Showing posts with label War. Show all posts
Showing posts with label War. Show all posts

Friday, September 11, 2020

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி



















கரு மை தீட்டி கருவிழி மெருகேற்றி 

சின்னஞ்சிறு குங்குமச்சிமிழ் பொட்டிட்டு

கூரிய அரிவாள் புருவங்களை சற்று 

உயர்த்தி தலை நிமிர்ந்து நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


முன்னழகு பின்னழகு கன்னியவளோ பேரழகு

ஒரு கணம் கண்ணிமைக் மறுக்கவே

தலைக்கேறும் போதை ஏற்ற 

அன்னம் அவளிடம் பழக வேண்டும்

ஓர் புதுநடை நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


தீயும் தீய்ந்துபோகும் பாவியவள் பார்வை

வளைவுகளே வியர்ந்து பார்க்கும் வஞ்சியவள் 

மெல்லிடை

கொடிகள் படரத்துடிக்கும் கொஞ்சுங்கிளி கொடியிடை

வேடிக்கை பார்ப்பவர் ஏக்கத்தில் வாடித்துடிக்க

இடையில் நளினநடை நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


சலனமற்ற பஞ்சு நடையாள் பவனி வரும் ஓசை 

மலர்களும் மலர்ந்திட விரும்பிடும் ஓர் இசை

திரண்டு வரும் மக்கட்கூட்டத்தின் நடுவே 

வேகவேகமாய் மின்னல்நடை நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


காற்றின் எடையில் இரட்டிப்பாய் இருந்திடுவாள்

கனத்த பையை தோளில் சுமந்தபடி

துணையற்ற பயணத்தில் பாதச்சுவடுகளின்றி 

தூயநடை நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


பேச நான் முயன்று முன்னேறுகையில்

முகபாவணையில் மிரட்டி மிரளச்செய்கிறாள்

போ என்று என் அறிவுக்கு அவள் தகவல் தெரிவிக்கமுன்

வெடித்துச்சிதறும் பல மனிதசடலங்களுள்

வெற்றி வேட்கை தணிந்தநடை நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


பட்டங்கள் பல பெற்றவள் பல துறையில் தேர்ச்சி கண்டவள் 

வறுமை எனும் கோட்டின் கீழ் கொடும்பிடியில் 

விடுபட இல்லையாம் அவளுக்கு ஓர்

நிரந்தர உத்தியோகம்

பலன் வேண்டி தேடித்திரிந்த இடமெல்லாம் 

சேலை அவிழ்க்க பணியாதவள்

பணமெனும் பேருதவிக்கு உயிர்துறக்க நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


அழகில் உண்டு ஆபத்தென அடுத்தவர்கள் 

சொன்னகதை நிஜம்படவே

ஆசிட் வீச்சில் உருகுலைந்த அழகிய முகம்

மறைத்துக்கொண்டு சமூகசீர்திருத்தவாதியாய் 

தற்கொலைக்குண்டுத்தாரியாய் நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


இரும்பைக்கொண்டு பட்டை தீட்டினாலும்

அவள் உள் இலவம்பஞ்சு இதயம் ஒன்றின் ஓரத்தில்

பெண்மைக்கான காதல் காவியம் அவள் 

மறைத்துக்கொண்டு சீரற்ற இந்த சமூகம் சீர்கொள்ள

அஹிம்சையின்றி ஆயுதம் தேடி நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி





Monday, June 8, 2020

விடைபெறுகிறேன்
















இன்றுதான் எனக்குக் கடைசிநாள் 
என்று அதிகாலைச்சேவல் உரக்கக் 
கூவுவதற்கு முன்னே நித்திரைப்பாயில் 
என் அகக்கண்கள் முழித்துக்கொண்டன


ஆர்ப்பாட்டமில்லா காலை வேளை 
எல்லோர்மனதிலும் ஓர் கலக்கத்தை
மௌனமாய் விதைத்திருப்பதை
என்னால் ஊகிக்கமுடிந்தது


