Tuesday, January 25, 2022

நான்…நீ…


 

நான் சூடும் பூக்களில் எல்லாம் 

உன் வாசம் தேடுகிறேன்

பூக்களிலும் உன் வாசம் இன்றி

காகிதமலராய் தலைகுனியப் பார்கின்றேன்


நான் காணும் காட்சிகள் யாவும்

உன் நிழற்படமாய் காண்கின்றேன்

என் விரல்கள் தீண்டி தீண்டியே

உன் புகைப்படம் காற்றில் கரையக் காண்கின்றேன்


நான் காணும் கனவுகள் யாவும்

நீ வந்து போவதாய் ஏங்கினேன்

அதிகாலையில் நீ மறைந்துவிடுவாயென்று

உதித்துவிடாதே என்றே சூரியனை தினமும் வேண்டினேன்


நான் பேசும் வார்தைகளில் எல்லாம்

உன் பெயரையே உச்சரிக்கின்றேன்

மறந்தும் உன்னை மறவாமலிருக்க

இஷ்ட தெய்வங்களிடமெல்லாம் மன்றாடினேன்


நான் எழுதும் வரிகளெல்லாம் 

உன் கானம் தினம் பாடிடுதே

விடும் எழுத்துப் பிழைகளுக்குள்

உனக்கான கவிதை ஒன்று தீட்டுகின்றேன்


நான் கேட்கும் ஓசைகளிலெல்லாம்

உன் இதயத்துடிப்பாய்க் கேட்கின்றேன்

துடிக்கும் இதயத்துள் ஒரு ஓசை

என் உயிரின் ஓசையாய்க் கேட்கின்றேன்


நான் இரசிக்கும் பாடல்வரிகள் யாவும்

உனக்கானவையாய் தோன்றிடுதே

மீண்டும் மீண்டும் மீட்டிடும் வரிகளில்

ஓராயிரம் முறை உன்னோடு வாழ்கின்றேன்


நான் வாங்கும் மூச்சுக்காற்றை 

உனக்காகவும் கொஞ்சம் சேமிக்கின்றேன் 

நீ வந்து என்னோடு வாழும் காலம்

உன் மூச்சில் உயிர் வாழ யாசிக்கின்றேன்


No comments:

Post a Comment

Your concern is appreciable. Thank you for the review

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...