Saturday, May 30, 2020

மண்ணைக் காதலித்திருக்கலாம்
























உன்னைக் காதலித்ததற்கு 

மண்ணைக் காதலித்திருக்கலாம். 

இரண்டின் முடிவிலும் 

மண்ணோடு மண்ணாய்ப் போவதுதானே நியதி


அன்பான வார்த்தைகளுக்கும் கனிவான 

கரிசணைக்கும் கரைந்துபோகாமல் 

வீரத்தமிழ் வீழாது விண்ணிலும்

ஆலம் வித்துக்காளாய் விளைச்சல் காட்ட

உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம். 


காஞ்சிவரம் பட்டுக்களின் இஸ்திரி மடிப்புக்கள்

நேர்த்தியாய் நேர்கோட்டிட வர்ணங்களில் 

வனப்பேன் உன் கருவிழியில் கண்ணா 

என்று கர்வம் கொள்ளாமல் 

காக்கி உடையோ கிழிஞ்சல் கந்தையோ

மண்மகள் அடையாளம் எனக்காட்ட

உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம். 


பத்துப்பவுன் திருமாங்கல்யம் வெகுவிரைவாய் 

கழுத்தில் ஏற மஞ்சல் மேனி மையல் 

கொண்டு நாணம் கூடி செக்கச்

சிவப்பதற்கு எதிரியின் பிடியிலும்

உன் விதி நீ எழுத மரணமே

மந்திரமாம் சைனைட்டுக் குப்பியுடன் 

கறுப்புக்கயிறு வீரவணக்கத்தைக்காட்ட

உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம். 


பூச்செண்டு கையில்லேந்தி மணமேடை 

மணம் கமழ வாச ரோஜா வாடிவிடாமல்

பன்னீர்த்தெளித்து புதுமலர்ச்சி கொடுக்க

பூமாரி பொழியும் தோட்டாக்களின் உறைவிடம்

துப்பாக்கி முனையுன் துஸ்டனை தூளாக்கும்

துடிக்கும் கரங்களிற்கு துர்பாக்கியவதி நான்

உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம். 


ஒற்றைக்கையொப்பத்தில் உன்னைச் சரண்டைந்து

இருவர் சாட்சியில் இறுதிவரை உன்னில் மாட்சி காண 

நாமம் பொறித்த கல்லறைகளில் எரியும்  

விளக்குக்கூட தலைவணங்கி என் மண்ணின் 

காதற்புகழ் பாடி வையமும் வரவேற்க

உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம். 


உனக்கும் உற்றாருக்கும் உறங்காமல் 

ஊதியமற்ற ஊழியம் பார்த்து உயிர்மூச்சுத்துறந்து

மண்ணில் உறங்கிக்கிடப்பதிலும்

தளர்வான நிலையிலும் தைரியமாய் போரடி

மண்ணில் மக்கிய உரமாகிப்போனாலும் 

ஒரு விதையை விளையச் செய்து அதன் 

கொடும்விசத்தில் விரோதி வீழ்த்தப்பட

உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம். 



Thursday, May 28, 2020

ஓ மனமே....

                                                                                                 


ஓ மனமே .....

