Showing posts with label Death. Show all posts
Showing posts with label Death. Show all posts

Monday, January 24, 2022

கல்லறைப்பூ

 


கல்லறை மீது பூக்கும் பூ நான்

ஒரு நாள் இறைவா உந்தன் மாலையாக மாட்டேனா

ஒரு நாள் உந்தன் பூஜைக்கு உகந்தவளாக மாட்டேனா

கல்லறை மீது பூக்கும் பூவுக்கு

ஒருநாளும் உந்தன் கரிசணைதான் கிடைக்காதா


கல்லறை மீது பூக்கும் பூ நான்

ஒரு நாள் திருமணமாலையாக மாட்டேனா

ஒரு நாள் மணவறை கண்டு பூத்துக்குலுங்க மாட்டேனா

கல்லறை மீது பூக்கும் பூவுக்கு

ஒருநாளும் மணமாலையாகிடும் மகிழ்ச்சிதான் கிடைக்காதா


கல்லறை மீது பூக்கும் பூ நான்

ஒரு நாள் காதலின் அன்புப் பரிசாயாக மாட்டேனா

ஒரு நாள் காதலன் கையில் தவழ மாட்டேனா

கல்லறை மீது பூக்கும் பூவுக்கு

ஒருநாளும் காதலின் வரம்தான் கிடைக்காதா


கல்லறை மீது பூக்கும் பூ நான்

ஒரு நாள் சூடிக்கொள்ள கூந்தல் காண மாட்டேனா

ஒரு நாள் கூந்தலை அலங்கரிக்க மாட்டேனா

கல்லறை மீது பூக்கும் பூவுக்கு

ஒருநாளும் சூடிக்கொள்ளும் வாய்ப்புதான் கிடைக்காதா


முட்களைக்கொண்டு உதிரம்கண்டு 

பறித்திடும் கரங்களை வருத்திடத் தெரியாதே

வண்டுகள் வேறு வண்ணத்துப்பூச்சிகள் வேறு

பிரித்துப் பார்த்திட மனமும் நினைக்காதே

சேற்றில் முளைத்த செந்தாமரையும்

களங்கமற்றதாய் வாகை சூடிடுமே

காகிதப்பூக்களில் வாசம் வருமா 

பந்தலில் பவளமாய் படர்ந்திருக்கிறதே


கல்லறையில் பூத்த பாவத்தினைப் புதைத்திட

குப்பை மேட்டில் எனக்காய் ஓர் இடம் கிடைத்திடுமா

கல்லறையில் பூத்த தீட்டினை கழுவிட

கங்கை நீரும் என்னைப் புனிதமாக்கிடுமா

மனிதனின் கைகளில் வந்து சேர்வதனால் 

மலரிடமும் வர்ணம் தோன்றிடுதே

கல்லறை கொண்ட ஈரம்

கடவுளும் ஏனோ என்னில் காட்டவில்லை


Sunday, January 23, 2022

கனவுகளுடன் காதலிக்கின்றேன்

 


