Sunday, January 23, 2022

கனவுகளுடன் காதலிக்கின்றேன்

 


வடுக்களோடு வாழும் வாழ்விற்கு

கடந்துபோனவைகள் எல்லாம் 

மறைக்கப்பட்ட சுவடுகளே

கடற்கரை மணலில் பதித்த பாதம்தான்

அறியாத பலத்த அலையின்பின்பும்

அதன் சுவட்டின் நிழல்களை


நீ நினைக்கமுன்னே

எழுதப்பட்ட விதிக்கணக்கை

மாற்றியமைக்க காலனுக்கே 

காலம் கெடுவைத்தது

மரணத்திலாவது இன்பம் கொள்ள

இந்த விதிக்கு ஏன் மனம் இன்னும் கல்லானது


நீயறியாத என்னை நானென 

காட்டிக்கொள்ளாத காதல் 

பல நாட்கள் பகலிரவுகள்

இரகசிய முகப்புத்தகத்தில்

பேசிய அன்பின் பரிபாஷைகளை

என்றும் உனக்கான தேடல்தான்

விதிக்கப்பட்ட காதலாகியது


தொலைத்த இடம் வேறு 

கிடைத்த இடம் வேறு

தடமாறிய பாதையில் 

குரல் வந்த திசையெல்லாம்

வெளிச்சம் என்றெண்ணிய 

குருட்டு விழிகளுக்கு 

கைத்தடி மேல் இனி நம்பிக்கையில்லை


யாதுமாய் கண்ட யாதும் நீயாய் 

கண்ட காட்சிகள் பொய்க்க

யாரோவாகிய நிஜம் மட்டும் கைகளில்

ஏந்திக்கொண்டு மன்றாடிக்கேட்கத்

தகுதியில்லாதவளாய்க் கேட்கின்றேன்

மீண்டும் ஒருமுறை வந்துவிடு

இறுக்கமாய் உன்னை பற்றிக்கொள்கின்றேன்


தொலைவாய் இரு யாரோவாய் இரு

என்னை நினையாமலிரு 

உன்னை மறவாமலிருப்பேன்

தொலைத்த படலம் இங்கு என்னில் மட்டும் 

அமரகாவியமாகட்டும் 


என்றோ ஒருநாள் சேதிகள் கிட்ட 

இரண்டு சொட்டு கண்ணீர் கூட

வேண்டாம் எனக்கு

பாதி மனமாய் வழியனுப்புகிறேன்

முழுமனதிலும் நினைவுகள் மட்டுமே

மிச்சம் வைத்துக்கொண்டு


கல்லறைப்பூவுக்குள் தெய்வீகவாசம் தேடி

துளசிமாடத்தில் படர்ச்செய்ய நினைத்தாய்

வாசம் தந்த மல்லிகை 

என்னை மறக்கச்செய்ததுபோலும்

தேர்வுகளில் மீண்டும் கல்லறை மலரானேன்

உன் தேர்வு மிகச்சரியானவை

பிழையான என்னைத் தவிர்த்துவிடுதலின் பின்


எனக்கு மட்டும் சிறிதாய் தெரியும் 

இந்த யாக்கையில் யார் கனவுகளிலும்

எனக்கான கவிதைகளை மீட்ட

படைத்தவன் இன்னும் கிறங்கவில்லைபோலும்

ஆனால் ஒன்று் மறந்துவிடாதே

நடைபிணத்தின்மேல் நீ எய்தன்பு

சிறுநொடி உயிர்பித்து எழச்செய்தது


நீ வாழ் அது போதும் 

யாரோ உன் கரங்களைப் பற்றும்போது 

என் விரல்களுக்கு வலிக்காது இருக்கட்டும்

அன்று ஒன்றாய்க்கலந்த சுவசம் 

என் இறுதி மூச்சிலிருந்து

விதி பிரித்தெடுத்து தன் வெற்றியை

முழுமையாய்க் கொண்டாடட்டும்

தொலைந்த நான் என்றும் தேடப்படாமலிருக்க

கனவுகளுடன் மீண்டும் உன்னைக் காதலிக்கின்றேன்


Tuesday, October 12, 2021

சிதைந்த மலர் துளிர்கின்றது

 





அவள் ஜடைகளை ரிப்பன் கொண்டு முடியும்போதே

ஒரு குறுகிய வட்டத்துள் கட்டப்பட்ட கைபொம்மையாகிவிட்டாள்

சோகம் கண்ணீர் துக்கம் துயரம்

அவமானம் சகிப்புத்தன்மை போன்ற உணர்ச்சிக்கயிறுகள்

இன்னுமும் அவளை கட்டிப்போட்டிடத்தான் செய்கின்றன

உதிர்ந்து விழும் கேசத்தின் வாயிலாய் நீயும் அதற்கு ஒப்பானவள் என்றே சின்னஞ்சிறு பிராயத்திலே 

