Showing posts with label Tamil. Show all posts
Showing posts with label Tamil. Show all posts

Friday, September 11, 2020

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி



















கரு மை தீட்டி கருவிழி மெருகேற்றி 

சின்னஞ்சிறு குங்குமச்சிமிழ் பொட்டிட்டு

கூரிய அரிவாள் புருவங்களை சற்று 

உயர்த்தி தலை நிமிர்ந்து நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


முன்னழகு பின்னழகு கன்னியவளோ பேரழகு

ஒரு கணம் கண்ணிமைக் மறுக்கவே

தலைக்கேறும் போதை ஏற்ற 

அன்னம் அவளிடம் பழக வேண்டும்

ஓர் புதுநடை நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


தீயும் தீய்ந்துபோகும் பாவியவள் பார்வை

வளைவுகளே வியர்ந்து பார்க்கும் வஞ்சியவள் 

மெல்லிடை

கொடிகள் படரத்துடிக்கும் கொஞ்சுங்கிளி கொடியிடை

வேடிக்கை பார்ப்பவர் ஏக்கத்தில் வாடித்துடிக்க

இடையில் நளினநடை நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


சலனமற்ற பஞ்சு நடையாள் பவனி வரும் ஓசை 

மலர்களும் மலர்ந்திட விரும்பிடும் ஓர் இசை

திரண்டு வரும் மக்கட்கூட்டத்தின் நடுவே 

வேகவேகமாய் மின்னல்நடை நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


காற்றின் எடையில் இரட்டிப்பாய் இருந்திடுவாள்

கனத்த பையை தோளில் சுமந்தபடி

துணையற்ற பயணத்தில் பாதச்சுவடுகளின்றி 

தூயநடை நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


பேச நான் முயன்று முன்னேறுகையில்

முகபாவணையில் மிரட்டி மிரளச்செய்கிறாள்

போ என்று என் அறிவுக்கு அவள் தகவல் தெரிவிக்கமுன்

வெடித்துச்சிதறும் பல மனிதசடலங்களுள்

வெற்றி வேட்கை தணிந்தநடை நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


பட்டங்கள் பல பெற்றவள் பல துறையில் தேர்ச்சி கண்டவள் 

வறுமை எனும் கோட்டின் கீழ் கொடும்பிடியில் 

விடுபட இல்லையாம் அவளுக்கு ஓர்

நிரந்தர உத்தியோகம்

பலன் வேண்டி தேடித்திரிந்த இடமெல்லாம் 

சேலை அவிழ்க்க பணியாதவள்

பணமெனும் பேருதவிக்கு உயிர்துறக்க நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


அழகில் உண்டு ஆபத்தென அடுத்தவர்கள் 

சொன்னகதை நிஜம்படவே

ஆசிட் வீச்சில் உருகுலைந்த அழகிய முகம்

மறைத்துக்கொண்டு சமூகசீர்திருத்தவாதியாய் 

தற்கொலைக்குண்டுத்தாரியாய் நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


இரும்பைக்கொண்டு பட்டை தீட்டினாலும்

அவள் உள் இலவம்பஞ்சு இதயம் ஒன்றின் ஓரத்தில்

பெண்மைக்கான காதல் காவியம் அவள் 

மறைத்துக்கொண்டு சீரற்ற இந்த சமூகம் சீர்கொள்ள

அஹிம்சையின்றி ஆயுதம் தேடி நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி





Monday, August 10, 2020

என் திருமணத்திற்கு வந்துவிடாதே!

  



















ஆகா ஓகோ என்று தடபுடலாய்

தட்டுமாற்றி தாலிகட்ட நாளும்

குறித்துவிட்டார்கள். பந்தற்கால் நட்டு

பொன்னுருக்கி மூலையில் அமரவைத்தார்கள்

இப்பொழுதுதான் உன்னிடம் ஆசையாய் பேசமுடிந்தது 

நீ நலம் தானா?

என் நலனில் அக்கறை இருப்பதால் 

கண்ணீரோடு கதை பேசுகின்றேன்.

இங்கு யாருமில்லை என்ற தைரியத்தை 

தக்கவைத்துக்கொண்டு கைபேசியில் 

கலகலப்பாய் பேச நான் ஒன்றும் 

பெண்ணியவாதியல்ல சராசரிப்பெண் தான்.

