Sunday, June 9, 2019

காதல் அடங்காப்பிடாரிகள்



காதல் அடங்காப்பிடாரிகள் தான் 
எங்கள் பெண் சமூகம்
எதிலும் எங்களுக்கான காதல் 
அடங்குவதுமில்லை
ஒன்றில் ஏற்பட்ட காதல் 
தீர்ந்துபோவதுமில்லை.
பிறருக்காக எங்கள் காதலை 
விட்டுக்கொடுப்பதில்லை
பிறருடனான காதல் அவர்கள் வஞ்சித்தும் மனம் 
விட்டுக்கொடுப்பதில்லை
புத்தகத்தின் நடுப்பக்க மயிலிறகு பென்சில் சீவலில் 
வளர்வதுமில்லை
அஞ்ஞானம் தாண்டி அறிவு விழித்தாலும் 
தினமும் வளரும் என்ற நம்பிக்கை 
குறைவதுமில்லை
காதல் தோல்விகள் பெண்களுக்கானது
இல்லை
ஆண்கள் மனதில் அதற்கு அர்த்தம் சரியாகப் 
பதிவிடப்படவில்லை
தாய் வயிற்றில் கருவாய் தடம் பதித்த நாள் முதல்
கருவறைச் சுவரை காதல் செய்வாள்
அதன் மென் சூட்டின் கதகதப்பை சுவாசம் செய்வாள்
வெளி உலகை எட்டிப்பார்க்கையில் அவள் தாய் முகம் பார்த்து
சிரித்திட தந்தை எனும் புதுச்சூழலை தாய் அறிமுகம் செய்வாள்
இவளும் தன் காதலை அப்பா என்றே அன்புடன் பகிர்ந்துகொள்வாள்
நாளுக்கு நாள் அவள் வளர உறவுகளும் பெருக காதல் மட்டுமென்ன அணைக்கட்டில்லா ஆறாய் உருவெடுக்கும்
மனிதர்கள் இடத்தில் மட்டுமல்ல செல்லமாய் விளையாடிடும் பிராணிகளிடமும் ஆசையாய் வளர்க்கும் புல் பூண்டுகளிடமும்
அதன் வாட்டம் கண்டால் மனம் ஒடிந்து விடுவாள்
பாடப்புத்தகங்கிற்கு அழகாய் உறையிட்டு அலங்கரித்தவள் வர்ண வர்ணப் பேனைகளால் ஆசையாய் அவள் பெயர் பொறித்திடுவாள்
அடுப்படியில் கறி கிளறும் கரண்டிச் சத்தம் அரை அவியலிலே சுவை பார்த்து ஓய்வுகொடுக்கும்
பிசையும் சாதம் ஒரு பருக்கையாய் மிஞ்சும் வரை விருத்தோம்பலில் நளபாகம் தேர்வு பெற்றவள் தண்ணீர்குவளையுடன் சிரித்த முகம் மணம்வீச வந்தோரை காதல் செய்வாள்
காதலுக்கு தலைசிறந்த பரிசு தாஜ்மஹாலா? அவளிடம் அன்பாய் ஒரு பார்வை பார்த்துவிடு அதை ஆயுள் வரை அடிமனதில் தேக்கிவைப்பாள்
அவளுக்கு புடவைகளில் ஆபரணங்களில் அழகுசாதனப்பொருட்களில் காதல் ஏற்படாதா?
ஆம் ஏற்படும் தான். 
பிடித்த வர்ணங்களில் எடுப்பாய் காட்டிட புடவைகள் எத்தனை எடுத்தாலும் அம்மாவின் பழைய சேலையைக் கட்டி அப்பாவிடம் காட்டிடும் காதல் அவளிற்கு பெரியது.
தங்க விலை கூடிச்செல்ல சேமிக்கும் காசில் புதிய வடிவமைப்பில் வாங்கிவைக்கும் ஆபரணங்களோ இன்னும் பிறக்காத தன்மகளிற்கு தாய்வீட்டு சீதனம் என வாங்கி அழகுபார்க்கும் 
காதல் அவளிற்கு பெரியது
உதட்டுச் சாயமும் கருகண்மையும் தோற்றப்பொழிவு கொடுத்தாலும் வாசம் வீசும் வாடாமல்லிகை சூடி அதன்போதையில் கண்களால் புன்னகை செய்து கண்மையினால் குழந்தைக்கு திருஷ்டிப்பொட்டு வைக்கும் காதல் அவளிற்கு பெரியது.
கணவனிடத்தில் எப்பொழுது மனைவியாகத் திகழ்வாள்?
பெணகள் காதலி என்று சொல்லும் போதே மனைவியாகி விடுகிறாள்
மனைவி எனும் பொழுது உனக்குத் தாயாகிவிடுகிறாள்
உன் கோபத்திலும் சோகத்திலும் உன்னை விட்டுவிலகாது என்றும் காதலியாகின்றாள்
தன்துயர் துடைக்கவே சிறுநொடி சேயாகின்றாள்
பெண் என்றுமே ஒரு வட்டத்துள் இருந்ததுமில்லை
இறப்பின் நொடிவரை அவள் காதல் அடங்கிப்போவதுமில்லை
இனி அடங்காப்பிடாரி என நீங்கள் என்னை உச்சரித்தால்
தாராளமாய் ஏற்றுக்கொள்கின்றேன் மறவாமல் காதலையும் சேர்த்து
காதல் அடங்காப்பிடாரி என்றே கூப்பிடுங்கள்.