ஊட்டப்பட்டு வளர்க்கப்படுகிறாள்

பருவங்கள் ஏற உருவங்கள் மாற பாவாடை தாவணியோ அவளை பாதி ஆயுட்கைதியாக்கியது

விருப்பங்களைத் துறந்த துறவியேனும் ஊராரால் போற்றப்பட இவள் மட்டும் ஊர் கண்ணிலிருந்து மறைந்துமே தூற்றப்படுகிறாள்

எள்ளி நகையாடும் பள்ளி வயதில் புத்தகம் சிலேடை பென்சில் வேண்டிய பாலகி அவளுக்கோ கிடைத்தது தாலி மற்றும் கணவன் என்ற புதிய சாபம் அதுவோ அந்நாளில் குழந்தைத் திருமணம்

அங்கே ஆரம்பித்தது அம்மலரின் முதற்சிதைவு

பொம்மையை வைத்து விளையாடிய அவளுக்கோ தானும் பொம்மையாகிவிடக்கூடாதென்ற முடிவில் 

வெகுநாட்கள் அச்சத்தினால் கட்டப்பட்டிருந்த சங்கிலியை

அன்று முதன்முதலாய் கழற்றிவைத்துவிட்டு ஓடிவிட்டாள் 

அவளைப் பெற்றவர் வீட்டிற்கு

பாவம் அவள் அதை கழற்றிவைத்துவிட்டு ஓடியிருப்பதற்குப்பதில் உடைத்தெறிந்திருக்கலாம்

மீண்டும் அச்சங்கிலி பொருத்திவைக்கப்படும் என்று அறிந்திடாதவள்

தாழ்ந்த சமூகமென படைப்புகளை பிரித்துப் பார்த்திடும் வள்ளோர் வாழ்ந்த சமூகம் அவளுக்கோ அது நரகம்

அடிமைத்தனம் மேலோங்க வாட்டமடைந்த மலர் இன்னும்

சிதைக்கப்பட்டுக்கொண்டுதான் இருந்தது

மரணம் எனும் ஒரு முடிவை அவள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்றுக்கொண்டிருக்கலாம்

ஆனால் என்றோ யாரிடமோ தனக்கான நீதி கிடைக்குமென்ற நம்பிக்கை கொண்டவளுக்கு நீதி நெறி நழுவி அங்கேயே

கொடும் துயரம் நிகழ்ந்தது

நீதியும் நிலைக்கவில்லை அவளுக்காய் குரல் கொடுக்க யாருமில்லை

கையில் ஏந்தினாள் ஆயுதம் தன்னை நிலைகுலைய வைத்தவருக்கெல்லாம் சல்லடை போட்டு தனக்கான நீதியை தானே பெற்றுக்கொண்டாள்

பாஞ்சாலி துகிலுரிய பரமாத்மா ஶ்ரீ கிருஷ்ணன் சேலை வழங்கிய அற்புதம் இங்கு இவளுக்கேன் நிகழ்த்தப்படவில்லை? தாழ்ந்த குலமா? இல்லை அக்கினியால் பிறப்பெடுக்காத தேவமங்கையல்லாத ஒரு சாதாரண பெண்மணி என்ற நிலையா? 

ஆனால் இன்று அவளது கட்டிவைக்கப்பட்ட ஜடை அவிழ்ந்து காற்றில் அலை மோதும்போது அவளைக்கட்டி வைக்கப்பட்டிருந்த சங்கிலிகள் உடைத்தெறியப்பட்டிருந்தன

அவளுக்கான சுதந்திரம் அன்று யாராலுமல்ல 

அவளினாலே கிடைக்கப்பட்டது

அவளை எத்தனையோ பெயர் கொண்டு அழைக்கப்பட்டிருந்தாலும் பூலான் தேவி என்ற 

மலர் எத்தனையோ சிதைவுகளுக்குப் பின்னும் 

தனக்கான சுதந்திரத்தின் மூலம் மலரத்தான் செய்தது

பெண்ணிற்கான சுதந்திரம் கெஞ்சிப் பெறுவதுமல்ல 

யாரும் வழங்குவதுமல்ல அது அவளிடத்தே இருப்பது

எங்கே அவள் ஓங்கி மிதிக்கப்படுகிறாளோ அன்று அவளாய் அச்சுதந்திரத்தை உணர்வாள் 




Saturday, October 9, 2021

எனக்கான அன்பு

 





