Friday, June 26, 2020

சிரிப்பு போலி பிரதிபலிப்பு

















என்றும் இனிமையான சிரிப்பொலியும்

செஞ்சந்தன முகப்பொலிவும்

மனதை வசப்படுத்தும் இன்மொழியும்

நேர்த்தியான இஸ்திரிக்கப்பட்ட உடையும்

பொய் கூறிவிடலாம்


மகவற்ற தாய் மடிக்கு நற்புதல்வனாய்

ஆடவண் துணையற்ற பெண்ணின் தமையனாய்

ஈன்றவனற்ற பிஞ்சு மழலையின் தகப்பனாய்

சகமும் பகிரும் தோழனாய்

உறவுமுறியடித்து விடலாம்


செஞ்சோலையும் சாலையோர நிழலும்

கொட்டும் அருவி மழைச்சாரலும்

வயலும் புல்வெளிநிலமும்

மலைத்தொடர் கடற்பரப்பு மணல் மண்ணும்

கண்ணிற்கு காட்சியற்றும் போகலாம்


முதல் விசும்பின் மழைத்துளியும் 

அதில் எழுnம் மண்வாசமும் 

பால்வாடை வீசும் மழலை அமுதும்

வெண்புகை பனித்துளி படர்ந்த மலர் மொட்டுக்களும் 

தேன் வண்டின் ரீங்காரத்தில் ஓடி விளையாடும் 

அணிலும் சிறு பட்சிகளும் இதமற்றுப் போகலாம்


அயலவர்களின் சலசலப்பான பேச்சுகளும் 

பத்திரிகை நடுப்பக்கத்து கிசுகிசுப்பான பேச்சுகளும் 

நவீன நங்கையின் நளினமான பேச்சிலும் 

காரியவாதியின் கபடமான பேச்சிலும் 

கடமையதிகாரியின் கடுமையான பேச்சிலும்

இனி சுவாரஸ்யம் குறைந்துவிடலாம்


அருளாசிபுரியும் இறைவனடி துணைநிற்காதென

அகவிழி சுடர் அணைந்து இருட்டான ஓர் 

ஓசையறியா அறையில் மேல் முகட்டில் கற்பனைத் திரையை 

அங்குமிங்குமாய் அலைய விடலாம்


காலன் பிடியில் கைவிலங்கின்றி இனி 

எவர் சித்தம் என்றே இங்ஙனம் இனிதாய் நிறைவேற்றிய 

மேடை நாடகத்தில் தன் கதாப்பாத்திரத்தை 

விருப்பு வெறுப்பின்றி நிறைவேற்றம் செய்யலாம்


நிர்க்கதியற்ற நிம்மதி தொலைத்தவனிற்கு 

அன்பாய் அருகில் அணைத்து அமர்ந்து 

தலைகோதி மடிமீது

ஒரு நிமிட பாசப்பிணைப்பிற்கு 

மனம் தேடும் அன்பானவர் இல்லாவிட்டால் 

அவன் சிரிப்பு போலி பிரதிபலிப்பாய் அமைந்துவிடலாம்






Wednesday, June 24, 2020

மறக்கமுடியுமா










மறக்கமுடியுமா

உன்னோடு பள்ளிப்பருவம் 

தொட்டு இன்று வரையிலான நினைவுச் சிற்பங்கள் 

ஒவ்வொன்றையும் அவை ஒவ்வொன்றாய் 

இதயத்தில் ஆழமாய் நான் பதித்த கல்வெட்டுக்கள்


இணையங்களில் இல்லை இதயங்களில் 

ஆரம்பித்த எம் அன்புப் பரிமாற்றங்கள் இடையிடையே 

ஆயிரம் பெரும் சண்டைகள்