Saturday, June 1, 2019

விலைமாதுக்களே! வரவேற்கின்றேன்


பெண்ணாக நான் இருந்துகொண்டு
விலைமாதுக்கள் ஆகிய உங்களை
இன்முகத்துடன் வரவேற்பதில்
பெருமிதமடைகின்றேன்

நீங்கள் விருப்பம் கொண்டோ
அல்லது உங்கள் விருப்பத்திற்கு
பிறம்பாகவோ விலைகூறி உங்களை
சமூகத்தில் அவப்பெயர் பெற்று
இத்தொழில் செய்கிறீர்கள்
இருந்தாலும் நீங்களும் பெண் தானே
உங்களின் வலிகளும் வேதனைகளும்
சிறிதளவாயினும் நானும் புரிந்துகொள்வேன்

பருவமடையும் முன் நானும் உங்களைப்பற்றி
அவதூறாகக் கதைத்ததுண்டுதான்
மானத்தை உயிராய் நினைக்கும்
பெண்கள் மத்தியில் அதை கூலிக்கு
நீங்கள் விற்பனை செய்வதால்
ஆனால் இன்று உங்களைப்
பெருமளவில் காணக்கிடைப்பதில்லை

உங்கள் விலையை உயர்த்திவிட்டீர்களோ
சட்ட ஒழுங்குகளுக்குக் கட்டுப்பட்டுவிட்டீர்களோ தெரியவில்லை
நீங்கள் நலிந்துவிட்ட இக்காலகட்டத்தில்
பருவமங்கையரை மட்டுமல்ல
பிஞ்சுக்குழந்தைகளையும் வயது முதிர்ச்சி பெற்று
இறக்கும் காலத்தை எண்ணி பொழுதைக் கழிக்கும்
மூத்தோரையும் வக்கிரகுணம் கொண்ட
காமுகர்கள் விட்டுவைத்ததில்லை
இரவில் மட்டுமல்ல பகலிலும் பொதுமக்கள்
நிறைந்த நிலையிலும் அவர்கள்
தயங்காமல் முன்னேறுகிறார்கள்

அவனை ஈன்றவள் ஒரு பெண்
அன்பாய் அண்ணா என பாசம் பொழிந்தவள் ஒரு பெண்
தம்பி என தலைதடவியவள் ஒரு பெண்
அவனை மட்டும் பதியாய் மானம் துறப்பவள் ஒரு பெண்
அவன் உருவாய் பிறப்பெடுப்பதும் ஒரு பெண்
என்பதை மறந்துவிடுகிறான்