நீ ஓர் ஊனமுற்ற கைக்குழந்தை

அடித்தாரின் பெயர் சொல்லி 

அழத் தெரியாத

மண்மூட்டை

ஓராயிரம் கூரிய வாள் வெட்டுக்களுக்கு 

பச்சிலை அரைத்து பற்றிட்டு பத்தியம் 

அறியாப் பச்சிளங்குழந்தை

சிந்தையால் காண்பதை நிஜமென நம்பி

சித்தம் மறந்த கைப்பாவை

உடலுக்காய் துடிப்பதை விடுத்து 

பிறவுயிர்க்காய் துடிக்கும் 

துக்கம் நிறைந்த கைம்பாவை

துடிப்பதையும் விடுத்து நினைக்கத்தூண்டும்

நினைப்பதில் உயிரைத் துறக்கத்தூண்டும்

இலவளித்த இரும்பு ஆலை

பள்ளம் தேடும் சேற்று நீரையும்

தேக்கி செந்தாமரை மலரால் 

வனப்பு சேர்க்கும்

கண்ணீரின் வற்றாக்குளம்

குடியிருக்க குடிசை இல்லாதவனும்

கோபுரத்தில் அலங்கரிக்கப்பட்டு

பவனிவரும்

சில்லுடைந்த  மரகத ரதம் 

கற்பனையில் அனைத்தும் கடந்து 

செல்லும் கற்சிலை

கூழங்கற்களால் சிதைக்கப்படும் உன் 

காதலிற்கு ஓர் மணிமகுடம்

துன்பத்தில் சளைக்காமல்

அறுவடைக்காய் காத்திருக்கும் 

ஏழை விவசாயி

மனமே நீ மனமாக மட்டும்

மாறிவிடு

மாற்றமில்லா மனக்கல்லறைகள் பல

உலாவித்திரிகையில் ஏமாற்ற தாழாது

நீ மரணித்துவிடக்கூடும்

Sunday, May 24, 2020

பிறைதேடலாம் வா





மிதிக்கும் துவிச்சக்கரவண்டி பெடல்களில்

பாதம் நான் வைக்க பயணம் நீ துவக்க

நீண்ட தூரம் செல்கிறோம்

பிறைதேடலாம் வா


அடர்ந்த மரக்கிளைகளில் கொஞ்சும்

கிளிக்கூட்டம் கொஞ்சம் வெட்கப்படும்

அழகை இரசித்தவாறே

பிறைதேடலாம் வா


கோடி நட்சத்திரங்கள் மினுமினுக்க

கோகிலவாணியின் பட்டம் வானுயறப்பறந்து

வாகைசூட சூறைக்காற்று புலுதிகிளப்ப

பிறைதேடலாம் வா


ஐயர் ஆத்தில் தயிர்சாதம்

ஆண்டனி வீட்டில் திருக்கைமீன் வறுவல்

ஆச்சிக்குடிசையில் நெய்முருங்கைச்சாதம்

வாசனைப்பிடியில் வயிறு தவிக்க 

பிறைதேடலாம் வா


புலுங்கலரிசிச்சோறு பருப்பு பயற்றை

பூசிணி கத்தரிக்காய்கறி மொறுமொறு உழுந்துவடை

அப்பளம் மோர்மிளகாய்ப்பொரியல்

தலைவாழையிலையில்

தண்ணீர்தெளிச்சு

தண்ணீர்க்குவளையும் அருகில்

சதுர்த்திவிரதம் முடிக்க காத்திருக்கு

பிறைதேடலாம் வா


பாய்வீட்டு கோழிப்பிரியாணி நண்டுவறுவல்

இரால்பொரியல் ஆட்டுக்கால் சூப்புடன் 

வெட்டி அலங்கரிக்கப்பட்ட அன்னாசி ஆப்பிள்

மாதுளை கிண்ணத்தில் வட்டிலப்பம் மஸ்கட்டும்

சவான் முடிக்க பாட்டாளிக்கூட்டம் காத்திருக்கு

பிறைதேடலாம் வா


ஆதிசிவன் முடியில் சிக்கிய பிரம்மவிஷ்ணு 

புது அவதாரம் காண கண்ணைக் கசக்கி

தெளிவாய்த்தேடும் அல்லா அருவமாய்

தேடச்சொன்ன பொக்கிஷப் புதையல் காண

பிறைதேடலாம் வா

Thursday, May 21, 2020

ப்ரியங்களின் வதை




ப்ரியங்களின் வதை எப்பொழுதும் 

மௌனமானதே

அது இருட்டில் மட்டும் 

வெளிச்சமிட்டு காட்டிகையில்


ப்ரியங்களின் வதை எப்பொழுதும்

அவஸ்தையானதே

அலாதியான அன்பைக் கொண்டு

அநாதையாய் மாற்றுகையில்


ப்ரியங்களின் வதை எப்பொழுதும்

துயரானதே

நேசிக்கும் நெஞ்சத்தில்