சலித்துவிட்ட இதயத்துடன் நான்

ஒவ்வொருவரையும் நெருங்கும்போது

மீண்டும் அவர்களிடத்தில் எனக்கான 

அன்பு முழுமைபெறாத என்ற 

ஏக்கம் மட்டும் வினாக்குறியாகின்றது


அவர்களிடத்தில் எனக்கான அன்பு 

மிகையானதும் அல்ல  ஆடம்பரமானதும் அல்ல

ஒரு துளியேனும் இரு கைகளுள் 

பொத்திவைத்த வெளிச்சம்போல

என் நினைவால் அவரவர் மனதில் பதித்து

வைக்கப்படும் சிறு நியாபகங்கள் மட்டுமே


புத்தகம் நடுவே திருட்டு மயிலிறகு

குட்டிபோடும் கதை எனக்கான அன்பு

கொஞ்சம் நகைத்தாலும் அதனுள் 

மறைந்திருக்கும் பித்து சிறு குழந்தையின் 

அன்பிலே தெய்வீகமாய் உணரப்படும்


திகட்டத்திகட்ட சுவைக்கும் ஒவ்வொரு 

கனி இதழ்கள் முடிவிலும் நாவூரும் 

எச்சில் எனக்கான அன்பு

அதுவும் ஒருவகை மீளமுடியாத சிறு போதை 

சிலரினால் மட்டுமே உணர முடியும்


சத்தமில்லாத இரவுநேர அழுகையில்

கண்ணீர் ஏந்தும் நண்பன் 

தலையணை எனக்கான அன்பு

ஆழ்ந்த ஆறாத வடுக்களின் ரணங்கள்

வழியும் கண்ணீரோடு ஓர் சிறு தூக்கம்

காலை விழித்ததும் எல்லாம் மாறிவிடுமென்ற புன்னை


நன்கு பரீட்சயமான பழைய பாடல் வரிகளில் 

தெரிவு செய்து உதடு முணுமுணுக்கும் 

வரிகள் எனக்கான அன்பு

மொழிகளை விட மௌனங்களில் அன்பை தேடும்

என்போல் இதயங்களினால் மட்டுமே 

வரிகளுக்கும் உயிரூட்ட முடியும்.



Sunday, March 28, 2021

Rest In Peace

  



முகநூலிலும் சரி 

முகமறியா நபராயினும் சரி

Rest In Peace என்று கடந்துவிட 

ஏனோ ஒப்புக்கொள்ளவில்லை

சிலரது மரணச்செய்திகள்


படுக்கையிலே பல காலம் தத்தளிப்பவன்

வேண்டிக்கூட இரங்காத கடவுள்

விருப்பம் உள்ளவன் வாழ்வைத் தட்டிப்பறிக்கின்றான்

காரணம் கேட்டால் விதி வலியது என்று பழிபோடுகின்றான்


வாழ்நாளெல்லாம்  வறுமையில் வாடியவன் 

வசதி வந்து அனுபவிக்கும் தறுவாயில் 

வாழ்விழந்துபோகிறான்

சமுத்திரத்தின் கரை தாண்டி நிலம் தொடும் நிமிடம்

பலன் பெறமுன் கரைந்து போகின்றான்


இலட்சியங்களில் திமிர் கொண்டவன் 

சுயவிருப்பை துறக்கின்றான்

விருப்பங்களின் தேவை விரலளவு முட்ட 

விசும்பைத் துறக்கின்றாய்


ஆண்டாய் அளந்தாய் ஆசையுறவுகள் பல கண்டு 

மாண்டாய் மண்ணில் என்னும் வரலாறு தாண்டி 

பிறப்பின் பயன்காணா வயதில் உலகெய்தினாய்

சிறுபயிர் கருகியதன் வலி கண்களில் நீராய்


இறப்பிற்கு நியதியும் இல்லை எல்லையும் இல்லை

நிழல்களாய்த் தொடரும் ஏதோ ஓர் உறவிற்கு மட்டும் 

ஏன் இதயத்தைப் படைத்து அதில் 

ரணங்களை பதிக்கின்றோம்


ஆன்மாவிற்கு உடல் உறவல்ல ஆனால் 

மனிதம் மற்றும் பகுத்தறிவு எங்கோ 

ஓர் துயர் சம்பவத்தில் 

தன்னையறியாது உளவேதனையுடன் 

விட்டுச்செல்கிறது 

Rest In Peace 


Tuesday, November 10, 2020

இரகசியக் காத(லி)(லன்)


 















