Showing posts with label Life. Show all posts
Showing posts with label Life. Show all posts

Saturday, March 16, 2024

காதலும் கடந்து போகும்







சுயமரியாதையை எங்கும்

விட்டுக்கொடுக்காத பெண்

வாழ்க்கையில் அடுத்தகட்ட நகர்வை 

எதிர்பார்க்காத ஆண்

இருவரிடையே என்ன உறவுதான் 

இருந்துவிடப்போகிறது?


வாழ்க்கையில் பிடித்தபாதையில்தான் 

செல்வேன் என்ற இறுமாப்பு

உடற்சோர்விலும் மனம் தளரா குறிக்கோள்

ஏதுமற்ற நிலையிலும் தன்நம்பிக்கை

நாதியற்ற நிலையிலும் 

யாரிடமும் வேண்டியே நாடிச்செல்லா

அழகிய பெண் திமிர் அவள் யாழினி


திறமையும் அறிவும் தேடாத சமூகமிது

பணமும் அரசியலும் சூழ்ச்சிசெய்யும் காலமிது

பள்ளங்களில் சறுக்கிவிழ 

பாதை நீள முட்கள் கொண்டு

ஓட்டப்பந்தயம் நடத்தும் வேடிக்கை மனித மிருகங்களிடம்

தாக்கப்பட்ட இதயத்தை தானே மருந்திட்டு

மீள் சுழற்சிக்கு தயாராகின்றாள்


அவளிடமும் ஆயிரம் கவலைகள் உண்டு

கண்ணீருக்குள் கதைகளுண்டு

சாதாரண பெண்களைப்போல் காதலும் காமமும்

கிடைத்துவிடாதா என்ற ஏக்கமும் உண்டு

இருந்தும் அவளை ஏதோ ஒன்று தடுக்கிறது

அது அவளின் தனி அடையாளத்திற்கான அங்கீகாரம்


இத்தனையாய் சொல்லப்படும் அவள் என்ன இரும்புமனிசியா?

மனமற்று இரும்புத்திரையில் இதயம் கொள்ள?

அவள் தோள் சாயவும் 

நம்பிக்கையாய் அருகில் அமர்ந்து 

ஓர் சில வார்த்தை கேட்கவும்

இதமான பெயர் அற்ற ஓர் உறவுதான் 

அவன் கதிர்


தன்நம்பிக்கையில் சுற்றும் 

பெண்ணியவாதி அவள் 

மனம் சாய்த்து கதை சொல்லவும் 

உறவற்ற ஓர் ஆண் உருவம் அவன்


காதலன் கணவன் நண்பன் என்ற வட்டம் தாண்டி

இதமான இந்த உறவுக்கு தமிழ் இலக்கணத்தில்

வழங்கப்பட்ட மொழி எதுவோ?


அவள் மனம் அறியது ஒரு நிமிடம் அவன் கரம் பற்றி கடிகாரமுள்ளாய் கடக்கின்ற நொடிக்குள்

ஏதோ அவன் வரவில் சாதித்தவளாய் நன்றியுடன் ஒரு புன்னகையில் கடக்கும் இருவருக்குள் 

இந்தக் காதல் என்ன அதுவும் கடந்து போகும்

Sunday, January 23, 2022

கனவுகளுடன் காதலிக்கின்றேன்

 