நேசத்தை தேடுகையில்


ப்ரியங்களின் வதை எப்பொழுதும்

சுவாரஸ்யமானதே

எப்போதாவது இன்னல்கள் விடுத்து

இன்பங்கள் சூழ்ந்திடும் நிலை எதிர்பார்கையில்


ப்ரியங்களின் வதை எப்பொழுதும்

சுயநலமானதே

இருகண்களில் ஒன்றை மட்டும்

உருத்தி கண்ணீர் காண்கையில்


ப்ரியங்களின் வதை எப்பொழுதும்

ஆத்மாத்தமானதே

உடலின் காயங்கள்  சரிசெய்துவிடும் என்கையில்

மனதால் வடுக்களின் வலி நித்தம் சுமக்கையில் 


ப்ரியங்களின் வதை எப்பொழுதும்

ஒருமனமானதே

சொப்பனங்களிலும் கதி கலங்கிடும்

படுபாவி நினைவுகளை மட்டும் தெளிக்கையில்


ப்ரியங்களின் வதை எப்பொழுதும்

ப்ரியமானதே

ப்ரியமானவரின் அன்புப் பரிசை

பவித்திரமாய் பரிபூரணமாய் ஏற்கையில்

Wednesday, May 20, 2020

கடல் பெண்ணே



கடல் பெண்ணே

உன் கண்ணீர்தான் கடலில் 

உப்பாய்க் கரைந்ததோ

காலங்களும் கடக்க 

உப்பின் செறிவும் அதிகரிப்பதேன்

இன்னும் உன் கண்ணீர்கடல் வற்றாமையா?


கடல் பெண்ணே

உன் சீற்றம் தான் கொந்தளிப்பானதோ

பாரிய அலைவெள்ளத்தில் உயரம்

விண்ணளவைத்தாண்ட உன் கோபத்தணல்

இன்னும் எத்தனை துயரின் பிரதிபலிப்போ?


கடல் பெண்ணே

உன் பொறுமைதான் 

கடல் உள்வாங்கலானதோ

உள்ளிருக்கும் பொறுமை எல்லாம்

எரிமலைக்குமுறலாய் பொழியும் எரிதணலானதோ?


கடல் பெண்ணே

உன் புண்ணியம்தான் அலையானதோ

கறைபடிந்த பாதங்களை கூச்சமின்றி

கழுவி பாவவிமோட்ஷனம் அளிப்பதனாலோ?


கடல் பெண்ணே

உன் நட்புதான் சமுத்திரப்பயணமானதோ

நீண்ட தூர எல்லைகளுக்கு முடிவிடம்கொடுத்து

இரு எதிர்முகங்களுக்கு சந்திப்புக்கொடுப்பதாலோ?


கடல் பெண்ணே

உன் தாய்மைதான் கடல்மீன்களானதோ

வருமானமும் வருவாயும் தேடித்தர

வழிதேடுபவர்கள் வறுமை போக்குவதனாலோ?


கடல்பெண்ணே

உன்காதல் தான் கழிமுகமானதோ

ஆறோடு கூடல் செய்து

இனமற்ற காதலென நிலைநிற்பதனாலோ?



Tuesday, May 19, 2020

கோவிந்தனின் கொலுபொம்மை




இவள் கோவிந்தனின் கொலுபொம்மை 
அவன் பெயர் சொல்லும் கைப்பாவை
அவன் இசைவிற்கு அசையும் தலையாட்டிப்பாவை
பிரபஞ்சமெல்லாம் பரந்திருக்கும் பிரகலாதன்
பிறை கண்டு மகிழும் மெய்ப்பாவை
அதிதியின் மகனாம் ஆதித்யன்
அறம் அஞ்சாவாசம் கொண்ட அற்புதப்பாவை
பிறப்பையும் இறப்பையும் கண்டு
அஞ்சான் அஜெயன் அவன் புகழ் பாடும்
நாதம் இவள் சுவாசிக்கும் உயிர்ச்சுவாசம்
ஆவினங்களை நேசிக்கும் கோபாலப்பிரியன்
நாமம் கோலமாய் தரிசிக்கும் கோகிலப்பாவை
பிரபஞ்சத்தே ஆளும் பிரபஞ்சகுரு
ஜெகத்குரு ஜெயம் கொண்டானின்
விஜயமே காண வாசம் கொண்ட ஜெயப்பாவை
ஸ்பரிச தேஜஷ் பவளமாய் ஜொலித்திடும் 
சூரியக்கதிர்ப் பார்வையால் அகிலம் 
அன்பால் நனைத்திடும் ரவிலோசனன் 
இரட்சிக்கும்  இரத்தினப்பாவை
இராச லீலையில் மனம் மகிழும் இராதைக்கிருஸ்ணன் 
மீளாத காதல் கொண்ட மீராவின் கண்ணன்
மணிமகுடத்தில் மைதிலி சூடிய 
மயூராதிபதியே பதியாய் தியானிக்கும்
இவள் கோவிந்தனின் கொலுபொம்மை

