Showing posts with label Nature. Show all posts
Showing posts with label Nature. Show all posts

Thursday, October 1, 2020

அஹிம்சையின் பொக்கிஷம்


 













அஹிம்சையின் பொக்கிஷம் ஒன்று கண்டீர்

அகிலமெல்லாம் அவர் புகழ் ஓங்கக்கண்டீர்

விழித்தெழும் மனிதம் விதையாய் 

மண்ணின்மைந்தர் அகவிழியில் 

முளைத்திட காரணம் கண்டீர்


பருத்தியின் பசுமை கண்டீர்

பணிவின் பெரும் சிகரம் கண்டீர்

கொடித்தொழும் செந்தணற்கோபம் கூட

முகச்சுருக்கத்தில் மறைந்திருந்த புன்னகையில் 

மறையக் கண்டீர்


அக்கினிக் குஞ்சொன்று கண்டீர்

அப்பழுக்கற்ற தேசபக்தி கண்டீர்

சுவாசிக்கும் ஒட்சிசனினும் கலப்படம் இருக்க

சுதந்திரக்காற்றே உயிர் மூச்சான 

மாமனிதன் கண்டீர்


முதுமையில் இளமை கண்டீர்

முகத்தில் கம்பீர பிரகாசம் கண்டீர்

ஓங்கி நிற்கும் பாரதக்கொடி

பல்தேச மக்களின் தொப்புள்கொடி

உறவெனக் கண்டீர்


ஈர்ப்புவிசை கண்டீர்

ஈரமற்ற இருதயம் கூட மாறக்கண்டீர்

அன்பு தான் அகராதி அகிம்சைதான் 

இலக்கணம் என்ற இலக்கியம் தீட்டிய 

எழுத்தாணி கண்டீர்


கற்களும் கரையக்கண்டீர்

கடமையுள்ளம் உயிர் நீர்க்கக்கண்டீர்

பெற்ற சுதந்திரம் ஒவ்வோர் வீட்டின்

நிம்மதி உறக்கத்தில் லேசான 

புன்னகை பூக்கக்கண்டீர்


தாரகமந்திரம் கற்றுத் தந்தீர்

தலைவிதி புதுவிதியாய் மாற்றித் தந்தீர்

பாரத அன்னையின் மானங்காக்க

பாரத மைந்தனாய் காவியம் ஒன்று 

தலைமுறைகள் தாண்டி கற்றுத் தந்தீர்


 

Friday, September 11, 2020

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி



















கரு மை தீட்டி கருவிழி மெருகேற்றி 

சின்னஞ்சிறு குங்குமச்சிமிழ் பொட்டிட்டு

கூரிய அரிவாள் புருவங்களை சற்று 

உயர்த்தி தலை நிமிர்ந்து நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


முன்னழகு பின்னழகு கன்னியவளோ பேரழகு

ஒரு கணம் கண்ணிமைக் மறுக்கவே

தலைக்கேறும் போதை ஏற்ற 

அன்னம் அவளிடம் பழக வேண்டும்

ஓர் புதுநடை நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


தீயும் தீய்ந்துபோகும் பாவியவள் பார்வை

வளைவுகளே வியர்ந்து பார்க்கும் வஞ்சியவள் 

மெல்லிடை

கொடிகள் படரத்துடிக்கும் கொஞ்சுங்கிளி கொடியிடை

வேடிக்கை பார்ப்பவர் ஏக்கத்தில் வாடித்துடிக்க

இடையில் நளினநடை நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


சலனமற்ற பஞ்சு நடையாள் பவனி வரும் ஓசை 

மலர்களும் மலர்ந்திட விரும்பிடும் ஓர் இசை

திரண்டு வரும் மக்கட்கூட்டத்தின் நடுவே 

வேகவேகமாய் மின்னல்நடை நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


காற்றின் எடையில் இரட்டிப்பாய் இருந்திடுவாள்

கனத்த பையை தோளில் சுமந்தபடி

துணையற்ற பயணத்தில் பாதச்சுவடுகளின்றி 

தூயநடை நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


பேச நான் முயன்று முன்னேறுகையில்

முகபாவணையில் மிரட்டி மிரளச்செய்கிறாள்

போ என்று என் அறிவுக்கு அவள் தகவல் தெரிவிக்கமுன்

வெடித்துச்சிதறும் பல மனிதசடலங்களுள்

வெற்றி வேட்கை தணிந்தநடை நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


பட்டங்கள் பல பெற்றவள் பல துறையில் தேர்ச்சி கண்டவள் 

வறுமை எனும் கோட்டின் கீழ் கொடும்பிடியில் 

விடுபட இல்லையாம் அவளுக்கு ஓர்

நிரந்தர உத்தியோகம்

பலன் வேண்டி தேடித்திரிந்த இடமெல்லாம் 

சேலை அவிழ்க்க பணியாதவள்

பணமெனும் பேருதவிக்கு உயிர்துறக்க நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


