந்துகொள்ளும் உனக்குக்கிடைத்த வரமாய் உன் காதலியைப் போற்றுவாய்
மாற்றொரு தெரிவினை மேற்கொள்ள சந்நர்ப்பம் கொடுக்காமல்

Thursday, October 11, 2018

நேரத்தை வீணாக்காதீர்கள்



வசந்தகாலம் என எண்ணி பயணித்தேன் உன்னுடன்
இலையுதிர்காலமாய் எனை நீங்கிச் சென்றாய்
கருமுகில் சூழ் கார்காலமாய் கண்கள் நீர் மூழ்கிடக் கேட்டேன் திரும்பி வந்துவிடு என்று
சொல்லில் கோடை காலம் கம்பீரமாக என்னை விரட்டியது
இருந்தும் மீண்டுமொரு வசந்தகாலம் வராதா என 
துளிர்விட்டு உனக்காக காத்திருந்தேன்
கிடைத்தது உன் திருமணப்பத்திரிக்கை
மணப்பெண் என்று யாரயோ குறிப்பிட்டு
என் கண்ணீர் காற்றில் கரைந்து போனது
என் தவிப்பு தவிடு பொடியானது
என் நினைவலை உன்னைவிட்டு நிலைகுலைந்து போனது
காலங்கள் மாறி மாறி மாறிக்கொண்டே இருக்கிறது
ஆனால் என்னால் மட்டும் மறந்தும் மாறிவிட முடியவில்லை
இடி விழுந்த மரமாய் உணர்வற்று இருக்கின்றேன்
இனி எக்காலமும் என்னில் எந்த காலமும் நிகழாது
யாரும் தண்ணீர் ஊற்றி நேரத்தை வீணாக்காதீர்கள்

மழலை நியாபகங்கள்

மயிலிறகாய் வருடிவிட்டுச் செல்கிறது 
மழலை நியாபகங்கள்
சிணுங்களுடன் தூக்கக்கலக்கத்தில்
அம்மாவிடம் பெற்ற முத்தங்கள்
பஞ்சுமிட்டாஸ் வாங்க உண்டியலில் 
திருடிய சில்லறைகள்
பிக்காசோவை மிஞ்சிவிடும் சுவரின் மீது நான் வரைந்த கிறுக்கல்கள்
தீப்பெட்டிக்குள் அடைத்து வைத்து
அழகு பார்த்த மின்மினிப்பூச்சிகள்
சமைக்க வைத்த அரிசியை அம்மா அறியாமல்
நான் தூவிட விருந்தாளியாய் வந்த மைனாக்கள்
பொம்மையைத் தூங்க வைக்க நான் பிதற்றிய
மழலை மொழிக் கதைகள்
விடிந்த பின்னும் எழ விடாமல் இன்னும்
தூங்க வைக்கும் கற்பனைக் கனவுகள்
ஆண்குழந்தை போல் அப்பாவிடம்
அடிவாங்க நான் செய்த குறும்புகள்
இன்னும் எத்தனையோ சுகமான நினைவுகள்
நினைத்துப்பார்த்திடவே முகத்தில் பூக்கின்றது புன்னகைகள்


நான் வரைந்த சித்திரத்தை நீ அறிவாயா அம்மா❤️

குழந்தையாய் உன் கரத்தில் தவழ்ந்தபோது என்னை அரவணைத்து தந்தாய் முதல் முத்தம்
உன் ஓசை கேட்டு திரும்பிய என் புன்னகைக்கு
கண்மணி என்னைக் கண்டு கொண்டாய் என இரண்டாம் முத்தம்
உன் மொழி பேசிட நான் முயற்சித்து பல ஓசைகள் எழுப்பிடத் தந்தாய் மூன்றாம் முத்தம்
பிஞ்சு விரல் நீட்டி உன்னைத் தொட்டு புன்னகைக்கையில் 