Saturday, May 9, 2020

முடிவு



இன்றெடுக்கப்போகும் முடிவிற்காக நான் 
தினமும் வருந்தலாம் மௌனமாய் 
இரவுகளில் கண்ணீர் சிந்தலாம் 
இந்த முடிவின் பலனை 
ஆயுள்வரை அனுபவிக்கலாம்
இதனால் என் இதயமும் இருண்ட 
பாலைவனத்தில் அடிமையாகலாம்
உணர்வுகள் இறந்துபோகலாம்
ஊமையாய் பல வார்த்தைகள் மடிந்து போகலாம்
ஆனால் இந்த முடிவில் நான் மாற்றம் காணப்போவதில்லை
இதில் என் சுயநலம் அடங்கலாம்
என் சுயமரியாதை உயரலாம்
நான் நானாகவே என்றும் வாழலாம்
ஆனால் இந்த முடிவில் மனதார எனக்கு உடன்பாடில்லை
இந்த முடிவால் பலரின் முன்விரோதங்களில் 
இருந்து சற்று தப்பித்துக்கொள்ளலாம்
இது உனக்காக எடுக்கும் முடிவு
உன் நலன் விரும்பியாய் எடுக்கும் முடிவு
உன்னால் மட்டுமே என் நலன் என்பதிற்கான முடிவு
தொடக்கத்திலே முடிவு என்கதையில் மட்டும் தான்
இதில் சுக துக்கங்கள் எல்லாம் நானாய் உருவாக்கிய 
கற்பனை உதறல்கள்
இந்த முடிவில் எனக்கு இஸ்டமில்லை
இந்த முடிவால் உனக்கு கஸ்டமில்லை
இதுபோன்ற முடிவுகள் ஒருவகை இன்பம்தான்
இதில் பயன்பெருவர் இம்முடிவினை வேண்டுவோராய் 
இருக்கும் பட்சத்தில்
இந்த முடிவு என்னை தூங்கவிடப்போவதில்லை
இந்த முடிவால் தூக்கம் என்னை விடப்போவதில்லை
மறப்பதற்காய் தூக்கம் கொள்கின்றேன் 
ஏன் மறதியின் வாயிலாய் நியாபகத்தைத் தூண்டுகிறாய் 
இந்த முடிவில் பலர் பயனாளியாகலாம்
நன்மை என்று கருதலாம் இதில் அவர்களுக்கு
பங்கும் இருக்கலாம் இம்முடிவால் பூரிப்படையலாம்
இந்த முடிவில் எனக்கு மனக்குழப்பமில்லை
இதை ஏற்க உனக்கு என்போல் மனமும் இல்லை
இந்த முடிவால் நீ நீயாகுகிறாய் நான் என்றும் 
நாமாகத்தான் இருப்பேன்
இந்த முடிவு துயரானது நீ என் 
துயரில் கூட துக்கம் விசாரிக்க 
இல்லை என்கிறது இந்த முடிவு
இன்று எடுக்காவிடின் வேறு என்றோ கட்டாயமாய்
இந்த முடிவை நீ எடுக்கத்தான் போகிறாய்
அதற்குப் பரிகாரமாய் இன்றே 
சற்றும் விருப்பமில்லாலம் நான் முடிவெடுக்கிறேன்
இதில் நீ உன் முடிவை இனி முடியாது 
என்று பொய் பேசத்தேவையில்லை
எல்லாம் முடிந்த முடிவு இனி முற்றுப்பெற்றது
இந்த முடிவில் முடியாது என்ற பேச்சுக்கு இடமில்லை
இந்த முடிவில் நீயும் நானும் திருப்ப முடியாத 
நீண்ட இடைவெளி பெறலாம்
எந்நாளும் இந்த முடிவை ஒரு நொடி 
மனதார பிழை விடுத்தோம் என தேற்றிக்கொள்ளலாம்

முகத்திலிரண்டு புண்ணுடையோர்




அறம் ஏற்று அகம் பெருமிதம் 
கொள்ளக் கற்றோர் முகத்தில் இரு கண்களும் 
அறிவிலார் கல்லாதோர் முகத்திலிரண்டு 
புண்ணுடையோர் என வள்ளுவன் வாக்கில்
சற்றுத் திருத்தம் அதை எழுதிக்கொள்வீர் 