மாப்பிள்ளை வீட்டாரின் முழுசம்மதத்துடன்

மாங்கல்யம் ஏற்பதில் இத்தனை சுமைகளா என்ன?

தந்தையற்ற ஆண்துணையில்லா 

மூத்த பெண்ணாய்ப் பிறந்தவள் 

என்பதில் அடிக்கொருமுறை அன்னையைப் போல் அதட்டலும் 

அன்பும் அதிகாரமும் அக்கறையும் அளாவலற்ற ப்ரியமும்

இறுதியில் தான் என்னைப் பெண் என உணரவைத்தது. 

என் இளமை உணர்ச்சிகளை மீறி இனிதான ஒரு கூடலுக்கு 

சமூகத்தில் ஒருபடி அந்தஸ்து தரும் ஒரு தருணம் 

மிக விரைவில் வரப்போகிறது. தயவு செய்து 

என் திருமணத்திற்கு வந்துவிடாதே. 

மாங்கல்யம் சூட்டுவதில் எண்கணித சோதிடருக்கே 

என் முதல் வணக்கம். 

தலைவிதி நன்றாக இல்லை என்ற வருத்தத்தில் 

புரண்ட எனக்கு கோள்களும் கிரகங்களும் ஒன்றிசைந்து 

நன்மைக் காரியம் கிட்டும் என்பதோடு விடாது 

சிறப்பான வரன் என்று பல கட்டங்களுக்கு 

என் புகைப்படம் முதல் என் நற்சான்றிதழும் அனுப்பிவைத்தார்கள். 

பார்த்தவுடன் பிடித்துப்போக 

நான் என்ன ரதியா? ரம்பையா? 

தட்டிக்கழிக்கப்பட்டன பல வரன்கள்.

இருந்தும் சிலர் முறுக்கும் பலகாரமும் 

சுடச்சுட பால்த்தேநீர் குடிக்க வந்தவர்கள் போல 

வீட்டுற்குப்போய் என் வீட்டு விலாசத்தை மறந்துவிட்டார்கள் 

பின்புதான் நான் அறிந்தேன் 

மாப்பிள்ளை சீதனத்தில் தான் 

குடித்தனம் நடத்தப்போகிறார் என்று. 

நல்லவேளை முறுக்கோடு நறுக்கிவிட்டதாய் எண்ணிக்கடக்க 

அடுத்த மாப்பிள்ளை வீட்டார் அப்படியில்லை 

வரதட்சணை வேண்டாம் மகளாய்ப் பார்ப்போம் 

மகளை மட்டும் கட்டி அனுப்புங்கள் என்று 

என் தங்கையைக் கைகாட்டினார்கள். 

பரவாயில்லை அவளும் சற்று ரம்பையோ மேனகையையோ 

போல அழகாய்த்தான் இருப்பாள். 

வாழ்வில் பல அவமானங்களைக் கடந்துவிட்டேன் 

இது என்ன என் கையால் தாலித்தட்டை சுமந்து 

ஆசீர்வாதம் வாங்குவது ஒன்றும் பெரும் தவறில்லையே. 

அடுத்தமுறை பெண் பார்க்க வந்தவர்களிடம் 

உன்னைப்பற்றிக்கூற நான் விரும்பவில்லை 

காரணம் எனக்கோ வயது முப்பத்திரண்டு. 

இனியும் காதில் பஞ்சை வைத்துக்கொண்டு 

வீதியில் நடக்கமுடியாது. அக்கம்பக்கம் அடுக்கும் 

கேள்விகளுக்கு விடையளிக்காது சிரித்துக்கொண்டு 

கடக்க இயலாது. வேறு சாதிக்காரனுடன் ஓடிவிட்டாள் 

என்றால் பலகாரம் கூட பல்லில் படாமல் ஓடியிருப்பார்கள். 

நீயும் நல்லபடியாய் குழந்தைகளைப் பெற்று மணவாழ்வில் 

மகிழ்ச்சியோடு வாழ்கிறாய் எந்தவித குற்ற உணர்வுகளும் இல்லாமல். 

நானும் உன்னைக்கடிந்து கொள்ளவிரும்பவில்லை. 

