Wednesday, January 26, 2022

பிரியாதே


 

ஒரு கணம் ஒரு நொடியும் 

பிரிந்து போகாதே

என் உயிரே நீ பிரிந்தால் 

நான் வெறும் பிணம்தான் 

தெரிந்தும் போகாதே


மறு கணம் மறு நொடியே 

வந்து சேர்ந்து கொள்வாயோ

என் உயிரே நீ இணைந்தால் 

நான் மறுஜென்மம் கொள்வேன்

அறிந்தும் சேராயோ


கனவினிலும் கூட கலங்கிவிடாதே

கடலினை விட்டுத்தான் அலைகள் ஓயாதே

சிரிக்கின்ற உன் முகத்தை தினம் காணத்தான்

கனவினிலும் கறைகள் படிய நான் விடமாட்டேனே


நினைவுகளைக் கட்டி கூண்டில் போடாதே

நிஜத்தினை விட்டு நிழலும் பிரியாதே

விரலோடு விரல் சேர்ந்து கைகோர்க்கத்தான்

விதியோடு போராடி நான் தோற்கமாட்டேனே


தடுமாறும் நேரம் தலை சாய்த்திடவா

தோலோடு ஒருகுழந்தையென நான் தாங்கிடவா

மடிமீது தாலாட்டு நான் பாடிடவா

விரலோடு பலகதைகள் நான் பேசிடவா

மனதோடு பல சோகம் எல்லாம் கரைத்திட

மனம் தேடும் தேடல் நீ மட்டும் போதும்


சந்திப்போமா


 

யாருமற்ற வேளையில் சாலையின் ஒரு ஓரமாய்

வாடைக்காற்றைக் கொஞ்சம் கடன்வாங்கி

ஏக்கம் பாதி தயக்கம் மீதி அனைத்தையும் தாண்டி

மீண்டும் புதிதாய் சந்திப்போமா


பாதி கண்களால் உன்னைப்பார்க்க நீயோ

மீதிக் கண்களால் என்னைப்பார்க்க நாமோ

பார்வைகளில் ஸ்தம்பித்துப்போன வார்த்தைகளை

மீண்டும் புதிதாய் பேசிக்கொள்வோமா


உன் மூச்சின் வெப்பம் என்னைத் தாக்க

என்னில் உன்னால் குளிர்காய்ச்சல் வீச

இடையே நழுவிச்சென்ற தென்றல் இருவரையும் ஈர்க்க

மீண்டும் புதிதாய் சுவாசிப்போமா


உன் தலைகோதிட என் கைவிரல்கள் ஏங்க

என் நகம் கடித்திட உன் பற்கள் கூச

இடையே மந்திரப்புன்னகை வேலிபோட

மீண்டும் புதிதாய் வெட்கம்கொள்வோமா


மழைத்துளியில் வெண்நிலவு நனைய

மணற்தரையோ அதைக்கையில் ஏந்த

முத்தக்குளியல் அங்கே அரங்கேற்ற

மீண்டும் புதிதாய் காதல்கொள்வோமா


கடிகாரமுள் தன்கடமையைச் செய்ய

கணப்பொழுதில் ஒரு யுகம் ஓடி மறைய

நிகழ்ந்தவையாவும் கண்ணீரில் கரைய

மீண்டும் ஒருமுறை சந்திப்போமா


Tuesday, January 25, 2022

நான்…நீ…


 