கற்பதிலும் அதை மனதார ஏற்பதிலும் 
முற்போக்குச்சிந்தனையாய் எழுத்தறிவித்தவனே
அநீதி கண்டும் சீறும் தணல் சீற்றம் தாழாது 
விழியோரம் சிறு வெறுப்பைக் காண்பிக்காதவரே
முகத்திரண்டு புண்ணுடையார்

வஞ்சனையே வைராக்கியமாய் அகில 
நன்மைபயப்பிப்போர்  சூழ அராஜகமாய்
இன்றும் பல திரௌபதிகளின்  வஸ்திரம் 
களைய வல்லவர்களின் துணிகரச்செயல் கண்டும் 
கண்களை கருங்கற்கள் போல் விழிதிறக்கவிடாதோரே 
முகத்திரண்டு புண்ணுடையார்

பசித்தழும் பச்சிளங்குளவி கதறியழ கண்ணீர் வற்றி
கையேந்தும் திருவோட்டிலும் கால்வாய் கஞ்சிக்கும் 
மிஞ்சாத குற்றி அதையும் பொறுக்கி சீவனமாக்கும் 
கைம்பெண்களின் விலைபேசும் தர்மவித்துவான்களே
முகத்திரண்டு புண்ணுடையார்

வீதியோரமாய் நடைபிண உற்று ஓருயிர் துவண்டும்
நா நனைக்க ஒரு துளி ஜலம் பருகவைக்காதவன்
வாழ்க்கையிலே நடைபிணமாய் அலைய 
மதுவில் மதிமயங்கிக்கிடப்போரே
முகத்திரண்டு புண்ணுடையார்

கூப்பிட்டக்குரலுக்கு செவிசாய்த்தும்
ஏற்புடைய கருமத்தை விலத்தியும்
அல்லற்படும் அன்னையும் பிதாவும்
முதியவர் இல்லத்தில் என்ன சொகுசு காண்பர் 
என்று கெஞ்சிக்கேட்டும் அதில் சித்தம்கொள்ளாது
பஞ்சணையில் நிம்மதித்தூக்கம் உறக்குபவனே
முகத்திரண்டு புண்ணுடையார்





Thursday, May 7, 2020

எனக்கு வேறு என்னதான் வேண்டும்



அகிலத்தோனே அன்பின் மதனனே  
அருகில் நீ இருக்க 
எனக்கு வேறு என்னதான் வேண்டும்


அச்சம் மிகுந்த சூழலில் நான் இருக்கிறேன் 
என்று இறுக என் கரங்களை அணைத்துக்கொள்வாய் 
பற்றும் உன் கரங்களில் பதிந்த என் கைரேகை
உன்னில் என் விதியைக் கோர்த்திட
எனக்கு வேறு என்னதான் வேண்டும்


தனிமையில் பிதற்றிடும் போதை 
தலைக்கேற நடுக்கத்தில் இதயம் 
இரண்டுமுழம் வெளியே பதபதைக்க
உப்பிப்போன வியர்வை விழியருகே
கண்ணீராய் உருவெடுக்கமுன்
தோள்பற்றும் உன் இரு கரங்களிலும்
தன்நம்பிக்கை கொடி படர வைத்திடும்
நீ இருக்க எனக்கு 
வேறு என்னதான் வேண்டும்


கடக்கும் கரடுமுரடான கடினமான 
பாதையில் இரயில் தண்டவாளங்களாய்
தூரதேசம் போகும் நெடும்பாதை
வழி மாறி தடம் புறழும் கணமெல்லாம்
முன்னுமில்லாமல் பின்னுமில்லாமல்
என்னோடு எடுத்துவைக்கும் ஒவ்வொரு 
அடியிலும் மலரும் ரோஜா புஸ்பத்தின்
மென்மை பாதங்களில் உணரவைக்கும்
நீ இருக்க எனக்கு வேறு என்னதான் வேண்டும்


ஆயிரங்காரணங்களால் முறிந்துபோகும் 
உறவில் அன்பால் சமச்சீர்நிலை
அளக்கும் அளவுகோல் விருசபர்வா 
சர்வஜனாய் என்னை நேசத்தால் நெசவு செய்யும்
நீ இருக்க எனக்கு 
வேறு என்னதான் வேண்டும்



நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...