என்னதான் சோற்றைப்போட்டு நடுவீட்டில் வைத்தாலும் 

அதன் புத்தி மாறாது என்பதில் மிகத்தெளிவாய் இருந்தேன். 

இந்த உரையாடல் உன்னை அழைப்பதற்கல்ல தவறிக்கூட 

என் திருமணத்திற்கு வந்துவிடாதே!


Saturday, May 30, 2020

மண்ணைக் காதலித்திருக்கலாம்
























உன்னைக் காதலித்ததற்கு 

மண்ணைக் காதலித்திருக்கலாம். 

இரண்டின் முடிவிலும் 

மண்ணோடு மண்ணாய்ப் போவதுதானே நியதி


அன்பான வார்த்தைகளுக்கும் கனிவான 

கரிசணைக்கும் கரைந்துபோகாமல் 

வீரத்தமிழ் வீழாது விண்ணிலும்

ஆலம் வித்துக்காளாய் விளைச்சல் காட்ட

உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம். 


காஞ்சிவரம் பட்டுக்களின் இஸ்திரி மடிப்புக்கள்

நேர்த்தியாய் நேர்கோட்டிட வர்ணங்களில் 

வனப்பேன் உன் கருவிழியில் கண்ணா 

என்று கர்வம் கொள்ளாமல் 

காக்கி உடையோ கிழிஞ்சல் கந்தையோ

மண்மகள் அடையாளம் எனக்காட்ட

உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம். 


பத்துப்பவுன் திருமாங்கல்யம் வெகுவிரைவாய் 

கழுத்தில் ஏற மஞ்சல் மேனி மையல் 

கொண்டு நாணம் கூடி செக்கச்

சிவப்பதற்கு எதிரியின் பிடியிலும்

உன் விதி நீ எழுத மரணமே

மந்திரமாம் சைனைட்டுக் குப்பியுடன் 

கறுப்புக்கயிறு வீரவணக்கத்தைக்காட்ட

உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம். 


பூச்செண்டு கையில்லேந்தி மணமேடை 

மணம் கமழ வாச ரோஜா வாடிவிடாமல்

பன்னீர்த்தெளித்து புதுமலர்ச்சி கொடுக்க

பூமாரி பொழியும் தோட்டாக்களின் உறைவிடம்

துப்பாக்கி முனையுன் துஸ்டனை தூளாக்கும்

துடிக்கும் கரங்களிற்கு துர்பாக்கியவதி நான்

உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம். 


ஒற்றைக்கையொப்பத்தில் உன்னைச் சரண்டைந்து

இருவர் சாட்சியில் இறுதிவரை உன்னில் மாட்சி காண 

நாமம் பொறித்த கல்லறைகளில் எரியும்  

விளக்குக்கூட தலைவணங்கி என் மண்ணின் 

காதற்புகழ் பாடி வையமும் வரவேற்க

உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம். 


உனக்கும் உற்றாருக்கும் உறங்காமல் 

ஊதியமற்ற ஊழியம் பார்த்து உயிர்மூச்சுத்துறந்து

மண்ணில் உறங்கிக்கிடப்பதிலும்

தளர்வான நிலையிலும் தைரியமாய் போரடி

மண்ணில் மக்கிய உரமாகிப்போனாலும் 

ஒரு விதையை விளையச் செய்து அதன் 

கொடும்விசத்தில் விரோதி வீழ்த்தப்பட

உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம். 



Tuesday, May 5, 2020

பாரதிகண்ணம்மா




பரந்த என்  சொப்பனங்களுக்கு 
கணவனே கதி என்று கடிவாளமிடாது
சிறகுகள்  நீட்டி வானுயறப்பறந்து 
எல்லை தாண்டி என் மமதையில் பங்கு 
கொள்ளும் வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்


எல்லையில்லா என் பயணங்களில் 
பிரயாணியாய் இல்லாமல் துணையாளியாய் 
எடுக்கும் முடிவுகளில் தீர்கமான தீர்ப்பளித்து
வழுக்களை இதமாய் எடுத்துரைக்கும் வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்


