Showing posts with label Sad. Show all posts
Showing posts with label Sad. Show all posts

Sunday, May 12, 2019

மௌனராகம்





நான் பாடும் மௌனராகம்
இது ஒவ்வோர் மனதிலும் ஓடும் 
ஒருதலை ராகம்
இசை மீட்பதிலும் அதில் 
கானம் மெய்சிலிர்ப்பதிலும்
காதால் இரசிப்பதிலும் தான்
சுவைக்கப்பட்ட ராகம்
மௌனமாய் விழிகளில் வீணை
வாசிப்பதிலும் நெஞ்சார உறுத்தப்படுகிறது
சொல்லிய வார்த்தைகளுக்கு பல பொருள்
அர்த்தமாகிட சொல்ல வார்த்தைகளுக்குப்
பரிசாய் மௌனங்கள் நீடிக்கையில் 
என் ஒருதலை ராகம் மீட்டிப்பார்கிறேன்
வெளிப்படையாய் கூறமுடியாத சில ராகம்
மௌனத்தில் மட்டும் மௌனத்துடன் மௌனமாய்
பல கதைகள் பேசிடும் ஒருதலைராகம்
வெட்கம் காதல் அன்பு கோபம் வெறுப்பு 
சகிப்புத்தன்மை குற்றுணர்வு மனிதம்
பெண்ணியம் கடமை கற்பு ஏதோ ஒன்றாய்
மறைக்கப்படும் ஒவ்வோர் உணர்வும் சொல்லாத மௌனராகம் தான்

சைக்கோவின் காதல்





என்றுமில்லாதவாறு இன்றுமட்டும் 
ஏன் என் முகத்தில் ஒரு புன்னகை 
ஓடுகிற மின்விசிறியையும் மீறி 
நினைவுகள் எங்கோ ஓடிச்செல்கின்றன
கதிரை மேசைகளில் கோலம் போடத்தான் 
கைநகத்தினை சீராக்கி வைத்திருந்தேனா
புன்னகைக்கும் ஒவ்வொரு இடைவெளிக்கும் 
மூச்சுக்காற்று உனக்கானதாய் நெஞ்சை உரசிச் சென்றது
நீ எனக்கானவன் நீ எனக்குமட்டுமே ஆளானவன்
இந்த கர்வம் தான் இத்தனைக்கும் காரணமா
எத்தனை சண்டைகள் எத்தனை அழுகைகள்
சிரிப்பாக வருகின்றது அனைத்தும்
நம் குழந்தைகளுக்கு உணவூட்டும் போது நிச்சயம் 
இந்தக்கதைகளைச் சொல்லி அம்மாச் செல்லமாக்கிவிட வேண்டும் என்ற எண்ணமும் பனைமரத்தையும் தாண்டி வேலி போட்டது. எளிதில் பிடித்துவிட முடியுமா 
அதனால்தான் தேக்கி வைத்திருக்கின்றேன் கற்பனைகளை எல்லாம் 
கவிதை வரிகளாக.
உனக்கு ஆயுள் நூறு. வேண்டாம் நான் இறப்பதற்கு ஒரு நிமிடம் முன். 
கடைசி வரை உனக்கான சேவைகளை முடித்துக்கொண்டபின். 
எனக்கு என்ன செய்தி சொல்லப்போகின்றாய்
முதலில் என் நலன் விசாரிப்பாயா?
என் அணைப்பு வேண்டும் என்பாயா?
உன் சோகம் பகிர்ந்து கொள்வாயா?
ம்ம்ம்ம்ம் ஏதும் நல்ல செய்தி?
சரி சொல்லுடா 
வேண்டாம் போதும் வலிக்கிறது 
இதற்குமேல் என்னால் தாங்கமுடியாது
துண்டித்துக்கொள் அனைத்து அழைப்புகளையும்
அனைத்திலும் என்னை முடக்கிக்கொள்
வழமைபோலதான் நானும்
ஏன் என் முகத்தில் ஒரு புன்னகை 
ஓடுகிற மின்விசிறியையும் மீறி 
நினைவுகள் எங்கோ ஓடிச்செல்கின்றன
கதிரை மேசைகளில் கோலம் போடத்தான் 
கைநகத்தினை சீராக்கி வைத்திருந்தேனா
புன்னகைக்கும் ஒவ்வொரு இடைவெளிக்கும் 
மூச்சுக்காற்று உனக்கானதாய் நெஞ்சை உரசிச் சென்றது. இனி
நீ எனக்காவும் இல்லை எனக்காக உன்னிடமும் எதுவுமில்லை. 
இப்படியே என் நாட்களைக் கடத்திச்செல்கின்றேன்
கற்களும் சீமைந்துமாய் அலங்கரிக்கப்பட்ட 
உன் நினைவுகளுடன் மட்டும் நான்கு சுவர்களுக்கு மத்தியில் என்னை 
என்னால் அடையாளம் காட்டமுடியாத சைக்கோக்காதலியாய்