ஒவ்வோர் சண்டை முடிவினிலும் 

புன்னகைத்தே உன்னிடம் வருவேன் 

நீண்ட மண்றாடலின் 

பின் மன்னிக்க வேண்டுவேன் 

பதிலாய் நீயும் கேலி செய்வாய்

கேலிகளே இன்று கேள்விகளாகின

ஒவ்வொரு பிரிவிலும் என் தேடல் இருக்கும்

தேடலின் பலனாய் நீ கிடைப்பாய்

ஊடலிலும் தேடலிலும் மாதங்களும் ஓட வருடமும் புரண்டோடியது


நீயும் வாலிபனானாய் நானும் இளவஞ்சியானேன்

இருந்தும் இந்த வாக்குவாதங்கள் நீண்டே தான் சென்றன 

இந்த வாய்ப்பேச்சுக்கள் இல்லாத நிலை 

வருமெனத் தெரிந்திருந்தால் நான் வாய்திறக்காமலே 

காலத்தை கடத்தியிருப்பேன்

அன்பான அக்கறைகளில் அடுக்களை சமையும்

என் உரையாடலோடே நடந்தது

எந்தன் பரிசு பொம்மைகள் உந்தன் கண்ணாடிப் 

பெட்டிகுள் காட்சியளித்தது

உனக்காய் வாங்கிய சட்டை கூட

உன் தம்பிக்கோ அளவானது


பக்குவமான வயதில்லை

பக்குவம் சொல்லித்தர யாருமில்லை

மண்ணோடு புரண்டழுது கண்ணீர் வடித்தாலும்

வானத்து விண்மீன்கள் கையில்

தவழ்வது இல்லை

நீயோ கடல்கடந்து போனாய்

நானோ எனை மறந்துபோனேன்

காலங்களும் கடந்தன

கடதாசி கணினி மயமாய் உருவெடுத்தன

மீண்டும் அழைப்பு விடுத்தேன்

மறுபக்கத்தில் பதிலளிக்க நீ


மீண்டும் நட்புக்கு பாலமிட்டேன்

நீயோ வேடம் என்றாய்

போகமனமில்லை என்றேன்

போடி என் வாழ்விலிருந்து என துரத்திவிட்டாய்

காரணம் என்னவோ நீயும் சொல்லவில்லை 

நானும் கேட்கவில்லை

கேட்பதிலும் பலனில்லை என்கே அறிந்தேன்


என்னதான் காரணமோ எதற்காய் இந்த காரியமோ

கானகமும் சொல்லும் என் சோகக்கதை

சோ எனப் பொழிந்த மழை

என் கண்ணீரைக் கழுவிக் கழுவி உப்பாய்போனது

உன் நிஜாபகங்கள் மட்டும் கரைந்திடாத

சிலைமேல் எழுத்தாகின


தொல்லைகளினால் தொலையட்டும்

இந்த அன்பின் இராச்சியம்

காலங்களின் கட்டளைகளை நிறைவேற்றியே

காத்திருக்கும் காத்திருப்புகள் 

பிரயோசமற்றதாய் களவாடிப்போன

இதயத்தில் உனக்கான நியாபகங்கள்

மட்டும் பகிரங்கமாக பதுக்கிவைக்கப்பட்டுள்ளன


ஆண்பெண் நட்பின் அளவும் அளவுகோலும்

நீ அறிந்துவிட்டாய் இன்னும் நான் அறியாமல்

இருப்பின் அது என்தவறே 

முட்டுக்கட்டைகளால் என்னுடன் முரண்பாடிடாதே

ஒதுங்கி ஓரமாய் இன்னும் மறவாமல் தவிக்கின்றேன்




Friday, June 12, 2020

நார்த்திகவாதி யார்?