அழகில் உண்டு ஆபத்தென அடுத்தவர்கள் 

சொன்னகதை நிஜம்படவே

ஆசிட் வீச்சில் உருகுலைந்த அழகிய முகம்

மறைத்துக்கொண்டு சமூகசீர்திருத்தவாதியாய் 

தற்கொலைக்குண்டுத்தாரியாய் நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


இரும்பைக்கொண்டு பட்டை தீட்டினாலும்

அவள் உள் இலவம்பஞ்சு இதயம் ஒன்றின் ஓரத்தில்

பெண்மைக்கான காதல் காவியம் அவள் 

மறைத்துக்கொண்டு சீரற்ற இந்த சமூகம் சீர்கொள்ள

அஹிம்சையின்றி ஆயுதம் தேடி நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி





Thursday, September 3, 2020

உதட்டுச்சாயம்

 













அவள் உதட்டுச்சாயம் களைவதில்

அத்தனை ஆடவர்களின் கண்களும்  தீவிரமாய்

மொய்த்துக்கொண்டிருந்தன

என்ன ஆச்சரியம்!

பூக்களே தேன் சுவைக்க ஏங்கும் போது

வண்டுகள் மட்டும் வர்ணித்துவிட்டுப்போகுமா?

சிவப்பு வெல்வெட் ரோஜா இதழை


உதட்டுரேகை வளைவை வானவில் 

கோடுகளில் கூட இவ்வளவு 

கற்சிதமாய் கண்டிருக்கமாட்டார் எவரும்

அவ்வப்போது அவள் எச்சிற்பனித்துளிகள் 

ஈரமூட்டிக்கொண்டு இருக்கின்றன

இதையெல்லாம் அறிந்தும் 

அவள் மேலும் மேலும் உதட்டுச்சாயத்தை 

அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றாள்


ச்சீ என்ன பெண்தான் இவளோ?

இத்தனை கடுமை வர்ணம் தீட்டுகிறாள் 

எவனை மயக்குவதற்கோ? 

எவர் குடியைக் கெடுப்பதற்கோ?

ஊர்ப்பெண்கள் சாபம் இவளை சும்மா விட்டுவிடுமா?

கர்ஜனைக்கும் பெண்சிங்கங்கள் பல மனதினுள்

குமிறிக்கொண்டிருக்க கண்டும் காணாதவளாய் 

மேலும் மேலும் உதட்டுச்சாயத்தை 

அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றாள்


அவள் வர்ணம் தீட்ட தீட்ட கையில் 

இருந்த உதட்டுச்சாயமோ குறைவடைந்ததாயில்லை

வெறுமையான மென் இதழோடு 

அவள் வஞ்சனையற்ற மனதாய் புன்னகைத்துக் கடக்கையில் 

பாவம் ஓர் பெண்ணாய்க்கூட 

அவளைப்பார்க்காதவர்கள் இன்றும் 

அதே புன்னகைக்கு உதட்டுச்சாயம் பூசிட 

ஒவ்வோர் கோணங்களில் கணக்கிட்டுக்கொண்டு 

அவர்களின் புன்னகைகளை மறந்துவிட்டார்கள்

என்பதை உதட்டுச்சாயம் அறிந்துவிட்டது போல


Wednesday, May 20, 2020

கடல் பெண்ணே



கடல் பெண்ணே

உன் கண்ணீர்தான் கடலில் 

உப்பாய்க் கரைந்ததோ

காலங்களும் கடக்க 

உப்பின் செறிவும் அதிகரிப்பதேன்

இன்னும் உன் கண்ணீர்கடல் வற்றாமையா?


கடல் பெண்ணே

உன் சீற்றம் தான் கொந்தளிப்பானதோ

பாரிய அலைவெள்ளத்தில் உயரம்

விண்ணளவைத்தாண்ட உன் கோபத்தணல்

இன்னும் எத்தனை துயரின் பிரதிபலிப்போ?


கடல் பெண்ணே

உன் பொறுமைதான் 

கடல் உள்வாங்கலானதோ

உள்ளிருக்கும் பொறுமை எல்லாம்

எரிமலைக்குமுறலாய் பொழியும் எரிதணலானதோ?


கடல் பெண்ணே

உன் புண்ணியம்தான் அலையானதோ

கறைபடிந்த பாதங்களை கூச்சமின்றி

கழுவி பாவவிமோட்ஷனம் அளிப்பதனாலோ?


கடல் பெண்ணே

உன் நட்புதான் சமுத்திரப்பயணமானதோ

நீண்ட தூர எல்லைகளுக்கு முடிவிடம்கொடுத்து

இரு எதிர்முகங்களுக்கு சந்திப்புக்கொடுப்பதாலோ?


