Saturday, May 9, 2020

முகத்திலிரண்டு புண்ணுடையோர்




அறம் ஏற்று அகம் பெருமிதம் 
கொள்ளக் கற்றோர் முகத்தில் இரு கண்களும் 
அறிவிலார் கல்லாதோர் முகத்திலிரண்டு 
புண்ணுடையோர் என வள்ளுவன் வாக்கில்
சற்றுத் திருத்தம் அதை எழுதிக்கொள்வீர் 

கற்பதிலும் அதை மனதார ஏற்பதிலும் 
முற்போக்குச்சிந்தனையாய் எழுத்தறிவித்தவனே
அநீதி கண்டும் சீறும் தணல் சீற்றம் தாழாது 
விழியோரம் சிறு வெறுப்பைக் காண்பிக்காதவரே
முகத்திரண்டு புண்ணுடையார்

வஞ்சனையே வைராக்கியமாய் அகில 
நன்மைபயப்பிப்போர்  சூழ அராஜகமாய்
இன்றும் பல திரௌபதிகளின்  வஸ்திரம் 
களைய வல்லவர்களின் துணிகரச்செயல் கண்டும் 
கண்களை கருங்கற்கள் போல் விழிதிறக்கவிடாதோரே 
முகத்திரண்டு புண்ணுடையார்

பசித்தழும் பச்சிளங்குளவி கதறியழ கண்ணீர் வற்றி
கையேந்தும் திருவோட்டிலும் கால்வாய் கஞ்சிக்கும் 
மிஞ்சாத குற்றி அதையும் பொறுக்கி சீவனமாக்கும் 
கைம்பெண்களின் விலைபேசும் தர்மவித்துவான்களே
முகத்திரண்டு புண்ணுடையார்

வீதியோரமாய் நடைபிண உற்று ஓருயிர் துவண்டும்
நா நனைக்க ஒரு துளி ஜலம் பருகவைக்காதவன்
வாழ்க்கையிலே நடைபிணமாய் அலைய 
மதுவில் மதிமயங்கிக்கிடப்போரே
முகத்திரண்டு புண்ணுடையார்

கூப்பிட்டக்குரலுக்கு செவிசாய்த்தும்
ஏற்புடைய கருமத்தை விலத்தியும்
அல்லற்படும் அன்னையும் பிதாவும்
முதியவர் இல்லத்தில் என்ன சொகுசு காண்பர் 
என்று கெஞ்சிக்கேட்டும் அதில் சித்தம்கொள்ளாது
பஞ்சணையில் நிம்மதித்தூக்கம் உறக்குபவனே
முகத்திரண்டு புண்ணுடையார்





Thursday, May 7, 2020

எனக்கு வேறு என்னதான் வேண்டும்



அகிலத்தோனே அன்பின் மதனனே  
அருகில் நீ இருக்க 
எனக்கு வேறு என்னதான் வேண்டும்


அச்சம் மிகுந்த சூழலில் நான் இருக்கிறேன் 
என்று இறுக என் கரங்களை அணைத்துக்கொள்வாய் 
பற்றும் உன் கரங்களில் பதிந்த என் கைரேகை
உன்னில் என் விதியைக் கோர்த்திட
எனக்கு வேறு என்னதான் வேண்டும்


தனிமையில் பிதற்றிடும் போதை 
தலைக்கேற நடுக்கத்தில் இதயம் 
இரண்டுமுழம் வெளியே பதபதைக்க
உப்பிப்போன வியர்வை விழியருகே
கண்ணீராய் உருவெடுக்கமுன்
தோள்பற்றும் உன் இரு கரங்களிலும்
தன்நம்பிக்கை கொடி படர வைத்திடும்
நீ இருக்க எனக்கு 
வேறு என்னதான் வேண்டும்


கடக்கும் கரடுமுரடான கடினமான 
பாதையில் இரயில் தண்டவாளங்களாய்
தூரதேசம் போகும் நெடும்பாதை
வழி மாறி தடம் புறழும் கணமெல்லாம்
முன்னுமில்லாமல் பின்னுமில்லாமல்
என்னோடு எடுத்துவைக்கும் ஒவ்வொரு 
அடியிலும் மலரும் ரோஜா புஸ்பத்தின்
மென்மை பாதங்களில் உணரவைக்கும்
நீ இருக்க எனக்கு வேறு என்னதான் வேண்டும்