வடுக்களோடு வாழும் வாழ்விற்கு

கடந்துபோனவைகள் எல்லாம் 

மறைக்கப்பட்ட சுவடுகளே

கடற்கரை மணலில் பதித்த பாதம்தான்

அறியாத பலத்த அலையின்பின்பும்

அதன் சுவட்டின் நிழல்களை


நீ நினைக்கமுன்னே

எழுதப்பட்ட விதிக்கணக்கை

மாற்றியமைக்க காலனுக்கே 

காலம் கெடுவைத்தது

மரணத்திலாவது இன்பம் கொள்ள

இந்த விதிக்கு ஏன் மனம் இன்னும் கல்லானது


நீயறியாத என்னை நானென 

காட்டிக்கொள்ளாத காதல் 

பல நாட்கள் பகலிரவுகள்

இரகசிய முகப்புத்தகத்தில்

பேசிய அன்பின் பரிபாஷைகளை

என்றும் உனக்கான தேடல்தான்

விதிக்கப்பட்ட காதலாகியது


தொலைத்த இடம் வேறு 

கிடைத்த இடம் வேறு

தடமாறிய பாதையில் 

குரல் வந்த திசையெல்லாம்

வெளிச்சம் என்றெண்ணிய 

குருட்டு விழிகளுக்கு 

கைத்தடி மேல் இனி நம்பிக்கையில்லை


யாதுமாய் கண்ட யாதும் நீயாய் 

கண்ட காட்சிகள் பொய்க்க

யாரோவாகிய நிஜம் மட்டும் கைகளில்

ஏந்திக்கொண்டு மன்றாடிக்கேட்கத்

தகுதியில்லாதவளாய்க் கேட்கின்றேன்

மீண்டும் ஒருமுறை வந்துவிடு

இறுக்கமாய் உன்னை பற்றிக்கொள்கின்றேன்


தொலைவாய் இரு யாரோவாய் இரு

என்னை நினையாமலிரு 

உன்னை மறவாமலிருப்பேன்

தொலைத்த படலம் இங்கு என்னில் மட்டும் 

அமரகாவியமாகட்டும் 


என்றோ ஒருநாள் சேதிகள் கிட்ட 

இரண்டு சொட்டு கண்ணீர் கூட

வேண்டாம் எனக்கு

பாதி மனமாய் வழியனுப்புகிறேன்

முழுமனதிலும் நினைவுகள் மட்டுமே

மிச்சம் வைத்துக்கொண்டு


கல்லறைப்பூவுக்குள் தெய்வீகவாசம் தேடி

துளசிமாடத்தில் படர்ச்செய்ய நினைத்தாய்

வாசம் தந்த மல்லிகை 

என்னை மறக்கச்செய்ததுபோலும்

தேர்வுகளில் மீண்டும் கல்லறை மலரானேன்

உன் தேர்வு மிகச்சரியானவை

பிழையான என்னைத் தவிர்த்துவிடுதலின் பின்


எனக்கு மட்டும் சிறிதாய் தெரியும் 

இந்த யாக்கையில் யார் கனவுகளிலும்

எனக்கான கவிதைகளை மீட்ட

படைத்தவன் இன்னும் கிறங்கவில்லைபோலும்

ஆனால் ஒன்று் மறந்துவிடாதே

நடைபிணத்தின்மேல் நீ எய்தன்பு

சிறுநொடி உயிர்பித்து எழச்செய்தது


நீ வாழ் அது போதும் 

யாரோ உன் கரங்களைப் பற்றும்போது 

என் விரல்களுக்கு வலிக்காது இருக்கட்டும்

அன்று ஒன்றாய்க்கலந்த சுவசம் 

என் இறுதி மூச்சிலிருந்து

விதி பிரித்தெடுத்து தன் வெற்றியை

முழுமையாய்க் கொண்டாடட்டும்

தொலைந்த நான் என்றும் தேடப்படாமலிருக்க

கனவுகளுடன் மீண்டும் உன்னைக் காதலிக்கின்றேன்


Wednesday, October 28, 2020

நான் என்றும் என்னுடன்


 














