Tuesday, May 5, 2020

பாரதிகண்ணம்மா




பரந்த என்  சொப்பனங்களுக்கு 
கணவனே கதி என்று கடிவாளமிடாது
சிறகுகள்  நீட்டி வானுயறப்பறந்து 
எல்லை தாண்டி என் மமதையில் பங்கு 
கொள்ளும் வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்


எல்லையில்லா என் பயணங்களில் 
பிரயாணியாய் இல்லாமல் துணையாளியாய் 
எடுக்கும் முடிவுகளில் தீர்கமான தீர்ப்பளித்து
வழுக்களை இதமாய் எடுத்துரைக்கும் வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்


முதல் எழுத்துடன் தலை எழுத்துவரை
வீட்டின் தலைவன் என அங்கீகாரம் பெற்றும்
அடிக்கொருமுறை இல்லாவிடினும் அத்தி பூத்தாற்போல் 
என் ஆசையும் செவிசாய்த்து
நான் இல்லை நாம் என்று புரிந்துணர்வான 
இல்ல வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்


சலனம் ஏற்படும் வேளை எல்லாம்
சந்நிதியான் வழி செல்லாது
கற்புடமை அது பெண்ணிற்குமட்டுமன்று
ஆணிற்கும் தான் என்ற இலக்கணம் கொண்டு
இலக்கிய வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்


கோபக்கனல் கசியும் வேதனையில் உன் முகம் 
வாடும் வேளை எல்லாம் என் மடியும் என் கூச்சமற்ற தழுவலும் 
உன்னைத் தாங்கிக்கொள்ளுமென்பதை
ஒவ்வோர் ஆறுதலின் பின் உட்சாகம் கொண்டு மது சூது 
ஆரோக்கியத்தின் கேடு என்ற வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்


ஆடம்பரத்தால் ஆசை ஏற
ஆசையினால் மோகம் ஏற
மோகத்தினால் அனைத்தும் இழக்கும் நிலை ஆக
எளிமையான இனிமை இல்லறத்தில் தான்
நிம்மதி கொள்ள அன்பின் வித்திடும் வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்


நாவின் சுவைக்காய் மதி மயங்கி கலப்படமும்
விலங்கொழிக்கும் பாட்ஷாணமும் வெண்ணெய் தடவி 
கண்ணீர்கும் பல ஆகாரம் எதிலும் நாட்டம் கொள்ளாது 
மனையாளின் அறுசுவையில் அனுமனின் பலம் பெற்று 
கங்கை மாதா தூய்மை பெற்று 
அன்னபூரணி ஆசியுடன் சுகம் பெறும் வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்


இராமனைப்போல் வேள்வித்தீயில் விளக்கம் கேட்க 
அதில் விழுந்து விடைகொடுக்கவும் 
யுதிஸ்டன் போல் சூதில் மங்கையை 
பணயம் வைத்து விளையாடவும் 
பெண்ணை துயரில் தள்ளாது பச்சைமரம் எரிந்தால் என்ன 
எரியாவிடின் என்ன இவள் என்றும் என் பத்தினிதான் 
என்ற நன்மதிப்பால் அலங்கரிக்கும் வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்

No comments:

Post a Comment

Your concern is appreciable. Thank you for the review

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...