               




















ஆர்த்திகன் என தன்னைத் தானே தம்பட்டம் 

அடித்துக்கொள்பவனை எதேற்ச்சையாய்

கண்டேன் அவனோ என்னை 

நார்த்திகன் என ஏளனமாய்ப் பார்த்தான்

எள்ளளவேனும் இடைவெளி நிரப்ப கிள்ளும் 

வார்த்தைகளால் வினவ நினைத்தவன் 

போலிப் புன்முறுவலுடன் சகா என்றான்


உங்கள் வயலில் விளைச்சல் எப்படி 

எல்லாம் இறைவன் சித்தம் என்றான் 

பாடுபட்டு வியர்வை சிந்தியவன் விவசாயி 

அவன் நலனை வேண்டுங்கள் என்றேன் 

மழையும் வெயிலும் இறைவனின் படைப்பு 

ஏன் வார்த்தைகளில் நையப்புடைப்பு என்றான்

பனை மூழ்கும் வெள்ளத்தையும் விறகெரியும்

கொழுந்தணல் வெயிலையும் அதே இறைவன் தானே

படைத்திருக்கவேண்டும் என்றேன் நான்


வாணிவிழாவில் சிறப்புறையாற்ற 

வரவேற்கிறேன் என்றான் 

எதற்காக வாணிவிழா அதன் முக்கியத்துவம் 

தான் என்ன என்றேன்

கல்வியின் அதிபதி சரஸ்வதிதேவி உள்ளம் மகிழ்ந்தால் 

மாணவர் கல்வி சிறக்கும் என்றான்

காதுச்சவ்வு கிழிய காணொளிப் பாடலை காலை மாலை 

இடைவெளியற்று உரக்க ஒலிபெருக்கினால் 

சாந்த சொரூபிணி சரஸ்வதியே ஓடிவிடுவாள் என்றேன்


மாரிமுத்துவின் மகள் அம்மைபோட்டு படுத்திருக்காள் 

அந்தப்பக்கம் போய்விடாதே என்றான் 

அம்மனை தரிசிக்கத்தானே ஆலயத்தோறும் ஆராதனை செய்வீர்கள் 

அம்மனே நேரில் வந்தால் ஏன் ஓடுகிறீர்கள் என்றேன்

அம்மனின் குறைபாடு அம்மன் கோபிக்கும்

தொற்றிவிடும் சரியான உபத்திரம் என்றான்

நீதான் பல தொண்டுகள் செய்கிறாயே

எப்படி அம்மனுக்கு குறைவரும் 

அம்மை எப்படி உனக்கு வரும் என்றேன்


கோவில் சந்நிதானம் நேரே கால் நீட்டாதே என்றான் 

காலில் இரத்த ஓட்டம் சிறிது சரிவரும்வரை பொறு என்றேன் 

கூடாது கூடாது

சுவாமி கோபிக்கும் என்றான் 

சந்நிதானத்திலும் கற்பகிரகத்திலும் மட்டும் தான் 

கடவுள் இருக்கிறாரா

சர்வவியாபகம் என்று சமயப்புத்தகத்தில் படித்தது 

பொய்யா என்று கேட்டேன்


பால்குடம் பவனிவர பாலமுருகன் கோயில் திருப்பணியில் 

கலந்துகொள்ள வருவாயா என்றான்

பசியில் வாடும் தாயற்ற பிஞ்சுக்கும் 

பட்டினியில் வறுமை வாட்ட கஞ்சி குடிக்கும் ஏழைக்கும் 

இந்தப்பால் கிடைத்திருந்தால் ஏன் கள்ளிப்பாலை

வலுக்கட்டாயமாய் பருக்கப்போகிறான் என்றேன்

எல்லாம் தங்கத்தால் வெய்யப்பட்ட கூரையில் 

குடிகொண்ட சந்நிதியான் பார்த்துக்கொள்வான் என்றான் 

அந்த தங்கக்கூரையை விற்றாலே வேறு நாட்டில் 

கையேந்தும் நிலை 

நம் நாட்டுக்கே தேவையில்லையே என்றேன்


போடா போ நீ இன்னும் மாறவில்லை என்றான் சலிப்போடு 

உங்கள் இதயங்களிலும் எண்ணங்களிலும் மாற்றம் காணும் வரை 