அம்மா சுடும் முறுகலான நெய்த்தோசை
தட்டில் நிரம்பி வழிய காரமான மிளகாய்ச்சம்பல்
நாக்கின் சுவைநரம்புகளையும் தாண்டி 
நாசியில் புரக்கேறி என்னை விழிப்பூட்டவே
அம்மாவின் தலையில் மூன்று தட்டல்
உணவுக்குழாயை சீராக்கியது


கணக்கு வாத்தியார் கரும்பலகையை விட்டு
என் பயணப்பைகளில் பொருட்களை
திருப்தியற்றதாய் கணக்கிட்டுக்கொண்டிருந்தார்
வருடம் முழுவதும் நான் சுகவாசியாய் வாழ்வதற்கு


ஜாடி ஜாடியாய் இனிப்பு உறைப்பு உவர்ப்பில் 
உருப்படிகள் பல உலர்ந்ததாய் 
உருட்டித்திரட்டி வைத்துக்கொண்டிருந்தவளின்
கண்கள் சிவப்புக்கோவைப் பழமாய் பொங்கியிருந்தன
இரவிரவாய் அழுதிருப்பால் போலும்


பந்தாட்டம் விளையாட்டில் இன்று கவனம் 
செலுத்தாத மகள் நாளை பூப்படைந்தால்
பூவால் அலங்கரிக்க அருகில் இருப்பேனோ என்ற
அச்சம் தழுவிய தழுவல் ஏனோ நீங்க மனமில்லை


வீட்டின் வீரனாம் செல்லமகன் சற்றுக்கோபத்துடன்
மூலையில் மறைந்துகொண்டு என்னைப் பார்க்கும்
பார்வைக்கு விடைகொடுக்கத்தெரியாதவனாய்
தயங்கத்துடன் முன்னேறினேன்


ஐந்தறிவு ஜீவன் அவன் முகம்கூட இன்று 
வாடிப்போயிருந்தது ஏக்கத்தில் வாலாட்டி
என் காலைப்பின்னியிருந்தான் எடுத்துவிட
மனமில்லாமல் தலையைத் தடவிக்கொடுத்தேன்


என் பயணப்பைகள் நிரம்பிவிட்டன
என்னுடனான புகைப்படங்கள் பெரிதாக்கி
சுவரில் அலங்கரிக்கப்பட்டிருந்தன
சாமி விளக்கு பிரகாசமாய் எரிந்துகொண்டிருந்தது
வீட்டில் அனைத்து மின் உபகரணங்களும்
துண்டிக்கப்பட்டிருந்தன
அனைவரும் என்னை வழியனுப்ப
வாசலில் நிற்கின்றார்கள்


அம்மாவின் கால்பிடிப்புக்கு தைலம்
தேய்க்கத்தவறியவன்
அப்பாவின் பழைய மூக்குக்கண்ணாடியை
சரி செய்ய இயலாதவன்
செல்லமகளுக்கு தைரியம் கற்பிக்க
அருகில் இல்லாதவன்
குட்டிப்பையனின் வாலுச்சேட்டையில்
பங்கு கொள்ளாதவன் 
மனைவியின் கண்களின் காதலை
இரசிக்கும் பாக்கியமற்றவன்
செல்லப்பிராணியின் நிகரற்ற அன்பிற்கு
தோழனாய் தலைவணங்காதவன்


மனைவி என்னை இறுக அணைத்து
என் இதயத்துடிப்பில் 
மனமாறினால் நானோ
இத்துடிப்பின் இறுதிவரை 
நம்நாட்டின் நன்மைக்கென்று
எண்ணிக்கொண்டேன்
தீர்காயுளுடன் வாழ்வாய்
என அன்னை ஆசீர்வதித்தாள் 
ஆயுள் வரை அன்னைநாட்டிற்கு என்னை 
அர்ப்பணம் செய்துவிட்டேன்
அப்பா கதை சொல்லுங்க என்று
கேட்ட மகளிடம் நாளைய
சரித்திரத்தின் வெற்றிவாகை 
பற்றிக் கூற எண்ணியிருந்தேன்


