இறைவா
உன் நல்லாசியுடன்
என்றும் திளைப்பூட்ட
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்
நெற்றிமீது தரிக்கும் குங்குமம்
மூன்று இச்சியளவு பெருமையுடன்
தினம் உச்சி ஏறுவதில்
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்
வாசம் வீசும் மலர்களும்
அப்பன் அண்ணன் இன்றி
அகிலமாய் ஆண்மகன் ஒருவன்
சூட்டி அழகுபார்த்திட
அருகதையுடையன் என்பதில்
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்
வரப்பிரசாதமாய் கழுத்தில்
மஞ்சட்குங்கும தாலிச்சரண்
கண்ணில் ஒற்றி கலியுகவரதனை
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்
மெல்ல நடக்கையில்
ஒலி மீட்டிடும் கால்விரல்களில்
வெள்ளியாய் மின்னும் மெட்டி
நரம்புகளில் சுருக்கென்று அவன்
அன்பை ஆயிரம் முறை நொடிப்பொழுதில் உணர்த்திடும்
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்
பட்டுவண்ண சேலையில் பரந்தாமன்
கைபட்ட வண்ணம் மடிப்புகள் கலைவில்
கசங்கிய காதல் மொழி உரைத்திடும்
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்
அறநெறிசாட்சியாய் அக்கினி சாட்சியாய்
அருந்ததி சாட்சியாய் ஆண்டவன் சாட்சியாய்
உற்றார் சாட்சியாய் உறவினர் சாட்சியாய்
நீழ்வாழ்வாய் ஏழ்ஜென்ம பந்தம்
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்
வெகுமதியாய்க் கிடைத்த புது சன்மானம்
அவன் பெயர்முன் இணைக்கும் சொல்லாகி
என் பெயர் மறக்க வந்த திருமதி
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்