பரம்பரை அலகில் இதுவும் ஒட்டிக்கொள்ளும் கசடாக 

அதை என்னைப்போல் ஒருவன் முளைத்துக்கொண்டே இருப்பான் 

தூய்மையாக்க என்றேன் 




Wednesday, June 10, 2020

மதுகிண்ணமும் கதைபேசும்



















கண்ணே உன் நினைவுகள் எல்லாம்

கற்பனைக் கனவுகளாய் கலைத்திட

கையில் ஏந்தினேன் மதுக்குவளை

கவலைகள் தீர வேறு மருந்தில்லை


குவளை வளைவுகளை உன்

கமலக்கன்னங்கள் தாமரை இதழாய்

கையேந்தினேன் நீயும் தவழ்ந்தாய் என்

கரங்களில் அந்திசாயும் வேளை எல்லாம்


கிண்ணத்தின் கழுத்துப்பிடியை

கைபற்றும் போதெல்லாம் உன் சங்குக்

கழுத்துவளைவை என் விரல்கள் மீட்டும்

கல்வி சரஸ்வதி வீணையாய் இசைத்தேன்


கூவும் முகமறியா கருங்குயிலும்

கீச்சிடும் சின்ன அணில் பிள்ளைகளும்

காலைவேளையில் துயில் களைய

கண்ணீராய் ஓடுகிறது என் ஏக்கங்கள் 


கேலியாய் நோட்டம் விடும் அயலவர்

கண்களுக்கு கேளிக்கை வேடம் பூண்ட

கோமாளி நான் மாது உன்னை மறக்க 

கிண்ணத்தில் மது உன்னைப் புசித்தேன்


கைதியாய் மனச்சிறையில் அடைக்கப்பட்டு

குற்றவாளிக்கூண்டில் உன்னை சிந்தையால்

கட்டிக்கொண்டு அவிழ்க்கமுடியா வலிகளை

குவளையில் மதுவோடு பேசித்தீர்க்கின்றேன்


களவாடிய பொழுதுகள் எல்லாம் கன்னி

கைவளையலாய்  கடிவாளமிட

கையில் குவளையின் முகமும் அவள் 

கண்ணாடி வளையலாய் கதைபேசுகின்றேன்


கதை கதையாப் பேசுகின்றேன்

கண்ணீரும் தீரவில்லை கண்ணிலிருத்து

கற்பனையும் மீளவில்லை உன்னிலிருந்து

கைக்குவளை மதுவும் போதவில்லை பெண்ணே

கணத்த காதல் கசடிலிருந்து



Monday, June 8, 2020

விடைபெறுகிறேன்
















இன்றுதான் எனக்குக் கடைசிநாள் 
என்று அதிகாலைச்சேவல் உரக்கக் 
கூவுவதற்கு முன்னே நித்திரைப்பாயில் 
என் அகக்கண்கள் முழித்துக்கொண்டன


ஆர்ப்பாட்டமில்லா காலை வேளை 
எல்லோர்மனதிலும் ஓர் கலக்கத்தை
மௌனமாய் விதைத்திருப்பதை
என்னால் ஊகிக்கமுடிந்தது


அம்மா சுடும் முறுகலான நெய்த்தோசை
தட்டில் நிரம்பி வழிய காரமான மிளகாய்ச்சம்பல்
நாக்கின் சுவைநரம்புகளையும் தாண்டி 
நாசியில் புரக்கேறி என்னை விழிப்பூட்டவே
அம்மாவின் தலையில் மூன்று தட்டல்
உணவுக்குழாயை சீராக்கியது


கணக்கு வாத்தியார் கரும்பலகையை விட்டு
என் பயணப்பைகளில் பொருட்களை
திருப்தியற்றதாய் கணக்கிட்டுக்கொண்டிருந்தார்
வருடம் முழுவதும் நான் சுகவாசியாய் வாழ்வதற்கு


ஜாடி ஜாடியாய் இனிப்பு உறைப்பு உவர்ப்பில் 
உருப்படிகள் பல உலர்ந்ததாய் 
உருட்டித்திரட்டி வைத்துக்கொண்டிருந்தவளின்
கண்கள் சிவப்புக்கோவைப் பழமாய் பொங்கியிருந்தன
இரவிரவாய் அழுதிருப்பால் போலும்


