Showing posts with label Women. Show all posts
Showing posts with label Women. Show all posts

Saturday, March 16, 2024

காதலும் கடந்து போகும்







சுயமரியாதையை எங்கும்

விட்டுக்கொடுக்காத பெண்

வாழ்க்கையில் அடுத்தகட்ட நகர்வை 

எதிர்பார்க்காத ஆண்

இருவரிடையே என்ன உறவுதான் 

இருந்துவிடப்போகிறது?


வாழ்க்கையில் பிடித்தபாதையில்தான் 

செல்வேன் என்ற இறுமாப்பு

உடற்சோர்விலும் மனம் தளரா குறிக்கோள்

ஏதுமற்ற நிலையிலும் தன்நம்பிக்கை

நாதியற்ற நிலையிலும் 

யாரிடமும் வேண்டியே நாடிச்செல்லா

அழகிய பெண் திமிர் அவள் யாழினி


திறமையும் அறிவும் தேடாத சமூகமிது

பணமும் அரசியலும் சூழ்ச்சிசெய்யும் காலமிது

பள்ளங்களில் சறுக்கிவிழ 

பாதை நீள முட்கள் கொண்டு

ஓட்டப்பந்தயம் நடத்தும் வேடிக்கை மனித மிருகங்களிடம்

தாக்கப்பட்ட இதயத்தை தானே மருந்திட்டு

மீள் சுழற்சிக்கு தயாராகின்றாள்


அவளிடமும் ஆயிரம் கவலைகள் உண்டு

கண்ணீருக்குள் கதைகளுண்டு

சாதாரண பெண்களைப்போல் காதலும் காமமும்

கிடைத்துவிடாதா என்ற ஏக்கமும் உண்டு

இருந்தும் அவளை ஏதோ ஒன்று தடுக்கிறது

அது அவளின் தனி அடையாளத்திற்கான அங்கீகாரம்


இத்தனையாய் சொல்லப்படும் அவள் என்ன இரும்புமனிசியா?

மனமற்று இரும்புத்திரையில் இதயம் கொள்ள?

அவள் தோள் சாயவும் 

நம்பிக்கையாய் அருகில் அமர்ந்து 

ஓர் சில வார்த்தை கேட்கவும்

இதமான பெயர் அற்ற ஓர் உறவுதான் 

அவன் கதிர்


தன்நம்பிக்கையில் சுற்றும் 

பெண்ணியவாதி அவள் 

மனம் சாய்த்து கதை சொல்லவும் 

உறவற்ற ஓர் ஆண் உருவம் அவன்


காதலன் கணவன் நண்பன் என்ற வட்டம் தாண்டி

இதமான இந்த உறவுக்கு தமிழ் இலக்கணத்தில்

வழங்கப்பட்ட மொழி எதுவோ?


அவள் மனம் அறியது ஒரு நிமிடம் அவன் கரம் பற்றி கடிகாரமுள்ளாய் கடக்கின்ற நொடிக்குள்

ஏதோ அவன் வரவில் சாதித்தவளாய் நன்றியுடன் ஒரு புன்னகையில் கடக்கும் இருவருக்குள் 

இந்தக் காதல் என்ன அதுவும் கடந்து போகும்

Sunday, January 23, 2022

கனவுகளுடன் காதலிக்கின்றேன்

 