முதல் எழுத்துடன் தலை எழுத்துவரை
வீட்டின் தலைவன் என அங்கீகாரம் பெற்றும்
அடிக்கொருமுறை இல்லாவிடினும் அத்தி பூத்தாற்போல் 
என் ஆசையும் செவிசாய்த்து
நான் இல்லை நாம் என்று புரிந்துணர்வான 
இல்ல வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்


சலனம் ஏற்படும் வேளை எல்லாம்
சந்நிதியான் வழி செல்லாது
கற்புடமை அது பெண்ணிற்குமட்டுமன்று
ஆணிற்கும் தான் என்ற இலக்கணம் கொண்டு
இலக்கிய வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்


கோபக்கனல் கசியும் வேதனையில் உன் முகம் 
வாடும் வேளை எல்லாம் என் மடியும் என் கூச்சமற்ற தழுவலும் 
உன்னைத் தாங்கிக்கொள்ளுமென்பதை
ஒவ்வோர் ஆறுதலின் பின் உட்சாகம் கொண்டு மது சூது 
ஆரோக்கியத்தின் கேடு என்ற வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்


ஆடம்பரத்தால் ஆசை ஏற
ஆசையினால் மோகம் ஏற
மோகத்தினால் அனைத்தும் இழக்கும் நிலை ஆக
எளிமையான இனிமை இல்லறத்தில் தான்
நிம்மதி கொள்ள அன்பின் வித்திடும் வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்


நாவின் சுவைக்காய் மதி மயங்கி கலப்படமும்
விலங்கொழிக்கும் பாட்ஷாணமும் வெண்ணெய் தடவி 
கண்ணீர்கும் பல ஆகாரம் எதிலும் நாட்டம் கொள்ளாது 
மனையாளின் அறுசுவையில் அனுமனின் பலம் பெற்று 
கங்கை மாதா தூய்மை பெற்று 
அன்னபூரணி ஆசியுடன் சுகம் பெறும் வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்


இராமனைப்போல் வேள்வித்தீயில் விளக்கம் கேட்க 
அதில் விழுந்து விடைகொடுக்கவும் 
யுதிஸ்டன் போல் சூதில் மங்கையை 
பணயம் வைத்து விளையாடவும் 
பெண்ணை துயரில் தள்ளாது பச்சைமரம் எரிந்தால் என்ன 
எரியாவிடின் என்ன இவள் என்றும் என் பத்தினிதான் 
என்ற நன்மதிப்பால் அலங்கரிக்கும் வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்

