Showing posts with label Society. Show all posts
Showing posts with label Society. Show all posts

Sunday, May 24, 2020

பிறைதேடலாம் வா





மிதிக்கும் துவிச்சக்கரவண்டி பெடல்களில்

பாதம் நான் வைக்க பயணம் நீ துவக்க

நீண்ட தூரம் செல்கிறோம்

பிறைதேடலாம் வா


அடர்ந்த மரக்கிளைகளில் கொஞ்சும்

கிளிக்கூட்டம் கொஞ்சம் வெட்கப்படும்

அழகை இரசித்தவாறே

பிறைதேடலாம் வா


கோடி நட்சத்திரங்கள் மினுமினுக்க

கோகிலவாணியின் பட்டம் வானுயறப்பறந்து

வாகைசூட சூறைக்காற்று புலுதிகிளப்ப

பிறைதேடலாம் வா


ஐயர் ஆத்தில் தயிர்சாதம்

ஆண்டனி வீட்டில் திருக்கைமீன் வறுவல்

ஆச்சிக்குடிசையில் நெய்முருங்கைச்சாதம்

வாசனைப்பிடியில் வயிறு தவிக்க 

பிறைதேடலாம் வா


புலுங்கலரிசிச்சோறு பருப்பு பயற்றை

பூசிணி கத்தரிக்காய்கறி மொறுமொறு உழுந்துவடை

அப்பளம் மோர்மிளகாய்ப்பொரியல்

தலைவாழையிலையில்

தண்ணீர்தெளிச்சு

தண்ணீர்க்குவளையும் அருகில்

சதுர்த்திவிரதம் முடிக்க காத்திருக்கு

பிறைதேடலாம் வா


பாய்வீட்டு கோழிப்பிரியாணி நண்டுவறுவல்

இரால்பொரியல் ஆட்டுக்கால் சூப்புடன் 

வெட்டி அலங்கரிக்கப்பட்ட அன்னாசி ஆப்பிள்

மாதுளை கிண்ணத்தில் வட்டிலப்பம் மஸ்கட்டும்

சவான் முடிக்க பாட்டாளிக்கூட்டம் காத்திருக்கு

பிறைதேடலாம் வா


ஆதிசிவன் முடியில் சிக்கிய பிரம்மவிஷ்ணு 

புது அவதாரம் காண கண்ணைக் கசக்கி

தெளிவாய்த்தேடும் அல்லா அருவமாய்

தேடச்சொன்ன பொக்கிஷப் புதையல் காண

பிறைதேடலாம் வா

Saturday, May 9, 2020

முகத்திலிரண்டு புண்ணுடையோர்




அறம் ஏற்று அகம் பெருமிதம் 
கொள்ளக் கற்றோர் முகத்தில் இரு கண்களும் 
அறிவிலார் கல்லாதோர் முகத்திலிரண்டு 
புண்ணுடையோர் என வள்ளுவன் வாக்கில்
சற்றுத் திருத்தம் அதை எழுதிக்கொள்வீர் 

கற்பதிலும் அதை மனதார ஏற்பதிலும் 
முற்போக்குச்சிந்தனையாய் எழுத்தறிவித்தவனே
அநீதி கண்டும் சீறும் தணல் சீற்றம் தாழாது 
விழியோரம் சிறு வெறுப்பைக் காண்பிக்காதவரே
முகத்திரண்டு புண்ணுடையார்

வஞ்சனையே வைராக்கியமாய் அகில 
நன்மைபயப்பிப்போர்  சூழ அராஜகமாய்
இன்றும் பல திரௌபதிகளின்  வஸ்திரம் 
களைய வல்லவர்களின் துணிகரச்செயல் கண்டும் 
கண்களை கருங்கற்கள் போல் விழிதிறக்கவிடாதோரே 
முகத்திரண்டு புண்ணுடையார்

பசித்தழும் பச்சிளங்குளவி கதறியழ கண்ணீர் வற்றி
கையேந்தும் திருவோட்டிலும் கால்வாய் கஞ்சிக்கும் 
மிஞ்சாத குற்றி அதையும் பொறுக்கி சீவனமாக்கும் 
கைம்பெண்களின் விலைபேசும் தர்மவித்துவான்களே
முகத்திரண்டு புண்ணுடையார்

வீதியோரமாய் நடைபிண உற்று ஓருயிர் துவண்டும்
நா நனைக்க ஒரு துளி ஜலம் பருகவைக்காதவன்
வாழ்க்கையிலே நடைபிணமாய் அலைய 
மதுவில் மதிமயங்கிக்கிடப்போரே
முகத்திரண்டு புண்ணுடையார்

