Showing posts with label Pain. Show all posts
Showing posts with label Pain. Show all posts

Wednesday, January 26, 2022

விதி


 

ஒருநாள் மட்டும் வாழும் மலர்தான்

இறப்பின் வலிதனை அறிந்திடுமா

மண்மேல் மடிந்த மலரை எண்ணி

வேர்தான் கண்ணீர் வடித்திடுமா

உதிர்ந்து விழும் சருகுகளை மீண்டும்

முன்போல் மரக்கிளைகள் தாங்கிடுமா

வேடந்தாங்கல் பறவைகள் எல்லாம்

மீண்டும் பழைய கூட்டில் வாழ்ந்திடுமா

இருளில் வாழும் மனிதர்களுக்கெல்லாம்

நிவலொளி வெளிச்சம் தந்திடுமா

வெளிச்சம் தரும் சிறு மின்மினிப்பூச்சி் கண்டு

நிலவொளிதான் வான்விட்டு மறைந்திடுமா

மழைநீரைக் குடிக்கும் கடலும்

நன்நீராய் ஒருநாள் மாறிடுமா

கடல்நீரைக் குடிக்கும் முகிலுக்கு

கடல்தான் சொந்தமாகிடுமா

நிஜத்தினைத் தொடரும் நிழலினை

நிஜம்தான் அள்ளி அணைத்திடுமா

அணைக்கவில்லை என்பதால் நிழலோ

நிஜம்விட்டு தனியே போய்விடுமா

விடைகள் தெரிந்த மனமோ அமைதி கொள்ளுமா

விதிதான் கதையை மாற்றிடுமா

மறைத்தாலும் மறந்தாலும் என் காதல் பொய்யாகிடுமா

தெரிந்தாலும் மீண்டும் எந்தன் கைகூடுமா

Sunday, January 23, 2022

கனவுகளுடன் காதலிக்கின்றேன்

 


