Tuesday, October 12, 2021

சிதைந்த மலர் துளிர்கின்றது

 





அவள் ஜடைகளை ரிப்பன் கொண்டு முடியும்போதே

ஒரு குறுகிய வட்டத்துள் கட்டப்பட்ட கைபொம்மையாகிவிட்டாள்

சோகம் கண்ணீர் துக்கம் துயரம்

அவமானம் சகிப்புத்தன்மை போன்ற உணர்ச்சிக்கயிறுகள்

இன்னுமும் அவளை கட்டிப்போட்டிடத்தான் செய்கின்றன

உதிர்ந்து விழும் கேசத்தின் வாயிலாய் நீயும் அதற்கு ஒப்பானவள் என்றே சின்னஞ்சிறு பிராயத்திலே 

ஊட்டப்பட்டு வளர்க்கப்படுகிறாள்

பருவங்கள் ஏற உருவங்கள் மாற பாவாடை தாவணியோ அவளை பாதி ஆயுட்கைதியாக்கியது

விருப்பங்களைத் துறந்த துறவியேனும் ஊராரால் போற்றப்பட இவள் மட்டும் ஊர் கண்ணிலிருந்து மறைந்துமே தூற்றப்படுகிறாள்

எள்ளி நகையாடும் பள்ளி வயதில் புத்தகம் சிலேடை பென்சில் வேண்டிய பாலகி அவளுக்கோ கிடைத்தது தாலி மற்றும் கணவன் என்ற புதிய சாபம் அதுவோ அந்நாளில் குழந்தைத் திருமணம்

அங்கே ஆரம்பித்தது அம்மலரின் முதற்சிதைவு

பொம்மையை வைத்து விளையாடிய அவளுக்கோ தானும் பொம்மையாகிவிடக்கூடாதென்ற முடிவில் 

வெகுநாட்கள் அச்சத்தினால் கட்டப்பட்டிருந்த சங்கிலியை

அன்று முதன்முதலாய் கழற்றிவைத்துவிட்டு ஓடிவிட்டாள் 

அவளைப் பெற்றவர் வீட்டிற்கு

பாவம் அவள் அதை கழற்றிவைத்துவிட்டு ஓடியிருப்பதற்குப்பதில் உடைத்தெறிந்திருக்கலாம்

மீண்டும் அச்சங்கிலி பொருத்திவைக்கப்படும் என்று அறிந்திடாதவள்

தாழ்ந்த சமூகமென படைப்புகளை பிரித்துப் பார்த்திடும் வள்ளோர் வாழ்ந்த சமூகம் அவளுக்கோ அது நரகம்

அடிமைத்தனம் மேலோங்க வாட்டமடைந்த மலர் இன்னும்

சிதைக்கப்பட்டுக்கொண்டுதான் இருந்தது

மரணம் எனும் ஒரு முடிவை அவள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்றுக்கொண்டிருக்கலாம்

ஆனால் என்றோ யாரிடமோ தனக்கான நீதி கிடைக்குமென்ற நம்பிக்கை கொண்டவளுக்கு நீதி நெறி நழுவி அங்கேயே

கொடும் துயரம் நிகழ்ந்தது

நீதியும் நிலைக்கவில்லை அவளுக்காய் குரல் கொடுக்க யாருமில்லை

கையில் ஏந்தினாள் ஆயுதம் தன்னை நிலைகுலைய வைத்தவருக்கெல்லாம் சல்லடை போட்டு தனக்கான நீதியை தானே பெற்றுக்கொண்டாள்

பாஞ்சாலி துகிலுரிய பரமாத்மா ஶ்ரீ கிருஷ்ணன் சேலை வழங்கிய அற்புதம் இங்கு இவளுக்கேன் நிகழ்த்தப்படவில்லை? தாழ்ந்த குலமா? இல்லை அக்கினியால் பிறப்பெடுக்காத தேவமங்கையல்லாத ஒரு சாதாரண பெண்மணி என்ற நிலையா? 

ஆனால் இன்று அவளது கட்டிவைக்கப்பட்ட ஜடை அவிழ்ந்து காற்றில் அலை மோதும்போது அவளைக்கட்டி வைக்கப்பட்டிருந்த சங்கிலிகள் உடைத்தெறியப்பட்டிருந்தன

அவளுக்கான சுதந்திரம் அன்று யாராலுமல்ல 

அவளினாலே கிடைக்கப்பட்டது

அவளை எத்தனையோ பெயர் கொண்டு அழைக்கப்பட்டிருந்தாலும் பூலான் தேவி என்ற 

மலர் எத்தனையோ சிதைவுகளுக்குப் பின்னும் 

தனக்கான சுதந்திரத்தின் மூலம் மலரத்தான் செய்தது

பெண்ணிற்கான சுதந்திரம் கெஞ்சிப் பெறுவதுமல்ல 

யாரும் வழங்குவதுமல்ல அது அவளிடத்தே இருப்பது

எங்கே அவள் ஓங்கி மிதிக்கப்படுகிறாளோ அன்று அவளாய் அச்சுதந்திரத்தை உணர்வாள் 




No comments:

Post a Comment

Your concern is appreciable. Thank you for the review

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...