நான் சூடும் பூக்களில் எல்லாம் 

உன் வாசம் தேடுகிறேன்

பூக்களிலும் உன் வாசம் இன்றி

காகிதமலராய் தலைகுனியப் பார்கின்றேன்


நான் காணும் காட்சிகள் யாவும்

உன் நிழற்படமாய் காண்கின்றேன்

என் விரல்கள் தீண்டி தீண்டியே

உன் புகைப்படம் காற்றில் கரையக் காண்கின்றேன்


நான் காணும் கனவுகள் யாவும்

நீ வந்து போவதாய் ஏங்கினேன்

அதிகாலையில் நீ மறைந்துவிடுவாயென்று

உதித்துவிடாதே என்றே சூரியனை தினமும் வேண்டினேன்


நான் பேசும் வார்தைகளில் எல்லாம்

உன் பெயரையே உச்சரிக்கின்றேன்

மறந்தும் உன்னை மறவாமலிருக்க

இஷ்ட தெய்வங்களிடமெல்லாம் மன்றாடினேன்


நான் எழுதும் வரிகளெல்லாம் 

உன் கானம் தினம் பாடிடுதே

விடும் எழுத்துப் பிழைகளுக்குள்

உனக்கான கவிதை ஒன்று தீட்டுகின்றேன்


நான் கேட்கும் ஓசைகளிலெல்லாம்

உன் இதயத்துடிப்பாய்க் கேட்கின்றேன்

துடிக்கும் இதயத்துள் ஒரு ஓசை

என் உயிரின் ஓசையாய்க் கேட்கின்றேன்


நான் இரசிக்கும் பாடல்வரிகள் யாவும்

உனக்கானவையாய் தோன்றிடுதே

மீண்டும் மீண்டும் மீட்டிடும் வரிகளில்

ஓராயிரம் முறை உன்னோடு வாழ்கின்றேன்


நான் வாங்கும் மூச்சுக்காற்றை 

உனக்காகவும் கொஞ்சம் சேமிக்கின்றேன் 

நீ வந்து என்னோடு வாழும் காலம்

உன் மூச்சில் உயிர் வாழ யாசிக்கின்றேன்


Monday, January 24, 2022

கல்லறைப்பூ

 


கல்லறை மீது பூக்கும் பூ நான்

ஒரு நாள் இறைவா உந்தன் மாலையாக மாட்டேனா

ஒரு நாள் உந்தன் பூஜைக்கு உகந்தவளாக மாட்டேனா

கல்லறை மீது பூக்கும் பூவுக்கு

ஒருநாளும் உந்தன் கரிசணைதான் கிடைக்காதா


கல்லறை மீது பூக்கும் பூ நான்

ஒரு நாள் திருமணமாலையாக மாட்டேனா

ஒரு நாள் மணவறை கண்டு பூத்துக்குலுங்க மாட்டேனா

கல்லறை மீது பூக்கும் பூவுக்கு

ஒருநாளும் மணமாலையாகிடும் மகிழ்ச்சிதான் கிடைக்காதா


கல்லறை மீது பூக்கும் பூ நான்

ஒரு நாள் காதலின் அன்புப் பரிசாயாக மாட்டேனா

ஒரு நாள் காதலன் கையில் தவழ மாட்டேனா

கல்லறை மீது பூக்கும் பூவுக்கு

ஒருநாளும் காதலின் வரம்தான் கிடைக்காதா


கல்லறை மீது பூக்கும் பூ நான்

ஒரு நாள் சூடிக்கொள்ள கூந்தல் காண மாட்டேனா

ஒரு நாள் கூந்தலை அலங்கரிக்க மாட்டேனா

கல்லறை மீது பூக்கும் பூவுக்கு

ஒருநாளும் சூடிக்கொள்ளும் வாய்ப்புதான் கிடைக்காதா


முட்களைக்கொண்டு உதிரம்கண்டு 

பறித்திடும் கரங்களை வருத்திடத் தெரியாதே

வண்டுகள் வேறு வண்ணத்துப்பூச்சிகள் வேறு

பிரித்துப் பார்த்திட மனமும் நினைக்காதே

சேற்றில் முளைத்த செந்தாமரையும்

களங்கமற்றதாய் வாகை சூடிடுமே

காகிதப்பூக்களில் வாசம் வருமா 

பந்தலில் பவளமாய் படர்ந்திருக்கிறதே


கல்லறையில் பூத்த பாவத்தினைப் புதைத்திட

குப்பை மேட்டில் எனக்காய் ஓர் இடம் கிடைத்திடுமா

கல்லறையில் பூத்த தீட்டினை கழுவிட

கங்கை நீரும் என்னைப் புனிதமாக்கிடுமா

மனிதனின் கைகளில் வந்து சேர்வதனால் 

மலரிடமும் வர்ணம் தோன்றிடுதே

கல்லறை கொண்ட ஈரம்

கடவுளும் ஏனோ என்னில் காட்டவில்லை


Sunday, January 23, 2022

கனவுகளுடன் காதலிக்கின்றேன்

 


