வடுக்களோடு வாழும் வாழ்விற்கு
கடந்துபோனவைகள் எல்லாம்
மறைக்கப்பட்ட சுவடுகளே
கடற்கரை மணலில் பதித்த பாதம்தான்
அறியாத பலத்த அலையின்பின்பும்
அதன் சுவட்டின் நிழல்களை
நீ நினைக்கமுன்னே
எழுதப்பட்ட விதிக்கணக்கை
மாற்றியமைக்க காலனுக்கே
காலம் கெடுவைத்தது
மரணத்திலாவது இன்பம் கொள்ள
இந்த விதிக்கு ஏன் மனம் இன்னும் கல்லானது
நீயறியாத என்னை நானென
காட்டிக்கொள்ளாத காதல்
பல நாட்கள் பகலிரவுகள்
இரகசிய முகப்புத்தகத்தில்
பேசிய அன்பின் பரிபாஷைகளை
என்றும் உனக்கான தேடல்தான்
விதிக்கப்பட்ட காதலாகியது
தொலைத்த இடம் வேறு
கிடைத்த இடம் வேறு
தடமாறிய பாதையில்
குரல் வந்த திசையெல்லாம்
வெளிச்சம் என்றெண்ணிய
குருட்டு விழிகளுக்கு
கைத்தடி மேல் இனி நம்பிக்கையில்லை
யாதுமாய் கண்ட யாதும் நீயாய்
கண்ட காட்சிகள் பொய்க்க
யாரோவாகிய நிஜம் மட்டும் கைகளில்
ஏந்திக்கொண்டு மன்றாடிக்கேட்கத்
தகுதியில்லாதவளாய்க் கேட்கின்றேன்
மீண்டும் ஒருமுறை வந்துவிடு
இறுக்கமாய் உன்னை பற்றிக்கொள்கின்றேன்
தொலைவாய் இரு யாரோவாய் இரு
என்னை நினையாமலிரு
உன்னை மறவாமலிருப்பேன்
தொலைத்த படலம் இங்கு என்னில் மட்டும்
அமரகாவியமாகட்டும்
என்றோ ஒருநாள் சேதிகள் கிட்ட
இரண்டு சொட்டு கண்ணீர் கூட
வேண்டாம் எனக்கு
பாதி மனமாய் வழியனுப்புகிறேன்
முழுமனதிலும் நினைவுகள் மட்டுமே
மிச்சம் வைத்துக்கொண்டு
கல்லறைப்பூவுக்குள் தெய்வீகவாசம் தேடி
துளசிமாடத்தில் படர்ச்செய்ய நினைத்தாய்
வாசம் தந்த மல்லிகை
என்னை மறக்கச்செய்ததுபோலும்
தேர்வுகளில் மீண்டும் கல்லறை மலரானேன்
உன் தேர்வு மிகச்சரியானவை
பிழையான என்னைத் தவிர்த்துவிடுதலின் பின்
எனக்கு மட்டும் சிறிதாய் தெரியும்
இந்த யாக்கையில் யார் கனவுகளிலும்
எனக்கான கவிதைகளை மீட்ட
படைத்தவன் இன்னும் கிறங்கவில்லைபோலும்
ஆனால் ஒன்று் மறந்துவிடாதே
நடைபிணத்தின்மேல் நீ எய்தன்பு
சிறுநொடி உயிர்பித்து எழச்செய்தது
நீ வாழ் அது போதும்
யாரோ உன் கரங்களைப் பற்றும்போது
என் விரல்களுக்கு வலிக்காது இருக்கட்டும்
அன்று ஒன்றாய்க்கலந்த சுவசம்
என் இறுதி மூச்சிலிருந்து
விதி பிரித்தெடுத்து தன் வெற்றியை
முழுமையாய்க் கொண்டாடட்டும்
தொலைந்த நான் என்றும் தேடப்படாமலிருக்க
கனவுகளுடன் மீண்டும் உன்னைக் காதலிக்கின்றேன்