வடுக்களோடு வாழும் வாழ்விற்கு

கடந்துபோனவைகள் எல்லாம் 

மறைக்கப்பட்ட சுவடுகளே

கடற்கரை மணலில் பதித்த பாதம்தான்

அறியாத பலத்த அலையின்பின்பும்

அதன் சுவட்டின் நிழல்களை


நீ நினைக்கமுன்னே

எழுதப்பட்ட விதிக்கணக்கை

மாற்றியமைக்க காலனுக்கே 

காலம் கெடுவைத்தது

மரணத்திலாவது இன்பம் கொள்ள

இந்த விதிக்கு ஏன் மனம் இன்னும் கல்லானது


நீயறியாத என்னை நானென 

காட்டிக்கொள்ளாத காதல் 

பல நாட்கள் பகலிரவுகள்

இரகசிய முகப்புத்தகத்தில்

பேசிய அன்பின் பரிபாஷைகளை

என்றும் உனக்கான தேடல்தான்

விதிக்கப்பட்ட காதலாகியது


தொலைத்த இடம் வேறு 

கிடைத்த இடம் வேறு

தடமாறிய பாதையில் 

குரல் வந்த திசையெல்லாம்

வெளிச்சம் என்றெண்ணிய 

குருட்டு விழிகளுக்கு 

கைத்தடி மேல் இனி நம்பிக்கையில்லை


யாதுமாய் கண்ட யாதும் நீயாய் 

கண்ட காட்சிகள் பொய்க்க

யாரோவாகிய நிஜம் மட்டும் கைகளில்

ஏந்திக்கொண்டு மன்றாடிக்கேட்கத்

தகுதியில்லாதவளாய்க் கேட்கின்றேன்

மீண்டும் ஒருமுறை வந்துவிடு

இறுக்கமாய் உன்னை பற்றிக்கொள்கின்றேன்


தொலைவாய் இரு யாரோவாய் இரு

என்னை நினையாமலிரு 

உன்னை மறவாமலிருப்பேன்

தொலைத்த படலம் இங்கு என்னில் மட்டும் 

அமரகாவியமாகட்டும் 


என்றோ ஒருநாள் சேதிகள் கிட்ட 

இரண்டு சொட்டு கண்ணீர் கூட

வேண்டாம் எனக்கு

பாதி மனமாய் வழியனுப்புகிறேன்

முழுமனதிலும் நினைவுகள் மட்டுமே

மிச்சம் வைத்துக்கொண்டு


கல்லறைப்பூவுக்குள் தெய்வீகவாசம் தேடி

துளசிமாடத்தில் படர்ச்செய்ய நினைத்தாய்

வாசம் தந்த மல்லிகை 

என்னை மறக்கச்செய்ததுபோலும்

தேர்வுகளில் மீண்டும் கல்லறை மலரானேன்

உன் தேர்வு மிகச்சரியானவை

பிழையான என்னைத் தவிர்த்துவிடுதலின் பின்


எனக்கு மட்டும் சிறிதாய் தெரியும் 

இந்த யாக்கையில் யார் கனவுகளிலும்

எனக்கான கவிதைகளை மீட்ட

படைத்தவன் இன்னும் கிறங்கவில்லைபோலும்

ஆனால் ஒன்று் மறந்துவிடாதே

நடைபிணத்தின்மேல் நீ எய்தன்பு

சிறுநொடி உயிர்பித்து எழச்செய்தது


நீ வாழ் அது போதும் 

யாரோ உன் கரங்களைப் பற்றும்போது 

என் விரல்களுக்கு வலிக்காது இருக்கட்டும்

அன்று ஒன்றாய்க்கலந்த சுவசம் 

என் இறுதி மூச்சிலிருந்து

விதி பிரித்தெடுத்து தன் வெற்றியை

முழுமையாய்க் கொண்டாடட்டும்

தொலைந்த நான் என்றும் தேடப்படாமலிருக்க

கனவுகளுடன் மீண்டும் உன்னைக் காதலிக்கின்றேன்


Sunday, March 28, 2021

Rest In Peace

  