வடுக்களோடு வாழும் வாழ்விற்கு

கடந்துபோனவைகள் எல்லாம் 

மறைக்கப்பட்ட சுவடுகளே

கடற்கரை மணலில் பதித்த பாதம்தான்

அறியாத பலத்த அலையின்பின்பும்

அதன் சுவட்டின் நிழல்களை


நீ நினைக்கமுன்னே

எழுதப்பட்ட விதிக்கணக்கை

மாற்றியமைக்க காலனுக்கே 

காலம் கெடுவைத்தது

மரணத்திலாவது இன்பம் கொள்ள

இந்த விதிக்கு ஏன் மனம் இன்னும் கல்லானது


நீயறியாத என்னை நானென 

காட்டிக்கொள்ளாத காதல் 

பல நாட்கள் பகலிரவுகள்

இரகசிய முகப்புத்தகத்தில்

பேசிய அன்பின் பரிபாஷைகளை

என்றும் உனக்கான தேடல்தான்

விதிக்கப்பட்ட காதலாகியது


தொலைத்த இடம் வேறு 

கிடைத்த இடம் வேறு

தடமாறிய பாதையில் 

குரல் வந்த திசையெல்லாம்

வெளிச்சம் என்றெண்ணிய 

குருட்டு விழிகளுக்கு 

கைத்தடி மேல் இனி நம்பிக்கையில்லை


யாதுமாய் கண்ட யாதும் நீயாய் 

கண்ட காட்சிகள் பொய்க்க

யாரோவாகிய நிஜம் மட்டும் கைகளில்

ஏந்திக்கொண்டு மன்றாடிக்கேட்கத்

தகுதியில்லாதவளாய்க் கேட்கின்றேன்

மீண்டும் ஒருமுறை வந்துவிடு

இறுக்கமாய் உன்னை பற்றிக்கொள்கின்றேன்


தொலைவாய் இரு யாரோவாய் இரு

என்னை நினையாமலிரு 

உன்னை மறவாமலிருப்பேன்

தொலைத்த படலம் இங்கு என்னில் மட்டும் 

அமரகாவியமாகட்டும் 


என்றோ ஒருநாள் சேதிகள் கிட்ட 

இரண்டு சொட்டு கண்ணீர் கூட

வேண்டாம் எனக்கு

பாதி மனமாய் வழியனுப்புகிறேன்

முழுமனதிலும் நினைவுகள் மட்டுமே

மிச்சம் வைத்துக்கொண்டு


கல்லறைப்பூவுக்குள் தெய்வீகவாசம் தேடி

துளசிமாடத்தில் படர்ச்செய்ய நினைத்தாய்

வாசம் தந்த மல்லிகை 

என்னை மறக்கச்செய்ததுபோலும்

தேர்வுகளில் மீண்டும் கல்லறை மலரானேன்

உன் தேர்வு மிகச்சரியானவை

பிழையான என்னைத் தவிர்த்துவிடுதலின் பின்


எனக்கு மட்டும் சிறிதாய் தெரியும் 

இந்த யாக்கையில் யார் கனவுகளிலும்

எனக்கான கவிதைகளை மீட்ட

படைத்தவன் இன்னும் கிறங்கவில்லைபோலும்

ஆனால் ஒன்று் மறந்துவிடாதே

நடைபிணத்தின்மேல் நீ எய்தன்பு

சிறுநொடி உயிர்பித்து எழச்செய்தது


நீ வாழ் அது போதும் 

யாரோ உன் கரங்களைப் பற்றும்போது 

என் விரல்களுக்கு வலிக்காது இருக்கட்டும்

அன்று ஒன்றாய்க்கலந்த சுவசம் 

என் இறுதி மூச்சிலிருந்து

விதி பிரித்தெடுத்து தன் வெற்றியை

முழுமையாய்க் கொண்டாடட்டும்

தொலைந்த நான் என்றும் தேடப்படாமலிருக்க

கனவுகளுடன் மீண்டும் உன்னைக் காதலிக்கின்றேன்


Tuesday, October 12, 2021

சிதைந்த மலர் துளிர்கின்றது

 





அவள் ஜடைகளை ரிப்பன் கொண்டு முடியும்போதே

ஒரு குறுகிய வட்டத்துள் கட்டப்பட்ட கைபொம்மையாகிவிட்டாள்

சோகம் கண்ணீர் துக்கம் துயரம்

அவமானம் சகிப்புத்தன்மை போன்ற உணர்ச்சிக்கயிறுகள்

இன்னுமும் அவளை கட்டிப்போட்டிடத்தான் செய்கின்றன

உதிர்ந்து விழும் கேசத்தின் வாயிலாய் நீயும் அதற்கு ஒப்பானவள் என்றே சின்னஞ்சிறு பிராயத்திலே 