போய் வருகிறேன் என நம்பிக்கையாய்க் கூறமுடியவில்லை
எத்தனை பொதிகள் இருந்தாலும் தோள்பட்டையில்
நாட்டின் சுமையைத் தான் சுமக்கப்போகிறேன்
அலங்கரிக்கும் என் புகைப்படங்கள் ஒருநாள் 
மாலையுடன் வீரவணக்கத்திற்கு தயாராக இருக்கும்
சாமி விளக்கு ஒரு நாள் என் கல்லறையில் 
சுடர்விட்டு எரியும்
என்னை வீரசுவர்க்கம் செல்ல இராஜமரியாதையுடன்
உலகமே வழியனுப்புவதில் ஐயமில்லை என்று
என்னுள் நினைத்துக்கொண்டு விடைபெறுகிறேன்

Saturday, May 30, 2020

மண்ணைக் காதலித்திருக்கலாம்
























உன்னைக் காதலித்ததற்கு 

மண்ணைக் காதலித்திருக்கலாம். 

இரண்டின் முடிவிலும் 

மண்ணோடு மண்ணாய்ப் போவதுதானே நியதி


அன்பான வார்த்தைகளுக்கும் கனிவான 

கரிசணைக்கும் கரைந்துபோகாமல் 

வீரத்தமிழ் வீழாது விண்ணிலும்

ஆலம் வித்துக்காளாய் விளைச்சல் காட்ட

உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம். 


காஞ்சிவரம் பட்டுக்களின் இஸ்திரி மடிப்புக்கள்

நேர்த்தியாய் நேர்கோட்டிட வர்ணங்களில் 

வனப்பேன் உன் கருவிழியில் கண்ணா 

என்று கர்வம் கொள்ளாமல் 

காக்கி உடையோ கிழிஞ்சல் கந்தையோ

மண்மகள் அடையாளம் எனக்காட்ட

உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம். 


பத்துப்பவுன் திருமாங்கல்யம் வெகுவிரைவாய் 

கழுத்தில் ஏற மஞ்சல் மேனி மையல் 

கொண்டு நாணம் கூடி செக்கச்

சிவப்பதற்கு எதிரியின் பிடியிலும்

உன் விதி நீ எழுத மரணமே

மந்திரமாம் சைனைட்டுக் குப்பியுடன் 

கறுப்புக்கயிறு வீரவணக்கத்தைக்காட்ட

உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம். 


பூச்செண்டு கையில்லேந்தி மணமேடை 

மணம் கமழ வாச ரோஜா வாடிவிடாமல்

பன்னீர்த்தெளித்து புதுமலர்ச்சி கொடுக்க

பூமாரி பொழியும் தோட்டாக்களின் உறைவிடம்

துப்பாக்கி முனையுன் துஸ்டனை தூளாக்கும்

துடிக்கும் கரங்களிற்கு துர்பாக்கியவதி நான்

உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம். 


ஒற்றைக்கையொப்பத்தில் உன்னைச் சரண்டைந்து

இருவர் சாட்சியில் இறுதிவரை உன்னில் மாட்சி காண 

நாமம் பொறித்த கல்லறைகளில் எரியும்  

விளக்குக்கூட தலைவணங்கி என் மண்ணின் 

காதற்புகழ் பாடி வையமும் வரவேற்க

உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம். 


உனக்கும் உற்றாருக்கும் உறங்காமல் 

ஊதியமற்ற ஊழியம் பார்த்து உயிர்மூச்சுத்துறந்து

மண்ணில் உறங்கிக்கிடப்பதிலும்

தளர்வான நிலையிலும் தைரியமாய் போரடி

மண்ணில் மக்கிய உரமாகிப்போனாலும் 

ஒரு விதையை விளையச் செய்து அதன் 

கொடும்விசத்தில் விரோதி வீழ்த்தப்பட

உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம். 