Wednesday, May 8, 2019

மௌனமான இரவு


இந்த இரவை மட்டும் பரிசாய்க் கொடுத்திடு
எனக்கான பல கேள்விகள் இருக்கு அதில் 
உன் மௌனம் மட்டும் பரிசாய்க் கொடுத்திடு 
என் உதடுகள் உன் பெயரை பல முறை சொல்லக்கூடும் 
உன் காதோரம் வெப்பக்காற்று வீசக்கூடும் 
பார்வைகள் இருட்டின் வெளிச்சத்தில் கெஞ்சக்கூடும் ஆனாலும் 
உன் மௌனமான பார்வையை மட்டும் 
பரிசாய்க் கொடுத்திடு 
என் வேதனைகள் எல்லாம் வார்த்தையாகிடும்
என் வலிகள் எல்லாம் கண்ணீராகிடும்
ஆனாலும் நீ மௌனமாய் என்னைப் பார்வையிடு
என் விம்மலான அழுகைக்கு உன் தழுவல் பலம் 
கொடுக்க கூடும் இருந்தாலும் மௌனமாய் இரு
எந்த அழைப்புகளையும் ஓரம்கட்டு
எந்த மொழிக்கும் செவிசாய்க்காதே
எந்த சிந்தனைகளையும் தூக்கிவீசு
எந்த நினைவுகளையும் நினைவுகொள்ளாதே
மௌனமாய் என்மீதுமட்டும் பார்வை கொள்
காந்தமான நெருக்கத்திற்கும் விரல்கள் தேடும் 
தேடல்களுக்கும் இந்த இரவை மட்டும் பரிசாய்க் கொடுத்திடு
இந்தனை நாட்கள் பிரிந்த ஏக்கத்திற்கும் என் கோபமான கொஞ்சிடும் மொழிக்கு 
இந்த இரவை மட்டும் பரிசாய்த் தந்து மௌனமாய் பார்வை வீசிடு 
உன் மார்போடு உறக்கத்தில் அதன் வலிகளைக் கரைத்துக்கொள்கின்றேன்


Tuesday, April 23, 2019

தீயின் மேற் காதற்கொண்ட இலவம் பஞ்சு



தீயின் மேற் காதற்கொண்ட இலவம் பஞ்சு
தீராத தலைவலிக்கு பற்றிட்டு 
தைலம் தேய்த்து
வெந்நீர் ஒற்றடம் பையக்கொடுக்க
நிம்மதியாய் தன்னை மறந்த ஒரு 
அசட்டுத்தூக்கம் தான் 
இலவம் பஞ்சு தீயின்மேற்கொண்ட காதல்
உனக்காய்ப் பிறந்த பாடல்வரிகள் கானம்
சொட்டச் சொட்ட
மெல்லியாதாய் வீசும் தென்றலுக்கு முகம் கொடுக்க
முடியா சொல்லா வேதனை தான்
இலவம் பஞ்சு கொண்ட காதல்
ஆர்ப்பரிக்கும் கடலுக்கு ஒற்றைக்கால் ஊன்றி
உறுதுணையாய் நிற்கும் வெளிச்ச விளக்கு
இலவம் பஞ்சின் காதல்
கசிந்து வந்த கண்ணீரெல்லாம் 
கல்லாற்று நீராய் நிரம்பி ஓட
தெளிந்த நீரில் கிறுக்கிய கிறுக்கலெல்லாம்
ஒன்றாய்ச் சேர்ந்தது
இலவம்பஞ்சின் காதல்
கொத்திச்சென்ற பட்சிகள் பல இருக்க 
காத்துக்கிடக்கும் காகம் பல இருக்க
மூடிவைத்த முத்துக்கு விலைதான்
இலவம் பஞ்சின் காதல்
இரயில் ஓடும் பாதையில் தள்ளிப்போகும் மரங்களை
வேடிக்கைபார்த்து உறங்கிப்போகும் 
சிறுபிள்ளைதான் இலவம் பஞ்சின் காதல்
தீயினாற்ச் சுட்ட வடு மாற்றி நாவினாற்சுட்ட 
வடு நீள தீயிற்கு இரையாகிடும் அர்ப்பணம்
எல்லாம் சமர்ப்பணம் ஆகிட
தீயிடம் காதல் கொள்ள காத்துக்கிடக்கும்
இந்த தீயின் மேற் காதற்கொண்ட இலவம் பஞ்சு

