Thursday, April 30, 2020

மீண்டும் போலிச்சிரிப்புடன்



எள்ளி நகையாடிய காலமெல்லாம்
கிள்ளிப் பார்க்கையில் திடுக்கிடும்
புள்ளிக்கோலத்தின் ஒரு முடிச்சாய்
வள்ளி அவள் கனவுகளையெல்லால்
அள்ளிப்பருகிடும் பெருங்குவளை நீரில் கரையவிட்டாள்


பள்ளிப் பருவ காலோட்டத்தில் அவன் தந்த பவள
மல்லியாய் புன்னகை சூடி வதனம் மலர்ந்த நினைவெல்லாம்
கள்ளி அவள் கற்பனைக் கடிவாளமாய்  இன்று கட்டியிழுக்க 
சொல்லி ஆழ யாருமில்லா மெல்லிசையை
சுள்ளி விறகுடன் மூண்ட தீயில் மெல்ல
எரியவிட்டாள்


கொல்லிமலைச் சித்தர்களும் காணா கடும் தவமாய்
அல்லி மலர்ந்தொரு மொழி அரிதாய்க்கூட அந்நியரிடம்  பேசாள் வள்ளி இவள் ஒரு ஊமை என்றும் ஊராரின் பெயர் பெற்றாள்
தள்ளி நின்று பார்த்த தாய் மனம் கொதிக்க வண்ணமலரோ வண்டு வேண்டா மலராய் அவன் அன்று தந்த கற்பனை மலரை துணிமணியுடன் 
அடுக்கிவைத்தாள்


பொங்குதமிழ் எழுச்சியில் முதன்முதலாய் அவனைக் கண்டவள் அவன் செயற்பாட்டில் மெய் மறந்தாள்
தங்குதடையின்றி பாயும் வெள்ள நீரோட்டம் விவாசாயியின் வயிற்றில் பயிரிடத்தான் என ஆராய்ந்த அவள் அவன் உழைப்பினில் தன் சூழல் மறந்தாள்
மங்கும் பொன் சுரங்கம்  அவன் மார்போடு நீண்ட அன்பு அதில் அவள் சுற்றம் மறந்தாள்
பங்குகேட்கும் உலகில் என் பாகம் என்னைப் பெற்றவள் என புறங்களைத் தீண்டா அவன் குணங்களில்  அவள் தன்னையே மறந்தாள்


உறக்கம் அவள் நினைவுகளை உறங்கவிடவில்லை
தயக்கம் அவள் வார்த்தைகளை அவிழ்த்துவிடவில்லை
மயக்கம் காதலில் அவன் முகம் தவிர வேறு சுயமில்லை
நடுக்கம் அவள் கைப்பிடியில் இன்னும் அவன் கைவிரல்கள் பின்னப்படவில்லை


அன்னையின் ஆசி அப்பனின் ஆட்சி
அண்ணலின் கைப்பிடி அந்த சிறுவட்டம் தாண்டி வெளிவர
 விட்டில்பூச்சி விளக்கொளியில் ஏரிவதுபோல்
மங்கைக்கோ காத்திருந்தது பேரதிர்ச்சி


வானுலகம் சென்று பூமழை பெற்று பூமாலை சூடி 
புகைப்படத்துள் ஒளிந்துகொண்ட அவனை மீட்டுவர
அவளுக்குத் தெரியவில்லை மலர்வளையம் இட்டு மண்டியிட மனமும் விடைகொடுக்கவில்லை
உலகில் பல ஆடவர் இச்சையாய் கேட்கவும் மணக்கோலம்  காண மதியில் ஏனோ எட்டவில்லை
மாறாக கண்ணீரில் கடிதம் தீட்டினாள் கோதை விதியது வலியது


அவன் நினைவுமலர் தினம் நீரூற்றி வளர்த்தாள் அதன் வாசனை அறியாமலே 
மலர் சூட அருகதை அற்ற அவள் கூந்தல் காற்றில் களைந்தாலும் அதை ஜடைபோட்டு கட்டிவிடுகிறது அவனுக்கான அவள் மனம் மீண்டும் போலிச்சிரிப்புடன்

செல்லப்பிராணிகள்




செல்லப்பிராணிகள் 
எம் வீட்டோடு வாழ்பவர்கள்
அன்பைச் செலுத்தி அதீதமாகப் பெறுகையில்
இவர்களும் எமக்குச் செல்லக்குழந்தைகள்


போதனையில்லா  மெய் நன்றி இவர்களின் இலக்கணமாகிட பாரினில் விசும்பும் மென் மழைத்துளிகூட இவர்களின் அன்புத்தூய்மையில் தோற்றுப்போய்விடும்