உள்ளங்கைகளில் தந்தாய் நான்காவது முத்தம்
பசி தீர்க்கும் போது உன் முகம் கண்டு அருந்திய அமிர்தம்
வாசனை நுகரந்து தந்தாய் ஐந்தாவது முத்தம்
உன் கருங்கூந்தல் தன்னை இறுகப் பற்றிக் கொண்ட நான்
என்னை விட்டு அகலாதே என சமிஞ்சை செய்திட
கெஞ்சலுடன் தந்தாய் ஆறாவது முத்தம்
உன்னையும் தான்டி புதிய உலகமாய் தந்தையை அறிமுகம் செய்து பெருமையுடன் தந்தாய் ஏழாவது முத்தம்
நான் ஈன்றெடுத்த பொக்கிஷம் என்று ஊரறியக் கூறி
கவர்வமாய்த் தந்தாய் எட்டாவது முத்தம்
வெயிலோ மழையோ பிணியோ குளிரோ எதுவும் உன்னைத் தாண்டி வராமல் காத்துத் தந்தாய் ஒன்பதாவது முத்தம்
பல முயற்சியின் பின் சற்றும் தழராத நான்
அம்மா எனக்கூறிட ஓட்டு மொத்த அன்பையும் கொட்டி
திகட்டாமல் என் உயிரே எனத்தந்தாய் பத்தாவது முத்தம்
இந்த பத்து முத்தங்களை நான் என்றும் மறவேன் அதுபோல்
பத்து மாதம் கருவறையில் முத்தத்தால் நான் வரைந்த சித்திரத்தை நீ அறிவாயா அம்மா
❤️

புறாக்குஞ்சு




அழகியதொரு புறாக்கூடு 
என் அப்பா தேடித்தேடி எனக்காய் கட்டிய கூடு
அம்மாவும் நானும் என் உடன்பிறப்புக்களும் வாழ
சிக்கனமாய் சேமித்த உழைப்பில் நெய்யப்பட்ட கூடு
பலத்த காற்று இல்லை இல்லை சிறு சூறாவளி வீச 
சிறகு விரித்து காத்திருந்தார் என் அப்பா
கிடைத்த இரையை எமக்கு பகிரவே உம் உழைப்பு போதுமாயிற்று அப்பா
இருந்தும் சேமித்து உமக்கும் தந்தாள் என் அம்மா
என் உடன் பிறப்புக்கள் முட்டையை விட்டு வெளியே
வந்து விட்டார்கள் நான் வெளிவர நாளாகும் அப்பா
கருவிலிருந்து உம்மை நேசிக்கின்றேன் அப்பா
இந்த முறை சூறாவளி இல்லை கொடிய விஷப்பாம்பு
உம்மைத் தீண்ட கவனமாக இரு மகளே எனக் கூறி உயிர் மாய்த்தீர் அப்பா
அம்மா இம்முறை எம்மீது உம் கவனமும் அக்கறையும் கூடிடவே அப்பாவின் இடத்தில் தந்தையானவள் ஆகினாள்
மற்றைய குஞ்சுகள் வளர்ந்துவிட்டன இப்பொழுது இரை தேடச் சென்றுவிட்டன
அவர்களுக்கும் நம் போன்ற கூடு அமைய நினைத்தீர்கள் ஒவ்வொரு திசையில் அமைத்துக் கொண்டார்கள்
கடைசிக் குஞ்சு நான் முட்டையை விட்டு வந்துவிட்டேன்
பெரிய உலகம்தான் சுற்றிவரக் கழுகுகள் தான் இடை இடையே என்னைப் போன்ற புறாக்குஞ்சுகள் பறப்பதற்கு தடுமாறிடவே துணையாக நிற்கின்றேன் கருவினிலே நான் கொண்ட அனுபவத்தில்
அம்மா நீ என்னையும் புதிய கூட்டிற்கு செல்லத் தூண்டுகின்றாய்
உன்னைவிட புதிய உலகம் கண்டுவிட்டேன் அதில் பிடிப்பில்லை
அப்பாவையும் உன்னையும் போல் கூட்டில் வாழத் தெரியாது
இங்கு நம் போல் புறாக்களுக்கு பதிலாக கழுகுகளே இருக்கின்றன.
நம் கூட்டில் உன் சிறகுகளுக்கிடையில் கதகதப்பில் வாழ ஆசைப்படுகின்றேன் இந்த வளர்ந்த புறாக்குஞ்சு