ஊட்டப்பட்டு வளர்க்கப்படுகிறாள்

பருவங்கள் ஏற உருவங்கள் மாற பாவாடை தாவணியோ அவளை பாதி ஆயுட்கைதியாக்கியது

விருப்பங்களைத் துறந்த துறவியேனும் ஊராரால் போற்றப்பட இவள் மட்டும் ஊர் கண்ணிலிருந்து மறைந்துமே தூற்றப்படுகிறாள்

எள்ளி நகையாடும் பள்ளி வயதில் புத்தகம் சிலேடை பென்சில் வேண்டிய பாலகி அவளுக்கோ கிடைத்தது தாலி மற்றும் கணவன் என்ற புதிய சாபம் அதுவோ அந்நாளில் குழந்தைத் திருமணம்

அங்கே ஆரம்பித்தது அம்மலரின் முதற்சிதைவு

பொம்மையை வைத்து விளையாடிய அவளுக்கோ தானும் பொம்மையாகிவிடக்கூடாதென்ற முடிவில் 

வெகுநாட்கள் அச்சத்தினால் கட்டப்பட்டிருந்த சங்கிலியை

அன்று முதன்முதலாய் கழற்றிவைத்துவிட்டு ஓடிவிட்டாள் 

அவளைப் பெற்றவர் வீட்டிற்கு

பாவம் அவள் அதை கழற்றிவைத்துவிட்டு ஓடியிருப்பதற்குப்பதில் உடைத்தெறிந்திருக்கலாம்

மீண்டும் அச்சங்கிலி பொருத்திவைக்கப்படும் என்று அறிந்திடாதவள்

தாழ்ந்த சமூகமென படைப்புகளை பிரித்துப் பார்த்திடும் வள்ளோர் வாழ்ந்த சமூகம் அவளுக்கோ அது நரகம்

அடிமைத்தனம் மேலோங்க வாட்டமடைந்த மலர் இன்னும்

சிதைக்கப்பட்டுக்கொண்டுதான் இருந்தது

மரணம் எனும் ஒரு முடிவை அவள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்றுக்கொண்டிருக்கலாம்

ஆனால் என்றோ யாரிடமோ தனக்கான நீதி கிடைக்குமென்ற நம்பிக்கை கொண்டவளுக்கு நீதி நெறி நழுவி அங்கேயே

கொடும் துயரம் நிகழ்ந்தது

நீதியும் நிலைக்கவில்லை அவளுக்காய் குரல் கொடுக்க யாருமில்லை

கையில் ஏந்தினாள் ஆயுதம் தன்னை நிலைகுலைய வைத்தவருக்கெல்லாம் சல்லடை போட்டு தனக்கான நீதியை தானே பெற்றுக்கொண்டாள்

பாஞ்சாலி துகிலுரிய பரமாத்மா ஶ்ரீ கிருஷ்ணன் சேலை வழங்கிய அற்புதம் இங்கு இவளுக்கேன் நிகழ்த்தப்படவில்லை? தாழ்ந்த குலமா? இல்லை அக்கினியால் பிறப்பெடுக்காத தேவமங்கையல்லாத ஒரு சாதாரண பெண்மணி என்ற நிலையா? 

ஆனால் இன்று அவளது கட்டிவைக்கப்பட்ட ஜடை அவிழ்ந்து காற்றில் அலை மோதும்போது அவளைக்கட்டி வைக்கப்பட்டிருந்த சங்கிலிகள் உடைத்தெறியப்பட்டிருந்தன

அவளுக்கான சுதந்திரம் அன்று யாராலுமல்ல 

அவளினாலே கிடைக்கப்பட்டது

அவளை எத்தனையோ பெயர் கொண்டு அழைக்கப்பட்டிருந்தாலும் பூலான் தேவி என்ற 

மலர் எத்தனையோ சிதைவுகளுக்குப் பின்னும் 

தனக்கான சுதந்திரத்தின் மூலம் மலரத்தான் செய்தது

பெண்ணிற்கான சுதந்திரம் கெஞ்சிப் பெறுவதுமல்ல 

யாரும் வழங்குவதுமல்ல அது அவளிடத்தே இருப்பது

எங்கே அவள் ஓங்கி மிதிக்கப்படுகிறாளோ அன்று அவளாய் அச்சுதந்திரத்தை உணர்வாள் 




Saturday, October 9, 2021

எனக்கான அன்பு

 