முகநூலிலும் சரி 

முகமறியா நபராயினும் சரி

Rest In Peace என்று கடந்துவிட 

ஏனோ ஒப்புக்கொள்ளவில்லை

சிலரது மரணச்செய்திகள்


படுக்கையிலே பல காலம் தத்தளிப்பவன்

வேண்டிக்கூட இரங்காத கடவுள்

விருப்பம் உள்ளவன் வாழ்வைத் தட்டிப்பறிக்கின்றான்

காரணம் கேட்டால் விதி வலியது என்று பழிபோடுகின்றான்


வாழ்நாளெல்லாம்  வறுமையில் வாடியவன் 

வசதி வந்து அனுபவிக்கும் தறுவாயில் 

வாழ்விழந்துபோகிறான்

சமுத்திரத்தின் கரை தாண்டி நிலம் தொடும் நிமிடம்

பலன் பெறமுன் கரைந்து போகின்றான்


இலட்சியங்களில் திமிர் கொண்டவன் 

சுயவிருப்பை துறக்கின்றான்

விருப்பங்களின் தேவை விரலளவு முட்ட 

விசும்பைத் துறக்கின்றாய்


ஆண்டாய் அளந்தாய் ஆசையுறவுகள் பல கண்டு 

மாண்டாய் மண்ணில் என்னும் வரலாறு தாண்டி 

பிறப்பின் பயன்காணா வயதில் உலகெய்தினாய்

சிறுபயிர் கருகியதன் வலி கண்களில் நீராய்


இறப்பிற்கு நியதியும் இல்லை எல்லையும் இல்லை

நிழல்களாய்த் தொடரும் ஏதோ ஓர் உறவிற்கு மட்டும் 

ஏன் இதயத்தைப் படைத்து அதில் 

ரணங்களை பதிக்கின்றோம்


ஆன்மாவிற்கு உடல் உறவல்ல ஆனால் 

மனிதம் மற்றும் பகுத்தறிவு எங்கோ 

ஓர் துயர் சம்பவத்தில் 

தன்னையறியாது உளவேதனையுடன் 

விட்டுச்செல்கிறது 

Rest In Peace 


Monday, July 27, 2020

புற்றுநோயாளியின் கர்ப்பம்














உயிர்ப்பிணைப்பில் இன்று ஒரு முடிச்சு
புதிதாய் இடப்பட்டதாக ஒரு சிறு உணர்வு
அதற்கு ஆதாரமாய் தள்ளிப்போன பல நாட்கள்
மயக்கம் மற்றும் வாந்தி


வைத்தியரின் ஆலோசனை தெய்வத்தின் வாக்காய்
காதில் ஒலிக்க கையில் இருந்த ஆதாரச்சான்றிதழில் 
புலன் செலுத்தப்பட்டு ஒருவகை மயக்கநிலை அடைந்திருந்தேன்


மருந்துமாத்திரைகளும் தடுப்பூசிகளும் என்
சின்னஞ்சிறு ஊந்துதுடிக்கும் உயிருக்கு 
வலு என்பதில் எனக்கு வலியே மறந்துவிட்டது 


கணவனின் இருசக்கரவண்டி மென்மையாய்ச் 
செல்லவும் என்னை ஆட்கொண்ட பயம் அவர்
இடுப்பை கைகளால் வளைத்துக்கொள்ள கண்களும்
இறுக சொருகிக்கொண்டன


மண்ணில் சாயமுன் உலகிற்கோர் என்னுதிரத்தின்
சாயலை அவரின் கைகள் தாங்கி முத்தமிடும் சுவடு
என் மனக்கண்ணிற் பதிந்து இதயத்தோடு ஒத்துத்துடித்தது


வாரம் இருமுறை வைத்தியநிபுணரின் வாடிக்கையாளராய் 
குருதி தானம் பெறும் யாசகி 
என் மழலைக்காய் சிறிது திருடிவைத்திருக்கிறேன்


உதிர்ந்த கேஷங்கள் தரை தவழ மிகுதி இருப்பவை 
பின்னலிட்டு நிலைக்கண்ணாடியில் விம்பமாய் 
ஜொலிக்க வயிற்றின் தொந்தியின் அழகு இமைக்க மறுக்கிறது


முதுகெலும்பின் தண்டுவடம் ஊசி வலியில் 
நொய்தலாக பேழை வயிற்றின் சுமை சுகத்தின் 
கணமாய் தலை நிமிர்த்திய நேர் நடையில் கௌரவம் பெறுகிறது


மெலிந்த தேகத்தில் சுவாசிக்கத் திடம் இன்றி 
ஒட்சிசன் முகக்கவசத்தின் துணையோடு 
என் சிறு உயிரும் சுவாசிக்கின்றது