வடுக்களோடு வாழும் வாழ்விற்கு

கடந்துபோனவைகள் எல்லாம் 

மறைக்கப்பட்ட சுவடுகளே

கடற்கரை மணலில் பதித்த பாதம்தான்

அறியாத பலத்த அலையின்பின்பும்

அதன் சுவட்டின் நிழல்களை


நீ நினைக்கமுன்னே

எழுதப்பட்ட விதிக்கணக்கை

மாற்றியமைக்க காலனுக்கே 

காலம் கெடுவைத்தது

மரணத்திலாவது இன்பம் கொள்ள

இந்த விதிக்கு ஏன் மனம் இன்னும் கல்லானது


நீயறியாத என்னை நானென 

காட்டிக்கொள்ளாத காதல் 

பல நாட்கள் பகலிரவுகள்

இரகசிய முகப்புத்தகத்தில்

பேசிய அன்பின் பரிபாஷைகளை

என்றும் உனக்கான தேடல்தான்

விதிக்கப்பட்ட காதலாகியது


தொலைத்த இடம் வேறு 

கிடைத்த இடம் வேறு

தடமாறிய பாதையில் 

குரல் வந்த திசையெல்லாம்

வெளிச்சம் என்றெண்ணிய 

குருட்டு விழிகளுக்கு 

கைத்தடி மேல் இனி நம்பிக்கையில்லை


யாதுமாய் கண்ட யாதும் நீயாய் 

கண்ட காட்சிகள் பொய்க்க

யாரோவாகிய நிஜம் மட்டும் கைகளில்

ஏந்திக்கொண்டு மன்றாடிக்கேட்கத்

தகுதியில்லாதவளாய்க் கேட்கின்றேன்

மீண்டும் ஒருமுறை வந்துவிடு

இறுக்கமாய் உன்னை பற்றிக்கொள்கின்றேன்


தொலைவாய் இரு யாரோவாய் இரு

என்னை நினையாமலிரு 

உன்னை மறவாமலிருப்பேன்

தொலைத்த படலம் இங்கு என்னில் மட்டும் 

அமரகாவியமாகட்டும் 


என்றோ ஒருநாள் சேதிகள் கிட்ட 

இரண்டு சொட்டு கண்ணீர் கூட

வேண்டாம் எனக்கு

பாதி மனமாய் வழியனுப்புகிறேன்

முழுமனதிலும் நினைவுகள் மட்டுமே

மிச்சம் வைத்துக்கொண்டு


கல்லறைப்பூவுக்குள் தெய்வீகவாசம் தேடி

துளசிமாடத்தில் படர்ச்செய்ய நினைத்தாய்

வாசம் தந்த மல்லிகை 

என்னை மறக்கச்செய்ததுபோலும்

தேர்வுகளில் மீண்டும் கல்லறை மலரானேன்

உன் தேர்வு மிகச்சரியானவை

பிழையான என்னைத் தவிர்த்துவிடுதலின் பின்


எனக்கு மட்டும் சிறிதாய் தெரியும் 

இந்த யாக்கையில் யார் கனவுகளிலும்

எனக்கான கவிதைகளை மீட்ட

படைத்தவன் இன்னும் கிறங்கவில்லைபோலும்

ஆனால் ஒன்று் மறந்துவிடாதே

நடைபிணத்தின்மேல் நீ எய்தன்பு

சிறுநொடி உயிர்பித்து எழச்செய்தது


நீ வாழ் அது போதும் 

யாரோ உன் கரங்களைப் பற்றும்போது 

என் விரல்களுக்கு வலிக்காது இருக்கட்டும்

அன்று ஒன்றாய்க்கலந்த சுவசம் 

என் இறுதி மூச்சிலிருந்து

விதி பிரித்தெடுத்து தன் வெற்றியை

முழுமையாய்க் கொண்டாடட்டும்

தொலைந்த நான் என்றும் தேடப்படாமலிருக்க

கனவுகளுடன் மீண்டும் உன்னைக் காதலிக்கின்றேன்


Wednesday, October 28, 2020

என் பாதி நீ


 














என் பாதியாகிய அவனுக்கு

கற்பனைக்காகிதங்களில்

களையிழந்த கருவிழி மை கொண்ட 

கண்ணீர்த்தூரிகை முனையில்

யாரும் படித்திட முடியாத 

மடல் ஒன்று தீட்டுகின்றேன்


இருட்டின் ஒளி வீச

தலைசாய்த்த தலையணை தெப்பமாக 

மௌனமான வார்த்தைகள் கோர்த்து

யாரும் படித்திட முடியாத 

மடல் ஒன்று தீட்டுகின்றேன்


அச்சிடப்படாத அஞ்சல் முகவரி

வழக்கத்திலற்ற முத்திரை முகம்

பெயரற்ற பெறுநர்

என் கிழிந்த இதயத்தையும் 

இணைத்துப் பசையிட்டு

யாரும் படித்திட முடியாத 

மடல் ஒன்று தீட்டுகின்றேன்


கொடுங்கோபங்கள் வெடித்துச்சிதறும் 

தீக்குழம்பு அதை அன்பை வைத்து 

அணைத்துவிட எண்ணிய என்

முட்டாள்தனமான இதயத்தை

யாரும் படித்திட முடியாத 

மடல் ஒன்று தீட்டுகின்றேன்


இழைத்ததொல்லாம் பிழையென்றும்

பழிச்சொல்லுக்கு விலைபோகாது

நடந்தவை கடந்தவையாகட்டும் என்று

யாரும் படித்திட முடியாத 

மடல் ஒன்று தீட்டுகின்றேன்


கலைந்த முகிற்கூட்டங்கள் கண்ணுக்குள்

பல நிழல்களை விழச்செய்யினும் 

படிந்தது தூசியாகினும் அதைத் துடைக்காது 

காதலோடு கண்ணீர்ப்புன்னகை மலர

யாரும் படித்திட முடியாத 

மடல் ஒன்று தீட்டுகின்றேன்







Thursday, October 1, 2020

அஹிம்சையின் பொக்கிஷம்


 













