Showing posts with label Women. Show all posts
Showing posts with label Women. Show all posts

Monday, June 1, 2020

உனக்கும் எனக்கும் விடுதலை

                                                                                              

















உனக்கும் எனக்கும் விடுதலை

கிடைத்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

நீ நீயாகிய விடுதலை. 

நான் நானாகிய விடுதலை.


எந்த முடிவுகளிலும் இருவர்பால் 

சார்ந்தவை எனும் கருத்தில் 

என் நச்சரிப்பிலிருந்து உனக்கு விடுதலை

நேரத்தை வீணாக்குகிறாய் என்னும் 

பழியிலிருந்து எனக்கு  விடுதலை


உன்நலனுக்காய் மண்றாடல்கள் பல

அக்கறையான கரிசணை தினம்

இதையெல்லாம் நிறுத்தியதில் 

எனக்கு விடுதலை

இதெல்லாம் மூடச்செயல் என்று 

முடக்கியதில் உனக்கு விடுதலை


அன்பான வார்த்தைகள் நேரடி சந்திப்புகள்

பேரிடியான சண்டைக்கு மருந்தென்பதில்

என்னை உதாசீனப்படுத்துவதிலிருந்து

உனக்கு விடுதலை

ஏங்கித்திவிக்கும் ஏக்கத்திலிருந்து

எனக்கு விடுதலை


ஒருமுறையாவது அழைப்பு விடுத்து 

ஹலோ எனும் வார்த்தையில்

அத்தனையும் பேசியதாய் 

மமதை கொள்ளும் 

என் நினைவுகளுக்கு விடுதலை

ஓர் வார்த்தையிலே முழுநடிப்பையும் 

காண்பிப்பதிலிருந்து உனக்கு விடுதலை


அன்புப்பரிசுகள் அன்பை மென்மேலும் 

வாரிவழங்களிலும் தேவைகள் அறிந்து 

பூர்த்தி செய்வதிலும் நேர்த்தியான உபாதை 

என்பதிலிருந்து எனக்கு விடுதலை

அதை கண்ணாடிப்பெட்டிக்குள் சலிப்போடு 

மறைத்து வைப்பதில் உனக்கு விடுதலை


முழுஉலகத்தையும் உன்னுள் செலுத்தி 

திக்கற்றவளுக்கு உன் ப்ரியமே துணை

என்பதிலிருந்து எனக்கு விடுதலை

என் உலகத்தில் நீ ஜடமாய்க்கூட

இல்லை என்பதை எனக்குணர்த்துவதிலிருந்து 

உனக்கு விடுதலை


எத்தனை ஆடவண் கண்ணில் படினும்

உன்னைத்தேடி நாடிவரும் என் 

சிந்தனையிலிருந்து எனக்கு விடுதலை

அதையே ஆணவமாய் எண்ணி

அநீதிசெய்யும் உனக்கு விடுதலை


வருடங்கள் கடந்தும் உனைமறவாத உயிர்

உடலில் இருந்து எனக்கு விடுதலை

வருடங்கள் தான் கடந்தாலும் 

பிடிகொடுக்காத உன் கோபம் கண்ணீரால்

இன்று உனக்கு விடுதலை


Wednesday, May 20, 2020

கடல் பெண்ணே



கடல் பெண்ணே

உன் கண்ணீர்தான் கடலில் 

உப்பாய்க் கரைந்ததோ

காலங்களும் கடக்க 

உப்பின் செறிவும் அதிகரிப்பதேன்

இன்னும் உன் கண்ணீர்கடல் வற்றாமையா?


கடல் பெண்ணே

உன் சீற்றம் தான் கொந்தளிப்பானதோ

பாரிய அலைவெள்ளத்தில் உயரம்

விண்ணளவைத்தாண்ட உன் கோபத்தணல்

இன்னும் எத்தனை துயரின் பிரதிபலிப்போ?


கடல் பெண்ணே

உன் பொறுமைதான் 

கடல் உள்வாங்கலானதோ

உள்ளிருக்கும் பொறுமை எல்லாம்

எரிமலைக்குமுறலாய் பொழியும் எரிதணலானதோ?