ஆயிரங்காரணங்களால் முறிந்துபோகும் 
உறவில் அன்பால் சமச்சீர்நிலை
அளக்கும் அளவுகோல் விருசபர்வா 
சர்வஜனாய் என்னை நேசத்தால் நெசவு செய்யும்
நீ இருக்க எனக்கு 
வேறு என்னதான் வேண்டும்



பழைய தூசி




அடுக்கிவைக்கப்பட்டிருந்த பழைய 
புத்தகங்களை எல்லாம் தூசி தட்டிக்கொண்டிருக்கிறேன்
பத்தாம் வகுப்பு கணக்குப்புத்தகம் 
ஒன்று கையில் அகப்பட்டது. 
பின்னாலிருந்து ஒரு குரல் 
இன்னும் சமைத்து முடிக்கவில்லையா? 
பசிக்கிறது கனத்த குரல் 
இன்று ஏதோ கடுமையாய் ஒலிக்கிறது.
அது அவர் தான். 
மதிய இடைவேளையில் சற்று சினத்தையும் கொண்டு வந்திருந்தார்
அம்மா என்ன சாப்பாடு? எனக்கு ஊட்டிவிடு
இது அவனின் குரல். செல்லக்கண்ணன் 
ஏதோ களைப்போடு கேட்கிறான்.
வாலாட்டி நானும் இருக்கிறேன் 
என்னையும் கவனியுங்கள் என்றான் 
குட்டி ராசன் அவனும் செல்லப்பையன் தான்.
பரிமாறல் முடிந்ததும் மீண்டும் புதைந்து கொண்டேன் 
தூசி தட்டும் பணியில் செல்லக்கண்ணனை தூங்கவைத்து விட்டு
இந்த சின்னக்கேள்விக்கா பிழை எடுத்திருக்கிறேன்
எத்தனை பிழை திருத்தங்கள் செய்திருக்கின்றேன்
அவரும் செல்லக்கண்ணனும் என்னைக் கணக்கில் புலி 
என்று கேலி செய்வதில் ஓர் நட்டமும் இல்லை. 
அப்படியே கடந்து சென்ற கண்களுக்கு புலப்பட்டது 
கடைசிப் பக்கம் மதுமலர் மதியழகன் என்றே நிரப்பப்பட்டிருந்தது. 
அங்கு பல ஓவியங்களும் பேனை மையினால் 
சிறப்பாய் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இதயங்களில் அம்பு 
துளைக்கும் விதங்களோ ஆச்சரியம் தான் 
ஏனெனில் அம்பின் முன்புறம் பின்புறம் 
எல்லாம் அழகாய் வரையப்பட்டு இதயங்கள் மட்டும் 
அப்பளம் போன்று இருந்தன. அதில் சிறு கவிதைகள் வேறு 
“ உடல் மண்ணிற்கு உயிர் உனக்கு” 
சொந்தமாய் எழுதக்கூடத் தெரியவில்லை. 
இப்படியிருந்தால் எப்படித்தான் 
கணக்குப்பாடம் தலைக்கு ஏறியிருக்கும்? 
ஆனால் காதல் மட்டும் நுழைந்துவிட்டது. 
பழைய தூசிக்குள் இத்தனை வனப்பான நினைவுகளா? 
நேரமாகிவிட்டது நான் போய்வரட்டுமா மது 
எனக் கன்னத்தைக் கிள்ளினார் 
நானும் பதிலுக்கு தலையசைத்து வழியனுப்பி விட்டு வந்தேன் 
என் மதியழகனை 
மீண்டும் பழைய தூசிகளுடன்  உறவாட.

