Showing posts with label Feminism. Show all posts
Showing posts with label Feminism. Show all posts

Saturday, March 16, 2024

காதலும் கடந்து போகும்







சுயமரியாதையை எங்கும்

விட்டுக்கொடுக்காத பெண்

வாழ்க்கையில் அடுத்தகட்ட நகர்வை 

எதிர்பார்க்காத ஆண்

இருவரிடையே என்ன உறவுதான் 

இருந்துவிடப்போகிறது?


வாழ்க்கையில் பிடித்தபாதையில்தான் 

செல்வேன் என்ற இறுமாப்பு

உடற்சோர்விலும் மனம் தளரா குறிக்கோள்

ஏதுமற்ற நிலையிலும் தன்நம்பிக்கை

நாதியற்ற நிலையிலும் 

யாரிடமும் வேண்டியே நாடிச்செல்லா

அழகிய பெண் திமிர் அவள் யாழினி


திறமையும் அறிவும் தேடாத சமூகமிது

பணமும் அரசியலும் சூழ்ச்சிசெய்யும் காலமிது

பள்ளங்களில் சறுக்கிவிழ 

பாதை நீள முட்கள் கொண்டு

ஓட்டப்பந்தயம் நடத்தும் வேடிக்கை மனித மிருகங்களிடம்

தாக்கப்பட்ட இதயத்தை தானே மருந்திட்டு

மீள் சுழற்சிக்கு தயாராகின்றாள்


அவளிடமும் ஆயிரம் கவலைகள் உண்டு

கண்ணீருக்குள் கதைகளுண்டு

சாதாரண பெண்களைப்போல் காதலும் காமமும்

கிடைத்துவிடாதா என்ற ஏக்கமும் உண்டு

இருந்தும் அவளை ஏதோ ஒன்று தடுக்கிறது

அது அவளின் தனி அடையாளத்திற்கான அங்கீகாரம்


இத்தனையாய் சொல்லப்படும் அவள் என்ன இரும்புமனிசியா?

மனமற்று இரும்புத்திரையில் இதயம் கொள்ள?

அவள் தோள் சாயவும் 

நம்பிக்கையாய் அருகில் அமர்ந்து 

ஓர் சில வார்த்தை கேட்கவும்

இதமான பெயர் அற்ற ஓர் உறவுதான் 

அவன் கதிர்


தன்நம்பிக்கையில் சுற்றும் 

பெண்ணியவாதி அவள் 

மனம் சாய்த்து கதை சொல்லவும் 

உறவற்ற ஓர் ஆண் உருவம் அவன்


காதலன் கணவன் நண்பன் என்ற வட்டம் தாண்டி

இதமான இந்த உறவுக்கு தமிழ் இலக்கணத்தில்

வழங்கப்பட்ட மொழி எதுவோ?


அவள் மனம் அறியது ஒரு நிமிடம் அவன் கரம் பற்றி கடிகாரமுள்ளாய் கடக்கின்ற நொடிக்குள்

ஏதோ அவன் வரவில் சாதித்தவளாய் நன்றியுடன் ஒரு புன்னகையில் கடக்கும் இருவருக்குள் 

இந்தக் காதல் என்ன அதுவும் கடந்து போகும்

Tuesday, October 12, 2021

சிதைந்த மலர் துளிர்கின்றது

 





அவள் ஜடைகளை ரிப்பன் கொண்டு முடியும்போதே

ஒரு குறுகிய வட்டத்துள் கட்டப்பட்ட கைபொம்மையாகிவிட்டாள்

சோகம் கண்ணீர் துக்கம் துயரம்

அவமானம் சகிப்புத்தன்மை போன்ற உணர்ச்சிக்கயிறுகள்

இன்னுமும் அவளை கட்டிப்போட்டிடத்தான் செய்கின்றன

உதிர்ந்து விழும் கேசத்தின் வாயிலாய் நீயும் அதற்கு ஒப்பானவள் என்றே சின்னஞ்சிறு பிராயத்திலே 

ஊட்டப்பட்டு வளர்க்கப்படுகிறாள்

பருவங்கள் ஏற உருவங்கள் மாற பாவாடை தாவணியோ அவளை பாதி ஆயுட்கைதியாக்கியது

விருப்பங்களைத் துறந்த துறவியேனும் ஊராரால் போற்றப்பட இவள் மட்டும் ஊர் கண்ணிலிருந்து மறைந்துமே தூற்றப்படுகிறாள்