பிரபஞ்சத்தினளவு காதல் கொண்டும்

அதை வார்த்தைகளால் வரிகளால் 

விபரிக்க தயங்கிய உள்ளங்களே

இரகசியக் காத(லி)(லன்)


எல்லையற்ற ப்ரியங்களை மொழியால் எல்லைத்தடுப்பிட்டு ஏமாற்றத்தினை

இரட்சிக்க விரும்பாத ஒருதலைக்காதலர்கள்

இரகசியக் காத(லி)(லன்)


முகநூலில் கள்ளமாய் உன் புகைப்படம் 

நோட்டமிட்டு எச்சிற்படாத முத்தச்சுவடு

நித்தம் பதிப்பதில் வல்லவர்கள்

இரகசியக் காத(லி)(லன்)


நீ கண்விழிக்கும் நேரமறிந்து 

உன்னை முந்தி உன் முகம் தரிசிக்க

கண்ணயறாது காத்திருப்பவர்கள்

இரகசியக் காத(லி)(லன்)


உன் பார்வைக்காய்ச்சலில் தினம்

தீக்குளியல் செய்ய ஸ்நானத்தின் போது

மாயைக் காட்சியில் நாணம் கொள்வார்கள்

இரகசியக் காத(லி)(லன்)


தொண்டைக்குழியில் ஒருபருக்கை சோறு நுழைவதற்குள் எண்ணக்கருவில் உன் ஆயிரம் நினைவணுக்களை சுமப்பவர்கள்

இரகசியக் காத(லி)(லன்)


நிஜத்தில் காதல் பேச மறுப்பவர்கள் 

கனவு உலகத்தில் சிறப்பாய் வாழ்க்கை வாழ 

பல இரவுகள் கண்விழித்து உறங்குபவர்கள்

இரகசியக் காத(லி)(லன்)


தூரத்து நிலவு நம்மைத் தொடர்வதாய் 

எண்ணியே பிள்ளைப்பிராயம் கழியாமல் 

இன்றும் தொடரும் கதையில் கதாநாயகர்கள்

இரகசியக் காத(லி)(லன்)




Wednesday, October 28, 2020

நான் என்றும் என்னுடன்


 














நான் தனிமையில் வாடுவதாய் 

வதந்திகள் பல பேசப்படுகின்றன

தனிமையோடு உறவாடுவதாய் போலியான 

தகவல்கள் கசிந்துகொண்டிருக்கின்றன

நான் அலட்சியப்படுத்தப்பட்டதாய்

வசை நம்பிக்கையூட்டப்படுகின்றன

நான் மனவழுத்ததில் உள்ளதாய்

பலராலும் கணிக்கப்படுகின்றன

நான் என்றும் என்னோடு இருக்கின்றேன்


என் கண்களில் கண்ணீர் வரும்போதொல்லாம் 

என் கரங்கள் துடைத்துவிடுகின்றன

என் வழிப்பயணத்தில் என் பாதங்கள் 

முன்னேறிச்செல் என்று தட்டிக்கொடுக்கின்றன

என் பேச்சுக்களை என் மனம் செவிசாய்க்கின்றன 

மூளை அதைச் செய்ய எத்தனிக்கின்றன

என் கைவிரல்கள் படபடப்பான நேரங்களில் 

என் கை கோர்க்கின்றன

என் கண்கள் நான் மனச்சோர்வடைந்த நிலையில் 

என்னோடு விழித்திருக்கின்றன

இப்பொழுதாவது புரிந்துகொள்ளுங்கள்

நான் என்றும் என்னோடு இருக்கின்றேன்


நான் தனிமையில் வாடுவதாய் 

வதந்திகள் பல பேசப்படுகின்றன

இல்லை

நான் துணிச்சலான மனதுடன் 

அன்றாடம் போராட்டங்களில் 

வெற்றி வாகை சூடிக்கொள்கின்றேன்

தனிமையோடு உறவாடுவதாய் போலியான 

தகவல்கள் கசிந்துகொண்டிருக்கின்றன

இல்லை

நான் சுயமரியாதையுடனும் தன்நம்பிக்கையுடனும் 

நீண்ட கால உறவில் இருக்கின்றேன்

நான் அலட்சியப்படுத்தப்பட்டதாய்

வசை நம்பிக்கையூட்டப்படுகின்றன

இல்லை

நான் தீர்மானிக்கும் முன் நியதி நேர்மை 

மனசாட்சியிடம் 

ஒப்புதல் பெறுகின்றேன்

நான் மனவழுத்ததில் உள்ளதாய்

பலராலும் கணிக்கப்படுகின்றன

இல்லை

நான் மனதிடம் நேசிக்க மட்டுமே 

கற்றுக்கொடுத்திருக்கின்றேன் 

அழுத்தங்களை கண்ணீரோடு 

பகிர்ந்துகொள்கின்றேன்

எப்பொழுதும் தெரிந்துகொள்ளுங்கள்

நான் என்றும் என்னோடு இருக்கின்றேன்






என் பாதி நீ


 