ருசியறியா நா உணர்வற்று உணவை 
வெறுப்பினும் உட்சாகமாய் வேண்டி 
விரும்பி உண்கின்றேன் ஊட்டச்சத்தின் பிரதிபலன் 
என் சிசுவிற்கு வந்தடையட்டும்


சீராட்டி பாராட்டிட உன் பக்கமில்லா 
பாவியாவேன் என்றே உன் பாதம் தொட 
இறையாசியுடன் ஒரு பெண் குழந்தைக்காய் 
அனுதினமும் வேண்டிநிற்கின்றேன்


பாவ விமோட்ஷனம் பெற தகுதியற்றவள் நான் 
சுயநலக்காரி இவ்வுலகில் உன்னைப் பிரசவிக்க 
புற்றுநோய் பூண்ட தேகத்தை ஆடையாய் அணிந்துள்ளேன் நிரந்தரமாய்


தாயாய் கடமையாற்ற என் இன்னுயிர் உலகுநீர்ப்பினும் 
சேயாய் எனை பாவனை செய்ய
உன் அப்பாவின் மறு தாயாய் தாலாட்ட தினமும்
உன்னைத் தடவிக்கொடுத்து மன்றாடுகின்றேன்


எத்தனையோ சாகசங்கள் புரியும் பெண்மணிகள் 
பலர் மத்தியில் சாதனையாய் உனை கருவிற்சுமந்து 
சுகநலத்துடன் ஈன்றெடுப்பதே
என் வாழ்நாட்சுமைகளிற்கேற்ற செல்வம்

