Friday, June 26, 2020

சிரிப்பு போலி பிரதிபலிப்பு

















என்றும் இனிமையான சிரிப்பொலியும்

செஞ்சந்தன முகப்பொலிவும்

மனதை வசப்படுத்தும் இன்மொழியும்

நேர்த்தியான இஸ்திரிக்கப்பட்ட உடையும்

பொய் கூறிவிடலாம்


மகவற்ற தாய் மடிக்கு நற்புதல்வனாய்

ஆடவண் துணையற்ற பெண்ணின் தமையனாய்

ஈன்றவனற்ற பிஞ்சு மழலையின் தகப்பனாய்

சகமும் பகிரும் தோழனாய்

உறவுமுறியடித்து விடலாம்


செஞ்சோலையும் சாலையோர நிழலும்

கொட்டும் அருவி மழைச்சாரலும்

வயலும் புல்வெளிநிலமும்

மலைத்தொடர் கடற்பரப்பு மணல் மண்ணும்

கண்ணிற்கு காட்சியற்றும் போகலாம்


முதல் விசும்பின் மழைத்துளியும் 

அதில் எழுnம் மண்வாசமும் 

பால்வாடை வீசும் மழலை அமுதும்

வெண்புகை பனித்துளி படர்ந்த மலர் மொட்டுக்களும் 

தேன் வண்டின் ரீங்காரத்தில் ஓடி விளையாடும் 

அணிலும் சிறு பட்சிகளும் இதமற்றுப் போகலாம்


அயலவர்களின் சலசலப்பான பேச்சுகளும் 

பத்திரிகை நடுப்பக்கத்து கிசுகிசுப்பான பேச்சுகளும் 

நவீன நங்கையின் நளினமான பேச்சிலும் 

காரியவாதியின் கபடமான பேச்சிலும் 

கடமையதிகாரியின் கடுமையான பேச்சிலும்

இனி சுவாரஸ்யம் குறைந்துவிடலாம்


அருளாசிபுரியும் இறைவனடி துணைநிற்காதென

அகவிழி சுடர் அணைந்து இருட்டான ஓர் 

ஓசையறியா அறையில் மேல் முகட்டில் கற்பனைத் திரையை 

அங்குமிங்குமாய் அலைய விடலாம்


காலன் பிடியில் கைவிலங்கின்றி இனி 

எவர் சித்தம் என்றே இங்ஙனம் இனிதாய் நிறைவேற்றிய 

மேடை நாடகத்தில் தன் கதாப்பாத்திரத்தை 

விருப்பு வெறுப்பின்றி நிறைவேற்றம் செய்யலாம்


நிர்க்கதியற்ற நிம்மதி தொலைத்தவனிற்கு 

அன்பாய் அருகில் அணைத்து அமர்ந்து 

தலைகோதி மடிமீது

ஒரு நிமிட பாசப்பிணைப்பிற்கு 

மனம் தேடும் அன்பானவர் இல்லாவிட்டால் 

அவன் சிரிப்பு போலி பிரதிபலிப்பாய் அமைந்துவிடலாம்






No comments:

Post a Comment

Your concern is appreciable. Thank you for the review

பெண்ணுக்குள் தேவதை

  பெண்ணுக்குள் புதிதாய் ஓர்  தேவதை பிறக்கின்றாள் அவள் வர்ணமற்றவள் அவள் உருவமற்றவள் அவள் உணர்வுகளால் வர்ணம் கொண்டு உணர்ச்சிகளாய் உருவம் கொள்க...