கடல் பெண்ணே

உன் புண்ணியம்தான் அலையானதோ

கறைபடிந்த பாதங்களை கூச்சமின்றி

கழுவி பாவவிமோட்ஷனம் அளிப்பதனாலோ?


கடல் பெண்ணே

உன் நட்புதான் சமுத்திரப்பயணமானதோ

நீண்ட தூர எல்லைகளுக்கு முடிவிடம்கொடுத்து

இரு எதிர்முகங்களுக்கு சந்திப்புக்கொடுப்பதாலோ?


கடல் பெண்ணே

உன் தாய்மைதான் கடல்மீன்களானதோ

வருமானமும் வருவாயும் தேடித்தர

வழிதேடுபவர்கள் வறுமை போக்குவதனாலோ?


கடல்பெண்ணே

உன்காதல் தான் கழிமுகமானதோ

ஆறோடு கூடல் செய்து

இனமற்ற காதலென நிலைநிற்பதனாலோ?



Tuesday, May 19, 2020

கோவிந்தனின் கொலுபொம்மை




இவள் கோவிந்தனின் கொலுபொம்மை 
அவன் பெயர் சொல்லும் கைப்பாவை
அவன் இசைவிற்கு அசையும் தலையாட்டிப்பாவை
பிரபஞ்சமெல்லாம் பரந்திருக்கும் பிரகலாதன்
பிறை கண்டு மகிழும் மெய்ப்பாவை
அதிதியின் மகனாம் ஆதித்யன்
அறம் அஞ்சாவாசம் கொண்ட அற்புதப்பாவை
பிறப்பையும் இறப்பையும் கண்டு
அஞ்சான் அஜெயன் அவன் புகழ் பாடும்
நாதம் இவள் சுவாசிக்கும் உயிர்ச்சுவாசம்
ஆவினங்களை நேசிக்கும் கோபாலப்பிரியன்
நாமம் கோலமாய் தரிசிக்கும் கோகிலப்பாவை
பிரபஞ்சத்தே ஆளும் பிரபஞ்சகுரு
ஜெகத்குரு ஜெயம் கொண்டானின்
விஜயமே காண வாசம் கொண்ட ஜெயப்பாவை
ஸ்பரிச தேஜஷ் பவளமாய் ஜொலித்திடும் 
சூரியக்கதிர்ப் பார்வையால் அகிலம் 
அன்பால் நனைத்திடும் ரவிலோசனன் 
இரட்சிக்கும்  இரத்தினப்பாவை
இராச லீலையில் மனம் மகிழும் இராதைக்கிருஸ்ணன் 
மீளாத காதல் கொண்ட மீராவின் கண்ணன்
மணிமகுடத்தில் மைதிலி சூடிய 
மயூராதிபதியே பதியாய் தியானிக்கும்
இவள் கோவிந்தனின் கொலுபொம்மை

Thursday, May 7, 2020

எனக்கு வேறு என்னதான் வேண்டும்



அகிலத்தோனே அன்பின் மதனனே  
அருகில் நீ இருக்க 
எனக்கு வேறு என்னதான் வேண்டும்


அச்சம் மிகுந்த சூழலில் நான் இருக்கிறேன் 
என்று இறுக என் கரங்களை அணைத்துக்கொள்வாய் 
பற்றும் உன் கரங்களில் பதிந்த என் கைரேகை
உன்னில் என் விதியைக் கோர்த்திட
எனக்கு வேறு என்னதான் வேண்டும்


தனிமையில் பிதற்றிடும் போதை 
தலைக்கேற நடுக்கத்தில் இதயம் 
இரண்டுமுழம் வெளியே பதபதைக்க
உப்பிப்போன வியர்வை விழியருகே
கண்ணீராய் உருவெடுக்கமுன்
தோள்பற்றும் உன் இரு கரங்களிலும்
தன்நம்பிக்கை கொடி படர வைத்திடும்
நீ இருக்க எனக்கு 
வேறு என்னதான் வேண்டும்