Friday, June 26, 2020

சிரிப்பு போலி பிரதிபலிப்பு

















என்றும் இனிமையான சிரிப்பொலியும்

செஞ்சந்தன முகப்பொலிவும்

மனதை வசப்படுத்தும் இன்மொழியும்

நேர்த்தியான இஸ்திரிக்கப்பட்ட உடையும்

பொய் கூறிவிடலாம்


மகவற்ற தாய் மடிக்கு நற்புதல்வனாய்

ஆடவண் துணையற்ற பெண்ணின் தமையனாய்

ஈன்றவனற்ற பிஞ்சு மழலையின் தகப்பனாய்

சகமும் பகிரும் தோழனாய்

உறவுமுறியடித்து விடலாம்


செஞ்சோலையும் சாலையோர நிழலும்

கொட்டும் அருவி மழைச்சாரலும்

வயலும் புல்வெளிநிலமும்

மலைத்தொடர் கடற்பரப்பு மணல் மண்ணும்

கண்ணிற்கு காட்சியற்றும் போகலாம்


முதல் விசும்பின் மழைத்துளியும் 

அதில் எழுnம் மண்வாசமும் 

பால்வாடை வீசும் மழலை அமுதும்

வெண்புகை பனித்துளி படர்ந்த மலர் மொட்டுக்களும் 

தேன் வண்டின் ரீங்காரத்தில் ஓடி விளையாடும் 

அணிலும் சிறு பட்சிகளும் இதமற்றுப் போகலாம்


அயலவர்களின் சலசலப்பான பேச்சுகளும் 

பத்திரிகை நடுப்பக்கத்து கிசுகிசுப்பான பேச்சுகளும் 

நவீன நங்கையின் நளினமான பேச்சிலும் 

காரியவாதியின் கபடமான பேச்சிலும் 

கடமையதிகாரியின் கடுமையான பேச்சிலும்

இனி சுவாரஸ்யம் குறைந்துவிடலாம்


அருளாசிபுரியும் இறைவனடி துணைநிற்காதென

அகவிழி சுடர் அணைந்து இருட்டான ஓர் 

ஓசையறியா அறையில் மேல் முகட்டில் கற்பனைத் திரையை 

அங்குமிங்குமாய் அலைய விடலாம்


காலன் பிடியில் கைவிலங்கின்றி இனி 

எவர் சித்தம் என்றே இங்ஙனம் இனிதாய் நிறைவேற்றிய 

மேடை நாடகத்தில் தன் கதாப்பாத்திரத்தை 

விருப்பு வெறுப்பின்றி நிறைவேற்றம் செய்யலாம்


நிர்க்கதியற்ற நிம்மதி தொலைத்தவனிற்கு 

அன்பாய் அருகில் அணைத்து அமர்ந்து 

தலைகோதி மடிமீது

ஒரு நிமிட பாசப்பிணைப்பிற்கு 

மனம் தேடும் அன்பானவர் இல்லாவிட்டால் 

அவன் சிரிப்பு போலி பிரதிபலிப்பாய் அமைந்துவிடலாம்






Saturday, May 30, 2020

மண்ணைக் காதலித்திருக்கலாம்
























உன்னைக் காதலித்ததற்கு 

மண்ணைக் காதலித்திருக்கலாம். 

இரண்டின் முடிவிலும் 

மண்ணோடு மண்ணாய்ப் போவதுதானே நியதி


அன்பான வார்த்தைகளுக்கும் கனிவான 

கரிசணைக்கும் கரைந்துபோகாமல் 

வீரத்தமிழ் வீழாது விண்ணிலும்

ஆலம் வித்துக்காளாய் விளைச்சல் காட்ட

உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம். 


காஞ்சிவரம் பட்டுக்களின் இஸ்திரி மடிப்புக்கள்

நேர்த்தியாய் நேர்கோட்டிட வர்ணங்களில் 

வனப்பேன் உன் கருவிழியில் கண்ணா 

என்று கர்வம் கொள்ளாமல் 

காக்கி உடையோ கிழிஞ்சல் கந்தையோ

மண்மகள் அடையாளம் எனக்காட்ட

உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம். 


பத்துப்பவுன் திருமாங்கல்யம் வெகுவிரைவாய் 

கழுத்தில் ஏற மஞ்சல் மேனி மையல் 

கொண்டு நாணம் கூடி செக்கச்

சிவப்பதற்கு எதிரியின் பிடியிலும்

உன் விதி நீ எழுத மரணமே

மந்திரமாம் சைனைட்டுக் குப்பியுடன் 

கறுப்புக்கயிறு வீரவணக்கத்தைக்காட்ட

உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம். 


பூச்செண்டு கையில்லேந்தி மணமேடை 

மணம் கமழ வாச ரோஜா வாடிவிடாமல்

பன்னீர்த்தெளித்து புதுமலர்ச்சி கொடுக்க

பூமாரி பொழியும் தோட்டாக்களின் உறைவிடம்

துப்பாக்கி முனையுன் துஸ்டனை தூளாக்கும்

துடிக்கும் கரங்களிற்கு துர்பாக்கியவதி நான்

உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம். 


ஒற்றைக்கையொப்பத்தில் உன்னைச் சரண்டைந்து

இருவர் சாட்சியில் இறுதிவரை உன்னில் மாட்சி காண 

நாமம் பொறித்த கல்லறைகளில் எரியும்  

விளக்குக்கூட தலைவணங்கி என் மண்ணின் 

காதற்புகழ் பாடி வையமும் வரவேற்க

உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம். 


உனக்கும் உற்றாருக்கும் உறங்காமல் 

ஊதியமற்ற ஊழியம் பார்த்து உயிர்மூச்சுத்துறந்து

மண்ணில் உறங்கிக்கிடப்பதிலும்

தளர்வான நிலையிலும் தைரியமாய் போரடி

மண்ணில் மக்கிய உரமாகிப்போனாலும் 

ஒரு விதையை விளையச் செய்து அதன் 

கொடும்விசத்தில் விரோதி வீழ்த்தப்பட

உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம். 