எள்ளி நகையாடும் பள்ளி வயதில் புத்தகம் சிலேடை பென்சில் வேண்டிய பாலகி அவளுக்கோ கிடைத்தது தாலி மற்றும் கணவன் என்ற புதிய சாபம் அதுவோ அந்நாளில் குழந்தைத் திருமணம்

அங்கே ஆரம்பித்தது அம்மலரின் முதற்சிதைவு

பொம்மையை வைத்து விளையாடிய அவளுக்கோ தானும் பொம்மையாகிவிடக்கூடாதென்ற முடிவில் 

வெகுநாட்கள் அச்சத்தினால் கட்டப்பட்டிருந்த சங்கிலியை

அன்று முதன்முதலாய் கழற்றிவைத்துவிட்டு ஓடிவிட்டாள் 

அவளைப் பெற்றவர் வீட்டிற்கு

பாவம் அவள் அதை கழற்றிவைத்துவிட்டு ஓடியிருப்பதற்குப்பதில் உடைத்தெறிந்திருக்கலாம்

மீண்டும் அச்சங்கிலி பொருத்திவைக்கப்படும் என்று அறிந்திடாதவள்

தாழ்ந்த சமூகமென படைப்புகளை பிரித்துப் பார்த்திடும் வள்ளோர் வாழ்ந்த சமூகம் அவளுக்கோ அது நரகம்

அடிமைத்தனம் மேலோங்க வாட்டமடைந்த மலர் இன்னும்

சிதைக்கப்பட்டுக்கொண்டுதான் இருந்தது

மரணம் எனும் ஒரு முடிவை அவள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்றுக்கொண்டிருக்கலாம்

ஆனால் என்றோ யாரிடமோ தனக்கான நீதி கிடைக்குமென்ற நம்பிக்கை கொண்டவளுக்கு நீதி நெறி நழுவி அங்கேயே

கொடும் துயரம் நிகழ்ந்தது

நீதியும் நிலைக்கவில்லை அவளுக்காய் குரல் கொடுக்க யாருமில்லை

கையில் ஏந்தினாள் ஆயுதம் தன்னை நிலைகுலைய வைத்தவருக்கெல்லாம் சல்லடை போட்டு தனக்கான நீதியை தானே பெற்றுக்கொண்டாள்

பாஞ்சாலி துகிலுரிய பரமாத்மா ஶ்ரீ கிருஷ்ணன் சேலை வழங்கிய அற்புதம் இங்கு இவளுக்கேன் நிகழ்த்தப்படவில்லை? தாழ்ந்த குலமா? இல்லை அக்கினியால் பிறப்பெடுக்காத தேவமங்கையல்லாத ஒரு சாதாரண பெண்மணி என்ற நிலையா? 

ஆனால் இன்று அவளது கட்டிவைக்கப்பட்ட ஜடை அவிழ்ந்து காற்றில் அலை மோதும்போது அவளைக்கட்டி வைக்கப்பட்டிருந்த சங்கிலிகள் உடைத்தெறியப்பட்டிருந்தன