Tuesday, October 30, 2018

முள்வேலிக்குள் அகப்பட்ட இதயம் ஒன்றின் அழுகுரல்



இரு இதயங்கள் துடிக்கும் சத்தம் தான் கேட்கின்றது
ஒரு இதயம் தியாகம் செய்யும் தொனியுடனும் 
மறு இதயம் குற்றம் செய்த தொனியுடனும்
நடுவே ஒரு முள்வேலி
ஆம் முள்வேலிக்குள் அகப்பட்ட இதயம் ஒன்றின் அழுகுரல்
தான் இங்கு வரிகளாக காட்சிப்படுத்தப்படுகிறது
அழகான குக்கிராமம் அதிகாலைச் சூரியனும் கண் வைத்துவிடும்
மலர்களோ வாசனை வீசி மங்கையரைக் கவர்ந்திடும்
பச்சை வயலோ காற்றில் தலையசைத்திடும்
வண்ணச் சேலைகளோ காற்றில் உலர்ந்திடும்
பூஜைகள் சிறப்பாய் நடந்திடவே கோவில் மணி அடித்திடும்
மூன்று வேளைக்குமாய் அன்னம் அடுப்பில் அவிந்திடும்
வெட்டிப்பேச்சுக்காய் மாலை திண்ணை நிரம்பிடும்
இந்த இன்பம் போதுமென்றே சூரியனும் மறைந்திடும்
இதுதான் என் கிராமம்
நான் தான் தியாகம் செய்யும் இதயம் பேசுகின்றேன்
உடையவன் இன்றி மாற்றான் கைப்பற்றிய பின்
இறக்க இருக்கும் தறுவாயில் கடைசியாக பேசுகின்றேன்
மலர் சூடிய மங்கையரே உம் கணவரிக் இறுதிச்சடங்கை
நிறைவேற்றக்கூட வழியின்றி ஒரு மலராவது அவர் நினைவாய் வாடட்டும் எனக் கொய்கின்றீரோ
இங்கு மலர் முழுவதும் இரத்த வாடை வீசுகிறது
தப்பித்து ஓடிவிடும்
பச்சை வயலோ கருகி சாம்பலாகிவிட்டது இனி எங்கு
அறுவடை செய்ய ஊரார் உறவுடன் பந்தல் நாட்டுவது
வண்ணச் சேலைகள் இரண்டைப் பத்திரமாக எடுத்து வையுங்கள் நாடோடியாய் ஓடும் இடங்களில் தரையில் விரிப்பதற்கு ஒன்று
கிடைக்கும் மரக்கிளைகளில் குழந்தை உறங்க ஏணை கட்டுவதற்கு மற்றொன்று
கோவில் மணியை ஒருபடியாகக் கண்டு கொண்டேன்
ஆனால் கோவில்களும் விக்கிரங்களும் தான் காணாமற்ப் போய்விட்டன
ஒரு மூட்டை அரிசி ஒவ்வொருவர் கைகளிலும் இருக்கட்டும் ஒருவேளையவது உப்புக் கஞ்சி குடித்து உயிர் வாழ உதவிடும்
திண்ணைகளில் கால் வலிப்பதாய் அமர்ந்துவிடாதீர்கள்
உயிர்பறிக்கும் வெடிப்பொருட்கள் புதைக்கப்பட்டு இருக்கலாம்
இன்று எம் துயர் தாங்காத சூரியன் சோகமாய் மறைந்துவிட்டது
நானோ முள் வேலிக்கு உள்ளே என் உயிரைத் தியாகம் செய்து என் குடும்பத்தை ஏதோ ஓர் மூலையில் வாழ வழிவகுக்கின்றேன்
என்னைப் பெற்றவளோ பெற்ற கடனுக்கு செய்யாக்குற்றம் தன்னை தன்மேல் சுமத்தி கண்ணீரால் கெஞ்சிக்கொண்டு வேலியின் மறுபுறம் நிற்கின்றாள்

Friday, October 12, 2018

என்னளவில் அகரம்

அன்பு
நான் வாழ்வதற்கு ஆதாரம்
அழகு
உள்ளதில் காணவேண்டிய பண்பு
அறிவு
மற்றவர்முன் என்னை உயர்த்துவது
அடக்கம்
சான்றோரின் முன் காட்டவேண்டியது
அகம்பாவம்
அழிவிற்கு ஆரம்பம்
ஆக்கம்
என்னுள் உள்ள படைப்பு
ஆதரவு
தளர்ந்துபோன இதயத்திற்கு
ஆசை
நான் கனவில் தீர்த்துக்கொள்வது
ஆடம்பரம்
விருந்தோம்பலில் இருக்க வேண்டியது
இசை
தனிமையின் துணை
இறைவன்
மனிதரை மனிதராய் மதிப்பவன்
ஈட்டி
நீ அடுத்தவரை சொல்லால் வைக்கும் குறி
உண்மை
அரிதாய் கிடைக்கும் அழிவற்ற சக்தி
உணவு
சிலருக்கு கிடைக்காத பலர் வீணாக்கும் கொடை
ஊக்கம்
கை விடக்கூடாத ஒன்று
எளிமை
உன்னை அலங்கரிக்கும் அணிகலன்
எண்ணம்
சக்திவாய்ந்த ஆயுதம்
ஏமாற்றம்
நான் பெற்ற வரம்
ஏளனம்
தன்னிலை மறந்த பலர் செய்யும் செயல்
ஏக்கம்
ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரி
ஐயம்
உறவுக்கு கேடு
ஒன்று
ஒரு செயலில் மனம் இருக்க வேண்டியது
ஒழுக்கம்
தாய் தந்தையின் வளர்ப்பை குறிப்பது
ஓடம்
நான் வாழும் வாழ்க்கை
ஔவியம்
ஔவை சொன்ன மொழி                                                                                                                             
அம்மா என்னுடன் வாழும் என்னை வாழ வைக்கும் தெய்வம்                                                                                  அப்பா நான் சிறுவயதில் தொலைத்த பொக்கிஷம்

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...