Sunday, March 10, 2019

அம்மா உன் புகைப்படம்


தூசும் சாம்பலும் படிந்த 
காட்சட்டையும் சேட்டும்
இடுப்பைவிட்டு வழுகிவிடாமல் இறுக்கமாய் வைத்திருக்கும்
அறுந்து தொங்கும் அப்பாவின் இடுப்புப்பட்டி
வெயிற்சூட்டிலும் சுள் என்று 
சுடுகிறதம்மா தலைக்கவசம்
அதை கழற்றிவைத்துவிட்டால்
போய்விடும் என்தேசம்
டிக் டிக் டிக் உடன்
என் இதயமும் சேர்ந்து
ஒவ்வொரு நொடிக்கும் துடித்துக்கொண்டிருக்கிறது
மூச்சு விட முடியவில்லையம்மா
சுற்றி எங்கும் மணல் மூட்டைகள்
இடையே தெரியும் நீக்கலுக்குள்
துப்பாக்கி முனைகள்
இரவுபகல் தெரியவில்லை
பசி வயிற்றைப் பதப்படுத்தி
கண்களை செருக்கிக்கொண்டது
இருந்தும் விழிப்புடன் இருக்கின்றேன்
உதிக்கின்ற சூரியக்கதிர்
என்மீது படுமென்றில்லை
என் தாய்க்கொடி காற்றில்
பறக்கும் போது கம்பீரமாக ஆதிக்கமற்ற
நிலையை ஊர்மக்கள் கண்டுகளிப்பதற்கு
குபீர் குபீர் என்று சன்னல்சத்தங்கள்
படையெடுப்பு ஆரம்பித்ததற்கான
ஆரம்ப மணியாய் கேட்கிறது
ஒரு கையில் துப்பாக்கி
மறுகையில் என் பணமுடிப்பு
பணத்தைப்புரட்டி வங்கியில்
வைப்பு செய்வதிற்கில்லை
முடியப்போகும் என் விதிக்கு
முற்றுப்புள்ளி வைப்பதற்கு முன்
வித்திட்டு என்னை பெருவிருட்சமாக்கிய
என் அம்மா உன் முகத்தை
தவமாய் ஒருமுறை
நேரில் காணாத பாவி நான்
உன் புகைப்படத்தை கண்ணீரால்
கழுவி பாவ விமோர்ச்சனம் பெறுகின்றேன்
தலைப்பிள்ளையாய் தந்தை உயிரை துறந்தபின்
வீட்டை மட்டுமல்ல நாட்டையும் பத்திரமாய் பாதுகாத்திட
என் தங்கைமார்போல் பல பெண்கள்
இரவில் அச்சமின்றி தூங்கிடவும்
பகலில் தைரியமாய்
வெளி உலகைக்கண்டிடவும்
என் கைகள் கறைபடிந்திட
இளவயதில் ஆயிதம் தரிக்க
உன் கண்ணீரால் என்னை
வழிமறித்தாய்
பாசம் என்னைக்கட்டியபோதும்
பலமுறை முயன்றுதான்
உன்னிடமிருந்து விடைபெற்றேன்
இருந்தபோதிலும் உன் கைபட்ட
ஆறியகஞ்சி வாசனை
என்னை உன் இடத்திற்கு
அழைக்குதம்மா
சூரியக்கதிர் படர்கிறதம்மா
வீட்டை இனி நன்கு நீ
திறந்து வைக்கலாம்
அலுமாரியில் அடுக்கிவைத்த
புதிய துணிகளையும்
அணிந்துகொண்டு கோயிலுக்குச் செல்லலாம்
போய்வரும் வழியில் தரைமட்டமாகி இருக்கும்
அந்தப்பெரிய மைதானமருகே சென்றால்
மகனே என ஒருமுறை அழுது
வாய்கரிசியும் போட்டுவிட்டுச் செல்
என் உடலை நீ கண்டுபிடிக்க
சிரமம் கொள்வாய் என நன்கு அறிவேன்
அம்மா உன் புகைப்படம் இறுகிப்பற்றியநிலையில்
தலையற்ற முண்டம் இருக்கும்
அதற்கு பிண்டம் வைத்து ஈமைக்கிரியைகள்
செய்வதற்கு வீணாய் அலையாதே
அதை வாரியணைத்து மகனே என
ஒருமுறை மட்டும் அழுதிடம்மா

கோணிப்பை


என்னைக்கூட தலைப்பாக எடுத்து
நேரத்தை செலவிட்டு
கவிதை படைப்பீர்கள் என
கனவிலும் நான் கண்டதில்லை
உயிரற்ற பொருள்தான் நான்
இருந்தாலும் இதயமுள்ளவர்கள் சற்று
எனக்காக ஒரு நிமிடம் ஒதுக்குங்கள்
ஆதிகாலத்தில் மனிதனின் திறமையால்
மெல்லிய சணற்கையிறுகளால்
பிறப்பெடுத்து கோணிப்பை என்றும்
பெயர் பெற்றேன்
இளவயதில் நான் துடிப்பாக
இருந்ததால் தான் என்னவோ
பொருட்களைப் பத்திரமாகப் பாதுகாக்க
என்னுள் வைத்து என் கழுத்தை
இறுக கட்டிவிடுவார்கள்
மூச்சுத் திணறலாக இருந்தாலும்
என்மேல் மனிதர்கள் கொண்ட
நம்பிக்கைக்காக வீரமாக சகித்துக்கொள்வேன்
சற்று நான் நடுத்தர வயதை அடையவே
வீட்டை அலங்கரிக்கவும்
சுவரில் உள்ள ஓட்டை உடைசல்களை மறைக்கவும்
பலர் என்னைப் பங்குபோட்டார்கள்
வீதியில் படுக்கும் ஏழைகளுக்கு
கதகதப்பளிக்கும் கம்பளி வீடும் நான் தான்
என் கிழப்பருவத்திற்கூட
கால்களைச் சுத்தம் செய்யும் பொறுப்பளித்து
வாசற்படி அருகே என்னை விட்டுவிடுவார்கள்
நீங்கள் எத்தனை பருமனாக
இருந்தாலும் என்னை நம்பி
வாழ்வாதாரத்தை நடத்தும்
குடும்பங்களை எண்ணி
பொறுமை காத்திடுவேன்
இப்படியே என் சந்ததியினர்
வாழ்ந்து கொண்டிருக்கும்
இந்த பூமியில்
நவீன மார்க்கம் தழுவும் இந்த மனிதர்கள்
எங்களைத்திரும்பிக்கூட பார்ப்பதில்லை
அவர்களுக்கு எம்மவர்களைக் கண்டால்
வெட்கம் போல இருக்கிறது.
நான் சுயநலவாதி அல்ல
என்னை நம்பியவர்களை
கைவிடக்கூடாது என சிறு நல்ல உள்ளம்தான்
ஏதோ ஒருவகையிலாவது
என்னைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
அல்லது எங்களை நம்பி வயிற்றை நிரப்பும்
ஏழைகளுக்கு ஏதாவது வழியைக்காட்டுங்கள்
இப்படிக்கு உங்கள் தாத்தா வீட்டில்
ஒருமூலையில் முடங்கிக்கிடக்கும்
வயது முதிர்ந்த
கோணிப்பை

Tuesday, February 26, 2019

எப்படி உன்னைத் திருமணம் செய்வது?