அவளுக்கான சுதந்திரம் அன்று யாராலுமல்ல 

அவளினாலே கிடைக்கப்பட்டது

அவளை எத்தனையோ பெயர் கொண்டு அழைக்கப்பட்டிருந்தாலும் பூலான் தேவி என்ற 

மலர் எத்தனையோ சிதைவுகளுக்குப் பின்னும் 

தனக்கான சுதந்திரத்தின் மூலம் மலரத்தான் செய்தது

பெண்ணிற்கான சுதந்திரம் கெஞ்சிப் பெறுவதுமல்ல 

யாரும் வழங்குவதுமல்ல அது அவளிடத்தே இருப்பது

எங்கே அவள் ஓங்கி மிதிக்கப்படுகிறாளோ அன்று அவளாய் அச்சுதந்திரத்தை உணர்வாள் 




Friday, September 11, 2020

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி



















கரு மை தீட்டி கருவிழி மெருகேற்றி 

சின்னஞ்சிறு குங்குமச்சிமிழ் பொட்டிட்டு

கூரிய அரிவாள் புருவங்களை சற்று 

உயர்த்தி தலை நிமிர்ந்து நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


முன்னழகு பின்னழகு கன்னியவளோ பேரழகு

ஒரு கணம் கண்ணிமைக் மறுக்கவே

தலைக்கேறும் போதை ஏற்ற 

அன்னம் அவளிடம் பழக வேண்டும்

ஓர் புதுநடை நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


தீயும் தீய்ந்துபோகும் பாவியவள் பார்வை

வளைவுகளே வியர்ந்து பார்க்கும் வஞ்சியவள் 

மெல்லிடை

கொடிகள் படரத்துடிக்கும் கொஞ்சுங்கிளி கொடியிடை

வேடிக்கை பார்ப்பவர் ஏக்கத்தில் வாடித்துடிக்க

இடையில் நளினநடை நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


சலனமற்ற பஞ்சு நடையாள் பவனி வரும் ஓசை 

மலர்களும் மலர்ந்திட விரும்பிடும் ஓர் இசை

திரண்டு வரும் மக்கட்கூட்டத்தின் நடுவே 

வேகவேகமாய் மின்னல்நடை நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


காற்றின் எடையில் இரட்டிப்பாய் இருந்திடுவாள்

கனத்த பையை தோளில் சுமந்தபடி

துணையற்ற பயணத்தில் பாதச்சுவடுகளின்றி 

தூயநடை நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


பேச நான் முயன்று முன்னேறுகையில்

முகபாவணையில் மிரட்டி மிரளச்செய்கிறாள்

போ என்று என் அறிவுக்கு அவள் தகவல் தெரிவிக்கமுன்

வெடித்துச்சிதறும் பல மனிதசடலங்களுள்

வெற்றி வேட்கை தணிந்தநடை நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


பட்டங்கள் பல பெற்றவள் பல துறையில் தேர்ச்சி கண்டவள் 

வறுமை எனும் கோட்டின் கீழ் கொடும்பிடியில் 

விடுபட இல்லையாம் அவளுக்கு ஓர்

நிரந்தர உத்தியோகம்

பலன் வேண்டி தேடித்திரிந்த இடமெல்லாம் 

சேலை அவிழ்க்க பணியாதவள்

பணமெனும் பேருதவிக்கு உயிர்துறக்க நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


அழகில் உண்டு ஆபத்தென அடுத்தவர்கள் 

சொன்னகதை நிஜம்படவே

ஆசிட் வீச்சில் உருகுலைந்த அழகிய முகம்

மறைத்துக்கொண்டு சமூகசீர்திருத்தவாதியாய் 

தற்கொலைக்குண்டுத்தாரியாய் நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


இரும்பைக்கொண்டு பட்டை தீட்டினாலும்

அவள் உள் இலவம்பஞ்சு இதயம் ஒன்றின் ஓரத்தில்

பெண்மைக்கான காதல் காவியம் அவள் 

மறைத்துக்கொண்டு சீரற்ற இந்த சமூகம் சீர்கொள்ள

அஹிம்சையின்றி ஆயுதம் தேடி நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி





Thursday, September 3, 2020

உதட்டுச்சாயம்

 













அவள் உதட்டுச்சாயம் களைவதில்

அத்தனை ஆடவர்களின் கண்களும்  தீவிரமாய்

மொய்த்துக்கொண்டிருந்தன

என்ன ஆச்சரியம்!

பூக்களே தேன் சுவைக்க ஏங்கும் போது

வண்டுகள் மட்டும் வர்ணித்துவிட்டுப்போகுமா?

சிவப்பு வெல்வெட் ரோஜா இதழை


உதட்டுரேகை வளைவை வானவில் 

கோடுகளில் கூட இவ்வளவு 

கற்சிதமாய் கண்டிருக்கமாட்டார் எவரும்

அவ்வப்போது அவள் எச்சிற்பனித்துளிகள் 

ஈரமூட்டிக்கொண்டு இருக்கின்றன

இதையெல்லாம் அறிந்தும் 

அவள் மேலும் மேலும் உதட்டுச்சாயத்தை 

அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றாள்


ச்சீ என்ன பெண்தான் இவளோ?

இத்தனை கடுமை வர்ணம் தீட்டுகிறாள் 

எவனை மயக்குவதற்கோ? 

எவர் குடியைக் கெடுப்பதற்கோ?

ஊர்ப்பெண்கள் சாபம் இவளை சும்மா விட்டுவிடுமா?