Sunday, March 10, 2019

அம்மா உன் புகைப்படம்


தூசும் சாம்பலும் படிந்த 
காட்சட்டையும் சேட்டும்
இடுப்பைவிட்டு வழுகிவிடாமல் இறுக்கமாய் வைத்திருக்கும்
அறுந்து தொங்கும் அப்பாவின் இடுப்புப்பட்டி
வெயிற்சூட்டிலும் சுள் என்று 
சுடுகிறதம்மா தலைக்கவசம்
அதை கழற்றிவைத்துவிட்டால்
போய்விடும் என்தேசம்
டிக் டிக் டிக் உடன்
என் இதயமும் சேர்ந்து
ஒவ்வொரு நொடிக்கும் துடித்துக்கொண்டிருக்கிறது
மூச்சு விட முடியவில்லையம்மா
சுற்றி எங்கும் மணல் மூட்டைகள்
இடையே தெரியும் நீக்கலுக்குள்
துப்பாக்கி முனைகள்
இரவுபகல் தெரியவில்லை
பசி வயிற்றைப் பதப்படுத்தி
கண்களை செருக்கிக்கொண்டது
இருந்தும் விழிப்புடன் இருக்கின்றேன்
உதிக்கின்ற சூரியக்கதிர்
என்மீது படுமென்றில்லை
என் தாய்க்கொடி காற்றில்
பறக்கும் போது கம்பீரமாக ஆதிக்கமற்ற
நிலையை ஊர்மக்கள் கண்டுகளிப்பதற்கு
குபீர் குபீர் என்று சன்னல்சத்தங்கள்
படையெடுப்பு ஆரம்பித்ததற்கான
ஆரம்ப மணியாய் கேட்கிறது
ஒரு கையில் துப்பாக்கி
மறுகையில் என் பணமுடிப்பு
பணத்தைப்புரட்டி வங்கியில்
வைப்பு செய்வதிற்கில்லை
முடியப்போகும் என் விதிக்கு
முற்றுப்புள்ளி வைப்பதற்கு முன்
வித்திட்டு என்னை பெருவிருட்சமாக்கிய
என் அம்மா உன் முகத்தை
தவமாய் ஒருமுறை
நேரில் காணாத பாவி நான்
உன் புகைப்படத்தை கண்ணீரால்
கழுவி பாவ விமோர்ச்சனம் பெறுகின்றேன்
தலைப்பிள்ளையாய் தந்தை உயிரை துறந்தபின்
வீட்டை மட்டுமல்ல நாட்டையும் பத்திரமாய் பாதுகாத்திட
என் தங்கைமார்போல் பல பெண்கள்
இரவில் அச்சமின்றி தூங்கிடவும்
பகலில் தைரியமாய்
வெளி உலகைக்கண்டிடவும்
என் கைகள் கறைபடிந்திட
இளவயதில் ஆயிதம் தரிக்க
உன் கண்ணீரால் என்னை
வழிமறித்தாய்
பாசம் என்னைக்கட்டியபோதும்
பலமுறை முயன்றுதான்
உன்னிடமிருந்து விடைபெற்றேன்
இருந்தபோதிலும் உன் கைபட்ட
ஆறியகஞ்சி வாசனை
என்னை உன் இடத்திற்கு
அழைக்குதம்மா
சூரியக்கதிர் படர்கிறதம்மா
வீட்டை இனி நன்கு நீ
திறந்து வைக்கலாம்
அலுமாரியில் அடுக்கிவைத்த
புதிய துணிகளையும்
அணிந்துகொண்டு கோயிலுக்குச் செல்லலாம்
போய்வரும் வழியில் தரைமட்டமாகி இருக்கும்
அந்தப்பெரிய மைதானமருகே சென்றால்
மகனே என ஒருமுறை அழுது
வாய்கரிசியும் போட்டுவிட்டுச் செல்
என் உடலை நீ கண்டுபிடிக்க
சிரமம் கொள்வாய் என நன்கு அறிவேன்
அம்மா உன் புகைப்படம் இறுகிப்பற்றியநிலையில்
தலையற்ற முண்டம் இருக்கும்
அதற்கு பிண்டம் வைத்து ஈமைக்கிரியைகள்
செய்வதற்கு வீணாய் அலையாதே
அதை வாரியணைத்து மகனே என
ஒருமுறை மட்டும் அழுதிடம்மா