கூப்பிட்டக்குரலுக்கு செவிசாய்த்தும்
ஏற்புடைய கருமத்தை விலத்தியும்
அல்லற்படும் அன்னையும் பிதாவும்
முதியவர் இல்லத்தில் என்ன சொகுசு காண்பர் 
என்று கெஞ்சிக்கேட்டும் அதில் சித்தம்கொள்ளாது
பஞ்சணையில் நிம்மதித்தூக்கம் உறக்குபவனே
முகத்திரண்டு புண்ணுடையார்





Thursday, May 7, 2020

பழைய தூசி




அடுக்கிவைக்கப்பட்டிருந்த பழைய 
புத்தகங்களை எல்லாம் தூசி தட்டிக்கொண்டிருக்கிறேன்
பத்தாம் வகுப்பு கணக்குப்புத்தகம் 
ஒன்று கையில் அகப்பட்டது. 
பின்னாலிருந்து ஒரு குரல் 
இன்னும் சமைத்து முடிக்கவில்லையா? 
பசிக்கிறது கனத்த குரல் 
இன்று ஏதோ கடுமையாய் ஒலிக்கிறது.
அது அவர் தான். 
மதிய இடைவேளையில் சற்று சினத்தையும் கொண்டு வந்திருந்தார்
அம்மா என்ன சாப்பாடு? எனக்கு ஊட்டிவிடு
இது அவனின் குரல். செல்லக்கண்ணன் 
ஏதோ களைப்போடு கேட்கிறான்.
வாலாட்டி நானும் இருக்கிறேன் 
என்னையும் கவனியுங்கள் என்றான் 
குட்டி ராசன் அவனும் செல்லப்பையன் தான்.
பரிமாறல் முடிந்ததும் மீண்டும் புதைந்து கொண்டேன் 
தூசி தட்டும் பணியில் செல்லக்கண்ணனை தூங்கவைத்து விட்டு
இந்த சின்னக்கேள்விக்கா பிழை எடுத்திருக்கிறேன்
எத்தனை பிழை திருத்தங்கள் செய்திருக்கின்றேன்
அவரும் செல்லக்கண்ணனும் என்னைக் கணக்கில் புலி 
என்று கேலி செய்வதில் ஓர் நட்டமும் இல்லை. 
அப்படியே கடந்து சென்ற கண்களுக்கு புலப்பட்டது 
கடைசிப் பக்கம் மதுமலர் மதியழகன் என்றே நிரப்பப்பட்டிருந்தது. 
அங்கு பல ஓவியங்களும் பேனை மையினால் 
சிறப்பாய் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இதயங்களில் அம்பு 
துளைக்கும் விதங்களோ ஆச்சரியம் தான் 
ஏனெனில் அம்பின் முன்புறம் பின்புறம் 
எல்லாம் அழகாய் வரையப்பட்டு இதயங்கள் மட்டும் 
அப்பளம் போன்று இருந்தன. அதில் சிறு கவிதைகள் வேறு 
“ உடல் மண்ணிற்கு உயிர் உனக்கு” 
சொந்தமாய் எழுதக்கூடத் தெரியவில்லை. 
இப்படியிருந்தால் எப்படித்தான் 
கணக்குப்பாடம் தலைக்கு ஏறியிருக்கும்? 
ஆனால் காதல் மட்டும் நுழைந்துவிட்டது. 
பழைய தூசிக்குள் இத்தனை வனப்பான நினைவுகளா? 
நேரமாகிவிட்டது நான் போய்வரட்டுமா மது 
எனக் கன்னத்தைக் கிள்ளினார் 
நானும் பதிலுக்கு தலையசைத்து வழியனுப்பி விட்டு வந்தேன் 
என் மதியழகனை 
மீண்டும் பழைய தூசிகளுடன்  உறவாட.