காதல் கொண்டேன் பெண்ணே

நீள் கருங்கூந்தலிலும் இல்லை
வளைந்தெடுத்த புருவங்களிலும் இல்லை
செவ்விதழ் ரேகையிலும் இல்லை
பஞ்சணை மேனியிலும் இல்லை
செஞ்சந்தன நிறத்திலும் இல்லை
தாமரைப் பாதங்களிலும் இல்லை
வெண்மெழுகு நகத்திலும் இல்லை
காந்தவிழி அழகிலும் இல்லை
மென்மொழி செப்புதலிலும் இல்லை
கொச்சை பேசும் உலகம்தனை ஓரம்கட்டி
நித்தம் நெஞ்சில் துணிவுடன் ஒற்றை வழிப்பாதையில்
தடம் பதித்து செல்கையில் உன் திமிர் கண்டு
நான் காதல் கொண்டேன் பெண்ணே




முறுக்கு மீசைக்காரா



முறுக்கு மீசைக்காரா
மூங்கிலில் காற்றாய் மனம் வீசுதடா
அந்திசாயும் நேரம்
அடிமனதில் காதல் தீண்டுதடா
பச்சரிசிச்சோறும் காரமான மீன் குழம்பும்
நித்தம் நீ கண்ணாற என் மடி இருக்குதடா
பாகற்காய் நெய்ச்சோறு பசிக்கையில்
பத்தியமாய் ஒரு பார்வை பார்த்திடடா
காதல் தாகம் தான் எடுக்கையில்
செல்லமாய் ஒரு மொழி பேசிடடா
கோவக்காய் கோவமாய் நீ காதல் மொழிகையில்
பாசாங்கு செய்த பாவக்காரி நானடா
உள்ளூறும் தேனூறும் உன்மீது காதலூறும்
சொல்லவந்த நேரம் உன் மனம் தூரமானது ஏனடா


💔 கருகிய மலரின் காதல் 💔


மண்மீது காதல் கொண்டு 
அதில் விதை ஒன்று விதைத்தாய்
தினமும் நீர் ஊற்றி
தவறாமல் ஓரிரு முறை பசளையிட்டு
இதமான கதகதப்பும் விதை சுவாசிக்க காற்றும்
உன் பார்வையால் வெளிச்சமும் தந்து

நாளுக்கு நாள் காத்து நின்றாய்

உன் ஆசைபோல் செடியும் வளர்ந்தது

அதில் மலரும் மலர்ந்தது
இத்தனை பாடுபட்டு உயிர்பித்த உன்னைத்
தேடித் தேடி இம்மலர் வாடத்தொடங்கியது
மலருக்கு தாகம் எடுக்க அதை தண்ணீர் ஊற்றி தணிக்க நீ இல்லை
நோயினால் வாட அதை அரவணைக்க இன்று நீ இல்லை
இதழோ கலையிழந்து போக
புத்துணர்வோ பூச்சியமாக
வண்டு தேடிய நறுமணம் உயிர்பற்றுப் போக
வண்ணமோ வலு இழந்து போக
நாட்களும் கடந்து போக வாழ முடியாத மலரோ செடியின் வேருடன் கருகிப் போக ஐயோ எனப் பரிதாபமடைய நிறைவாய் நீ அங்கும் இல்லை
எங்குதான் சென்றுவிட்டாய்
மலரோ மடிந்தது மண்ணோ இனி தரிசு நிலம் ஆயிற்று
இதற்குத்தான் இத்தனை அவசரம் கொண்டாயா?

💔 Renu 💔











நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...