Saturday, October 9, 2021

எனக்கான அன்பு

 





சலித்துவிட்ட இதயத்துடன் நான்

ஒவ்வொருவரையும் நெருங்கும்போது

மீண்டும் அவர்களிடத்தில் எனக்கான 

அன்பு முழுமைபெறாத என்ற 

ஏக்கம் மட்டும் வினாக்குறியாகின்றது


அவர்களிடத்தில் எனக்கான அன்பு 

மிகையானதும் அல்ல  ஆடம்பரமானதும் அல்ல

ஒரு துளியேனும் இரு கைகளுள் 

பொத்திவைத்த வெளிச்சம்போல

என் நினைவால் அவரவர் மனதில் பதித்து

வைக்கப்படும் சிறு நியாபகங்கள் மட்டுமே


புத்தகம் நடுவே திருட்டு மயிலிறகு

குட்டிபோடும் கதை எனக்கான அன்பு

கொஞ்சம் நகைத்தாலும் அதனுள் 

மறைந்திருக்கும் பித்து சிறு குழந்தையின் 

அன்பிலே தெய்வீகமாய் உணரப்படும்


திகட்டத்திகட்ட சுவைக்கும் ஒவ்வொரு 

கனி இதழ்கள் முடிவிலும் நாவூரும் 

எச்சில் எனக்கான அன்பு

அதுவும் ஒருவகை மீளமுடியாத சிறு போதை 

சிலரினால் மட்டுமே உணர முடியும்


சத்தமில்லாத இரவுநேர அழுகையில்

கண்ணீர் ஏந்தும் நண்பன் 

தலையணை எனக்கான அன்பு

ஆழ்ந்த ஆறாத வடுக்களின் ரணங்கள்

வழியும் கண்ணீரோடு ஓர் சிறு தூக்கம்

காலை விழித்ததும் எல்லாம் மாறிவிடுமென்ற புன்னை


நன்கு பரீட்சயமான பழைய பாடல் வரிகளில் 

தெரிவு செய்து உதடு முணுமுணுக்கும் 

வரிகள் எனக்கான அன்பு

மொழிகளை விட மௌனங்களில் அன்பை தேடும்

என்போல் இதயங்களினால் மட்டுமே 

வரிகளுக்கும் உயிரூட்ட முடியும்.



No comments:

Post a Comment

Your concern is appreciable. Thank you for the review

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...