Sunday, May 3, 2020

போதும் மாமா



காதலில் கரம் பற்றிய என்னை
கைவிடாது கரை சேர்க்க 
வசைபேச்சில் வஞ்சிப்போரிடமிருந்து
இன்னும் எத்தனை காலம் தான் 
சமாளிப்பீர்கள்

அடுக்களையில் அடிமுட்டாளாய்
அரிசிபுடைப்பதே அவனியாய் இருந்த என்னை
பரந்த உலகம் படைத்தது எதற்கென விழிப்பூட்டியே
எனைப்படைத்தவனாய் அடுத்தவரிடம்
இன்னும் எத்தனை காலம் தான் 
சமாளிப்பீர்கள்

தாரமானபின் பணி தாயாகுவதே
தள்ளாடும் வயதில் யார் துணையாய்  வருவாரோ
வருடம் தள்ள நாட்கள் எப்போ தள்ளும் என்றே
வாயில் போடுவோரின் வார்த்தைகளிற்கு
தாரத்திலும் அவள் தாய்மை உணர்கிறேன் என்றே
இன்னும் எத்தனை காலம் தான் 
சமாளிப்பீர்கள்

மகாகவி வரிகளில் படைத்த 
புதுமைப் பெண்ணை
நீங்கள் என் வாழ்க்கையில் 
செதுக்கலாய் வடிக்க 
சுற்றாரின் உற்றாரின் மனம் 
சலனத்துடன் தீ மூழ
இன்னும் எத்தனை காலம் தான் 
சமாளிப்பீர்கள்

கண்ணீரில் படகோட்டும் என் வாழ்க்கைக்கு
கலங்கரை வெளிச்சமே இந்த அன்புதான்
ஆனால் போதும் மாமா 
இன்னும் எத்தனை காலம் தான் 
சமாளிப்பீர்கள்




Thursday, April 30, 2020

மீண்டும் போலிச்சிரிப்புடன்



எள்ளி நகையாடிய காலமெல்லாம்
கிள்ளிப் பார்க்கையில் திடுக்கிடும்
புள்ளிக்கோலத்தின் ஒரு முடிச்சாய்
வள்ளி அவள் கனவுகளையெல்லால்
அள்ளிப்பருகிடும் பெருங்குவளை நீரில் கரையவிட்டாள்


பள்ளிப் பருவ காலோட்டத்தில் அவன் தந்த பவள
மல்லியாய் புன்னகை சூடி வதனம் மலர்ந்த நினைவெல்லாம்
கள்ளி அவள் கற்பனைக் கடிவாளமாய்  இன்று கட்டியிழுக்க 
சொல்லி ஆழ யாருமில்லா மெல்லிசையை
சுள்ளி விறகுடன் மூண்ட தீயில் மெல்ல
எரியவிட்டாள்


கொல்லிமலைச் சித்தர்களும் காணா கடும் தவமாய்
அல்லி மலர்ந்தொரு மொழி அரிதாய்க்கூட அந்நியரிடம்  பேசாள் வள்ளி இவள் ஒரு ஊமை என்றும் ஊராரின் பெயர் பெற்றாள்
தள்ளி நின்று பார்த்த தாய் மனம் கொதிக்க வண்ணமலரோ வண்டு வேண்டா மலராய் அவன் அன்று தந்த கற்பனை மலரை துணிமணியுடன் 
அடுக்கிவைத்தாள்


பொங்குதமிழ் எழுச்சியில் முதன்முதலாய் அவனைக் கண்டவள் அவன் செயற்பாட்டில் மெய் மறந்தாள்
தங்குதடையின்றி பாயும் வெள்ள நீரோட்டம் விவாசாயியின் வயிற்றில் பயிரிடத்தான் என ஆராய்ந்த அவள் அவன் உழைப்பினில் தன் சூழல் மறந்தாள்
மங்கும் பொன் சுரங்கம்  அவன் மார்போடு நீண்ட அன்பு அதில் அவள் சுற்றம் மறந்தாள்
பங்குகேட்கும் உலகில் என் பாகம் என்னைப் பெற்றவள் என புறங்களைத் தீண்டா அவன் குணங்களில்  அவள் தன்னையே மறந்தாள்


உறக்கம் அவள் நினைவுகளை உறங்கவிடவில்லை
தயக்கம் அவள் வார்த்தைகளை அவிழ்த்துவிடவில்லை
மயக்கம் காதலில் அவன் முகம் தவிர வேறு சுயமில்லை
நடுக்கம் அவள் கைப்பிடியில் இன்னும் அவன் கைவிரல்கள் பின்னப்படவில்லை


அன்னையின் ஆசி அப்பனின் ஆட்சி
அண்ணலின் கைப்பிடி அந்த சிறுவட்டம் தாண்டி வெளிவர
 விட்டில்பூச்சி விளக்கொளியில் ஏரிவதுபோல்
மங்கைக்கோ காத்திருந்தது பேரதிர்ச்சி