பொது இடங்களிலும் நாங்கள் நிம்மதியாய்  

மூச்சுவிட்டிருக்கமாட்டோம்
அதையும் தட்டிக்கேட்ட யாரும் அங்கு ஆண்மகனாய் தெரியவில்லை
பொதுமலசலகூடம் கூடச்சுதந்திரமாய் செல்லமுடியவில்லை
பாவி இரகசியக் காமராக்களை எங்கெல்லாமோ மறைத்துவைத்திருக்கின்றான்

எங்கள் ஆடைதான் அவன் உணர்ச்சியை ஈர்ப்பதாயின்
புடவையில் அவன் அம்மாவைப் பார்த்திருக்கமாட்டானா?
இல்லை சுடிதாரில் அவன் அக்காவைப் பார்த்திருக்கமாட்டானா?
இல்லை பாவாடை அணிந்த தோழியைப் பார்த்திருக்கமாட்டானா?இல்லை ஜீன்ஸ் அணிந்த அவன் தங்கையைத்தான் பார்த்திருக்கமாட்டானா?
வயதுதான் புணர்ச்சியைத் தூண்டுவதெனில்
பாட்டிமார்களையும் எங்கு சென்று பத்திரப்படுத்தி வைப்பது?

விலைமகள்களே!
அரச அங்கீகாரம் பெற்று சுகநலதேகிகளாய்
வனப்புமிக்க தோற்றத்துடன் அரைகுறை ஆடையுடன்
வீதியில் நீங்கள் அலைந்து திரியுங்கள் அப்பொழுதாவது அவன் பார்வை சற்று விலகட்டும்

Sunday, May 12, 2019

மௌனராகம்





நான் பாடும் மௌனராகம்
இது ஒவ்வோர் மனதிலும் ஓடும் 
ஒருதலை ராகம்
இசை மீட்பதிலும் அதில் 
கானம் மெய்சிலிர்ப்பதிலும்
காதால் இரசிப்பதிலும் தான்
சுவைக்கப்பட்ட ராகம்
மௌனமாய் விழிகளில் வீணை
வாசிப்பதிலும் நெஞ்சார உறுத்தப்படுகிறது
சொல்லிய வார்த்தைகளுக்கு பல பொருள்
அர்த்தமாகிட சொல்ல வார்த்தைகளுக்குப்
பரிசாய் மௌனங்கள் நீடிக்கையில் 
என் ஒருதலை ராகம் மீட்டிப்பார்கிறேன்
வெளிப்படையாய் கூறமுடியாத சில ராகம்
மௌனத்தில் மட்டும் மௌனத்துடன் மௌனமாய்
பல கதைகள் பேசிடும் ஒருதலைராகம்
வெட்கம் காதல் அன்பு கோபம் வெறுப்பு 
சகிப்புத்தன்மை குற்றுணர்வு மனிதம்
பெண்ணியம் கடமை கற்பு ஏதோ ஒன்றாய்
மறைக்கப்படும் ஒவ்வோர் உணர்வும் சொல்லாத மௌனராகம் தான்