நான் தனிமையில் வாடுவதாய் 

வதந்திகள் பல பேசப்படுகின்றன

தனிமையோடு உறவாடுவதாய் போலியான 

தகவல்கள் கசிந்துகொண்டிருக்கின்றன

நான் அலட்சியப்படுத்தப்பட்டதாய்

வசை நம்பிக்கையூட்டப்படுகின்றன

நான் மனவழுத்ததில் உள்ளதாய்

பலராலும் கணிக்கப்படுகின்றன

நான் என்றும் என்னோடு இருக்கின்றேன்


என் கண்களில் கண்ணீர் வரும்போதொல்லாம் 

என் கரங்கள் துடைத்துவிடுகின்றன

என் வழிப்பயணத்தில் என் பாதங்கள் 

முன்னேறிச்செல் என்று தட்டிக்கொடுக்கின்றன

என் பேச்சுக்களை என் மனம் செவிசாய்க்கின்றன 

மூளை அதைச் செய்ய எத்தனிக்கின்றன

என் கைவிரல்கள் படபடப்பான நேரங்களில் 

என் கை கோர்க்கின்றன

என் கண்கள் நான் மனச்சோர்வடைந்த நிலையில் 

என்னோடு விழித்திருக்கின்றன

இப்பொழுதாவது புரிந்துகொள்ளுங்கள்

நான் என்றும் என்னோடு இருக்கின்றேன்


நான் தனிமையில் வாடுவதாய் 

வதந்திகள் பல பேசப்படுகின்றன

இல்லை

நான் துணிச்சலான மனதுடன் 

அன்றாடம் போராட்டங்களில் 

வெற்றி வாகை சூடிக்கொள்கின்றேன்

தனிமையோடு உறவாடுவதாய் போலியான 

தகவல்கள் கசிந்துகொண்டிருக்கின்றன

இல்லை

நான் சுயமரியாதையுடனும் தன்நம்பிக்கையுடனும் 

நீண்ட கால உறவில் இருக்கின்றேன்

நான் அலட்சியப்படுத்தப்பட்டதாய்

வசை நம்பிக்கையூட்டப்படுகின்றன

இல்லை

நான் தீர்மானிக்கும் முன் நியதி நேர்மை 

மனசாட்சியிடம் 

ஒப்புதல் பெறுகின்றேன்

நான் மனவழுத்ததில் உள்ளதாய்

பலராலும் கணிக்கப்படுகின்றன

இல்லை

நான் மனதிடம் நேசிக்க மட்டுமே 

கற்றுக்கொடுத்திருக்கின்றேன் 

அழுத்தங்களை கண்ணீரோடு 

பகிர்ந்துகொள்கின்றேன்

எப்பொழுதும் தெரிந்துகொள்ளுங்கள்

நான் என்றும் என்னோடு இருக்கின்றேன்






Thursday, September 10, 2020

முகத்திரை














முகத்திரையிட்டுக் கடக்கின்றேன் சாலைகளில் மட்டுமல்ல முகத்திரையிட்டுக் கடக்கின்றேன் சில வேளைகளில் மட்டுமல்ல நான் அணியும் முகப்பூச்சுக்களையும் யாரும் அறிந்திருக்கவாய்ப்பில்லை ஏனெனில் அவை வர்ணமற்ற புன்னகைகளின் முகச்சுருக்கங்களில் அலங்கரிக்கப்பட்ட அழகியல் கலை என்பதனால் நான் செய்யும் மந்திரப்புன்னகையை யாரும் அறிந்திருக்கவாய்ப்பில்லை ஏனெனில் கேளிகை வாழ்க்கையில் கோமாளிகள் பல உணர்வற்ற முகபாவனையை நிரந்தரம் கொள்கையில் நான் உரைக்கும் இன்மொழி யாரும் அறிந்திருக்கவாய்ப்பில்லை ஏனெனில் நச்சு வார்த்தைகளை மென்றுகொண்டிருக்கும் கவர்ச்சிகரமான உதடுகளை நோட்டமிட்டுக்கொண்டு பலர் இருப்பதால் நான் சிந்தும் வியர்வைத்துளி யாரும் அறிந்திருக்கவாய்ப்பில்லை ஏனெனில் என் தாகத்திற்கு யாரோ நீர் பருகிக்கொண்டு என் வேட்கையை தீண்டுவதில் இன்பமுறுகின்றமையால் முகத்திரையிட்டுக் கடக்கின்றேன் சாலைகளில் மட்டுமல்ல முகத்திரையிட்டுக் கடக்கின்றேன் சில வேளைகளில் மட்டுமல்ல









Monday, August 10, 2020

என் திருமணத்திற்கு வந்துவிடாதே!

  



















ஆகா ஓகோ என்று தடபுடலாய்

தட்டுமாற்றி தாலிகட்ட நாளும்

குறித்துவிட்டார்கள். பந்தற்கால் நட்டு

பொன்னுருக்கி மூலையில் அமரவைத்தார்கள்

இப்பொழுதுதான் உன்னிடம் ஆசையாய் பேசமுடிந்தது 

நீ நலம் தானா?

என் நலனில் அக்கறை இருப்பதால் 

கண்ணீரோடு கதை பேசுகின்றேன்.