வானுலகம் சென்று பூமழை பெற்று பூமாலை சூடி 
புகைப்படத்துள் ஒளிந்துகொண்ட அவனை மீட்டுவர
அவளுக்குத் தெரியவில்லை மலர்வளையம் இட்டு மண்டியிட மனமும் விடைகொடுக்கவில்லை
உலகில் பல ஆடவர் இச்சையாய் கேட்கவும் மணக்கோலம்  காண மதியில் ஏனோ எட்டவில்லை
மாறாக கண்ணீரில் கடிதம் தீட்டினாள் கோதை விதியது வலியது


அவன் நினைவுமலர் தினம் நீரூற்றி வளர்த்தாள் அதன் வாசனை அறியாமலே 
மலர் சூட அருகதை அற்ற அவள் கூந்தல் காற்றில் களைந்தாலும் அதை ஜடைபோட்டு கட்டிவிடுகிறது அவனுக்கான அவள் மனம் மீண்டும் போலிச்சிரிப்புடன்

Thursday, March 12, 2020

கடந்து போகட்டும்



அவர்கள் என்னை மட்டுமல்ல
என் தனிமையையும் கடந்து
போனார்கள். இறுக்கமான என்
இதயத்திலும் அவர்களுக்கு என்று 
ஓர் இடம் ஒதுக்குவேன் என கனவிலும் 
நான் நினைத்துப் பார்த்ததில்லை.
தனிநபருக்கான சூழலை தகர்த்தெரிந்து
மனிதவாடை வீச நான் மாற்றிக்கொண்டேன்
வண்ணமயமான விழாக்கோலங்களில்
ஒரு உறவாய் நானும் பங்கெடுத்துக்கொண்டேன்.
உப்பிட்டவரை உயிராய் நினைத்தேன்.
மூலை முடுக்கிலும் என் பாதச்சைவடு பதிந்திருக்கும்
அதை நானே தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தேன்.
பாத்திரங்களில் என் கைரேகை பதிந்திருக்கும்
அதை நானே சுத்தம் செய்தேன்.
அடுப்படி ஆகாயத்தில் மேகம் தான் நான். மாசு தூசுகளை உள் வாங்கி கனப்பினும் மாரியாய் நன்மை செய்வதுபோல் என்னை எண்ணிக்கொள்வேன். சிறிதுகாலத்திலே அன்பை 
சம்பாதித்துவிடுவேன் விடவேண்டும் என்ற எண்ணம்
அடி சறுக்கிவிழ மீண்டும் துணியும் தீரச் செயலை
உடலும் மனதும் ஏற்றுக்கொண்டது.
பணவரவுகள் என் கைகளில் புலங்கியதும் உண்டு 
ஆனால் கறைகளை என் கைகளில் படிய நான்
விரும்பியதில்லை. 
பத்திரமாய் அடைகாத்துக் கொடுப்பேன் ஏனெனில் நான் தேடியது அதுவல்ல அன்பு.
ஆகாரம் பரிமாறுவதுல் அலாதிப் பிரியம் கடைசிப்பருக்கைவரை ருசிப்பவருக்கு அருகில்
நளபாகம் செய்துள்ளேன்.
வெளுப்பு வெள்ளாவி வேலைகளும் நன்கு தெரியும்.
ஆசான் கலையும் அறிவும் வளர்திடும் வழங்கியும் ஆனேன். 
நானும் தானமாய் ஏதும் செய்யவில்லை அனைத்திற்கும் மௌனமாய் விலைபேசினேன் அன்பு. பணம் பொருள் தங்கத்திற்கு என்னை விலை பேசி இருக்கலாம் போலும் அன்பை மட்டும் என்னிடம் தீர்க்கப்படாத கணக்காக்கினார்கள். அவர்களுக்காய் விரிவடைந்த என் உலகம் மீண்டும்
சுருங்கவில்லை மாறாக தனிமை ஆட்கொண்டது.
தனிமை அவர்களைப் போல் அல்ல. என்னுடன் அன்பாய் நடந்துகொண்டது. என் பல கேள்விகளுக்கு என்னிடமே பதில்களைத் தேடித் தந்தது. அழுகையும் சிறந்த மருந்துதான் எனக் காட்டித்தந்தது. தனிமையே எனக்கு உணவுகளைப் பரிமாறியது. அதில் சுவை இருப்பினும் எனக்கு உணர்த்தவில்லை. அவர்களின் நோக்கம் சிந்தனை செயல் எல்லாம் எனக்குப் புரியவைத்தது. நான் தான் முட்டாள் இருப்பினும் என்னை தனிமை விடவில்லை.
என்னை மீண்டும் எழச் செய்தது இம்முறை அவர்களுக்காக அல்ல முற்றிலுமான தனிமைக்கு.