காலையில் என்னை விழிக்கச் செய்வது
நீ அனுப்பும் குட்மோர்னிங் குறுந்தகவல் தான்
தூக்கத்தில் நானும் அதற்கு பதில் 
அளித்துவிட்டு என் வேலைகளைப் பார்க்க
புறப்பட்டுவிடுவேன்
தினமும் என்னுடன் உரையாடினாலும்
மாறாத சில கேள்விகளை நீயும் கேட்பாய்
சலிக்காமல் நானும் அதற்குப் பதில் சொல்வேன்
தினமும் வார்த்தையால் விருந்துபசாரம்
செய்திடுவாய் ஆங்காங்கே நான்
இரசிக்கும்படி என்னை வர்ணித்தும்விடுவாய்
கண்ணியமாக என்னுடன் நடந்திடுவாய்
உன் வேண்டுதல்களை என் அனுமதிபெற்றே
செய்திடுவாய் என் இன்பதுன்பங்களில்
தவறாமல் பங்கெடுப்பாய்
என்னைத் தாலாட்டும் இனிய மெல்லிசையாகவும்
மலர்ந்திடுவாய்
நேரடி சந்திப்புக்களை மேற்கொள்ளவே
தவமாய் தவமிருந்திடுவாய்
வேண்டாம் எனக் கடிந்து கொண்டாலும்
சிறுபிள்ளைபோல் அதை மறந்திடுவாய்
வேலைப்பழுவில் சாய்மனை நாட்காலியில்
நீ சரிந்த போதும் என் நலன் விசாரிப்பதில்
நீ இளைப்பாறுவாய்
இத்தனை அழகாய் ஒரு ஆணால்
பாதுகாப்பான உலகமொன்றை உணரமுடியுமா
என வியப்பில் பலமுறை ஆழ்த்தியுள்ளாய்
கடைசியில் என்னைத் தூக்கிவாரிப்போடுவதுபோல்
ஒன்று கேட்டாய்
அது வேறு ஒன்றுமில்லை
எனக்கும் உனக்குமான திருமணம் தான்
என்னிடம் இருக்கும் குறைகளைக் கூறு
என்னை மாற்றிக்கொள்கின்றேன்
என மன்றாடுகின்றாய்
உன் நடை உடை பாவனைகளை
என் விருப்பப்படியே மாற்றிவிட்டாய்
இருந்தும் ஏன் என்னை நிராகரிக்கின்றாய்
எனக் கேள்வி கேட்கின்றாய்
இதோ உனக்கான ஓர் பதில்
அறுதியும் உறுதியுமாகச் சொல்கின்றேன்
திருமணம் என்பதில் என் மனமும்
உன் மனமும் ஒன்றாய் ஓர் மனதாய் இணையவேண்டும்
இணைந்த பின்பே இந்தபந்தம்
நீடித்து உயிர்வாழும்
உன் மனதோ என் இடத்தே நீ வைத்தாய்
என் மனதோ என்னிடமில்லை
அதை வேறொருவனிடம் தொலைத்துவிட்டு
இதயமற்றவளாய்த் திரிகின்றேன்
அதில் எப்படி நீயும் குடிகொள்வாய்?
மனம் இல்லாத ஜடம் நான்
இனி எப்படி உன்னைத் திருமணம் செய்வேன்?

Tuesday, January 29, 2019

மீண்டும் தற்கொலை செய்


தலைப்புச் செய்திகளாகப் பரவிய
தற்கொலை விபரம் நடுப்பக்கத்தில்
சினிமா கிசுகிசுக்களாக
மாறியதன் கொடுமைதான் என்னவோ?
தவறிழைத்து தூக்குமேடைகாணும்
குற்றவாளிக்குக்கூட கடைசியாசையாக
அவ்வுலகில் வாழ்ந்துவிட்டுப்போக
சந்தர்ப்பம் கிடைக்காதா என ஏங்கிடும் வேளையில்
யாரோ செய்த தவறுக்கு உன்னை நீயே
தண்டனை கொடுத்துக்கொள்கிறாயே
உன் கடைசி ஆசைதான் என்னவோ?
குண்டூசி தொலைந்ததால் கயிற்றில்
தொங்கி உயிரை மாய்த்தான் என
விநோதமாய் வியப்பூட்டிடும் செய்திகளை
நாளை உண்மைக்காரணமாகக் கொண்டு
உயிரைத் துறக்கக்கூடிய சமுதாயமாய்
மாறிவருவதன் காரணம்தான் என்னவோ?
வெல்வதற்கு எளிதாய்
படைக்கப்பட்ட வாழ்க்கையை
தெளிவற்றபோர்வையில் நிதானம் குலைந்து
எடுக்கும் முடிவுகளை எதிர்கொள்ளத்
துணிவின்றி ஒரு முழம் கயிற்றுக்கு
வீணாக விளம்பரம் செய்துகொடுக்கும்
இளவயது மரணங்களின் பிண்ணனிதான் என்னவோ?
தாய்மடிசுகமாய் தினம் இருக்க
ஒருமுறை கதறியழுது கண்ணீர்மல்க
உன் துயர் நீ கூற முன்பே தாய்மனம்
அதற்கு மருந்து செய்யும் மாயம்தான் என்னவோ?
உயிராய் நேசிக்கையில் கற்பனையில்
மிதக்கும் சுகம்போதாமல் உயிர்துறந்து
விண்ணில் மிதக்கும் வெற்றுடலோ
மண்ணில் நித்திரை செய்யும்
உற்றார் உறவினர் வருகைக்கு
திட்டமிட்டு செயல்பட்ட விதம்தான் என்னவோ?
உடலில் ஓடும் நரம்பு நாளங்கள்
குருதிக்கலன்களின் எண்ணிக்கைகள்
சிறுநீரகங்கள் சுவாசப்பைகள்
புலனற்று செயலிழக்க
மேற்கொள்ளும் சத்திரசிகிச்சைகளும் மருந்துப்பாவனைகளும்
நல்வழியில் உன் பாதையை அமைத்துச்சென்றால்
வைத்தியனாய் பிற உயிர்களையும் வாழ வைப்பாய் என
பாவியவள் உன் அன்னை கண்ட கனவுகள் பலிக்கக்கூடாதென
தன்னடக்கம் கொண்டு உன் உடல் தகனம்
செய்யவே நீ செய்த செயல்கள் தான் என்னவோ?
மரணம் எனும் கணிதக்கேள்விக்கு
உயிர்நீப்பென ஒரு விடை இருக்க
எளியமுறையால் இயற்கையாய் காலம் கணக்கை
முடிக்க முன்பே
பல கடினமான படிகளை செயற்கைமுறையில்
நீ விடை காண்கையில் உன் பதில்
ஏற்றுக்கொள்ளப்படுமென நம்பும்
உன் அப்பாவித்தனமான எண்ணம்தான் என்னவோ?
மறுபிறப்புக்கொண்டு இம்மண்ணில் மீண்டும்
பிறப்பெடுத்து உன்னைப் பெற்றவர்கள்
சிந்திய கண்ணீருக்கு
மாய்த்த உன் உயிர் மிகையாகாது என
அறிந்துகொண்டும் உன் காரணம் சரி எனில்
மீண்டும் தற்கொலைக்கு முயற்சி செய்.
அன்று உன் அகாலமரணத்திற்காக கண்ணீர்வடிக்க
நான் அங்கு இருப்பேன்