வடுக்களோடு வாழும் வாழ்விற்கு

கடந்துபோனவைகள் எல்லாம் 

மறைக்கப்பட்ட சுவடுகளே

கடற்கரை மணலில் பதித்த பாதம்தான்

அறியாத பலத்த அலையின்பின்பும்

அதன் சுவட்டின் நிழல்களை


நீ நினைக்கமுன்னே

எழுதப்பட்ட விதிக்கணக்கை

மாற்றியமைக்க காலனுக்கே 

காலம் கெடுவைத்தது

மரணத்திலாவது இன்பம் கொள்ள

இந்த விதிக்கு ஏன் மனம் இன்னும் கல்லானது


நீயறியாத என்னை நானென 

காட்டிக்கொள்ளாத காதல் 

பல நாட்கள் பகலிரவுகள்

இரகசிய முகப்புத்தகத்தில்

பேசிய அன்பின் பரிபாஷைகளை

என்றும் உனக்கான தேடல்தான்

விதிக்கப்பட்ட காதலாகியது


தொலைத்த இடம் வேறு 

கிடைத்த இடம் வேறு

தடமாறிய பாதையில் 

குரல் வந்த திசையெல்லாம்

வெளிச்சம் என்றெண்ணிய 

குருட்டு விழிகளுக்கு 

கைத்தடி மேல் இனி நம்பிக்கையில்லை


யாதுமாய் கண்ட யாதும் நீயாய் 

கண்ட காட்சிகள் பொய்க்க

யாரோவாகிய நிஜம் மட்டும் கைகளில்

ஏந்திக்கொண்டு மன்றாடிக்கேட்கத்

தகுதியில்லாதவளாய்க் கேட்கின்றேன்

மீண்டும் ஒருமுறை வந்துவிடு

இறுக்கமாய் உன்னை பற்றிக்கொள்கின்றேன்


தொலைவாய் இரு யாரோவாய் இரு

என்னை நினையாமலிரு 

உன்னை மறவாமலிருப்பேன்

தொலைத்த படலம் இங்கு என்னில் மட்டும் 

அமரகாவியமாகட்டும் 


என்றோ ஒருநாள் சேதிகள் கிட்ட 

இரண்டு சொட்டு கண்ணீர் கூட

வேண்டாம் எனக்கு

பாதி மனமாய் வழியனுப்புகிறேன்

முழுமனதிலும் நினைவுகள் மட்டுமே

மிச்சம் வைத்துக்கொண்டு


கல்லறைப்பூவுக்குள் தெய்வீகவாசம் தேடி

துளசிமாடத்தில் படர்ச்செய்ய நினைத்தாய்

வாசம் தந்த மல்லிகை 

என்னை மறக்கச்செய்ததுபோலும்

தேர்வுகளில் மீண்டும் கல்லறை மலரானேன்

உன் தேர்வு மிகச்சரியானவை

பிழையான என்னைத் தவிர்த்துவிடுதலின் பின்


எனக்கு மட்டும் சிறிதாய் தெரியும் 

இந்த யாக்கையில் யார் கனவுகளிலும்

எனக்கான கவிதைகளை மீட்ட

படைத்தவன் இன்னும் கிறங்கவில்லைபோலும்

ஆனால் ஒன்று் மறந்துவிடாதே

நடைபிணத்தின்மேல் நீ எய்தன்பு

சிறுநொடி உயிர்பித்து எழச்செய்தது


நீ வாழ் அது போதும் 

யாரோ உன் கரங்களைப் பற்றும்போது 

என் விரல்களுக்கு வலிக்காது இருக்கட்டும்

அன்று ஒன்றாய்க்கலந்த சுவசம் 

என் இறுதி மூச்சிலிருந்து

விதி பிரித்தெடுத்து தன் வெற்றியை

முழுமையாய்க் கொண்டாடட்டும்

தொலைந்த நான் என்றும் தேடப்படாமலிருக்க

கனவுகளுடன் மீண்டும் உன்னைக் காதலிக்கின்றேன்


Saturday, October 9, 2021

எனக்கான அன்பு

 