வர்த்தகச்செய்தி





சாதாரண நடுத்தர வர்க்க
குடிமக்களுக்கு முக்கியமானது
இந்த வர்த்தகச்செய்தி
பொருள்விலையில் மாற்றம்
சந்தைப்படுத்தலில் வரி நிர்ணயிப்பு
ஏற்றுமதி இறக்குமதி
பாரிய வீழ்ச்சி
அடுக்கிக்கொண்டே போகலாம் வர்த்தகச்செய்தி
பணக்காரான் எப்படியோ வாழ்ந்துவிட்டுப்போவான்
பணத்திற்கு பஞ்சம் வராதவரை
ஏழை எளியோர் ஏர் பிடித்து உண்டு வாழ்வார்
நிலத்திற்கும் வான்மழைக்கும் முட்டுக்கட்டை போடும்வரை
இவை இரண்டுக்கும் இடைப்பட்டவனுக்குத்தான் 
இந்த வர்த்தகச்செய்தி
வெங்காயம் விலை ஏறினால் கறிக்கு வெங்காயம் போடமாட்டான்
பால்மா விலை ஏறினால் கடும் கசாயம் குடிப்பான்
எண்ணெய்க்குப் பஞ்சம் வந்தால் வெயிலில் அப்பளம் பொரிப்பான்
அரிசி விலை இறங்கினால் ஒருவருடத்திற்கு வேண்டிய அளவு மூட்டையை அடுக்கிவைப்பான்
மாதம் ஒரு மரக்கறி வகை 
இந்த மாதம் கத்தரிக்காய் 
அடுத்த மாதம் முருக்கங்காய்
காய்கறியிலும் சிக்கனம் பார்த்திடுவான்
நல்லூரில் கொடி ஏறினால் மாமிசம் புலங்குவான்
ரம்ஜான் கஜ்ஜீப் பெருநாளில் சுத்த சைவமாகிடுவான்
ஐயோ இது விலைவாசிக்கான நாடகம்
வீட்டுச்சாடியில் தக்காளி மிளகாய் பாகல் வெண்டி பயற்றை நாட்டிடுவான்
கூட்டுசாம்பார் வைத்து பல நாட்களை ஓட்டிடுவான்
மீன்பிடி வியாபாரநிலை அறிந்து கூடை நிறைய அள்ளிவர வேறு ஊருக்கும் சென்றிடுவான்
நடுப்பக்கத்தில் கவர்ச்சியாய் பல இருக்க 
நடுத்தரகுடும்பத்தில் பிறந்தால் 
படிக்கவேண்டும் இந்த வர்த்தகச்செய்தி

Wednesday, March 11, 2020

முதுமை





முதுமை ஒரு ஓரத்தில் பழைய கட்டில் மெத்தை தலையணை போட்டு என்னைப் பாடாய் படுத்திவிட்டது
வருபவர் போவோர் எல்லாம் நலன்விசாரிக்கும் கண்காட்சிப் பெட்டகம் ஆக்கிவிட்டது
கஞ்சி கூழ் போன்ற சத்துணவுகள் ஆகாரமோ இல்லை பானமோ இரண்டும் கலந்தவையோ என எண்ணியும் பார்க்கமுடியாத வேளையாகிவிட்டது
கூந்தலும் ஒன்றொன்றாய் கலன்றுவிட தேகமும்
நரைநிரப்ப வாலிபமும் வாழும் ஆசையும் சிதைந்து
போன கதையாகிவிட்டது
விக்கல் இருமல் சளி வாயுத்தொல்லை
இதற்கெல்லாம் எண்ணி எண்ணி மாத்திரை சாப்பிடுவது தினமும் தொல்லை
நிம்மதியான உறக்கம் தேடு நிம்மதியற்ற பல இரவுறக்கம் பகலில் பாசாங்கான உறக்கம்
பல ஜவுலிக்கடை சாம்ராஜ்யம் வீட்டின் அலுமாரியில்
நானோ விரும்பி உடுப்பது பழைய பருத்தியாடை
கொஞ்சம் சுவாத்தியமாய் இருக்கட்டும்
புதிது என் வாரிசுகள் ஆளட்டும்
படிப்பதற்கு பல புத்தகங்களும் பார்ப்பதற்கு தொலைக்காட்சியும் கேட்பதற்கு பழைய வானொலியும்
இருந்தும் என்ன பயன் எல்லாம் சிறிது சிறிதாய் பறிபோய்விட்டன புலன்கள்
பக்கத்து வீட்டு விடுப்புகள் எல்லாம் காதருகே மொய்க்கும் இலையான் இரைச்சல்போலாகிவிட்டது
இரவு அனைவரும் உறங்கும் வேளை யாரையும் தொந்தரவு செய்யாது நுளம்புகளுடன் பேசுவேன்
எனக்கு ஆயுள் குறைவாகிவிட்டது என்னைக்கடித்தால் என் வியாதி அவர்களுக்கும் வந்துவிடுமாம் என் காதுபடவே பேசிக்கொள்கிறார்கள்
அங்கும் கிழட்டு நுளம்புகள் போனால் போகட்டும் என்று என்னைத்தின்று பார்கிறார்கள்
எனக்குத்தான் வயதாகி பார்வை மங்கிவிட்டதால்
யார் இவர் என்று அடையாளம் காணமுடியாது 
பிள்ளைகளுக்குமா அடையாளம் காண சிரமமாகிவிட்டது?
போதும் இந்த முதுமை உடல் வலியைவிட
மனது வலிக்கிறது.