சைக்கோவின் காதல்





என்றுமில்லாதவாறு இன்றுமட்டும் 
ஏன் என் முகத்தில் ஒரு புன்னகை 
ஓடுகிற மின்விசிறியையும் மீறி 
நினைவுகள் எங்கோ ஓடிச்செல்கின்றன
கதிரை மேசைகளில் கோலம் போடத்தான் 
கைநகத்தினை சீராக்கி வைத்திருந்தேனா
புன்னகைக்கும் ஒவ்வொரு இடைவெளிக்கும் 
மூச்சுக்காற்று உனக்கானதாய் நெஞ்சை உரசிச் சென்றது
நீ எனக்கானவன் நீ எனக்குமட்டுமே ஆளானவன்
இந்த கர்வம் தான் இத்தனைக்கும் காரணமா
எத்தனை சண்டைகள் எத்தனை அழுகைகள்
சிரிப்பாக வருகின்றது அனைத்தும்
நம் குழந்தைகளுக்கு உணவூட்டும் போது நிச்சயம் 
இந்தக்கதைகளைச் சொல்லி அம்மாச் செல்லமாக்கிவிட வேண்டும் என்ற எண்ணமும் பனைமரத்தையும் தாண்டி வேலி போட்டது. எளிதில் பிடித்துவிட முடியுமா 
அதனால்தான் தேக்கி வைத்திருக்கின்றேன் கற்பனைகளை எல்லாம் 
கவிதை வரிகளாக.
உனக்கு ஆயுள் நூறு. வேண்டாம் நான் இறப்பதற்கு ஒரு நிமிடம் முன். 
கடைசி வரை உனக்கான சேவைகளை முடித்துக்கொண்டபின். 
எனக்கு என்ன செய்தி சொல்லப்போகின்றாய்
முதலில் என் நலன் விசாரிப்பாயா?
என் அணைப்பு வேண்டும் என்பாயா?
உன் சோகம் பகிர்ந்து கொள்வாயா?
ம்ம்ம்ம்ம் ஏதும் நல்ல செய்தி?
சரி சொல்லுடா 
வேண்டாம் போதும் வலிக்கிறது 
இதற்குமேல் என்னால் தாங்கமுடியாது
துண்டித்துக்கொள் அனைத்து அழைப்புகளையும்
அனைத்திலும் என்னை முடக்கிக்கொள்
வழமைபோலதான் நானும்
ஏன் என் முகத்தில் ஒரு புன்னகை 
ஓடுகிற மின்விசிறியையும் மீறி 
நினைவுகள் எங்கோ ஓடிச்செல்கின்றன
கதிரை மேசைகளில் கோலம் போடத்தான் 
கைநகத்தினை சீராக்கி வைத்திருந்தேனா
புன்னகைக்கும் ஒவ்வொரு இடைவெளிக்கும் 
மூச்சுக்காற்று உனக்கானதாய் நெஞ்சை உரசிச் சென்றது. இனி
நீ எனக்காவும் இல்லை எனக்காக உன்னிடமும் எதுவுமில்லை. 
இப்படியே என் நாட்களைக் கடத்திச்செல்கின்றேன்
கற்களும் சீமைந்துமாய் அலங்கரிக்கப்பட்ட 
உன் நினைவுகளுடன் மட்டும் நான்கு சுவர்களுக்கு மத்தியில் என்னை 
என்னால் அடையாளம் காட்டமுடியாத சைக்கோக்காதலியாய்

Wednesday, May 8, 2019

மௌனமான இரவு


இந்த இரவை மட்டும் பரிசாய்க் கொடுத்திடு
எனக்கான பல கேள்விகள் இருக்கு அதில் 
உன் மௌனம் மட்டும் பரிசாய்க் கொடுத்திடு 
என் உதடுகள் உன் பெயரை பல முறை சொல்லக்கூடும் 
உன் காதோரம் வெப்பக்காற்று வீசக்கூடும் 
பார்வைகள் இருட்டின் வெளிச்சத்தில் கெஞ்சக்கூடும் ஆனாலும் 
உன் மௌனமான பார்வையை மட்டும் 
பரிசாய்க் கொடுத்திடு 
என் வேதனைகள் எல்லாம் வார்த்தையாகிடும்
என் வலிகள் எல்லாம் கண்ணீராகிடும்
ஆனாலும் நீ மௌனமாய் என்னைப் பார்வையிடு
என் விம்மலான அழுகைக்கு உன் தழுவல் பலம் 
கொடுக்க கூடும் இருந்தாலும் மௌனமாய் இரு
எந்த அழைப்புகளையும் ஓரம்கட்டு
எந்த மொழிக்கும் செவிசாய்க்காதே
எந்த சிந்தனைகளையும் தூக்கிவீசு
எந்த நினைவுகளையும் நினைவுகொள்ளாதே
மௌனமாய் என்மீதுமட்டும் பார்வை கொள்
காந்தமான நெருக்கத்திற்கும் விரல்கள் தேடும் 
தேடல்களுக்கும் இந்த இரவை மட்டும் பரிசாய்க் கொடுத்திடு
இந்தனை நாட்கள் பிரிந்த ஏக்கத்திற்கும் என் கோபமான கொஞ்சிடும் மொழிக்கு 
இந்த இரவை மட்டும் பரிசாய்த் தந்து மௌனமாய் பார்வை வீசிடு 
உன் மார்போடு உறக்கத்தில் அதன் வலிகளைக் கரைத்துக்கொள்கின்றேன்