கர்ஜனைக்கும் பெண்சிங்கங்கள் பல மனதினுள்

குமிறிக்கொண்டிருக்க கண்டும் காணாதவளாய் 

மேலும் மேலும் உதட்டுச்சாயத்தை 

அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றாள்


அவள் வர்ணம் தீட்ட தீட்ட கையில் 

இருந்த உதட்டுச்சாயமோ குறைவடைந்ததாயில்லை

வெறுமையான மென் இதழோடு 

அவள் வஞ்சனையற்ற மனதாய் புன்னகைத்துக் கடக்கையில் 

பாவம் ஓர் பெண்ணாய்க்கூட 

அவளைப்பார்க்காதவர்கள் இன்றும் 

அதே புன்னகைக்கு உதட்டுச்சாயம் பூசிட 

ஒவ்வோர் கோணங்களில் கணக்கிட்டுக்கொண்டு 

அவர்களின் புன்னகைகளை மறந்துவிட்டார்கள்

என்பதை உதட்டுச்சாயம் அறிந்துவிட்டது போல


Wednesday, July 29, 2020

யசோதராக்களின் கனவு






















மின்னும் வேகத்தில் எத்தனை பேர் சூழ்ந்து 

சூழ்ச்சி வலை பின்னினும் இலக்கு ஒன்றை 

மட்டும் மனக்கண் முன் நிறுத்தி அவ்வலைதனை 

தகத்தெறிய காற்பந்தாட்ட பூமியில் கட்டைக்கால் 

காற்சட்டை முட்டி மேல் முழம் ஏறி சமூகத்தடை 

விலக்கத் தெரியாமலே அழிந்துபோகின்றன 

பல யசோதராக்களின் கனவு


வெள்ளைமுகம் தலைகாட்ட செங்கதிரோன் 

தலை சாய்க்க தேவைகள் காரியங்கள் பல 

ஆற்ற ஆண்துணையற்ற அங்கையர்க்கன்னி 

ஓரடி வாசற்படிதாண்டுதலில் கதி கலங்கிப்போகும் 

பெண்மையின் கற்பு பல அவச்சொற்களில் இருந்து 

அழிந்துபோகின்றன 

பல யசோதராக்களின் கனவு


காதல் கனவுகள் கல்லறைச்சுமைதாண்டி 

நீண்ட தூரம் பயணிக்க சாத்தானாகினும் 

ஒரே சாதியைத் தேடித் தேடி வேட்டைக்கு 

அனுப்பும் புள்ளிமான்கள் பல மனதால் 

உடலால் இரையாகி சுகமற்ற நோயில் வாடினும் 

இன்னும் அப்பன் அம்மை பிடியில் அழிந்துபோகின்றன 

பல யசோதராக்களின் கனவு


ஆடவன்  தன் சுகம் தேடி சலனம் தீர்க்க எத்தனை 

படி ஏறி இறங்கினாலும் பத்தினியாய் இவள் 

உடலைப் பட்டினி போட்டு பத்தியம் காப்பினும் 

பல் இழிக்கும் பல பங்காளிக்கூட்டம் சீண்டலுக்கு

பதில் மொழி கூறி மறுமணத்திலும் விவாகரத்திலும் 

கேலிப்பேச்சிற்கு தலைகுனிவதில் அழிந்துபோகின்றன 

பல யசோதராக்களின் கனவு


கற்பித்தலும் வியாபாரமாகிட கரும்பலகைகள் 

கூட தரம் பார்த்திட இலஞ்சங்கள் ஊழல்கள் 

தலைவிரித்தாட காஞ்சவன் பாலியல் இலஞ்சங்கள் 

பரிசாய்க்கேட்டிட  விண்வெளியில் பறக்கும் கனவுகள் 

விண்ணிலிருந்து விழுந்து மடிந்திட

அழிந்துபோகின்றன 

பல யசோதராக்களின் கனவு


அனைத்தும் துறப்பதில் மனம் கொண்ட புத்தன் 

தூக்கத்தில் யார் அறியாமலும் தன்சுமைகளில் 

இருந்து விடைபெற்று  ஞானம் பெறுவதில் மட்டும் 

சிந்தை கொண்ட ஒருகணம் குழந்தை குடும்பம் 

கடமைகள் மறந்து தன் சுகம் தன்நலன் கருதி 

வீட்டை விட்டு வெளியேறியிருப்பின் அவளை 

வேசி என்றே நாமம் சூட்டியிருக்கும் இந்த உலகின் 

மூர்க்கத்தால் அழிந்துபோகின்றன 

பல யசோதராக்களின் கனவு


Wednesday, May 20, 2020

கடல் பெண்ணே



கடல் பெண்ணே

உன் கண்ணீர்தான் கடலில் 

உப்பாய்க் கரைந்ததோ

காலங்களும் கடக்க 

உப்பின் செறிவும் அதிகரிப்பதேன்

இன்னும் உன் கண்ணீர்கடல் வற்றாமையா?


கடல் பெண்ணே

உன் சீற்றம் தான் கொந்தளிப்பானதோ

பாரிய அலைவெள்ளத்தில் உயரம்

விண்ணளவைத்தாண்ட உன் கோபத்தணல்

இன்னும் எத்தனை துயரின் பிரதிபலிப்போ?