Saturday, November 16, 2019

அரசி(ன்இ)யல்



என் சக்கரை நிலவே
என்றும் உன்னிடம் முறையிடுவது போல்
இன்றும் உன்னிடம் தான் முறையிடப்போகின்றேன்
கருந்திரைகளுக்குப் பின் ஒழிந்துகொள்ளாதே
போதை தலைக்கேறி பிதற்றிடவிட
உன்னிடம் வரவில்லை
உள்ளூரும் கள்ளப் பொய்தன்னை
பொல்லாப்பில்லா போதனை
செய்ய வரவில்லை
பசுமரத்தில் பதியவைத்த ஆணி இது
பாறையில் செதுக்கிய சிற்பமிது
எவனோ வரைந்த வர்ணக்கோலமிது
வானவில்லாய் வளைந்து வளைந்து
என் நினைவில் அம்பும் வில்லுமாய் குறி பார்க்கிறது
நாளைய தேர்தலில் வாக்கெடுப்புகளை
கணிசமாய்க் கூற நான் வல்லமை 
படைத்திராமல் இருக்கலாம்
ஆட்சியில் மாற்றங்கள் வந்து 
மாயைக்கு இழுத்துச் செல்லலாம்
மத்தாப்புக்கும் மதுபானங்களுக்கும்
வரிகுறைக்கப்படலாம்
ஆவணக்கொலைகளுக்கும் அவரவர் பழிகளுக்கும்
அரசு செவிசாய்க்கலாம்
கஞ்சாக்களும் கசிப்பும் கைத்துவக்கும்
சட்டைப்பாக்கெட்டில் கொட்டிக்கிடக்கலாம்
தர்மம் செய்ய சில்லறைகளும் தாளாய் மாறலாம்
குளு குளு பெட்டிகளும் வர்ணதிரைகளும்
வீட்டில் பெருமை சேர்க்கலாம்
இவை எதுவும் சிறிதுகாலம் தான்
நிரந்தரமற்றவை நிலையற்றவை
உரிமை எடுப்பதற்காய் உரிமைகளை பறிக்கும்
கண்கட்டிவித்தை 
ஏற்கனவே எழுதப்பட்ட விதிக்கு நாடகம் 
அரங்கேற்றும் கைப்பொம்மைகள்
விருப்பம் தெரிவிக்கும் ஒரு விளையாட்டு இது
தன் பயிரை தீமூட்ட கொள்ளிக்கட்டை கொடுத்து
அனுப்பும் துர்ப்பாக்கியகாலமிது
எத்தனை பள்ளிகூடத்தில் போதித்தாலும்
தலைக்கேறா சுயசிந்தனை இது
என் கட்டாய விருப்பம் ஆனால் அவர்களின் தெரிவு
கிடைப்பதோ ஓரிரு நாள் விடுமுறை
வேறு என்ன இலாபம்?
உன்னிடம் முறையிடுவதால் நானும் ஒருவகை கோழைதான் 
எழுதியதை மாற்றியமைக்க நல்லொரு அரசியல்
விடியப்பொழுதில் கரையும் என் சக்கரை நிலவு




நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...