கடக்கும் கரடுமுரடான கடினமான 
பாதையில் இரயில் தண்டவாளங்களாய்
தூரதேசம் போகும் நெடும்பாதை
வழி மாறி தடம் புறழும் கணமெல்லாம்
முன்னுமில்லாமல் பின்னுமில்லாமல்
என்னோடு எடுத்துவைக்கும் ஒவ்வொரு 
அடியிலும் மலரும் ரோஜா புஸ்பத்தின்
மென்மை பாதங்களில் உணரவைக்கும்
நீ இருக்க எனக்கு வேறு என்னதான் வேண்டும்


ஆயிரங்காரணங்களால் முறிந்துபோகும் 
உறவில் அன்பால் சமச்சீர்நிலை
அளக்கும் அளவுகோல் விருசபர்வா 
சர்வஜனாய் என்னை நேசத்தால் நெசவு செய்யும்
நீ இருக்க எனக்கு 
வேறு என்னதான் வேண்டும்



Wednesday, May 6, 2020

மழைக்காற்று





வீதியோரமாய் வேலைப்பழுவில் விரக்தியில்
விரைந்து சென்றுகொண்டிருந்தேன் வீட்டை எப்படியாவது மணி ஆறுக்குள் 
அடைந்துவிடும் நோக்கில்
கொடியில் காயப்போட்ட உடைகளை எல்லாம் எடுத்து மடித்து வைக்க வேண்டும்
மதியம் மிஞ்சியதை குழைத்து வீதியில் திரியும் நாய்க்குட்டிக்கு வைக்க வேண்டும்
புதிதாய் ஏதும் சமைக்க வேண்டும்
வீடுவாசல் துப்பரவு செய்து சாமிப்படத்திற்கு 
விளக்கு வைக்கவேண்டும்
குளித்துவிட்டு நூலகத்தில் இரவல் 
வாங்கிய நாவலை வாசிக்க வேண்டும்
கடிதப்பெட்டியினுள் ஒரு கடிதமாவது 
இருக்குமா என எட்டிப் பார்க்கவேண்டும்
அப்பப்பா அடுக்கிக்கொண்டுபோகலாம் 
தனிமையில் வாழும் வாழ்க்கையின் அடுத்தவர் உதவியில்லா அட்டவணையை 
எண்ணிய எண்ணமெல்லாம்
சடார் என வெடித்தது நிமிர்ந்து பார்த்தேன் 
வானில் வெள்ளி நரம்புகள் தெரிய
சுற்றமும் இருள் சூழ 
கடாயுதம் கொண்டு எவனோ இடிக்கின்றான்
மழைவரப்போகிறது என எண்ணும் முன்னே
இதமான மழைக்காற்று என் விரக்தியை 
எல்லாம் தூக்கிவாரிப்போட்டது
எத்தனை இதம் தான் இந்த மழைக்காற்றில்
சுள் என்று குத்திய சூரியக்கதிரால் துளையின் 
வழி வழிந்த வியர்வை மாயமாகி உடல் குளிர்ந்தது
அதிரடியாய் குடை விரிக்க இறுக்கமான தழுவலுக்காய் என்னை ஓரடி பின் நகர்த்தியது
மண்வாசனை எல்லாம் திரட்டி நாசியில் உட்சுவாசத்தை ஒரு நொடி நிறுத்தியது
கூந்தல் இடைவெளிகளை வருடிவிட்டது
பின்புவரும் மழைக்கு முன்பு வந்த அழைப்பிதழ்
என்னையும் இந்த சபையின் நிகழ்வில் கலந்திட மண்டியிட்டது ஆனால் மனமோ
கொடியில் காயப்போட்ட உடைகளை எல்லாம் எடுத்து மடித்து வைக்க வேண்டும்
மதியம் மிஞ்சியதை குழைத்து வீதியில் திரியும் நாய்க்குட்டிக்கு வைக்க வேண்டும்
புதிதாய் ஏதும் சமைக்க வேண்டும்
வீடுவாசல் துப்பரவு செய்து சாமிப்படத்திற்கு 
விளக்கு வைக்கவேண்டும்
குளித்துவிட்டு நூலகத்தில் இரவல் 
வாங்கிய நாவலை வாசிக்க வேண்டும்
கடிதப்பெட்டியினுள் ஒரு கடிதமாவது 
இருக்குமா என எட்டிப் பார்க்கவேண்டும் என்றே என்னை ஏவியது. 
இருக்கட்டும் இன்று மழையில் தெப்பமாகத்தான் போகிறேன்
மழைக்காற்று என்னை துவட்டத்தான் போகிறது உங்கள் ஏவலை
நான் சரி செய்துகொள்வேன் எப்படியாவது
உலர்ந்த உடைகளை மீண்டும் துவைப்பதில் சிரமமில்லை 
மிஞ்சியதை இன்று அப்பளம் பொரித்து நானே உண்கிறேன்
மழையே என்னைக் குளிப்பாட்டி விடும் சாட்டாய் நாலு வாளி தண்ணீரில்
உடல் நனைப்பேன்
சுடச்சுட இஞ்சித்தேநீர் நாவல் வாசிக்க விழிப்பாய் இருக்கும்
கடிதம் இன்று மட்டும் அதிசயமாய் யார் எழுதிவிடப்போகிறார்
மழைக்காற்று வருடல் இன்றைய இரவிற்கு நிம்மதியான உறக்கம் தரும்