Tuesday, January 29, 2019

மீண்டும் தற்கொலை செய்


தலைப்புச் செய்திகளாகப் பரவிய
தற்கொலை விபரம் நடுப்பக்கத்தில்
சினிமா கிசுகிசுக்களாக
மாறியதன் கொடுமைதான் என்னவோ?
தவறிழைத்து தூக்குமேடைகாணும்
குற்றவாளிக்குக்கூட கடைசியாசையாக
அவ்வுலகில் வாழ்ந்துவிட்டுப்போக
சந்தர்ப்பம் கிடைக்காதா என ஏங்கிடும் வேளையில்
யாரோ செய்த தவறுக்கு உன்னை நீயே
தண்டனை கொடுத்துக்கொள்கிறாயே
உன் கடைசி ஆசைதான் என்னவோ?
குண்டூசி தொலைந்ததால் கயிற்றில்
தொங்கி உயிரை மாய்த்தான் என
விநோதமாய் வியப்பூட்டிடும் செய்திகளை
நாளை உண்மைக்காரணமாகக் கொண்டு
உயிரைத் துறக்கக்கூடிய சமுதாயமாய்
மாறிவருவதன் காரணம்தான் என்னவோ?
வெல்வதற்கு எளிதாய்
படைக்கப்பட்ட வாழ்க்கையை
தெளிவற்றபோர்வையில் நிதானம் குலைந்து
எடுக்கும் முடிவுகளை எதிர்கொள்ளத்
துணிவின்றி ஒரு முழம் கயிற்றுக்கு
வீணாக விளம்பரம் செய்துகொடுக்கும்
இளவயது மரணங்களின் பிண்ணனிதான் என்னவோ?
தாய்மடிசுகமாய் தினம் இருக்க
ஒருமுறை கதறியழுது கண்ணீர்மல்க
உன் துயர் நீ கூற முன்பே தாய்மனம்
அதற்கு மருந்து செய்யும் மாயம்தான் என்னவோ?
உயிராய் நேசிக்கையில் கற்பனையில்
மிதக்கும் சுகம்போதாமல் உயிர்துறந்து
விண்ணில் மிதக்கும் வெற்றுடலோ
மண்ணில் நித்திரை செய்யும்
உற்றார் உறவினர் வருகைக்கு
திட்டமிட்டு செயல்பட்ட விதம்தான் என்னவோ?
உடலில் ஓடும் நரம்பு நாளங்கள்
குருதிக்கலன்களின் எண்ணிக்கைகள்
சிறுநீரகங்கள் சுவாசப்பைகள்
புலனற்று செயலிழக்க
மேற்கொள்ளும் சத்திரசிகிச்சைகளும் மருந்துப்பாவனைகளும்
நல்வழியில் உன் பாதையை அமைத்துச்சென்றால்
வைத்தியனாய் பிற உயிர்களையும் வாழ வைப்பாய் என
பாவியவள் உன் அன்னை கண்ட கனவுகள் பலிக்கக்கூடாதென
தன்னடக்கம் கொண்டு உன் உடல் தகனம்
செய்யவே நீ செய்த செயல்கள் தான் என்னவோ?
மரணம் எனும் கணிதக்கேள்விக்கு
உயிர்நீப்பென ஒரு விடை இருக்க
எளியமுறையால் இயற்கையாய் காலம் கணக்கை
முடிக்க முன்பே
பல கடினமான படிகளை செயற்கைமுறையில்
நீ விடை காண்கையில் உன் பதில்
ஏற்றுக்கொள்ளப்படுமென நம்பும்
உன் அப்பாவித்தனமான எண்ணம்தான் என்னவோ?
மறுபிறப்புக்கொண்டு இம்மண்ணில் மீண்டும்
பிறப்பெடுத்து உன்னைப் பெற்றவர்கள்
சிந்திய கண்ணீருக்கு
மாய்த்த உன் உயிர் மிகையாகாது என
அறிந்துகொண்டும் உன் காரணம் சரி எனில்
மீண்டும் தற்கொலைக்கு முயற்சி செய்.
அன்று உன் அகாலமரணத்திற்காக கண்ணீர்வடிக்க
நான் அங்கு இருப்பேன்

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...