சலித்துவிட்ட இதயத்துடன் நான்

ஒவ்வொருவரையும் நெருங்கும்போது

மீண்டும் அவர்களிடத்தில் எனக்கான 

அன்பு முழுமைபெறாத என்ற 

ஏக்கம் மட்டும் வினாக்குறியாகின்றது


அவர்களிடத்தில் எனக்கான அன்பு 

மிகையானதும் அல்ல  ஆடம்பரமானதும் அல்ல

ஒரு துளியேனும் இரு கைகளுள் 

பொத்திவைத்த வெளிச்சம்போல

என் நினைவால் அவரவர் மனதில் பதித்து

வைக்கப்படும் சிறு நியாபகங்கள் மட்டுமே


புத்தகம் நடுவே திருட்டு மயிலிறகு

குட்டிபோடும் கதை எனக்கான அன்பு

கொஞ்சம் நகைத்தாலும் அதனுள் 

மறைந்திருக்கும் பித்து சிறு குழந்தையின் 

அன்பிலே தெய்வீகமாய் உணரப்படும்


திகட்டத்திகட்ட சுவைக்கும் ஒவ்வொரு 

கனி இதழ்கள் முடிவிலும் நாவூரும் 

எச்சில் எனக்கான அன்பு

அதுவும் ஒருவகை மீளமுடியாத சிறு போதை 

சிலரினால் மட்டுமே உணர முடியும்


சத்தமில்லாத இரவுநேர அழுகையில்

கண்ணீர் ஏந்தும் நண்பன் 

தலையணை எனக்கான அன்பு

ஆழ்ந்த ஆறாத வடுக்களின் ரணங்கள்

வழியும் கண்ணீரோடு ஓர் சிறு தூக்கம்

காலை விழித்ததும் எல்லாம் மாறிவிடுமென்ற புன்னை


நன்கு பரீட்சயமான பழைய பாடல் வரிகளில் 

தெரிவு செய்து உதடு முணுமுணுக்கும் 

வரிகள் எனக்கான அன்பு

மொழிகளை விட மௌனங்களில் அன்பை தேடும்

என்போல் இதயங்களினால் மட்டுமே 

வரிகளுக்கும் உயிரூட்ட முடியும்.



Friday, September 11, 2020

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி



















கரு மை தீட்டி கருவிழி மெருகேற்றி 

சின்னஞ்சிறு குங்குமச்சிமிழ் பொட்டிட்டு

கூரிய அரிவாள் புருவங்களை சற்று 

உயர்த்தி தலை நிமிர்ந்து நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


முன்னழகு பின்னழகு கன்னியவளோ பேரழகு

ஒரு கணம் கண்ணிமைக் மறுக்கவே

தலைக்கேறும் போதை ஏற்ற 

அன்னம் அவளிடம் பழக வேண்டும்

ஓர் புதுநடை நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


தீயும் தீய்ந்துபோகும் பாவியவள் பார்வை

வளைவுகளே வியர்ந்து பார்க்கும் வஞ்சியவள் 

மெல்லிடை

கொடிகள் படரத்துடிக்கும் கொஞ்சுங்கிளி கொடியிடை

வேடிக்கை பார்ப்பவர் ஏக்கத்தில் வாடித்துடிக்க

இடையில் நளினநடை நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


சலனமற்ற பஞ்சு நடையாள் பவனி வரும் ஓசை 

மலர்களும் மலர்ந்திட விரும்பிடும் ஓர் இசை

திரண்டு வரும் மக்கட்கூட்டத்தின் நடுவே 

வேகவேகமாய் மின்னல்நடை நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


காற்றின் எடையில் இரட்டிப்பாய் இருந்திடுவாள்

கனத்த பையை தோளில் சுமந்தபடி

துணையற்ற பயணத்தில் பாதச்சுவடுகளின்றி 

தூயநடை நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


பேச நான் முயன்று முன்னேறுகையில்

முகபாவணையில் மிரட்டி மிரளச்செய்கிறாள்

போ என்று என் அறிவுக்கு அவள் தகவல் தெரிவிக்கமுன்

வெடித்துச்சிதறும் பல மனிதசடலங்களுள்

வெற்றி வேட்கை தணிந்தநடை நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


பட்டங்கள் பல பெற்றவள் பல துறையில் தேர்ச்சி கண்டவள் 

வறுமை எனும் கோட்டின் கீழ் கொடும்பிடியில் 

விடுபட இல்லையாம் அவளுக்கு ஓர்

நிரந்தர உத்தியோகம்

பலன் வேண்டி தேடித்திரிந்த இடமெல்லாம் 

சேலை அவிழ்க்க பணியாதவள்

பணமெனும் பேருதவிக்கு உயிர்துறக்க நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