Wednesday, May 6, 2020

மழைக்காற்று





வீதியோரமாய் வேலைப்பழுவில் விரக்தியில்
விரைந்து சென்றுகொண்டிருந்தேன் வீட்டை எப்படியாவது மணி ஆறுக்குள் 
அடைந்துவிடும் நோக்கில்
கொடியில் காயப்போட்ட உடைகளை எல்லாம் எடுத்து மடித்து வைக்க வேண்டும்
மதியம் மிஞ்சியதை குழைத்து வீதியில் திரியும் நாய்க்குட்டிக்கு வைக்க வேண்டும்
புதிதாய் ஏதும் சமைக்க வேண்டும்
வீடுவாசல் துப்பரவு செய்து சாமிப்படத்திற்கு 
விளக்கு வைக்கவேண்டும்
குளித்துவிட்டு நூலகத்தில் இரவல் 
வாங்கிய நாவலை வாசிக்க வேண்டும்
கடிதப்பெட்டியினுள் ஒரு கடிதமாவது 
இருக்குமா என எட்டிப் பார்க்கவேண்டும்
அப்பப்பா அடுக்கிக்கொண்டுபோகலாம் 
தனிமையில் வாழும் வாழ்க்கையின் அடுத்தவர் உதவியில்லா அட்டவணையை 
எண்ணிய எண்ணமெல்லாம்
சடார் என வெடித்தது நிமிர்ந்து பார்த்தேன் 
வானில் வெள்ளி நரம்புகள் தெரிய
சுற்றமும் இருள் சூழ 
கடாயுதம் கொண்டு எவனோ இடிக்கின்றான்
மழைவரப்போகிறது என எண்ணும் முன்னே
இதமான மழைக்காற்று என் விரக்தியை 
எல்லாம் தூக்கிவாரிப்போட்டது
எத்தனை இதம் தான் இந்த மழைக்காற்றில்
சுள் என்று குத்திய சூரியக்கதிரால் துளையின் 
வழி வழிந்த வியர்வை மாயமாகி உடல் குளிர்ந்தது
அதிரடியாய் குடை விரிக்க இறுக்கமான தழுவலுக்காய் என்னை ஓரடி பின் நகர்த்தியது
மண்வாசனை எல்லாம் திரட்டி நாசியில் உட்சுவாசத்தை ஒரு நொடி நிறுத்தியது
கூந்தல் இடைவெளிகளை வருடிவிட்டது
பின்புவரும் மழைக்கு முன்பு வந்த அழைப்பிதழ்
என்னையும் இந்த சபையின் நிகழ்வில் கலந்திட மண்டியிட்டது ஆனால் மனமோ
கொடியில் காயப்போட்ட உடைகளை எல்லாம் எடுத்து மடித்து வைக்க வேண்டும்
மதியம் மிஞ்சியதை குழைத்து வீதியில் திரியும் நாய்க்குட்டிக்கு வைக்க வேண்டும்
புதிதாய் ஏதும் சமைக்க வேண்டும்
வீடுவாசல் துப்பரவு செய்து சாமிப்படத்திற்கு 
விளக்கு வைக்கவேண்டும்
குளித்துவிட்டு நூலகத்தில் இரவல் 
வாங்கிய நாவலை வாசிக்க வேண்டும்
கடிதப்பெட்டியினுள் ஒரு கடிதமாவது 
இருக்குமா என எட்டிப் பார்க்கவேண்டும் என்றே என்னை ஏவியது. 
இருக்கட்டும் இன்று மழையில் தெப்பமாகத்தான் போகிறேன்
மழைக்காற்று என்னை துவட்டத்தான் போகிறது உங்கள் ஏவலை
நான் சரி செய்துகொள்வேன் எப்படியாவது
உலர்ந்த உடைகளை மீண்டும் துவைப்பதில் சிரமமில்லை 
மிஞ்சியதை இன்று அப்பளம் பொரித்து நானே உண்கிறேன்
மழையே என்னைக் குளிப்பாட்டி விடும் சாட்டாய் நாலு வாளி தண்ணீரில்
உடல் நனைப்பேன்
சுடச்சுட இஞ்சித்தேநீர் நாவல் வாசிக்க விழிப்பாய் இருக்கும்
கடிதம் இன்று மட்டும் அதிசயமாய் யார் எழுதிவிடப்போகிறார்
மழைக்காற்று வருடல் இன்றைய இரவிற்கு நிம்மதியான உறக்கம் தரும்

Tuesday, May 5, 2020

பாரதிகண்ணம்மா




பரந்த என்  சொப்பனங்களுக்கு 
கணவனே கதி என்று கடிவாளமிடாது
சிறகுகள்  நீட்டி வானுயறப்பறந்து 
எல்லை தாண்டி என் மமதையில் பங்கு 
கொள்ளும் வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்


எல்லையில்லா என் பயணங்களில் 
பிரயாணியாய் இல்லாமல் துணையாளியாய் 
எடுக்கும் முடிவுகளில் தீர்கமான தீர்ப்பளித்து
வழுக்களை இதமாய் எடுத்துரைக்கும் வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்