கடல் பெண்ணே

உன் பொறுமைதான் 

கடல் உள்வாங்கலானதோ

உள்ளிருக்கும் பொறுமை எல்லாம்

எரிமலைக்குமுறலாய் பொழியும் எரிதணலானதோ?


கடல் பெண்ணே

உன் புண்ணியம்தான் அலையானதோ

கறைபடிந்த பாதங்களை கூச்சமின்றி

கழுவி பாவவிமோட்ஷனம் அளிப்பதனாலோ?


கடல் பெண்ணே

உன் நட்புதான் சமுத்திரப்பயணமானதோ

நீண்ட தூர எல்லைகளுக்கு முடிவிடம்கொடுத்து

இரு எதிர்முகங்களுக்கு சந்திப்புக்கொடுப்பதாலோ?


கடல் பெண்ணே

உன் தாய்மைதான் கடல்மீன்களானதோ

வருமானமும் வருவாயும் தேடித்தர

வழிதேடுபவர்கள் வறுமை போக்குவதனாலோ?


கடல்பெண்ணே

உன்காதல் தான் கழிமுகமானதோ

ஆறோடு கூடல் செய்து

இனமற்ற காதலென நிலைநிற்பதனாலோ?



Tuesday, May 5, 2020

பாரதிகண்ணம்மா




பரந்த என்  சொப்பனங்களுக்கு 
கணவனே கதி என்று கடிவாளமிடாது
சிறகுகள்  நீட்டி வானுயறப்பறந்து 
எல்லை தாண்டி என் மமதையில் பங்கு 
கொள்ளும் வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்


எல்லையில்லா என் பயணங்களில் 
பிரயாணியாய் இல்லாமல் துணையாளியாய் 
எடுக்கும் முடிவுகளில் தீர்கமான தீர்ப்பளித்து
வழுக்களை இதமாய் எடுத்துரைக்கும் வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்


முதல் எழுத்துடன் தலை எழுத்துவரை
வீட்டின் தலைவன் என அங்கீகாரம் பெற்றும்
அடிக்கொருமுறை இல்லாவிடினும் அத்தி பூத்தாற்போல் 
என் ஆசையும் செவிசாய்த்து
நான் இல்லை நாம் என்று புரிந்துணர்வான 
இல்ல வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்


சலனம் ஏற்படும் வேளை எல்லாம்
சந்நிதியான் வழி செல்லாது
கற்புடமை அது பெண்ணிற்குமட்டுமன்று
ஆணிற்கும் தான் என்ற இலக்கணம் கொண்டு
இலக்கிய வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்


கோபக்கனல் கசியும் வேதனையில் உன் முகம் 
வாடும் வேளை எல்லாம் என் மடியும் என் கூச்சமற்ற தழுவலும் 
உன்னைத் தாங்கிக்கொள்ளுமென்பதை
ஒவ்வோர் ஆறுதலின் பின் உட்சாகம் கொண்டு மது சூது 
ஆரோக்கியத்தின் கேடு என்ற வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்


ஆடம்பரத்தால் ஆசை ஏற
ஆசையினால் மோகம் ஏற
மோகத்தினால் அனைத்தும் இழக்கும் நிலை ஆக
எளிமையான இனிமை இல்லறத்தில் தான்
நிம்மதி கொள்ள அன்பின் வித்திடும் வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்


நாவின் சுவைக்காய் மதி மயங்கி கலப்படமும்
விலங்கொழிக்கும் பாட்ஷாணமும் வெண்ணெய் தடவி 
கண்ணீர்கும் பல ஆகாரம் எதிலும் நாட்டம் கொள்ளாது 
மனையாளின் அறுசுவையில் அனுமனின் பலம் பெற்று 
கங்கை மாதா தூய்மை பெற்று 
அன்னபூரணி ஆசியுடன் சுகம் பெறும் வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்


இராமனைப்போல் வேள்வித்தீயில் விளக்கம் கேட்க 
அதில் விழுந்து விடைகொடுக்கவும் 
யுதிஸ்டன் போல் சூதில் மங்கையை 
பணயம் வைத்து விளையாடவும் 
பெண்ணை துயரில் தள்ளாது பச்சைமரம் எரிந்தால் என்ன 
எரியாவிடின் என்ன இவள் என்றும் என் பத்தினிதான் 
என்ற நன்மதிப்பால் அலங்கரிக்கும் வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...