இங்கு யாருமில்லை என்ற தைரியத்தை 

தக்கவைத்துக்கொண்டு கைபேசியில் 

கலகலப்பாய் பேச நான் ஒன்றும் 

பெண்ணியவாதியல்ல சராசரிப்பெண் தான்.

மாப்பிள்ளை வீட்டாரின் முழுசம்மதத்துடன்

மாங்கல்யம் ஏற்பதில் இத்தனை சுமைகளா என்ன?

தந்தையற்ற ஆண்துணையில்லா 

மூத்த பெண்ணாய்ப் பிறந்தவள் 

என்பதில் அடிக்கொருமுறை அன்னையைப் போல் அதட்டலும் 

அன்பும் அதிகாரமும் அக்கறையும் அளாவலற்ற ப்ரியமும்

இறுதியில் தான் என்னைப் பெண் என உணரவைத்தது. 

என் இளமை உணர்ச்சிகளை மீறி இனிதான ஒரு கூடலுக்கு 

சமூகத்தில் ஒருபடி அந்தஸ்து தரும் ஒரு தருணம் 

மிக விரைவில் வரப்போகிறது. தயவு செய்து 

என் திருமணத்திற்கு வந்துவிடாதே. 

மாங்கல்யம் சூட்டுவதில் எண்கணித சோதிடருக்கே 

என் முதல் வணக்கம். 

தலைவிதி நன்றாக இல்லை என்ற வருத்தத்தில் 

புரண்ட எனக்கு கோள்களும் கிரகங்களும் ஒன்றிசைந்து 

நன்மைக் காரியம் கிட்டும் என்பதோடு விடாது 

சிறப்பான வரன் என்று பல கட்டங்களுக்கு 

என் புகைப்படம் முதல் என் நற்சான்றிதழும் அனுப்பிவைத்தார்கள். 

பார்த்தவுடன் பிடித்துப்போக 

நான் என்ன ரதியா? ரம்பையா? 

தட்டிக்கழிக்கப்பட்டன பல வரன்கள்.

இருந்தும் சிலர் முறுக்கும் பலகாரமும் 

சுடச்சுட பால்த்தேநீர் குடிக்க வந்தவர்கள் போல 

வீட்டுற்குப்போய் என் வீட்டு விலாசத்தை மறந்துவிட்டார்கள் 

பின்புதான் நான் அறிந்தேன் 

மாப்பிள்ளை சீதனத்தில் தான் 

குடித்தனம் நடத்தப்போகிறார் என்று. 

நல்லவேளை முறுக்கோடு நறுக்கிவிட்டதாய் எண்ணிக்கடக்க 

அடுத்த மாப்பிள்ளை வீட்டார் அப்படியில்லை 

வரதட்சணை வேண்டாம் மகளாய்ப் பார்ப்போம் 

மகளை மட்டும் கட்டி அனுப்புங்கள் என்று 

என் தங்கையைக் கைகாட்டினார்கள். 

பரவாயில்லை அவளும் சற்று ரம்பையோ மேனகையையோ 

போல அழகாய்த்தான் இருப்பாள். 

வாழ்வில் பல அவமானங்களைக் கடந்துவிட்டேன் 

இது என்ன என் கையால் தாலித்தட்டை சுமந்து 

ஆசீர்வாதம் வாங்குவது ஒன்றும் பெரும் தவறில்லையே. 

அடுத்தமுறை பெண் பார்க்க வந்தவர்களிடம் 

உன்னைப்பற்றிக்கூற நான் விரும்பவில்லை 

காரணம் எனக்கோ வயது முப்பத்திரண்டு. 

இனியும் காதில் பஞ்சை வைத்துக்கொண்டு 

வீதியில் நடக்கமுடியாது. அக்கம்பக்கம் அடுக்கும் 

கேள்விகளுக்கு விடையளிக்காது சிரித்துக்கொண்டு 

கடக்க இயலாது. வேறு சாதிக்காரனுடன் ஓடிவிட்டாள் 

என்றால் பலகாரம் கூட பல்லில் படாமல் ஓடியிருப்பார்கள். 