அழகில் உண்டு ஆபத்தென அடுத்தவர்கள் 

சொன்னகதை நிஜம்படவே

ஆசிட் வீச்சில் உருகுலைந்த அழகிய முகம்

மறைத்துக்கொண்டு சமூகசீர்திருத்தவாதியாய் 

தற்கொலைக்குண்டுத்தாரியாய் நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


இரும்பைக்கொண்டு பட்டை தீட்டினாலும்

அவள் உள் இலவம்பஞ்சு இதயம் ஒன்றின் ஓரத்தில்

பெண்மைக்கான காதல் காவியம் அவள் 

மறைத்துக்கொண்டு சீரற்ற இந்த சமூகம் சீர்கொள்ள

அஹிம்சையின்றி ஆயுதம் தேடி நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி





Wednesday, July 29, 2020

யசோதராக்களின் கனவு






















மின்னும் வேகத்தில் எத்தனை பேர் சூழ்ந்து 

சூழ்ச்சி வலை பின்னினும் இலக்கு ஒன்றை 

மட்டும் மனக்கண் முன் நிறுத்தி அவ்வலைதனை 

தகத்தெறிய காற்பந்தாட்ட பூமியில் கட்டைக்கால் 

காற்சட்டை முட்டி மேல் முழம் ஏறி சமூகத்தடை 

விலக்கத் தெரியாமலே அழிந்துபோகின்றன 

பல யசோதராக்களின் கனவு


வெள்ளைமுகம் தலைகாட்ட செங்கதிரோன் 

தலை சாய்க்க தேவைகள் காரியங்கள் பல 

ஆற்ற ஆண்துணையற்ற அங்கையர்க்கன்னி 

ஓரடி வாசற்படிதாண்டுதலில் கதி கலங்கிப்போகும் 

பெண்மையின் கற்பு பல அவச்சொற்களில் இருந்து 

அழிந்துபோகின்றன 

பல யசோதராக்களின் கனவு


காதல் கனவுகள் கல்லறைச்சுமைதாண்டி 

நீண்ட தூரம் பயணிக்க சாத்தானாகினும் 

ஒரே சாதியைத் தேடித் தேடி வேட்டைக்கு 

அனுப்பும் புள்ளிமான்கள் பல மனதால் 

உடலால் இரையாகி சுகமற்ற நோயில் வாடினும் 

இன்னும் அப்பன் அம்மை பிடியில் அழிந்துபோகின்றன 

பல யசோதராக்களின் கனவு


ஆடவன்  தன் சுகம் தேடி சலனம் தீர்க்க எத்தனை 

படி ஏறி இறங்கினாலும் பத்தினியாய் இவள் 

உடலைப் பட்டினி போட்டு பத்தியம் காப்பினும் 

பல் இழிக்கும் பல பங்காளிக்கூட்டம் சீண்டலுக்கு

பதில் மொழி கூறி மறுமணத்திலும் விவாகரத்திலும் 

கேலிப்பேச்சிற்கு தலைகுனிவதில் அழிந்துபோகின்றன 

பல யசோதராக்களின் கனவு


கற்பித்தலும் வியாபாரமாகிட கரும்பலகைகள் 

கூட தரம் பார்த்திட இலஞ்சங்கள் ஊழல்கள் 

தலைவிரித்தாட காஞ்சவன் பாலியல் இலஞ்சங்கள் 

பரிசாய்க்கேட்டிட  விண்வெளியில் பறக்கும் கனவுகள் 

விண்ணிலிருந்து விழுந்து மடிந்திட

அழிந்துபோகின்றன 

பல யசோதராக்களின் கனவு


அனைத்தும் துறப்பதில் மனம் கொண்ட புத்தன் 

தூக்கத்தில் யார் அறியாமலும் தன்சுமைகளில் 

இருந்து விடைபெற்று  ஞானம் பெறுவதில் மட்டும் 

சிந்தை கொண்ட ஒருகணம் குழந்தை குடும்பம் 

கடமைகள் மறந்து தன் சுகம் தன்நலன் கருதி 

வீட்டை விட்டு வெளியேறியிருப்பின் அவளை 

வேசி என்றே நாமம் சூட்டியிருக்கும் இந்த உலகின் 

மூர்க்கத்தால் அழிந்துபோகின்றன 

பல யசோதராக்களின் கனவு


Monday, July 27, 2020

புற்றுநோயாளியின் கர்ப்பம்














உயிர்ப்பிணைப்பில் இன்று ஒரு முடிச்சு
புதிதாய் இடப்பட்டதாக ஒரு சிறு உணர்வு
அதற்கு ஆதாரமாய் தள்ளிப்போன பல நாட்கள்
மயக்கம் மற்றும் வாந்தி