Tuesday, May 5, 2020

பாரதிகண்ணம்மா




பரந்த என்  சொப்பனங்களுக்கு 
கணவனே கதி என்று கடிவாளமிடாது
சிறகுகள்  நீட்டி வானுயறப்பறந்து 
எல்லை தாண்டி என் மமதையில் பங்கு 
கொள்ளும் வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்


எல்லையில்லா என் பயணங்களில் 
பிரயாணியாய் இல்லாமல் துணையாளியாய் 
எடுக்கும் முடிவுகளில் தீர்கமான தீர்ப்பளித்து
வழுக்களை இதமாய் எடுத்துரைக்கும் வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்


முதல் எழுத்துடன் தலை எழுத்துவரை
வீட்டின் தலைவன் என அங்கீகாரம் பெற்றும்
அடிக்கொருமுறை இல்லாவிடினும் அத்தி பூத்தாற்போல் 
என் ஆசையும் செவிசாய்த்து
நான் இல்லை நாம் என்று புரிந்துணர்வான 
இல்ல வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்


சலனம் ஏற்படும் வேளை எல்லாம்
சந்நிதியான் வழி செல்லாது
கற்புடமை அது பெண்ணிற்குமட்டுமன்று
ஆணிற்கும் தான் என்ற இலக்கணம் கொண்டு
இலக்கிய வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்


கோபக்கனல் கசியும் வேதனையில் உன் முகம் 
வாடும் வேளை எல்லாம் என் மடியும் என் கூச்சமற்ற தழுவலும் 
உன்னைத் தாங்கிக்கொள்ளுமென்பதை
ஒவ்வோர் ஆறுதலின் பின் உட்சாகம் கொண்டு மது சூது 
ஆரோக்கியத்தின் கேடு என்ற வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்


ஆடம்பரத்தால் ஆசை ஏற
ஆசையினால் மோகம் ஏற
மோகத்தினால் அனைத்தும் இழக்கும் நிலை ஆக
எளிமையான இனிமை இல்லறத்தில் தான்
நிம்மதி கொள்ள அன்பின் வித்திடும் வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்


நாவின் சுவைக்காய் மதி மயங்கி கலப்படமும்
விலங்கொழிக்கும் பாட்ஷாணமும் வெண்ணெய் தடவி 
கண்ணீர்கும் பல ஆகாரம் எதிலும் நாட்டம் கொள்ளாது 
மனையாளின் அறுசுவையில் அனுமனின் பலம் பெற்று 
கங்கை மாதா தூய்மை பெற்று 
அன்னபூரணி ஆசியுடன் சுகம் பெறும் வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்


