Sunday, March 10, 2019

அம்மா உன் புகைப்படம்


தூசும் சாம்பலும் படிந்த 
காட்சட்டையும் சேட்டும்
இடுப்பைவிட்டு வழுகிவிடாமல் இறுக்கமாய் வைத்திருக்கும்
அறுந்து தொங்கும் அப்பாவின் இடுப்புப்பட்டி
வெயிற்சூட்டிலும் சுள் என்று 
சுடுகிறதம்மா தலைக்கவசம்
அதை கழற்றிவைத்துவிட்டால்
போய்விடும் என்தேசம்
டிக் டிக் டிக் உடன்
என் இதயமும் சேர்ந்து
ஒவ்வொரு நொடிக்கும் துடித்துக்கொண்டிருக்கிறது
மூச்சு விட முடியவில்லையம்மா
சுற்றி எங்கும் மணல் மூட்டைகள்
இடையே தெரியும் நீக்கலுக்குள்
துப்பாக்கி முனைகள்
இரவுபகல் தெரியவில்லை
பசி வயிற்றைப் பதப்படுத்தி
கண்களை செருக்கிக்கொண்டது
இருந்தும் விழிப்புடன் இருக்கின்றேன்
உதிக்கின்ற சூரியக்கதிர்
என்மீது படுமென்றில்லை
என் தாய்க்கொடி காற்றில்
பறக்கும் போது கம்பீரமாக ஆதிக்கமற்ற
நிலையை ஊர்மக்கள் கண்டுகளிப்பதற்கு
குபீர் குபீர் என்று சன்னல்சத்தங்கள்
படையெடுப்பு ஆரம்பித்ததற்கான
ஆரம்ப மணியாய் கேட்கிறது
ஒரு கையில் துப்பாக்கி
மறுகையில் என் பணமுடிப்பு
பணத்தைப்புரட்டி வங்கியில்
வைப்பு செய்வதிற்கில்லை
முடியப்போகும் என் விதிக்கு
முற்றுப்புள்ளி வைப்பதற்கு முன்
வித்திட்டு என்னை பெருவிருட்சமாக்கிய
என் அம்மா உன் முகத்தை
தவமாய் ஒருமுறை
நேரில் காணாத பாவி நான்
உன் புகைப்படத்தை கண்ணீரால்
கழுவி பாவ விமோர்ச்சனம் பெறுகின்றேன்
தலைப்பிள்ளையாய் தந்தை உயிரை துறந்தபின்
வீட்டை மட்டுமல்ல நாட்டையும் பத்திரமாய் பாதுகாத்திட
என் தங்கைமார்போல் பல பெண்கள்
இரவில் அச்சமின்றி தூங்கிடவும்
பகலில் தைரியமாய்
வெளி உலகைக்கண்டிடவும்
என் கைகள் கறைபடிந்திட
இளவயதில் ஆயிதம் தரிக்க
உன் கண்ணீரால் என்னை
வழிமறித்தாய்
பாசம் என்னைக்கட்டியபோதும்
பலமுறை முயன்றுதான்
உன்னிடமிருந்து விடைபெற்றேன்
இருந்தபோதிலும் உன் கைபட்ட
ஆறியகஞ்சி வாசனை
என்னை உன் இடத்திற்கு
அழைக்குதம்மா
சூரியக்கதிர் படர்கிறதம்மா
வீட்டை இனி நன்கு நீ
திறந்து வைக்கலாம்
அலுமாரியில் அடுக்கிவைத்த
புதிய துணிகளையும்
அணிந்துகொண்டு கோயிலுக்குச் செல்லலாம்
போய்வரும் வழியில் தரைமட்டமாகி இருக்கும்
அந்தப்பெரிய மைதானமருகே சென்றால்
மகனே என ஒருமுறை அழுது
வாய்கரிசியும் போட்டுவிட்டுச் செல்
என் உடலை நீ கண்டுபிடிக்க
சிரமம் கொள்வாய் என நன்கு அறிவேன்
அம்மா உன் புகைப்படம் இறுகிப்பற்றியநிலையில்
தலையற்ற முண்டம் இருக்கும்
அதற்கு பிண்டம் வைத்து ஈமைக்கிரியைகள்
செய்வதற்கு வீணாய் அலையாதே
அதை வாரியணைத்து மகனே என
ஒருமுறை மட்டும் அழுதிடம்மா

No comments:

Post a Comment

Your concern is appreciable. Thank you for the review

பெண்ணுக்குள் தேவதை

  பெண்ணுக்குள் புதிதாய் ஓர்  தேவதை பிறக்கின்றாள் அவள் வர்ணமற்றவள் அவள் உருவமற்றவள் அவள் உணர்வுகளால் வர்ணம் கொண்டு உணர்ச்சிகளாய் உருவம் கொள்க...