Tuesday, October 30, 2018

முள்வேலிக்குள் அகப்பட்ட இதயம் ஒன்றின் அழுகுரல்



இரு இதயங்கள் துடிக்கும் சத்தம் தான் கேட்கின்றது
ஒரு இதயம் தியாகம் செய்யும் தொனியுடனும் 
மறு இதயம் குற்றம் செய்த தொனியுடனும்
நடுவே ஒரு முள்வேலி
ஆம் முள்வேலிக்குள் அகப்பட்ட இதயம் ஒன்றின் அழுகுரல்
தான் இங்கு வரிகளாக காட்சிப்படுத்தப்படுகிறது
அழகான குக்கிராமம் அதிகாலைச் சூரியனும் கண் வைத்துவிடும்
மலர்களோ வாசனை வீசி மங்கையரைக் கவர்ந்திடும்
பச்சை வயலோ காற்றில் தலையசைத்திடும்
வண்ணச் சேலைகளோ காற்றில் உலர்ந்திடும்
பூஜைகள் சிறப்பாய் நடந்திடவே கோவில் மணி அடித்திடும்
மூன்று வேளைக்குமாய் அன்னம் அடுப்பில் அவிந்திடும்
வெட்டிப்பேச்சுக்காய் மாலை திண்ணை நிரம்பிடும்
இந்த இன்பம் போதுமென்றே சூரியனும் மறைந்திடும்
இதுதான் என் கிராமம்
நான் தான் தியாகம் செய்யும் இதயம் பேசுகின்றேன்
உடையவன் இன்றி மாற்றான் கைப்பற்றிய பின்
இறக்க இருக்கும் தறுவாயில் கடைசியாக பேசுகின்றேன்
மலர் சூடிய மங்கையரே உம் கணவரிக் இறுதிச்சடங்கை
நிறைவேற்றக்கூட வழியின்றி ஒரு மலராவது அவர் நினைவாய் வாடட்டும் எனக் கொய்கின்றீரோ
இங்கு மலர் முழுவதும் இரத்த வாடை வீசுகிறது
தப்பித்து ஓடிவிடும்
பச்சை வயலோ கருகி சாம்பலாகிவிட்டது இனி எங்கு
அறுவடை செய்ய ஊரார் உறவுடன் பந்தல் நாட்டுவது
வண்ணச் சேலைகள் இரண்டைப் பத்திரமாக எடுத்து வையுங்கள் நாடோடியாய் ஓடும் இடங்களில் தரையில் விரிப்பதற்கு ஒன்று
கிடைக்கும் மரக்கிளைகளில் குழந்தை உறங்க ஏணை கட்டுவதற்கு மற்றொன்று
கோவில் மணியை ஒருபடியாகக் கண்டு கொண்டேன்
ஆனால் கோவில்களும் விக்கிரங்களும் தான் காணாமற்ப் போய்விட்டன
ஒரு மூட்டை அரிசி ஒவ்வொருவர் கைகளிலும் இருக்கட்டும் ஒருவேளையவது உப்புக் கஞ்சி குடித்து உயிர் வாழ உதவிடும்
திண்ணைகளில் கால் வலிப்பதாய் அமர்ந்துவிடாதீர்கள்
உயிர்பறிக்கும் வெடிப்பொருட்கள் புதைக்கப்பட்டு இருக்கலாம்
இன்று எம் துயர் தாங்காத சூரியன் சோகமாய் மறைந்துவிட்டது
நானோ முள் வேலிக்கு உள்ளே என் உயிரைத் தியாகம் செய்து என் குடும்பத்தை ஏதோ ஓர் மூலையில் வாழ வழிவகுக்கின்றேன்
என்னைப் பெற்றவளோ பெற்ற கடனுக்கு செய்யாக்குற்றம் தன்னை தன்மேல் சுமத்தி கண்ணீரால் கெஞ்சிக்கொண்டு வேலியின் மறுபுறம் நிற்கின்றாள்

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...