முதல் எழுத்துடன் தலை எழுத்துவரை
வீட்டின் தலைவன் என அங்கீகாரம் பெற்றும்
அடிக்கொருமுறை இல்லாவிடினும் அத்தி பூத்தாற்போல் 
என் ஆசையும் செவிசாய்த்து
நான் இல்லை நாம் என்று புரிந்துணர்வான 
இல்ல வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்


சலனம் ஏற்படும் வேளை எல்லாம்
சந்நிதியான் வழி செல்லாது
கற்புடமை அது பெண்ணிற்குமட்டுமன்று
ஆணிற்கும் தான் என்ற இலக்கணம் கொண்டு
இலக்கிய வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்


கோபக்கனல் கசியும் வேதனையில் உன் முகம் 
வாடும் வேளை எல்லாம் என் மடியும் என் கூச்சமற்ற தழுவலும் 
உன்னைத் தாங்கிக்கொள்ளுமென்பதை
ஒவ்வோர் ஆறுதலின் பின் உட்சாகம் கொண்டு மது சூது 
ஆரோக்கியத்தின் கேடு என்ற வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்


ஆடம்பரத்தால் ஆசை ஏற
ஆசையினால் மோகம் ஏற
மோகத்தினால் அனைத்தும் இழக்கும் நிலை ஆக
எளிமையான இனிமை இல்லறத்தில் தான்
நிம்மதி கொள்ள அன்பின் வித்திடும் வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்


நாவின் சுவைக்காய் மதி மயங்கி கலப்படமும்
விலங்கொழிக்கும் பாட்ஷாணமும் வெண்ணெய் தடவி 
கண்ணீர்கும் பல ஆகாரம் எதிலும் நாட்டம் கொள்ளாது 
மனையாளின் அறுசுவையில் அனுமனின் பலம் பெற்று 
கங்கை மாதா தூய்மை பெற்று 
அன்னபூரணி ஆசியுடன் சுகம் பெறும் வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்


இராமனைப்போல் வேள்வித்தீயில் விளக்கம் கேட்க 
அதில் விழுந்து விடைகொடுக்கவும் 
யுதிஸ்டன் போல் சூதில் மங்கையை 
பணயம் வைத்து விளையாடவும் 
பெண்ணை துயரில் தள்ளாது பச்சைமரம் எரிந்தால் என்ன 
எரியாவிடின் என்ன இவள் என்றும் என் பத்தினிதான் 
என்ற நன்மதிப்பால் அலங்கரிக்கும் வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்

Sunday, May 3, 2020

போதும் மாமா



காதலில் கரம் பற்றிய என்னை
கைவிடாது கரை சேர்க்க 
வசைபேச்சில் வஞ்சிப்போரிடமிருந்து
இன்னும் எத்தனை காலம் தான் 
சமாளிப்பீர்கள்

அடுக்களையில் அடிமுட்டாளாய்
அரிசிபுடைப்பதே அவனியாய் இருந்த என்னை
பரந்த உலகம் படைத்தது எதற்கென விழிப்பூட்டியே
எனைப்படைத்தவனாய் அடுத்தவரிடம்
இன்னும் எத்தனை காலம் தான் 
சமாளிப்பீர்கள்

தாரமானபின் பணி தாயாகுவதே
தள்ளாடும் வயதில் யார் துணையாய்  வருவாரோ
வருடம் தள்ள நாட்கள் எப்போ தள்ளும் என்றே
வாயில் போடுவோரின் வார்த்தைகளிற்கு
தாரத்திலும் அவள் தாய்மை உணர்கிறேன் என்றே
இன்னும் எத்தனை காலம் தான் 
சமாளிப்பீர்கள்

மகாகவி வரிகளில் படைத்த 
புதுமைப் பெண்ணை
நீங்கள் என் வாழ்க்கையில் 
செதுக்கலாய் வடிக்க 
சுற்றாரின் உற்றாரின் மனம் 
சலனத்துடன் தீ மூழ
இன்னும் எத்தனை காலம் தான் 
சமாளிப்பீர்கள்

கண்ணீரில் படகோட்டும் என் வாழ்க்கைக்கு
கலங்கரை வெளிச்சமே இந்த அன்புதான்
ஆனால் போதும் மாமா 
இன்னும் எத்தனை காலம் தான் 
சமாளிப்பீர்கள்




Friday, May 1, 2020

நன்றி நவில்கிறேன்



இறைவா
உன் நல்லாசியுடன் 
என்றும் திளைப்பூட்ட 
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்