வாலினால் தலைவணங்குவது 
ரோமங்களினால் மெய் தீண்டுவது 
நாவினால் நன்றி நல்குவது
முன் புஜங்களினால் இறுகப்பற்றுவது 
நம் காலடியில் தஞ்சம் கொள்வது 
நீண்ட நேரத்தவிப்பை பாசமழையாய் அவர் அவர் மொழியில் பறைசாற்றுவது 
இதுவெல்லாம் அவர்களின் அன்பின் வெளிப்பாடு அதுவே அவர்களின் கோட்பாடு


ஒருபிடிசோற்றுக்கு வாழ்நாள் முழுவதும் 
உழைக்கும் உழைப்பாளிகள்
சற்று நேரம் உறங்கினாலும் துரிதமாய் சேவை செய்து கிறங்கடிக்கச் செய்திடுவார்கள்
பலவித வித்தை கண்டு வியப்புற்றேன் இவர்களின் அன்பு என்ன மாய வித்தையோ?


சேற்றிலும் சகதியிலும் துள்ளிக்குதித்து ஆனந்தம் கொண்டு வெண்சட்டையிலும் காற்தடம் பதித்திடுவார்
குறுகிய ஓசையில் தம் வரவைக் கண்டு குதூகலித்து ஆரவாரம் செய்திடுவார்
தட்டில் எத்தனைவகை உணவிட்டாலும் உம் கரத்தால் ருசி பார்த்திடுவார் 
காதலனுக்கோ பொறாமை விஞ்சிடும் அவர்களின் கன்னத்தில் பதியும் எண்ணற்ற முத்த மழையில் தமக்கான மகுடம் என சூடிடுவார்


படுக்கையில் குழவியாகினும் வயதுமுதிர்ந்த கிழவியாகினும் பேதமற்றவராய் கட்டளைக்காக காத்திருப்பார்
வளர்த்த கடனை திருப்பிக்கொள்ள ஆருயிர்த்தியாகமும் சுயவிருப்புடன் யாக்கைத்துறப்பார்





Sunday, April 26, 2020

பெற்றவளின் உறக்கம்




என்னைப் பெற்றவள் என் மடிமீது
உறங்குகிறாள் சற்று அமைதிகோலுங்கள்


மூத்த தமக்கையாய் பிறந்த அவள்
இளவயதில் மணக்கோலம் பூண்ட அவள்
முதுமை முன் வாழ்க்கைத்துணையை இழந்த அவள்
நம்பிக்கையால் உறவை இழந்த அவள்
பெற்றமக்களால் புன்னகை இழந்த அவள்
மனம் ஆறா வடுக்காய மடிமீது 
உறங்குகிறாள் சற்று அமைதிகோலுங்கள்


கடமைகளில் கண்ணுறக்கம் தளர்த்தினாள்
கண்மணியான சிசுக்களைச் சீராட்டிட 
பாரினில் பாசமலராய் உற்றார் பாராட்டிட
வாலிபக்கோலத்தில் மணமேடை ஏற்றிட
வயோதிபம் பூண்ட வெண்தலையாள்
ஓவிய உருவமாய் தலைவனைக்கண்டே
கண்ணுறக்கம் தளர்த்தினாள்


விவாதங்களில் பின்தங்கி மனங்கோணாது
மொழிபேசக் கற்றவள் அதை அடுத்தவரிடம் பெற
சற்றுத் தோற்றுவிட்டாள் 
அனைத்தையும் கண்டு மனம் எரிமலையாய்
பிறவுறவும் அமைதிக்கடலில் கூழாங்கற்களைத்
தேடும் மென் மலர் நெஞ்சாள் இன்றுதான் இளைப்பாற கண்வளர்க்கிறாள் சற்று அமைதிகோலுங்கள்


சரசரப்பான சலனங்களுக்கு விடைகொடுத்து
தாங்கொள்ளா தாகத்திற்கு முகங்கொடுத்து
ஏக்கத்திற்கு ஆற்றாதசுமைக்கும் மனதில் இடங்கொடுத்து 
மூலையில் ஒரு மூலையாய் சுவாசித்து யாசிக்கும்
புனிதமாதா இன்றைக்கு மட்டும் சாட்டு சொல்ல காரணமின்றி என் மடிமீது
உறங்குகிறாள் சற்று அமைதிகோலுங்கள்


தூரதேசம் வாசம் செய்தவளுக்காய்
கன்னிகாதானத்தில் தானமாய் சென்றவளுக்காய்
வெறுப்புக்கு உள்ளம் குளிர்காண்பவனுக்காய்
அடுத்தமொழியை அந்நியமின்றி அறமாய் சுவாசித்தவனுக்காய்
பாதிவழி பாதிவலி பாதிஉயிராய் பிரிந்தவனுக்காய்
ஊன் உறக்கம் துறந்தவள் யாசகமாய் பரிந்து கேட்டிட பரிசாய் என் மடிமீது
உறங்குகிறாள் சற்று அமைதிகோலுங்கள்