Thursday, April 25, 2019

ஸ்வர்ணலதா



யாருமில்லாத மாலைவேளையில்

தூறிய மழை நின்றபின் வரும்
சிலிப்பான காற்றுக்கு 
சுடச்சுடத் தேநீரும் 
போற்றிக்கொள்ள கதகதப்பான கம்பளியும் தான் 
அவள் குரலோசை
தேங்கிக் கிடந்த என் சோகங்கள் எல்லாம்
சோ என மழை பொழிந்தார்ப்போல்
கண்கள் நீர் நிறைக்க
தெம்பில்லாத உடலுக்கு அம்மாவின் வருடல் தான்
அவள் குரலோசை
உதிரம் வற்றிய நிலையிலும் பிளவுகளை எதிர்க்கொண்ட
உடலுக்கு உதிரவாடை வீச தன் குழந்தையைக் காணும்
தாயின் கண்ணீர்தான்
அவள் குரலோசை
பல நாளாய்ப் பட்டினி கிடந்தவன்
பசித்தெழும் வேளையில்
அறுசுவையுடன் பால்பாயாசம் வரை
அன்னமிடும் அன்னலட்சுமி
அவள் குரலோசை
யார் அவள்? அவள் குரல் என்ன இத்தகைய மகத்தானதா?
இத்தனை ஒப்பீடுகளும் ஒரு பெண்ணின் குரலுக்கா போற்றப்படுகிறது? எனக் கேள்விகளை எழுப்புபவர்களுக்கு
ஒன்று கூறுகின்றேன்
அவள் தான் ஸ்வர்ணலதா
நான் தேடும் பாடல்கள் எல்லாம் சொல்ல முடியாத
ஒரு உணர்வை உண்டு பண்ணிச் செல்லும்
பைத்தியக்காரிதான் நான் ஒரு பாடலை ஆயிரம் முறை
மனதில் பதியவைத்து எத்தனை நாட்டகளாய் என் தூக்கம்
தொலைத்திருப்பேன்
காதல் என்னை வஞ்சித்ததும் சில பாடல்களை மட்டும் மீண்டும் கேட்டு பின்னனிப்பாடகியும் ஆகியிருப்பேன்
பேரூந்துத் தரிப்பிடத்தில் நான் விரும்பும் பாடலுக்காய் 
எத்தனை பேரூந்துகளை வேண்டாம் என சைகை செய்திருப்பேன்
தொலைபேசியை நோட்டமிடும் நேரத்தை என் பழைய வானொலிப்பெட்டியில் சில பாடல் பாட அதை இரசித்த வண்ணம் சமையல் செய்திருப்பேன்
குளியலறையல் என் மேனி தொடுவது நான் முணுமுணுக்கும் சில பாடல்கள் தான். 
கடைசியில் தான் அறிந்தேன் அவை அனைத்தும் என் நாயகி
ஸ்வர்ணலாதாவின் குரலோசைகள்
என் வெவ்வேறு உணர்வுகளுக்கு விடையாய் அவள் பாடல் மட்டும் என்பது தான் என் ஆர்வத்தைத்தூண்டியது
குயில் பாடும் பாட்டுக்கு அதன் முகம் கண்டுதான் இரசித்திருந்தோமா? அதை எண்ணி என்னை சமாதானம் செய்துகொள்வேன்
அவன் குரல் மகத்தானது தான் 
ஏதோ ஓர் உறவைத்தேடி தூக்கம் தொலைத்த ஆண்கள் கூட விரித்தபாய் தலையணையுடன்
அவள் பாடலையும் சுவாசித்துக்கொள்வர்
என் காதற்பிணிக்கு என் புலன் மாற்றவல்லது அவள் பாடல்தான். வரிகளிலா ? அவள் குரல் அலைகளிலா? அபூர்வம் தெரியவில்லை. அவள் குரல் மென்னையிலே தான் வரிகளை நான் மீள மீள உதடுகளுக்கு உணவூட்டியதுண்டு
காலதாமதமாகித்தான் அவளைத் தெரிந்துகொண்டேன் அவள் மீண்டும் பூமிக்கு வரமுடியாத நிலையில். அவள் அர்ப்பணிப்பு அறிந்தது தான் தாமதம் அவள் குரலுக்கு மட்டுமல்ல அவளுக்கும் அடிமையாகி விட்டேன்
ஒன்று மட்டும் கூறுவேன் ஏதோ ஓர் உறவைத்தேடி உணர்வைத் தொலைத்து வெளியே சிரிக்கும் இதயங்களுக்கெல்லாம் அவள் குரல் சமர்ப்பணம்