நெற்றிமீது தரிக்கும் குங்குமம்
மூன்று இச்சியளவு பெருமையுடன்
 தினம் உச்சி ஏறுவதில்
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்

வாசம் வீசும் மலர்களும் 
அப்பன் அண்ணன் இன்றி
அகிலமாய் ஆண்மகன் ஒருவன்
சூட்டி அழகுபார்த்திட 
அருகதையுடையன் என்பதில்
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்

வரப்பிரசாதமாய் கழுத்தில்
மஞ்சட்குங்கும தாலிச்சரண்
கண்ணில் ஒற்றி கலியுகவரதனை
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்

மெல்ல நடக்கையில் 
ஒலி மீட்டிடும் கால்விரல்களில் 
வெள்ளியாய் மின்னும் மெட்டி 
நரம்புகளில் சுருக்கென்று அவன்
அன்பை ஆயிரம் முறை நொடிப்பொழுதில் உணர்த்திடும்
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்

பட்டுவண்ண சேலையில் பரந்தாமன்
கைபட்ட வண்ணம் மடிப்புகள் கலைவில்
கசங்கிய காதல் மொழி உரைத்திடும்
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்

அறநெறிசாட்சியாய் அக்கினி சாட்சியாய்
அருந்ததி சாட்சியாய் ஆண்டவன் சாட்சியாய்
உற்றார் சாட்சியாய் உறவினர் சாட்சியாய்
நீழ்வாழ்வாய் ஏழ்ஜென்ம பந்தம்
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்

வெகுமதியாய்க் கிடைத்த புது சன்மானம்
அவன் பெயர்முன் இணைக்கும் சொல்லாகி 
என் பெயர் மறக்க வந்த திருமதி
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்


Thursday, April 30, 2020

மீண்டும் போலிச்சிரிப்புடன்



எள்ளி நகையாடிய காலமெல்லாம்
கிள்ளிப் பார்க்கையில் திடுக்கிடும்
புள்ளிக்கோலத்தின் ஒரு முடிச்சாய்
வள்ளி அவள் கனவுகளையெல்லால்
அள்ளிப்பருகிடும் பெருங்குவளை நீரில் கரையவிட்டாள்


பள்ளிப் பருவ காலோட்டத்தில் அவன் தந்த பவள
மல்லியாய் புன்னகை சூடி வதனம் மலர்ந்த நினைவெல்லாம்
கள்ளி அவள் கற்பனைக் கடிவாளமாய்  இன்று கட்டியிழுக்க 
சொல்லி ஆழ யாருமில்லா மெல்லிசையை
சுள்ளி விறகுடன் மூண்ட தீயில் மெல்ல
எரியவிட்டாள்


கொல்லிமலைச் சித்தர்களும் காணா கடும் தவமாய்
அல்லி மலர்ந்தொரு மொழி அரிதாய்க்கூட அந்நியரிடம்  பேசாள் வள்ளி இவள் ஒரு ஊமை என்றும் ஊராரின் பெயர் பெற்றாள்
தள்ளி நின்று பார்த்த தாய் மனம் கொதிக்க வண்ணமலரோ வண்டு வேண்டா மலராய் அவன் அன்று தந்த கற்பனை மலரை துணிமணியுடன் 
அடுக்கிவைத்தாள்


பொங்குதமிழ் எழுச்சியில் முதன்முதலாய் அவனைக் கண்டவள் அவன் செயற்பாட்டில் மெய் மறந்தாள்
தங்குதடையின்றி பாயும் வெள்ள நீரோட்டம் விவாசாயியின் வயிற்றில் பயிரிடத்தான் என ஆராய்ந்த அவள் அவன் உழைப்பினில் தன் சூழல் மறந்தாள்
மங்கும் பொன் சுரங்கம்  அவன் மார்போடு நீண்ட அன்பு அதில் அவள் சுற்றம் மறந்தாள்
பங்குகேட்கும் உலகில் என் பாகம் என்னைப் பெற்றவள் என புறங்களைத் தீண்டா அவன் குணங்களில்  அவள் தன்னையே மறந்தாள்


உறக்கம் அவள் நினைவுகளை உறங்கவிடவில்லை
தயக்கம் அவள் வார்த்தைகளை அவிழ்த்துவிடவில்லை
மயக்கம் காதலில் அவன் முகம் தவிர வேறு சுயமில்லை
நடுக்கம் அவள் கைப்பிடியில் இன்னும் அவன் கைவிரல்கள் பின்னப்படவில்லை