சலித்துவிட்ட இதயத்துடன் நான்

ஒவ்வொருவரையும் நெருங்கும்போது

மீண்டும் அவர்களிடத்தில் எனக்கான 

அன்பு முழுமைபெறாத என்ற 

ஏக்கம் மட்டும் வினாக்குறியாகின்றது


அவர்களிடத்தில் எனக்கான அன்பு 

மிகையானதும் அல்ல  ஆடம்பரமானதும் அல்ல

ஒரு துளியேனும் இரு கைகளுள் 

பொத்திவைத்த வெளிச்சம்போல

என் நினைவால் அவரவர் மனதில் பதித்து

வைக்கப்படும் சிறு நியாபகங்கள் மட்டுமே


புத்தகம் நடுவே திருட்டு மயிலிறகு

குட்டிபோடும் கதை எனக்கான அன்பு

கொஞ்சம் நகைத்தாலும் அதனுள் 

மறைந்திருக்கும் பித்து சிறு குழந்தையின் 

அன்பிலே தெய்வீகமாய் உணரப்படும்


திகட்டத்திகட்ட சுவைக்கும் ஒவ்வொரு 

கனி இதழ்கள் முடிவிலும் நாவூரும் 

எச்சில் எனக்கான அன்பு

அதுவும் ஒருவகை மீளமுடியாத சிறு போதை 

சிலரினால் மட்டுமே உணர முடியும்


சத்தமில்லாத இரவுநேர அழுகையில்

கண்ணீர் ஏந்தும் நண்பன் 

தலையணை எனக்கான அன்பு

ஆழ்ந்த ஆறாத வடுக்களின் ரணங்கள்

வழியும் கண்ணீரோடு ஓர் சிறு தூக்கம்

காலை விழித்ததும் எல்லாம் மாறிவிடுமென்ற புன்னை


நன்கு பரீட்சயமான பழைய பாடல் வரிகளில் 

தெரிவு செய்து உதடு முணுமுணுக்கும் 

வரிகள் எனக்கான அன்பு

மொழிகளை விட மௌனங்களில் அன்பை தேடும்

என்போல் இதயங்களினால் மட்டுமே 

வரிகளுக்கும் உயிரூட்ட முடியும்.



Sunday, March 28, 2021

Rest In Peace

  



முகநூலிலும் சரி 

முகமறியா நபராயினும் சரி

Rest In Peace என்று கடந்துவிட 

ஏனோ ஒப்புக்கொள்ளவில்லை

சிலரது மரணச்செய்திகள்


படுக்கையிலே பல காலம் தத்தளிப்பவன்

வேண்டிக்கூட இரங்காத கடவுள்

விருப்பம் உள்ளவன் வாழ்வைத் தட்டிப்பறிக்கின்றான்

காரணம் கேட்டால் விதி வலியது என்று பழிபோடுகின்றான்


வாழ்நாளெல்லாம்  வறுமையில் வாடியவன் 

வசதி வந்து அனுபவிக்கும் தறுவாயில் 

வாழ்விழந்துபோகிறான்

சமுத்திரத்தின் கரை தாண்டி நிலம் தொடும் நிமிடம்

பலன் பெறமுன் கரைந்து போகின்றான்


இலட்சியங்களில் திமிர் கொண்டவன் 

சுயவிருப்பை துறக்கின்றான்

விருப்பங்களின் தேவை விரலளவு முட்ட 

விசும்பைத் துறக்கின்றாய்


ஆண்டாய் அளந்தாய் ஆசையுறவுகள் பல கண்டு 

மாண்டாய் மண்ணில் என்னும் வரலாறு தாண்டி 

பிறப்பின் பயன்காணா வயதில் உலகெய்தினாய்

சிறுபயிர் கருகியதன் வலி கண்களில் நீராய்


இறப்பிற்கு நியதியும் இல்லை எல்லையும் இல்லை

நிழல்களாய்த் தொடரும் ஏதோ ஓர் உறவிற்கு மட்டும் 

ஏன் இதயத்தைப் படைத்து அதில் 

ரணங்களை பதிக்கின்றோம்


ஆன்மாவிற்கு உடல் உறவல்ல ஆனால் 

மனிதம் மற்றும் பகுத்தறிவு எங்கோ 

ஓர் துயர் சம்பவத்தில் 

தன்னையறியாது உளவேதனையுடன் 

விட்டுச்செல்கிறது 

Rest In Peace 


நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...