இராமனைப்போல் வேள்வித்தீயில் விளக்கம் கேட்க 
அதில் விழுந்து விடைகொடுக்கவும் 
யுதிஸ்டன் போல் சூதில் மங்கையை 
பணயம் வைத்து விளையாடவும் 
பெண்ணை துயரில் தள்ளாது பச்சைமரம் எரிந்தால் என்ன 
எரியாவிடின் என்ன இவள் என்றும் என் பத்தினிதான் 
என்ற நன்மதிப்பால் அலங்கரிக்கும் வாழ்க்கைக்கு
நீ பாரதியானால்
நான் உன் கண்ணம்மா ஆகிறேன்

Friday, May 1, 2020

நன்றி நவில்கிறேன்



இறைவா
உன் நல்லாசியுடன் 
என்றும் திளைப்பூட்ட 
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்

நெற்றிமீது தரிக்கும் குங்குமம்
மூன்று இச்சியளவு பெருமையுடன்
 தினம் உச்சி ஏறுவதில்
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்

வாசம் வீசும் மலர்களும் 
அப்பன் அண்ணன் இன்றி
அகிலமாய் ஆண்மகன் ஒருவன்
சூட்டி அழகுபார்த்திட 
அருகதையுடையன் என்பதில்
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்

வரப்பிரசாதமாய் கழுத்தில்
மஞ்சட்குங்கும தாலிச்சரண்
கண்ணில் ஒற்றி கலியுகவரதனை
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்

மெல்ல நடக்கையில் 
ஒலி மீட்டிடும் கால்விரல்களில் 
வெள்ளியாய் மின்னும் மெட்டி 
நரம்புகளில் சுருக்கென்று அவன்
அன்பை ஆயிரம் முறை நொடிப்பொழுதில் உணர்த்திடும்
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்

பட்டுவண்ண சேலையில் பரந்தாமன்
கைபட்ட வண்ணம் மடிப்புகள் கலைவில்
கசங்கிய காதல் மொழி உரைத்திடும்
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்

அறநெறிசாட்சியாய் அக்கினி சாட்சியாய்
அருந்ததி சாட்சியாய் ஆண்டவன் சாட்சியாய்
உற்றார் சாட்சியாய் உறவினர் சாட்சியாய்
நீழ்வாழ்வாய் ஏழ்ஜென்ம பந்தம்
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்

வெகுமதியாய்க் கிடைத்த புது சன்மானம்
அவன் பெயர்முன் இணைக்கும் சொல்லாகி 
என் பெயர் மறக்க வந்த திருமதி
இந்த வரத்திற்காக
நன்றி நவில்கிறேன்