Saturday, January 26, 2019

கை நழுவிப்போனது இந்த வருடம்


என்ன செய்வதென்று தெரியாமல் 
நுழைந்துவிட்டேன் 
என்னால் மீளப்பெறமுடியாமல் உள்ளது 
இந்த வருடத்தை
தெளிவான திட்டமும் இல்லை
எதிர்காலத்தை எண்ணிய தூரநோக்கும் இல்லை
கையில் நிறைவாய் காசும் இல்லை
இப்படியே கடந்து செல்ல சின்ன வயதும் இல்லை
சென்றதோ புதிய இடம் தான்
சந்தித்ததோ பல புதிய முகங்கள் தான்
மொழியிலும் பாரிய மாற்றம்
உணவுப் பழக்கங்களோ பரிதாபம்
அலக்களிப்புகளில் கடந்து சென்றன மூன்று மாதங்கள்
கட்டளைகளுக்கு அடிபணிந்து சென்றன
அடுத்த நான்கு மாதங்கள்
என் விருப்பத்தின் பெயரில் கடந்து சென்றன
அடுத்த ஐந்து மாதங்கள்
அதில் தான் புரிந்துகொண்டேன் பல
கிழிந்த திரைகளை
அன்பாய் பல குரல்கள் சாயம் பூசிக்கொண்டும்
கந்தர்வம் கொள்ள முகமூடி அணிந்துகொண்டும்
என் பொழுதைக் கழிக்க விட்டனர்
அவரவர் விருப்பத்தில்
இந்த ஐந்து மாதத்தை
அவர்களும் என்னைப்போல் தான் போல
தெளிவான திட்டமும் இல்லை
என் எதிர்காலத்தை எண்ணிய
தூரநோக்கும் இல்லை
அதனால்தான் என்னவோ அவர்கள் சாயம்
பழுப்பு நிறம் ஆகிற்று
தூக்க கலக்கமும் எனக்கில்லை
பிறர் சொல்லி செய்யும் சிந்தனையும்
எனக்கில்லை
என் ஆசைப்படி தான் விழுந்தேன்
அது அவர்கள் விரித்த சூழ்ச்சி வலை
இது ஒன்றும் எனக்குப் புதிதுமில்லை
அவர்கள் முகமூடி அணியவுமில்லை
அது அவர்கள் நிஜ முகம்தான்
அதை அறியாதது எந்தன் பிழையும் இல்லை
பரீட்சையும் நெருங்கியது என் புலன்களோ
வேறுதிசைக்கு என்னைக் கூட்டிச்சென்றது
பரீட்சைத்தாளும் கையில் கிடைத்தது
வினாக்களோ என்னை வினோதமாக
எள்ளி நகையாடியது
யாவும் நானறிந்த வினாக்கள் தான்
விடைத்தாளில் எங்கும் வினாக்குறிதான்
முன்போல் எதிலும் நாட்டமுமில்லை
பலதை எண்ணி இரவில் தூக்கமுமில்லை
அனைத்தையும் மாற்றியமைக்க
ஒரு காலக்கடிகாரம் வேண்டும்
அதில் நேரமுள்ளும் நிமிட முள்ளும்
உன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்
சில சந்தர்ப்பங்களை மாற்றியமைத்தால்
சிறப்பாக இருந்திருக்கும் இந்த வருடம்
என்னால் மீளப்பெற முடியாமல்
கை நழுவிப்போனது இந்த வருடம்

Thursday, November 8, 2018

காதலின் வர்ணம் தான் என்ன?


காதலின் வர்ணம் தான் என்ன?
உள்ளத்தால் தூய்மையாக யாசிப்பதால் 
வெள்ளைநிறம் கொடுத்திருப்பார்களோ? அல்லது
கடலிலும் ஆழமாய் நேசிக்கின்றேன் 
என வாக்குறுதி அளிப்பதால் 
நீல நிறம் கொடுத்திருப்பார்களோ? அல்லது
மனதார மங்களமாய் வாழ்க்கை ஆரம்பிக்க
இக்காதல் எனும் புரிதல் அவசியமென்பதால்
மஞ்சள் நிறம் கொடுத்திருப்பார்களோ? அல்லது
செய்வதறியாது தன்நிலை தொலைத்தோர்
அபாயகரமானது என எச்சரிக்கை விடுக்க
சிவப்பு நிறம் கொடுத்திருப்பார்களோ? அல்லது
பச்சிளம் காலத்திலும்
பருவமடையா வயதினிலும் தோன்றுவதால்
பச்சை நிறம் கொடுத்திருப்பார்களோ? அல்லது
துக்கத்தின் அடையாளமாய் துயர் பகிர
மதுச்சாலைகளிலும் புகையிலை வாசனையோடும்
கறுப்பு நிறம் கொடுத்திருப்பார்களோ? அல்லது
அட இந்தக்காலத்து காதலாவது கத்தரிக்காயாவது
என திட்டித்தீர்க்கும் பெரிசுகள்
ஊதா நிறம் கொடுத்திருப்பார்களோ?
காதலை உருவாக்கியவன் அதற்கு எந்த வர்ணம்
கொண்டு வானவில் வரைந்தானோ தெரியவில்லை
மாறாக தன்னைத் தொலைத்தவன்
கொடுத்த வர்ணம் தான் கண்ணீர்