வைத்தியரின் ஆலோசனை தெய்வத்தின் வாக்காய்
காதில் ஒலிக்க கையில் இருந்த ஆதாரச்சான்றிதழில் 
புலன் செலுத்தப்பட்டு ஒருவகை மயக்கநிலை அடைந்திருந்தேன்


மருந்துமாத்திரைகளும் தடுப்பூசிகளும் என்
சின்னஞ்சிறு ஊந்துதுடிக்கும் உயிருக்கு 
வலு என்பதில் எனக்கு வலியே மறந்துவிட்டது 


கணவனின் இருசக்கரவண்டி மென்மையாய்ச் 
செல்லவும் என்னை ஆட்கொண்ட பயம் அவர்
இடுப்பை கைகளால் வளைத்துக்கொள்ள கண்களும்
இறுக சொருகிக்கொண்டன


மண்ணில் சாயமுன் உலகிற்கோர் என்னுதிரத்தின்
சாயலை அவரின் கைகள் தாங்கி முத்தமிடும் சுவடு
என் மனக்கண்ணிற் பதிந்து இதயத்தோடு ஒத்துத்துடித்தது


வாரம் இருமுறை வைத்தியநிபுணரின் வாடிக்கையாளராய் 
குருதி தானம் பெறும் யாசகி 
என் மழலைக்காய் சிறிது திருடிவைத்திருக்கிறேன்


உதிர்ந்த கேஷங்கள் தரை தவழ மிகுதி இருப்பவை 
பின்னலிட்டு நிலைக்கண்ணாடியில் விம்பமாய் 
ஜொலிக்க வயிற்றின் தொந்தியின் அழகு இமைக்க மறுக்கிறது


முதுகெலும்பின் தண்டுவடம் ஊசி வலியில் 
நொய்தலாக பேழை வயிற்றின் சுமை சுகத்தின் 
கணமாய் தலை நிமிர்த்திய நேர் நடையில் கௌரவம் பெறுகிறது


மெலிந்த தேகத்தில் சுவாசிக்கத் திடம் இன்றி 
ஒட்சிசன் முகக்கவசத்தின் துணையோடு 
என் சிறு உயிரும் சுவாசிக்கின்றது


ருசியறியா நா உணர்வற்று உணவை 
வெறுப்பினும் உட்சாகமாய் வேண்டி 
விரும்பி உண்கின்றேன் ஊட்டச்சத்தின் பிரதிபலன் 
என் சிசுவிற்கு வந்தடையட்டும்


சீராட்டி பாராட்டிட உன் பக்கமில்லா 
பாவியாவேன் என்றே உன் பாதம் தொட 
இறையாசியுடன் ஒரு பெண் குழந்தைக்காய் 
அனுதினமும் வேண்டிநிற்கின்றேன்


பாவ விமோட்ஷனம் பெற தகுதியற்றவள் நான் 
சுயநலக்காரி இவ்வுலகில் உன்னைப் பிரசவிக்க 
புற்றுநோய் பூண்ட தேகத்தை ஆடையாய் அணிந்துள்ளேன் நிரந்தரமாய்


தாயாய் கடமையாற்ற என் இன்னுயிர் உலகுநீர்ப்பினும் 
சேயாய் எனை பாவனை செய்ய
உன் அப்பாவின் மறு தாயாய் தாலாட்ட தினமும்
உன்னைத் தடவிக்கொடுத்து மன்றாடுகின்றேன்


எத்தனையோ சாகசங்கள் புரியும் பெண்மணிகள் 
பலர் மத்தியில் சாதனையாய் உனை கருவிற்சுமந்து 
சுகநலத்துடன் ஈன்றெடுப்பதே
என் வாழ்நாட்சுமைகளிற்கேற்ற செல்வம்

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...