Tuesday, April 23, 2019

முதல் முத்தம்




பேனைமுனை கண் நனைக்க
காகிதங்களோ கைக்குட்டையாய்
அதை வாங்கிக்கொள்ள
காகிதச்சிற்றபம் ஒன்று 
இறுதியாய் வரைந்தெடுக்கப்பட்டது
கருவில் சுமக்கா ஒரு பிள்ளை
என் மடிநனைக்க
விரல் நுனியில் காந்தவிசை
உன் தலைமுடி வழியே
உயிரப்பூட்டிட என்மடியோ
உனக்கு தாலாட்டும் தொட்டிலாகிற்று
கிடையாகவும் நிலைக்குத்தாகவும் 
முக்கோண வளைகுடாக்கள்
ஒன்றை ஒன்று உரசிச்செய்யும்
வெப்ப அனல்காற்றோ கொஞ்சம்
முன்னேறி தாகம் தணிய
நீர்வீழ்ச்சியைப் பருகிட தடைதான் விதிக்க
வெட்கம் கலந்த புன்னகையோ
பார்வையை இருட்டில் அலையவிட்டு
இதழ்களை மலரச்செய்தது
வழுக்கி விழுந்த கூந்தலை
நேர்த்தி செய்ய மரநிழலும்
குடைபிடிக்க
ஏனோ உஷ்ணமும் 
உள்ளூர ஊர்ந்தது
ம் என்று விடையளிக்க
மர்மமான தேடல் ஒன்றை
நீயும் நிகழ்த்தி வெற்றிகொண்டாய்
கூதல் காற்றில்லா மெய்சிலிப்பிற்கு
தீண்டும் உன் ஸ்பரிசம்தான் தீனிபோடுகிறதோ
நீளும் நேரமெல்லாம்
மயிர்த்துவாரத்தினுள் ஊடுருவிச் செல்கிறது
இத்தனை அழகான இதழ் செதுக்கத்திற்கு
அடிமையாகி போதை தலைக்கேறி
ஏதோ ஓர் எல்லையற்ற உலகில் 
உலாவித் திரிகின்றேன் 
மீண்டும் என் உயிரை என் உடலோடு கோர்த்துவிடு
முத்த அழைப்பின் முடிவினிலே

தீயின் மேற் காதற்கொண்ட இலவம் பஞ்சு



தீயின் மேற் காதற்கொண்ட இலவம் பஞ்சு
தீராத தலைவலிக்கு பற்றிட்டு 
தைலம் தேய்த்து
வெந்நீர் ஒற்றடம் பையக்கொடுக்க
நிம்மதியாய் தன்னை மறந்த ஒரு 
அசட்டுத்தூக்கம் தான் 
இலவம் பஞ்சு தீயின்மேற்கொண்ட காதல்
உனக்காய்ப் பிறந்த பாடல்வரிகள் கானம்
சொட்டச் சொட்ட
மெல்லியாதாய் வீசும் தென்றலுக்கு முகம் கொடுக்க
முடியா சொல்லா வேதனை தான்
இலவம் பஞ்சு கொண்ட காதல்
ஆர்ப்பரிக்கும் கடலுக்கு ஒற்றைக்கால் ஊன்றி
உறுதுணையாய் நிற்கும் வெளிச்ச விளக்கு
இலவம் பஞ்சின் காதல்
கசிந்து வந்த கண்ணீரெல்லாம் 
கல்லாற்று நீராய் நிரம்பி ஓட
தெளிந்த நீரில் கிறுக்கிய கிறுக்கலெல்லாம்
ஒன்றாய்ச் சேர்ந்தது
இலவம்பஞ்சின் காதல்
கொத்திச்சென்ற பட்சிகள் பல இருக்க 
காத்துக்கிடக்கும் காகம் பல இருக்க
மூடிவைத்த முத்துக்கு விலைதான்
இலவம் பஞ்சின் காதல்
இரயில் ஓடும் பாதையில் தள்ளிப்போகும் மரங்களை
வேடிக்கைபார்த்து உறங்கிப்போகும் 
சிறுபிள்ளைதான் இலவம் பஞ்சின் காதல்
தீயினாற்ச் சுட்ட வடு மாற்றி நாவினாற்சுட்ட 
வடு நீள தீயிற்கு இரையாகிடும் அர்ப்பணம்
எல்லாம் சமர்ப்பணம் ஆகிட
தீயிடம் காதல் கொள்ள காத்துக்கிடக்கும்
இந்த தீயின் மேற் காதற்கொண்ட இலவம் பஞ்சு