Monday, October 22, 2018

யாருமற்ற வாழ்க்கையை வாழ பழகிக்கொள்வீர்கள்


காதல் கொண்டு ஆசையாய் கட்டிய மனைவி
கடைசிவரை உறுதுணையாய் உன்னைக் காப்பேன் என
அக்கினி குண்டம் வலம் வந்தேன்
செய்த சத்தியம் பொய்யாய்ப் போய்விட
உன் பெற்றோருக்கு நான் அளித்த வாக்கு மங்கும் படி
என் உயிர் இவ்வுலகம் விட்டு போகப் போகிறது
எண்ணும் எழுத்தும் கண்ணாய்
பிள்ளைகள் நால்வரைப் பெற்றேன்
கல்வி எனும் கடலில் கரைதாண்டி
பட்டம் பெற ஆனந்தமாய் நானும் கண்ணீர் மல்க
கனவுகள் தான் பல நெஞ்சில் சுமந்தேன்
நீங்கள் வாங்கும் முதல் மாத சம்பளத்தில்
வேண்டுதல்கள் பல நிறைவேற்றிட தெய்வம்
அருள்புரிய வேண்டி நின்றேன்
நல்ல இடமாய் மாமா என அழைத்தாலும்
பெறாமக்களாய் என் அன்பைச் சொரிந்திட
ஊர்ஊராய் ஊர்வலம் சொந்தங்களுடன் கூடியே
என் மக்களுக்கு கனவில் திருமணமும் நிகழ்த்தி விட்டேன்
எத்தனை கடை தான் ஏறி இறங்கினாலும் பிஞ்சு மொழியால்
தாத்தா இன்னும் ஒன்று வாங்கி தாங்க என்று சொல்லும்
பேரக்குழந்தைகளையும் ஒருமுறையாவது தூக்கி சுமந்துவிடுவேன்
இப்படி ஆசைகளை மூட்டை கட்டி வயதுபோன நாற்காலியில்
இளம் வயதோடு போகப் போகும் என் உயிருக்காய் நான்
நிமிடங்களை எண்ணி களைப்புற்று விட்டேன்
பிறக்கையில் மரணத்தின் விதையை நாட்டி விட்டு
இம்மண்ணுலகில் ஏன் பிற உயிர்களோடு பந்தங்களை
ஏற்படுத்துகின்றோம்
அவர்களின் நீங்காத துயர் மூலமும் நினைவு வரும் வேளையில் கண்ணீர்த்துளி மூலமும் பிறப்பெடுப்பதற்கா?
இறப்பு என்பது எத்தகைய
கொடியது என இறக்கும் தறுவாயில்
துடித்த இதயங்களிடம் கேட்டுப்பாருங்கள்
யாருமற்ற வாழ்க்கையை வாழ பழகிக்கொள்வீர்கள்

Thursday, October 18, 2018

கலியுகத்திலும் இன்னும் தசரதர்கள்


எழில் கொஞ்சும் அன்னம் அது
உன் நடையழகை சாயல் கொண்டு
மெல்ல வர அதனழகில் காதல் வயப்பட்டு
அந்நாளில் பெண் மேல் காதல் புரிந்தானொருவன்
விரிந்த செந்தாமரை இதழ் மென்மையில்
இடையழகை வர்ணித்து ஒப்பீடுகளில்
வரைமுறை பேணி பெண் மேல் காதல் புரிந்தானொருவன்
சிவதனுசை வில்லொடித்து மணமாலை மணமகன்
சூட்டிட சுயம்வர வேளையில் வீரமகன் வதனம் கண்டு
வெட்கத்தால் அவள் சிவந்திட வீரம் கொண்டு
வில்லொடித்து பெண் மேல் காதல் புரிந்தானொருவன்
இப்படி இதிகாசங்களிலும் புராணங்களிலும் காதல் கற்பு
நெறி தவறாமல் உரைத்து நின்ற பெருமான்களே
உம்போல் உரைப்பதற்குப் பலர் இருந்தும் கேளாய்ச் சமூகமாய் மாறிவிட்டார்கள் எம்மவர்கள்
விதைத்தவன் நன்கு செழித்து வளரந்த பயிரை உரிய முறையில் அறுவடை செய்யக்காத்திருக்கும் வேளை
தீ மூட்டி அதில் குளிர்காய்ந்து கருக வைத்த பாவிகள்
வாழும் உலகம் இது
பாவம் நாளை அவர்கள் விதைக்கையில் அவர்களின் பயிர்களுக்கும் இதே கதி என்பதை மறந்துவிட்டார்கள்
இராமவதாராம் முடிந்தும் கலியுகத்திலும் இன்னும் தசரதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்
இதயத்தால் காதல் கற்பற்ற கன்னியர்கள் நினைவில்
நீங்காச் சிலை எழுத்துப்போல