நீயும் நல்லபடியாய் குழந்தைகளைப் பெற்று மணவாழ்வில் 

மகிழ்ச்சியோடு வாழ்கிறாய் எந்தவித குற்ற உணர்வுகளும் இல்லாமல். 

நானும் உன்னைக்கடிந்து கொள்ளவிரும்பவில்லை. 

என்னதான் சோற்றைப்போட்டு நடுவீட்டில் வைத்தாலும் 

அதன் புத்தி மாறாது என்பதில் மிகத்தெளிவாய் இருந்தேன். 

இந்த உரையாடல் உன்னை அழைப்பதற்கல்ல தவறிக்கூட 

என் திருமணத்திற்கு வந்துவிடாதே!


Wednesday, July 29, 2020

யசோதராக்களின் கனவு






















மின்னும் வேகத்தில் எத்தனை பேர் சூழ்ந்து 

சூழ்ச்சி வலை பின்னினும் இலக்கு ஒன்றை 

மட்டும் மனக்கண் முன் நிறுத்தி அவ்வலைதனை 

தகத்தெறிய காற்பந்தாட்ட பூமியில் கட்டைக்கால் 

காற்சட்டை முட்டி மேல் முழம் ஏறி சமூகத்தடை 

விலக்கத் தெரியாமலே அழிந்துபோகின்றன 

பல யசோதராக்களின் கனவு


வெள்ளைமுகம் தலைகாட்ட செங்கதிரோன் 

தலை சாய்க்க தேவைகள் காரியங்கள் பல 

ஆற்ற ஆண்துணையற்ற அங்கையர்க்கன்னி 

ஓரடி வாசற்படிதாண்டுதலில் கதி கலங்கிப்போகும் 

பெண்மையின் கற்பு பல அவச்சொற்களில் இருந்து 

அழிந்துபோகின்றன 

பல யசோதராக்களின் கனவு


காதல் கனவுகள் கல்லறைச்சுமைதாண்டி 

நீண்ட தூரம் பயணிக்க சாத்தானாகினும் 

ஒரே சாதியைத் தேடித் தேடி வேட்டைக்கு 

அனுப்பும் புள்ளிமான்கள் பல மனதால் 

உடலால் இரையாகி சுகமற்ற நோயில் வாடினும் 

இன்னும் அப்பன் அம்மை பிடியில் அழிந்துபோகின்றன 

பல யசோதராக்களின் கனவு


ஆடவன்  தன் சுகம் தேடி சலனம் தீர்க்க எத்தனை 

படி ஏறி இறங்கினாலும் பத்தினியாய் இவள் 

உடலைப் பட்டினி போட்டு பத்தியம் காப்பினும் 

பல் இழிக்கும் பல பங்காளிக்கூட்டம் சீண்டலுக்கு

பதில் மொழி கூறி மறுமணத்திலும் விவாகரத்திலும் 

கேலிப்பேச்சிற்கு தலைகுனிவதில் அழிந்துபோகின்றன 

பல யசோதராக்களின் கனவு


கற்பித்தலும் வியாபாரமாகிட கரும்பலகைகள் 

கூட தரம் பார்த்திட இலஞ்சங்கள் ஊழல்கள் 

தலைவிரித்தாட காஞ்சவன் பாலியல் இலஞ்சங்கள் 

பரிசாய்க்கேட்டிட  விண்வெளியில் பறக்கும் கனவுகள் 

விண்ணிலிருந்து விழுந்து மடிந்திட

அழிந்துபோகின்றன 

பல யசோதராக்களின் கனவு


அனைத்தும் துறப்பதில் மனம் கொண்ட புத்தன் 

தூக்கத்தில் யார் அறியாமலும் தன்சுமைகளில் 

இருந்து விடைபெற்று  ஞானம் பெறுவதில் மட்டும் 

சிந்தை கொண்ட ஒருகணம் குழந்தை குடும்பம் 

கடமைகள் மறந்து தன் சுகம் தன்நலன் கருதி 

வீட்டை விட்டு வெளியேறியிருப்பின் அவளை 

வேசி என்றே நாமம் சூட்டியிருக்கும் இந்த உலகின் 

மூர்க்கத்தால் அழிந்துபோகின்றன 

பல யசோதராக்களின் கனவு


நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...