என் பாதியாகிய அவனுக்கு

கற்பனைக்காகிதங்களில்

களையிழந்த கருவிழி மை கொண்ட 

கண்ணீர்த்தூரிகை முனையில்

யாரும் படித்திட முடியாத 

மடல் ஒன்று தீட்டுகின்றேன்


இருட்டின் ஒளி வீச

தலைசாய்த்த தலையணை தெப்பமாக 

மௌனமான வார்த்தைகள் கோர்த்து

யாரும் படித்திட முடியாத 

மடல் ஒன்று தீட்டுகின்றேன்


அச்சிடப்படாத அஞ்சல் முகவரி

வழக்கத்திலற்ற முத்திரை முகம்

பெயரற்ற பெறுநர்

என் கிழிந்த இதயத்தையும் 

இணைத்துப் பசையிட்டு

யாரும் படித்திட முடியாத 

மடல் ஒன்று தீட்டுகின்றேன்


கொடுங்கோபங்கள் வெடித்துச்சிதறும் 

தீக்குழம்பு அதை அன்பை வைத்து 

அணைத்துவிட எண்ணிய என்

முட்டாள்தனமான இதயத்தை

யாரும் படித்திட முடியாத 

மடல் ஒன்று தீட்டுகின்றேன்


இழைத்ததொல்லாம் பிழையென்றும்

பழிச்சொல்லுக்கு விலைபோகாது

நடந்தவை கடந்தவையாகட்டும் என்று

யாரும் படித்திட முடியாத 

மடல் ஒன்று தீட்டுகின்றேன்


கலைந்த முகிற்கூட்டங்கள் கண்ணுக்குள்

பல நிழல்களை விழச்செய்யினும் 

படிந்தது தூசியாகினும் அதைத் துடைக்காது 

காதலோடு கண்ணீர்ப்புன்னகை மலர

யாரும் படித்திட முடியாத 

மடல் ஒன்று தீட்டுகின்றேன்







Thursday, October 1, 2020

அஹிம்சையின் பொக்கிஷம்


 













அஹிம்சையின் பொக்கிஷம் ஒன்று கண்டீர்

அகிலமெல்லாம் அவர் புகழ் ஓங்கக்கண்டீர்

விழித்தெழும் மனிதம் விதையாய் 

மண்ணின்மைந்தர் அகவிழியில் 

முளைத்திட காரணம் கண்டீர்


பருத்தியின் பசுமை கண்டீர்

பணிவின் பெரும் சிகரம் கண்டீர்

கொடித்தொழும் செந்தணற்கோபம் கூட

முகச்சுருக்கத்தில் மறைந்திருந்த புன்னகையில் 

மறையக் கண்டீர்


அக்கினிக் குஞ்சொன்று கண்டீர்

அப்பழுக்கற்ற தேசபக்தி கண்டீர்

சுவாசிக்கும் ஒட்சிசனினும் கலப்படம் இருக்க

சுதந்திரக்காற்றே உயிர் மூச்சான 

மாமனிதன் கண்டீர்


முதுமையில் இளமை கண்டீர்

முகத்தில் கம்பீர பிரகாசம் கண்டீர்

ஓங்கி நிற்கும் பாரதக்கொடி

பல்தேச மக்களின் தொப்புள்கொடி

உறவெனக் கண்டீர்


ஈர்ப்புவிசை கண்டீர்

ஈரமற்ற இருதயம் கூட மாறக்கண்டீர்

அன்பு தான் அகராதி அகிம்சைதான் 

இலக்கணம் என்ற இலக்கியம் தீட்டிய 

எழுத்தாணி கண்டீர்


கற்களும் கரையக்கண்டீர்

கடமையுள்ளம் உயிர் நீர்க்கக்கண்டீர்

பெற்ற சுதந்திரம் ஒவ்வோர் வீட்டின்

நிம்மதி உறக்கத்தில் லேசான 

புன்னகை பூக்கக்கண்டீர்


தாரகமந்திரம் கற்றுத் தந்தீர்

தலைவிதி புதுவிதியாய் மாற்றித் தந்தீர்

பாரத அன்னையின் மானங்காக்க

பாரத மைந்தனாய் காவியம் ஒன்று 

தலைமுறைகள் தாண்டி கற்றுத் தந்தீர்


 

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...