Saturday, October 13, 2018

அம்மா எனக்கோர் மாப்பிள்ளை பாருங்கள்


அம்மா எனக்கோர் மாப்பிள்ளை பாருங்கள்
திருமணவயதை ஓரளவு அடைந்துவிட்டேன்
உங்கள் கைப்பக்குவத்தில் அறுசுவை விருந்தளிப்பேன்
இல்லத்தரசிக்கேற்ப ஓடியாடி உங்கள் பெயரைக் காப்பாற்ற 
மாமியார் வீட்டில் வேலை செய்வேன்
சடங்கு சம்பிரதாயங்களைக் கொஞ்சம் சொல்லித்தாருங்கள் போகும் இடத்தில் கடைப்பிடிக்க
மாப்பிள்ளை அவர் உங்கள் விருப்பம்
உங்களின் எந்தத் தெரிவையும் நான் ஏற்றுக்கொள்வேன்
உயரம் வயது நிறம் குணம் அழகு படிப்பு பதவி பணம் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை
ஏனெனில் பார்த்துப் பார்த்து நான் தேடிய தேடலில் ஏமாற்றப்பட்டுவிட்டேன்
அவன் நிறம் சற்று கறுப்பு அதில் எனக்கோர் விருப்பு
அவன் வார்த்தைகளால் மட்டுமல்ல அவ்வப்போது பார்வைகளாலும் என்னை வளைத்துவிடுவான்
எனக்கேற்ற உயரம்தான் அதை அளந்துபார்க்க அருகில் பலமுறை நின்றிருப்பேன்
அவன் மொழி தமிழ்தான் ஆதலால் தமிழ் மேல் அதீத பற்றுக் கொண்டேன்
அவன் குணம் குழந்தைத்தனமானதுதான் என் கோபத்திலும் இரசித்திருந்தேன்
அவனுடனான நேரம் எல்லாம் புன்னகை மட்டும்தான் அதனால் செல்லச்சண்டை போட்டு வாக்குவாதின் பின் அவன் சமாதானத்திற்காய் காத்திருந்தேன்
இத்தனையுமாய் அவனை நான் இரசிக்கையில் இரசிப்பதற்கு மட்டும் என்னை தேர்ந்தெடுத்து
பின் இரசிக்கப்பட்ட பொருளாக மாற்றிவிட்டான்
இத்தனை காலம் பொறுமையாய் இருந்து தேர்ந்தெடுத்த தெரிவு என்னை ஏளமாய் பார்க்கையில் உங்கள் தெரிவு எதுவாக இருந்தாலும் மனமில்லாத நிலையில் ஏற்றுக்கொள்கின்றேன் அம்மா

உன் வருகைக்காக காத்திருக்கும் நான்


எத்தனை தவங்கள்
எத்தனை மன்றாடல்கள்
எத்தனை கெஞ்சல்களின் பின் 
நீ என்னிடம் வந்து சேர்ந்தாய்
அத்தனையும் பொய்யாக்கியது போல மறுபடியும்
என்னை உதாசீனப்படுத்திவிட்டாய்
இருவரின் கைகளும் கோர்க்கப்பட்டு
கனவுகள் பிணைக்கப்பட்டு
வார்த்தைகள் உரசப்பட்டு
எம் எதிர்காலத்தை வர்ணம் தீட்டினோமே
யாரும் வரையாத கோலமாய் எம் இருவரின் வாழ்க்கையை சித்தரிக்க
அதை அலங்கோலமாக்கியது ஏனோ?
நிழலாய் வேண்டாம் ஒளியுடன் போய்விடும்
கனவாய் வேண்டாம் துயில் எழுந்தபின் கலைந்திடும்
உயிராய் வேண்டாம் உடல் இறந்தபின் தொலைந்திடும்
மணமாய் வேண்டாம் மலர் வாடியபின் உறங்கிடும்
சுவையாய் வேண்டாம் புலன் அற்றதும் மறத்துப்போய்விடும்
காற்றாய் வேண்டாம் பூமியோடு செறிவு குறைந்திடும்
திங்களாய் வேண்டாம் ஞாயிறு வந்திடும்
நீராய் வேண்டாம் நிலை மாறிடும்
இரயிலாய் வேண்டாம் தடம் புரண்டிடும்
கால் தடங்களாய் வேண்டாம் பாதை மாறிடும்
எதுவாய் என்னை நீ இருக்கச் சொல்கின்றாயோ
உன்னைப் பிரியாவண்ணம் உன்னைத் தொடர
புதிதாக ஒன்றைக் கண்டு பிடித்து வந்திடு
வரமாட்டாய் என அறிந்தும் உன் வருகைக்காக காத்திருக்கும் நான்

Friday, October 12, 2018

மாற்றாள் காதலன்

ஆண்மகனே!
உன்னிடம் வேண்டுதல் விடுக்கவும் கோரிக்கை வைக்கவும்
என்னிடம் தகுதி இல்லை
ஆனால் ஒன்றைக் கூறுகின்றேன் சற்று
செவிமடுத்தால் போதும்
என்றொரு பெண்ணை நீ உள்ளத்தாலும் உடலாலும்
நேசிக்கத் தொடங்கினாயோ
அன்றே அவள் மனதில் தாழி கட்டா கணவன் எனும்
மதிப்பை அடைந்துவிட்டாய்
அதன்பின் அவள் அழைப்புகளும் நடத்தைகளும்
உன்னைத் தாங்கிடும் வண்ணமே இருக்கும்
நீ கவலை கொண்டால் அவள் கண்ணீர் வடிப்பாள்
நீ கோபம் கொண்டால் அவள் பணிந்து போவாள்
நீ பசி கொண்டால் அவள் ஆகாரமாகுவாள்
நீ சோர்வு கொண்டால் அவள் புத்துணர்வாக்குவாள்
இப்படி உனாக்காக தன்நிலையை மாற்றிக் கொள்வாள்
ஆனால் உன்னால் உருவாகும் பந்தத்தில் ஏமாற்றம் வந்தால் அதைத் தாங்கமாட்டாள்
பெண்களின் குணநிலையில் இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, உறைப்பு, உவர்ப்பு எனப் பாகுபாடு உண்டுதான்
ஆனால் உள்ளத்தில் உனக்காக உள்ள அன்பு மட்டும் என்றும் ஒன்றுதான்
தெரிவு செய்வதில் நிதானம் கொள் அல்லது தெரிவினை தள்ளிவை
புதியன புகுதலிலும் பழையன கழிவதிலும் காதலைப் பிரயோகிக்காதே
உன் அன்னையை மதிக்காதவனாய் நீ இருக்கலாம்
உன் சகோதரிகளுக்கு பொறுப்பற்றவனாய் இருக்கலாம்
உன் காதலிக்கு ஏமாற்றுக்காரனாயும் இருக்கலாம்
ஆனால் நாளை பிறக்க இருக்கும் உன் பெண்குழந்தைக்கு
உண்மையான தந்தையாய் இருப்பதை மட்டும் ஒரு கணம்
சிந்தித்துப்பார்
ஆணின் மனநிலையைப் புரிந்துகொள்ளும் உனக்குக்கிடைத்த வரமாய் உன் காதலியைப் போற்றுவாய்
மாற்றொரு தெரிவினை மேற்கொள்ள சந்நர்ப்பம் கொடுக்காமல்