பந்தாட்டம் விளையாட்டில் இன்று கவனம் 
செலுத்தாத மகள் நாளை பூப்படைந்தால்
பூவால் அலங்கரிக்க அருகில் இருப்பேனோ என்ற
அச்சம் தழுவிய தழுவல் ஏனோ நீங்க மனமில்லை


வீட்டின் வீரனாம் செல்லமகன் சற்றுக்கோபத்துடன்
மூலையில் மறைந்துகொண்டு என்னைப் பார்க்கும்
பார்வைக்கு விடைகொடுக்கத்தெரியாதவனாய்
தயங்கத்துடன் முன்னேறினேன்


ஐந்தறிவு ஜீவன் அவன் முகம்கூட இன்று 
வாடிப்போயிருந்தது ஏக்கத்தில் வாலாட்டி
என் காலைப்பின்னியிருந்தான் எடுத்துவிட
மனமில்லாமல் தலையைத் தடவிக்கொடுத்தேன்


என் பயணப்பைகள் நிரம்பிவிட்டன
என்னுடனான புகைப்படங்கள் பெரிதாக்கி
சுவரில் அலங்கரிக்கப்பட்டிருந்தன
சாமி விளக்கு பிரகாசமாய் எரிந்துகொண்டிருந்தது
வீட்டில் அனைத்து மின் உபகரணங்களும்
துண்டிக்கப்பட்டிருந்தன
அனைவரும் என்னை வழியனுப்ப
வாசலில் நிற்கின்றார்கள்


அம்மாவின் கால்பிடிப்புக்கு தைலம்
தேய்க்கத்தவறியவன்
அப்பாவின் பழைய மூக்குக்கண்ணாடியை
சரி செய்ய இயலாதவன்
செல்லமகளுக்கு தைரியம் கற்பிக்க
அருகில் இல்லாதவன்
குட்டிப்பையனின் வாலுச்சேட்டையில்
பங்கு கொள்ளாதவன் 
மனைவியின் கண்களின் காதலை
இரசிக்கும் பாக்கியமற்றவன்
செல்லப்பிராணியின் நிகரற்ற அன்பிற்கு
தோழனாய் தலைவணங்காதவன்


மனைவி என்னை இறுக அணைத்து
என் இதயத்துடிப்பில் 
மனமாறினால் நானோ
இத்துடிப்பின் இறுதிவரை 
நம்நாட்டின் நன்மைக்கென்று
எண்ணிக்கொண்டேன்
தீர்காயுளுடன் வாழ்வாய்
என அன்னை ஆசீர்வதித்தாள் 
ஆயுள் வரை அன்னைநாட்டிற்கு என்னை 
அர்ப்பணம் செய்துவிட்டேன்
அப்பா கதை சொல்லுங்க என்று
கேட்ட மகளிடம் நாளைய
சரித்திரத்தின் வெற்றிவாகை 
பற்றிக் கூற எண்ணியிருந்தேன்


போய் வருகிறேன் என நம்பிக்கையாய்க் கூறமுடியவில்லை
எத்தனை பொதிகள் இருந்தாலும் தோள்பட்டையில்
நாட்டின் சுமையைத் தான் சுமக்கப்போகிறேன்
அலங்கரிக்கும் என் புகைப்படங்கள் ஒருநாள் 
மாலையுடன் வீரவணக்கத்திற்கு தயாராக இருக்கும்
சாமி விளக்கு ஒரு நாள் என் கல்லறையில் 
சுடர்விட்டு எரியும்
என்னை வீரசுவர்க்கம் செல்ல இராஜமரியாதையுடன்
உலகமே வழியனுப்புவதில் ஐயமில்லை என்று
என்னுள் நினைத்துக்கொண்டு விடைபெறுகிறேன்

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...