அன்னையின் ஆசி அப்பனின் ஆட்சி
அண்ணலின் கைப்பிடி அந்த சிறுவட்டம் தாண்டி வெளிவர
 விட்டில்பூச்சி விளக்கொளியில் ஏரிவதுபோல்
மங்கைக்கோ காத்திருந்தது பேரதிர்ச்சி


வானுலகம் சென்று பூமழை பெற்று பூமாலை சூடி 
புகைப்படத்துள் ஒளிந்துகொண்ட அவனை மீட்டுவர
அவளுக்குத் தெரியவில்லை மலர்வளையம் இட்டு மண்டியிட மனமும் விடைகொடுக்கவில்லை
உலகில் பல ஆடவர் இச்சையாய் கேட்கவும் மணக்கோலம்  காண மதியில் ஏனோ எட்டவில்லை
மாறாக கண்ணீரில் கடிதம் தீட்டினாள் கோதை விதியது வலியது


அவன் நினைவுமலர் தினம் நீரூற்றி வளர்த்தாள் அதன் வாசனை அறியாமலே 
மலர் சூட அருகதை அற்ற அவள் கூந்தல் காற்றில் களைந்தாலும் அதை ஜடைபோட்டு கட்டிவிடுகிறது அவனுக்கான அவள் மனம் மீண்டும் போலிச்சிரிப்புடன்

செல்லப்பிராணிகள்




செல்லப்பிராணிகள் 
எம் வீட்டோடு வாழ்பவர்கள்
அன்பைச் செலுத்தி அதீதமாகப் பெறுகையில்
இவர்களும் எமக்குச் செல்லக்குழந்தைகள்


போதனையில்லா  மெய் நன்றி இவர்களின் இலக்கணமாகிட பாரினில் விசும்பும் மென் மழைத்துளிகூட இவர்களின் அன்புத்தூய்மையில் தோற்றுப்போய்விடும்


வாலினால் தலைவணங்குவது 
ரோமங்களினால் மெய் தீண்டுவது 
நாவினால் நன்றி நல்குவது
முன் புஜங்களினால் இறுகப்பற்றுவது 
நம் காலடியில் தஞ்சம் கொள்வது 
நீண்ட நேரத்தவிப்பை பாசமழையாய் அவர் அவர் மொழியில் பறைசாற்றுவது 
இதுவெல்லாம் அவர்களின் அன்பின் வெளிப்பாடு அதுவே அவர்களின் கோட்பாடு


ஒருபிடிசோற்றுக்கு வாழ்நாள் முழுவதும் 
உழைக்கும் உழைப்பாளிகள்
சற்று நேரம் உறங்கினாலும் துரிதமாய் சேவை செய்து கிறங்கடிக்கச் செய்திடுவார்கள்
பலவித வித்தை கண்டு வியப்புற்றேன் இவர்களின் அன்பு என்ன மாய வித்தையோ?


சேற்றிலும் சகதியிலும் துள்ளிக்குதித்து ஆனந்தம் கொண்டு வெண்சட்டையிலும் காற்தடம் பதித்திடுவார்
குறுகிய ஓசையில் தம் வரவைக் கண்டு குதூகலித்து ஆரவாரம் செய்திடுவார்
தட்டில் எத்தனைவகை உணவிட்டாலும் உம் கரத்தால் ருசி பார்த்திடுவார் 
காதலனுக்கோ பொறாமை விஞ்சிடும் அவர்களின் கன்னத்தில் பதியும் எண்ணற்ற முத்த மழையில் தமக்கான மகுடம் என சூடிடுவார்


படுக்கையில் குழவியாகினும் வயதுமுதிர்ந்த கிழவியாகினும் பேதமற்றவராய் கட்டளைக்காக காத்திருப்பார்
வளர்த்த கடனை திருப்பிக்கொள்ள ஆருயிர்த்தியாகமும் சுயவிருப்புடன் யாக்கைத்துறப்பார்





பெண்ணுக்குள் தேவதை

  பெண்ணுக்குள் புதிதாய் ஓர்  தேவதை பிறக்கின்றாள் அவள் வர்ணமற்றவள் அவள் உருவமற்றவள் அவள் உணர்வுகளால் வர்ணம் கொண்டு உணர்ச்சிகளாய் உருவம் கொள்க...