Thursday, October 11, 2018

புறாக்குஞ்சு




அழகியதொரு புறாக்கூடு 
என் அப்பா தேடித்தேடி எனக்காய் கட்டிய கூடு
அம்மாவும் நானும் என் உடன்பிறப்புக்களும் வாழ
சிக்கனமாய் சேமித்த உழைப்பில் நெய்யப்பட்ட கூடு
பலத்த காற்று இல்லை இல்லை சிறு சூறாவளி வீச 
சிறகு விரித்து காத்திருந்தார் என் அப்பா
கிடைத்த இரையை எமக்கு பகிரவே உம் உழைப்பு போதுமாயிற்று அப்பா
இருந்தும் சேமித்து உமக்கும் தந்தாள் என் அம்மா
என் உடன் பிறப்புக்கள் முட்டையை விட்டு வெளியே
வந்து விட்டார்கள் நான் வெளிவர நாளாகும் அப்பா
கருவிலிருந்து உம்மை நேசிக்கின்றேன் அப்பா
இந்த முறை சூறாவளி இல்லை கொடிய விஷப்பாம்பு
உம்மைத் தீண்ட கவனமாக இரு மகளே எனக் கூறி உயிர் மாய்த்தீர் அப்பா
அம்மா இம்முறை எம்மீது உம் கவனமும் அக்கறையும் கூடிடவே அப்பாவின் இடத்தில் தந்தையானவள் ஆகினாள்
மற்றைய குஞ்சுகள் வளர்ந்துவிட்டன இப்பொழுது இரை தேடச் சென்றுவிட்டன
அவர்களுக்கும் நம் போன்ற கூடு அமைய நினைத்தீர்கள் ஒவ்வொரு திசையில் அமைத்துக் கொண்டார்கள்
கடைசிக் குஞ்சு நான் முட்டையை விட்டு வந்துவிட்டேன்
பெரிய உலகம்தான் சுற்றிவரக் கழுகுகள் தான் இடை இடையே என்னைப் போன்ற புறாக்குஞ்சுகள் பறப்பதற்கு தடுமாறிடவே துணையாக நிற்கின்றேன் கருவினிலே நான் கொண்ட அனுபவத்தில்
அம்மா நீ என்னையும் புதிய கூட்டிற்கு செல்லத் தூண்டுகின்றாய்
உன்னைவிட புதிய உலகம் கண்டுவிட்டேன் அதில் பிடிப்பில்லை
அப்பாவையும் உன்னையும் போல் கூட்டில் வாழத் தெரியாது
இங்கு நம் போல் புறாக்களுக்கு பதிலாக கழுகுகளே இருக்கின்றன.
நம் கூட்டில் உன் சிறகுகளுக்கிடையில் கதகதப்பில் வாழ ஆசைப்படுகின்றேன் இந்த வளர்ந்த புறாக்குஞ்சு

💔 கருகிய மலரின் காதல் 💔


மண்மீது காதல் கொண்டு 
அதில் விதை ஒன்று விதைத்தாய்
தினமும் நீர் ஊற்றி
தவறாமல் ஓரிரு முறை பசளையிட்டு
இதமான கதகதப்பும் விதை சுவாசிக்க காற்றும்
உன் பார்வையால் வெளிச்சமும் தந்து

நாளுக்கு நாள் காத்து நின்றாய்

உன் ஆசைபோல் செடியும் வளர்ந்தது

அதில் மலரும் மலர்ந்தது
இத்தனை பாடுபட்டு உயிர்பித்த உன்னைத்
தேடித் தேடி இம்மலர் வாடத்தொடங்கியது
மலருக்கு தாகம் எடுக்க அதை தண்ணீர் ஊற்றி தணிக்க நீ இல்லை
நோயினால் வாட அதை அரவணைக்க இன்று நீ இல்லை
இதழோ கலையிழந்து போக
புத்துணர்வோ பூச்சியமாக
வண்டு தேடிய நறுமணம் உயிர்பற்றுப் போக
வண்ணமோ வலு இழந்து போக
நாட்களும் கடந்து போக வாழ முடியாத மலரோ செடியின் வேருடன் கருகிப் போக ஐயோ எனப் பரிதாபமடைய நிறைவாய் நீ அங்கும் இல்லை
எங்குதான் சென்றுவிட்டாய்
மலரோ மடிந்தது மண்ணோ இனி தரிசு நிலம் ஆயிற்று
இதற்குத்தான் இத்தனை அவசரம் கொண்டாயா?

💔 Renu 💔











நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...