பொன் வைர வைடூரியங்களில் கனிவு காணாதவள்
அடுக்குமாளிகை அல்லிமலர்ப்படுக்கையில் சுகம் பெறாதவள் அறுசுவைகளில் நாக்கின் ருசிமண்டலம் உணர்ந்திராதவள் 
பட்டுடுத்தி நிலைக்கண்ணாடியில் நிலைப்பாராதவள்
உறக்கத்தில் மட்டும் அனைத்திலும் உறக்கங்கொள்ள என் மடிமீது
உறங்குகிறாள் சற்று அமைதிகோலுங்கள்


ஊரவர்கள் உறவினர்கள் வருகையும் காணாது
விருந்துபச்சாரத்தில் வியர்வை சிந்தாது
கசியும் கண்ணீருக்கு விடைகொடுக்க 
கானகமே வா என்று காரிருள் கண்களில் சூழ
என் மடிமீது உறங்குகிறாள் சற்று அமைதிகோலுங்கள்


பந்தியும் பறமேளமும் முன்நின்று வழியனுப்ப
தீப்பந்தம் கொண்டு இப்பந்தம் முறிக்க
கண்ணீரில் நீர்ப்பந்தம் சுமந்துவரும் என்கையில்
உனக்குத்தர ஒருபிடி வாய்கரிசி அதையும் மென்றுவிடாது என் மடிமீது
உறங்குகிறாள் சற்று அமைதிகோலுங்கள்


பெற்றவளின் அயர்ந்த உறக்கம் அற்றபமாய் 
கிடைப்பதில்லை போலும் என் மகவாய் பெற்றெடுத்தே உன்னைச் சீராட்டி உறங்க வைப்பேன் அவள் இன்றோ என் மடிமீது
உறங்குகிறாள் சற்று அமைதிகோலுங்கள்

Sunday, April 19, 2020

செல்ஃபி ஒரு பார்வை



கையடக்கத்தொலைபேசி அனைவரது
கைகளிலும் புறழ இதுவும் ஒரு காரணம் தான்
தொலைபேசி வகைகளும் தரங்களும் கைமாற்றிட்டு பரீட்சித்துப் பார்க்க இதுவும் ஒரு ஆவல்தான்
வறண்ட சருமமும் வனப்புமிக்க வர்ணஜாலமாய்
வர்ணமற்ற ஓவியங்களும் 
ரவிவர்மனின் கைக் காவியமாகிட  
உதட்டோரப்புன்னையும் இன்று 
போலி  வளைவாகிட 
கஸ்தூரிமஞ்சள் நிறம் 
நினைத்தாற்போல் ஏறி இறங்கிட 
கிழப்பருவமும் குமரிக்கோலம்பூண்டிட
நவீன புழக்கமாகியது செல்ஃபி தான்
பிறப்புமுதல் இறப்பு வரை வேகமாய் பயணிக்கிறது
பிறந்த குழந்தைக்கு சிரிக்கக்கற்றுக்கொடுப்பதும்
இறந்த உடலிற்கு ஆத்ம அஞ்சலி செலுத்துவதும்
சந்தேகம் கொள்ளும் காதலிற்கு பாதகமாகுவதும்
மோகம் கொள்ள சாதகமாய் அமைவதும் 
புற அழகில் சந்தேகம் கொள்ளும் வேளை எல்லாம் 
சமாதானம் செய்வதும் 
மகிழ்ச்சியாய் வாழ்கின்றோம் என போலி வேடம் போடுவதும்
போகும் பாதையெல்லாம் ஒரு கால் தடமாய் அமைவதும் இந்த செல்ஃபி தான்
வாழ்கையின் நினைவுகளை அங்கமாய் பதியவைக்க 
ஆண்டாண்டு காலம் போகினும் அடுத்தவரிடம் 
அந்நிகழ்வை பறைசாற்றிட கையிலிருக்கும் ஆதாரமும் அது தான்
தான தர்மமும் வாரிவழங்கும் வள்ளலும்
புராணக்கதை தாண்டி முகங்காட்டும் தளம் இது
இழிந்தோர் முகஞ்சுழிக்கும் தருணமும் இது
மாமாமகளின் ஆசைக்கனவுகள் அடுத்த தேசம் தாண்டி நிஜங்களாய்ப் பலிக்கும் மந்திரவித்தை இது
விஞ்ஞானிகள் ஞானிகள் கண்டு வியக்காத விந்தை இது
அதீத மோகத்தில் உயிர்ப்பலிகள் பல வாங்கிய
இரத்தக்காட்டேரியும் இது 
பெண்ணின் மானத்தை கொள்ளை கொள்ளும் காமுகனும் இது
நிகழ்வுகளில்  காணொளி பிடிப்பாளரை மிதமிஞ்சிய 
விஸ்பரூபம் இது சிலசமயம் வெறிகொள்ள வைக்கும்
போதையும் இது
கொரனோவைவிட மிகவேகமாய் பரவிவரும் மிகக் கொடிய விசக்கிருமி தான் இந்த செல்ஃபி

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...