Sunday, March 10, 2019

அம்மா உன் புகைப்படம்


தூசும் சாம்பலும் படிந்த 
காட்சட்டையும் சேட்டும்
இடுப்பைவிட்டு வழுகிவிடாமல் இறுக்கமாய் வைத்திருக்கும்
அறுந்து தொங்கும் அப்பாவின் இடுப்புப்பட்டி
வெயிற்சூட்டிலும் சுள் என்று 
சுடுகிறதம்மா தலைக்கவசம்
அதை கழற்றிவைத்துவிட்டால்
போய்விடும் என்தேசம்
டிக் டிக் டிக் உடன்
என் இதயமும் சேர்ந்து
ஒவ்வொரு நொடிக்கும் துடித்துக்கொண்டிருக்கிறது
மூச்சு விட முடியவில்லையம்மா
சுற்றி எங்கும் மணல் மூட்டைகள்
இடையே தெரியும் நீக்கலுக்குள்
துப்பாக்கி முனைகள்
இரவுபகல் தெரியவில்லை
பசி வயிற்றைப் பதப்படுத்தி
கண்களை செருக்கிக்கொண்டது
இருந்தும் விழிப்புடன் இருக்கின்றேன்
உதிக்கின்ற சூரியக்கதிர்
என்மீது படுமென்றில்லை
என் தாய்க்கொடி காற்றில்
பறக்கும் போது கம்பீரமாக ஆதிக்கமற்ற
நிலையை ஊர்மக்கள் கண்டுகளிப்பதற்கு
குபீர் குபீர் என்று சன்னல்சத்தங்கள்
படையெடுப்பு ஆரம்பித்ததற்கான
ஆரம்ப மணியாய் கேட்கிறது
ஒரு கையில் துப்பாக்கி
மறுகையில் என் பணமுடிப்பு
பணத்தைப்புரட்டி வங்கியில்
வைப்பு செய்வதிற்கில்லை
முடியப்போகும் என் விதிக்கு
முற்றுப்புள்ளி வைப்பதற்கு முன்
வித்திட்டு என்னை பெருவிருட்சமாக்கிய
என் அம்மா உன் முகத்தை
தவமாய் ஒருமுறை
நேரில் காணாத பாவி நான்
உன் புகைப்படத்தை கண்ணீரால்
கழுவி பாவ விமோர்ச்சனம் பெறுகின்றேன்
தலைப்பிள்ளையாய் தந்தை உயிரை துறந்தபின்
வீட்டை மட்டுமல்ல நாட்டையும் பத்திரமாய் பாதுகாத்திட
என் தங்கைமார்போல் பல பெண்கள்
இரவில் அச்சமின்றி தூங்கிடவும்
பகலில் தைரியமாய்
வெளி உலகைக்கண்டிடவும்
என் கைகள் கறைபடிந்திட
இளவயதில் ஆயிதம் தரிக்க
உன் கண்ணீரால் என்னை
வழிமறித்தாய்
பாசம் என்னைக்கட்டியபோதும்
பலமுறை முயன்றுதான்
உன்னிடமிருந்து விடைபெற்றேன்
இருந்தபோதிலும் உன் கைபட்ட
ஆறியகஞ்சி வாசனை
என்னை உன் இடத்திற்கு
அழைக்குதம்மா
சூரியக்கதிர் படர்கிறதம்மா
வீட்டை இனி நன்கு நீ
திறந்து வைக்கலாம்
அலுமாரியில் அடுக்கிவைத்த
புதிய துணிகளையும்
அணிந்துகொண்டு கோயிலுக்குச் செல்லலாம்
போய்வரும் வழியில் தரைமட்டமாகி இருக்கும்
அந்தப்பெரிய மைதானமருகே சென்றால்
மகனே என ஒருமுறை அழுது
வாய்கரிசியும் போட்டுவிட்டுச் செல்
என் உடலை நீ கண்டுபிடிக்க
சிரமம் கொள்வாய் என நன்கு அறிவேன்
அம்மா உன் புகைப்படம் இறுகிப்பற்றியநிலையில்
தலையற்ற முண்டம் இருக்கும்
அதற்கு பிண்டம் வைத்து ஈமைக்கிரியைகள்
செய்வதற்கு வீணாய் அலையாதே
அதை வாரியணைத்து மகனே என
ஒருமுறை மட்டும் அழுதிடம்மா