அஹிம்சையின் பொக்கிஷம் ஒன்று கண்டீர்

அகிலமெல்லாம் அவர் புகழ் ஓங்கக்கண்டீர்

விழித்தெழும் மனிதம் விதையாய் 

மண்ணின்மைந்தர் அகவிழியில் 

முளைத்திட காரணம் கண்டீர்


பருத்தியின் பசுமை கண்டீர்

பணிவின் பெரும் சிகரம் கண்டீர்

கொடித்தொழும் செந்தணற்கோபம் கூட

முகச்சுருக்கத்தில் மறைந்திருந்த புன்னகையில் 

மறையக் கண்டீர்


அக்கினிக் குஞ்சொன்று கண்டீர்

அப்பழுக்கற்ற தேசபக்தி கண்டீர்

சுவாசிக்கும் ஒட்சிசனினும் கலப்படம் இருக்க

சுதந்திரக்காற்றே உயிர் மூச்சான 

மாமனிதன் கண்டீர்


முதுமையில் இளமை கண்டீர்

முகத்தில் கம்பீர பிரகாசம் கண்டீர்

ஓங்கி நிற்கும் பாரதக்கொடி

பல்தேச மக்களின் தொப்புள்கொடி

உறவெனக் கண்டீர்


ஈர்ப்புவிசை கண்டீர்

ஈரமற்ற இருதயம் கூட மாறக்கண்டீர்

அன்பு தான் அகராதி அகிம்சைதான் 

இலக்கணம் என்ற இலக்கியம் தீட்டிய 

எழுத்தாணி கண்டீர்


கற்களும் கரையக்கண்டீர்

கடமையுள்ளம் உயிர் நீர்க்கக்கண்டீர்

பெற்ற சுதந்திரம் ஒவ்வோர் வீட்டின்

நிம்மதி உறக்கத்தில் லேசான 

புன்னகை பூக்கக்கண்டீர்


தாரகமந்திரம் கற்றுத் தந்தீர்

தலைவிதி புதுவிதியாய் மாற்றித் தந்தீர்

பாரத அன்னையின் மானங்காக்க

பாரத மைந்தனாய் காவியம் ஒன்று 

தலைமுறைகள் தாண்டி கற்றுத் தந்தீர்


 

Friday, September 11, 2020

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி



















கரு மை தீட்டி கருவிழி மெருகேற்றி 

சின்னஞ்சிறு குங்குமச்சிமிழ் பொட்டிட்டு

கூரிய அரிவாள் புருவங்களை சற்று 

உயர்த்தி தலை நிமிர்ந்து நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


முன்னழகு பின்னழகு கன்னியவளோ பேரழகு

ஒரு கணம் கண்ணிமைக் மறுக்கவே

தலைக்கேறும் போதை ஏற்ற 

அன்னம் அவளிடம் பழக வேண்டும்

ஓர் புதுநடை நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


தீயும் தீய்ந்துபோகும் பாவியவள் பார்வை

வளைவுகளே வியர்ந்து பார்க்கும் வஞ்சியவள் 

மெல்லிடை

கொடிகள் படரத்துடிக்கும் கொஞ்சுங்கிளி கொடியிடை

வேடிக்கை பார்ப்பவர் ஏக்கத்தில் வாடித்துடிக்க

இடையில் நளினநடை நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


சலனமற்ற பஞ்சு நடையாள் பவனி வரும் ஓசை 

மலர்களும் மலர்ந்திட விரும்பிடும் ஓர் இசை

திரண்டு வரும் மக்கட்கூட்டத்தின் நடுவே 

வேகவேகமாய் மின்னல்நடை நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


காற்றின் எடையில் இரட்டிப்பாய் இருந்திடுவாள்

கனத்த பையை தோளில் சுமந்தபடி

துணையற்ற பயணத்தில் பாதச்சுவடுகளின்றி 

தூயநடை நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


பேச நான் முயன்று முன்னேறுகையில்

முகபாவணையில் மிரட்டி மிரளச்செய்கிறாள்

போ என்று என் அறிவுக்கு அவள் தகவல் தெரிவிக்கமுன்

வெடித்துச்சிதறும் பல மனிதசடலங்களுள்

வெற்றி வேட்கை தணிந்தநடை நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


பட்டங்கள் பல பெற்றவள் பல துறையில் தேர்ச்சி கண்டவள் 

வறுமை எனும் கோட்டின் கீழ் கொடும்பிடியில் 

விடுபட இல்லையாம் அவளுக்கு ஓர்

நிரந்தர உத்தியோகம்

பலன் வேண்டி தேடித்திரிந்த இடமெல்லாம் 

சேலை அவிழ்க்க பணியாதவள்

பணமெனும் பேருதவிக்கு உயிர்துறக்க நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


அழகில் உண்டு ஆபத்தென அடுத்தவர்கள் 

சொன்னகதை நிஜம்படவே

ஆசிட் வீச்சில் உருகுலைந்த அழகிய முகம்

மறைத்துக்கொண்டு சமூகசீர்திருத்தவாதியாய் 

தற்கொலைக்குண்டுத்தாரியாய் நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


இரும்பைக்கொண்டு பட்டை தீட்டினாலும்

அவள் உள் இலவம்பஞ்சு இதயம் ஒன்றின் ஓரத்தில்

பெண்மைக்கான காதல் காவியம் அவள் 

மறைத்துக்கொண்டு சீரற்ற இந்த சமூகம் சீர்கொள்ள

அஹிம்சையின்றி ஆயுதம் தேடி நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி





Monday, July 27, 2020

புற்றுநோயாளியின் கர்ப்பம்














உயிர்ப்பிணைப்பில் இன்று ஒரு முடிச்சு
புதிதாய் இடப்பட்டதாக ஒரு சிறு உணர்வு
அதற்கு ஆதாரமாய் தள்ளிப்போன பல நாட்கள்
மயக்கம் மற்றும் வாந்தி


வைத்தியரின் ஆலோசனை தெய்வத்தின் வாக்காய்
காதில் ஒலிக்க கையில் இருந்த ஆதாரச்சான்றிதழில் 
புலன் செலுத்தப்பட்டு ஒருவகை மயக்கநிலை அடைந்திருந்தேன்


மருந்துமாத்திரைகளும் தடுப்பூசிகளும் என்
சின்னஞ்சிறு ஊந்துதுடிக்கும் உயிருக்கு 
வலு என்பதில் எனக்கு வலியே மறந்துவிட்டது 


கணவனின் இருசக்கரவண்டி மென்மையாய்ச் 
செல்லவும் என்னை ஆட்கொண்ட பயம் அவர்
இடுப்பை கைகளால் வளைத்துக்கொள்ள கண்களும்
இறுக சொருகிக்கொண்டன


மண்ணில் சாயமுன் உலகிற்கோர் என்னுதிரத்தின்
சாயலை அவரின் கைகள் தாங்கி முத்தமிடும் சுவடு
என் மனக்கண்ணிற் பதிந்து இதயத்தோடு ஒத்துத்துடித்தது


வாரம் இருமுறை வைத்தியநிபுணரின் வாடிக்கையாளராய் 
குருதி தானம் பெறும் யாசகி 
என் மழலைக்காய் சிறிது திருடிவைத்திருக்கிறேன்


உதிர்ந்த கேஷங்கள் தரை தவழ மிகுதி இருப்பவை 
பின்னலிட்டு நிலைக்கண்ணாடியில் விம்பமாய் 
ஜொலிக்க வயிற்றின் தொந்தியின் அழகு இமைக்க மறுக்கிறது


முதுகெலும்பின் தண்டுவடம் ஊசி வலியில் 
நொய்தலாக பேழை வயிற்றின் சுமை சுகத்தின் 
கணமாய் தலை நிமிர்த்திய நேர் நடையில் கௌரவம் பெறுகிறது


மெலிந்த தேகத்தில் சுவாசிக்கத் திடம் இன்றி 
ஒட்சிசன் முகக்கவசத்தின் துணையோடு 
என் சிறு உயிரும் சுவாசிக்கின்றது


ருசியறியா நா உணர்வற்று உணவை 
வெறுப்பினும் உட்சாகமாய் வேண்டி 
விரும்பி உண்கின்றேன் ஊட்டச்சத்தின் பிரதிபலன் 
என் சிசுவிற்கு வந்தடையட்டும்


சீராட்டி பாராட்டிட உன் பக்கமில்லா 
பாவியாவேன் என்றே உன் பாதம் தொட 
இறையாசியுடன் ஒரு பெண் குழந்தைக்காய் 
அனுதினமும் வேண்டிநிற்கின்றேன்


பாவ விமோட்ஷனம் பெற தகுதியற்றவள் நான் 
சுயநலக்காரி இவ்வுலகில் உன்னைப் பிரசவிக்க 
புற்றுநோய் பூண்ட தேகத்தை ஆடையாய் அணிந்துள்ளேன் நிரந்தரமாய்


தாயாய் கடமையாற்ற என் இன்னுயிர் உலகுநீர்ப்பினும் 
சேயாய் எனை பாவனை செய்ய
உன் அப்பாவின் மறு தாயாய் தாலாட்ட தினமும்
உன்னைத் தடவிக்கொடுத்து மன்றாடுகின்றேன்


எத்தனையோ சாகசங்கள் புரியும் பெண்மணிகள் 
பலர் மத்தியில் சாதனையாய் உனை கருவிற்சுமந்து 
சுகநலத்துடன் ஈன்றெடுப்பதே
என் வாழ்நாட்சுமைகளிற்கேற்ற செல்வம்

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...