Sunday, June 9, 2019

காதல் அடங்காப்பிடாரிகள்



காதல் அடங்காப்பிடாரிகள் தான் 
எங்கள் பெண் சமூகம்
எதிலும் எங்களுக்கான காதல் 
அடங்குவதுமில்லை
ஒன்றில் ஏற்பட்ட காதல் 
தீர்ந்துபோவதுமில்லை.
பிறருக்காக எங்கள் காதலை 
விட்டுக்கொடுப்பதில்லை
பிறருடனான காதல் அவர்கள் வஞ்சித்தும் மனம் 
விட்டுக்கொடுப்பதில்லை
புத்தகத்தின் நடுப்பக்க மயிலிறகு பென்சில் சீவலில் 
வளர்வதுமில்லை
அஞ்ஞானம் தாண்டி அறிவு விழித்தாலும் 
தினமும் வளரும் என்ற நம்பிக்கை 
குறைவதுமில்லை
காதல் தோல்விகள் பெண்களுக்கானது
இல்லை
ஆண்கள் மனதில் அதற்கு அர்த்தம் சரியாகப் 
பதிவிடப்படவில்லை
தாய் வயிற்றில் கருவாய் தடம் பதித்த நாள் முதல்
கருவறைச் சுவரை காதல் செய்வாள்
அதன் மென் சூட்டின் கதகதப்பை சுவாசம் செய்வாள்
வெளி உலகை எட்டிப்பார்க்கையில் அவள் தாய் முகம் பார்த்து
சிரித்திட தந்தை எனும் புதுச்சூழலை தாய் அறிமுகம் செய்வாள்
இவளும் தன் காதலை அப்பா என்றே அன்புடன் பகிர்ந்துகொள்வாள்
நாளுக்கு நாள் அவள் வளர உறவுகளும் பெருக காதல் மட்டுமென்ன அணைக்கட்டில்லா ஆறாய் உருவெடுக்கும்
மனிதர்கள் இடத்தில் மட்டுமல்ல செல்லமாய் விளையாடிடும் பிராணிகளிடமும் ஆசையாய் வளர்க்கும் புல் பூண்டுகளிடமும்
அதன் வாட்டம் கண்டால் மனம் ஒடிந்து விடுவாள்
பாடப்புத்தகங்கிற்கு அழகாய் உறையிட்டு அலங்கரித்தவள் வர்ண வர்ணப் பேனைகளால் ஆசையாய் அவள் பெயர் பொறித்திடுவாள்
அடுப்படியில் கறி கிளறும் கரண்டிச் சத்தம் அரை அவியலிலே சுவை பார்த்து ஓய்வுகொடுக்கும்
பிசையும் சாதம் ஒரு பருக்கையாய் மிஞ்சும் வரை விருத்தோம்பலில் நளபாகம் தேர்வு பெற்றவள் தண்ணீர்குவளையுடன் சிரித்த முகம் மணம்வீச வந்தோரை காதல் செய்வாள்
காதலுக்கு தலைசிறந்த பரிசு தாஜ்மஹாலா? அவளிடம் அன்பாய் ஒரு பார்வை பார்த்துவிடு அதை ஆயுள் வரை அடிமனதில் தேக்கிவைப்பாள்
அவளுக்கு புடவைகளில் ஆபரணங்களில் அழகுசாதனப்பொருட்களில் காதல் ஏற்படாதா?
ஆம் ஏற்படும் தான். 
பிடித்த வர்ணங்களில் எடுப்பாய் காட்டிட புடவைகள் எத்தனை எடுத்தாலும் அம்மாவின் பழைய சேலையைக் கட்டி அப்பாவிடம் காட்டிடும் காதல் அவளிற்கு பெரியது.
தங்க விலை கூடிச்செல்ல சேமிக்கும் காசில் புதிய வடிவமைப்பில் வாங்கிவைக்கும் ஆபரணங்களோ இன்னும் பிறக்காத தன்மகளிற்கு தாய்வீட்டு சீதனம் என வாங்கி அழகுபார்க்கும் 
காதல் அவளிற்கு பெரியது
உதட்டுச் சாயமும் கருகண்மையும் தோற்றப்பொழிவு கொடுத்தாலும் வாசம் வீசும் வாடாமல்லிகை சூடி அதன்போதையில் கண்களால் புன்னகை செய்து கண்மையினால் குழந்தைக்கு திருஷ்டிப்பொட்டு வைக்கும் காதல் அவளிற்கு பெரியது.
கணவனிடத்தில் எப்பொழுது மனைவியாகத் திகழ்வாள்?
பெணகள் காதலி என்று சொல்லும் போதே மனைவியாகி விடுகிறாள்
மனைவி எனும் பொழுது உனக்குத் தாயாகிவிடுகிறாள்
உன் கோபத்திலும் சோகத்திலும் உன்னை விட்டுவிலகாது என்றும் காதலியாகின்றாள்
தன்துயர் துடைக்கவே சிறுநொடி சேயாகின்றாள்
பெண் என்றுமே ஒரு வட்டத்துள் இருந்ததுமில்லை
இறப்பின் நொடிவரை அவள் காதல் அடங்கிப்போவதுமில்லை
இனி அடங்காப்பிடாரி என நீங்கள் என்னை உச்சரித்தால்
தாராளமாய் ஏற்றுக்கொள்கின்றேன் மறவாமல் காதலையும் சேர்த்து
காதல் அடங்காப்பிடாரி என்றே கூப்பிடுங்கள்.

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...