கோணிப்பை


என்னைக்கூட தலைப்பாக எடுத்து
நேரத்தை செலவிட்டு
கவிதை படைப்பீர்கள் என
கனவிலும் நான் கண்டதில்லை
உயிரற்ற பொருள்தான் நான்
இருந்தாலும் இதயமுள்ளவர்கள் சற்று
எனக்காக ஒரு நிமிடம் ஒதுக்குங்கள்
ஆதிகாலத்தில் மனிதனின் திறமையால்
மெல்லிய சணற்கையிறுகளால்
பிறப்பெடுத்து கோணிப்பை என்றும்
பெயர் பெற்றேன்
இளவயதில் நான் துடிப்பாக
இருந்ததால் தான் என்னவோ
பொருட்களைப் பத்திரமாகப் பாதுகாக்க
என்னுள் வைத்து என் கழுத்தை
இறுக கட்டிவிடுவார்கள்
மூச்சுத் திணறலாக இருந்தாலும்
என்மேல் மனிதர்கள் கொண்ட
நம்பிக்கைக்காக வீரமாக சகித்துக்கொள்வேன்
சற்று நான் நடுத்தர வயதை அடையவே
வீட்டை அலங்கரிக்கவும்
சுவரில் உள்ள ஓட்டை உடைசல்களை மறைக்கவும்
பலர் என்னைப் பங்குபோட்டார்கள்
வீதியில் படுக்கும் ஏழைகளுக்கு
கதகதப்பளிக்கும் கம்பளி வீடும் நான் தான்
என் கிழப்பருவத்திற்கூட
கால்களைச் சுத்தம் செய்யும் பொறுப்பளித்து
வாசற்படி அருகே என்னை விட்டுவிடுவார்கள்
நீங்கள் எத்தனை பருமனாக
இருந்தாலும் என்னை நம்பி
வாழ்வாதாரத்தை நடத்தும்
குடும்பங்களை எண்ணி
பொறுமை காத்திடுவேன்
இப்படியே என் சந்ததியினர்
வாழ்ந்து கொண்டிருக்கும்
இந்த பூமியில்
நவீன மார்க்கம் தழுவும் இந்த மனிதர்கள்
எங்களைத்திரும்பிக்கூட பார்ப்பதில்லை
அவர்களுக்கு எம்மவர்களைக் கண்டால்
வெட்கம் போல இருக்கிறது.
நான் சுயநலவாதி அல்ல
என்னை நம்பியவர்களை
கைவிடக்கூடாது என சிறு நல்ல உள்ளம்தான்
ஏதோ ஒருவகையிலாவது
என்னைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
அல்லது எங்களை நம்பி வயிற்றை நிரப்பும்
ஏழைகளுக்கு ஏதாவது வழியைக்காட்டுங்கள்
இப்படிக்கு உங்கள் தாத்தா வீட்டில்
ஒருமூலையில் முடங்கிக்கிடக்கும்
வயது முதிர்ந்த
கோணிப்பை

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...