கடல் பெண்ணே

உன் தாய்மைதான் கடல்மீன்களானதோ

வருமானமும் வருவாயும் தேடித்தர

வழிதேடுபவர்கள் வறுமை போக்குவதனாலோ?


கடல்பெண்ணே

உன்காதல் தான் கழிமுகமானதோ

ஆறோடு கூடல் செய்து

இனமற்ற காதலென நிலைநிற்பதனாலோ?



Tuesday, May 19, 2020

கோவிந்தனின் கொலுபொம்மை




இவள் கோவிந்தனின் கொலுபொம்மை 
அவன் பெயர் சொல்லும் கைப்பாவை
அவன் இசைவிற்கு அசையும் தலையாட்டிப்பாவை
பிரபஞ்சமெல்லாம் பரந்திருக்கும் பிரகலாதன்
பிறை கண்டு மகிழும் மெய்ப்பாவை
அதிதியின் மகனாம் ஆதித்யன்
அறம் அஞ்சாவாசம் கொண்ட அற்புதப்பாவை
பிறப்பையும் இறப்பையும் கண்டு
அஞ்சான் அஜெயன் அவன் புகழ் பாடும்
நாதம் இவள் சுவாசிக்கும் உயிர்ச்சுவாசம்
ஆவினங்களை நேசிக்கும் கோபாலப்பிரியன்
நாமம் கோலமாய் தரிசிக்கும் கோகிலப்பாவை
பிரபஞ்சத்தே ஆளும் பிரபஞ்சகுரு
ஜெகத்குரு ஜெயம் கொண்டானின்
விஜயமே காண வாசம் கொண்ட ஜெயப்பாவை
ஸ்பரிச தேஜஷ் பவளமாய் ஜொலித்திடும் 
சூரியக்கதிர்ப் பார்வையால் அகிலம் 
அன்பால் நனைத்திடும் ரவிலோசனன் 
இரட்சிக்கும்  இரத்தினப்பாவை
இராச லீலையில் மனம் மகிழும் இராதைக்கிருஸ்ணன் 
மீளாத காதல் கொண்ட மீராவின் கண்ணன்
மணிமகுடத்தில் மைதிலி சூடிய 
மயூராதிபதியே பதியாய் தியானிக்கும்
இவள் கோவிந்தனின் கொலுபொம்மை

Wednesday, May 6, 2020

மழைக்காற்று





வீதியோரமாய் வேலைப்பழுவில் விரக்தியில்
விரைந்து சென்றுகொண்டிருந்தேன் வீட்டை எப்படியாவது மணி ஆறுக்குள் 
அடைந்துவிடும் நோக்கில்
கொடியில் காயப்போட்ட உடைகளை எல்லாம் எடுத்து மடித்து வைக்க வேண்டும்
மதியம் மிஞ்சியதை குழைத்து வீதியில் திரியும் நாய்க்குட்டிக்கு வைக்க வேண்டும்
புதிதாய் ஏதும் சமைக்க வேண்டும்
வீடுவாசல் துப்பரவு செய்து சாமிப்படத்திற்கு 
விளக்கு வைக்கவேண்டும்
குளித்துவிட்டு நூலகத்தில் இரவல் 
வாங்கிய நாவலை வாசிக்க வேண்டும்
கடிதப்பெட்டியினுள் ஒரு கடிதமாவது 
இருக்குமா என எட்டிப் பார்க்கவேண்டும்
அப்பப்பா அடுக்கிக்கொண்டுபோகலாம் 
தனிமையில் வாழும் வாழ்க்கையின் அடுத்தவர் உதவியில்லா அட்டவணையை 
எண்ணிய எண்ணமெல்லாம்
சடார் என வெடித்தது நிமிர்ந்து பார்த்தேன் 
வானில் வெள்ளி நரம்புகள் தெரிய
சுற்றமும் இருள் சூழ 
கடாயுதம் கொண்டு எவனோ இடிக்கின்றான்
மழைவரப்போகிறது என எண்ணும் முன்னே
இதமான மழைக்காற்று என் விரக்தியை 
எல்லாம் தூக்கிவாரிப்போட்டது
எத்தனை இதம் தான் இந்த மழைக்காற்றில்
சுள் என்று குத்திய சூரியக்கதிரால் துளையின் 
வழி வழிந்த வியர்வை மாயமாகி உடல் குளிர்ந்தது
அதிரடியாய் குடை விரிக்க இறுக்கமான தழுவலுக்காய் என்னை ஓரடி பின் நகர்த்தியது
மண்வாசனை எல்லாம் திரட்டி நாசியில் உட்சுவாசத்தை ஒரு நொடி நிறுத்தியது
கூந்தல் இடைவெளிகளை வருடிவிட்டது
பின்புவரும் மழைக்கு முன்பு வந்த அழைப்பிதழ்
என்னையும் இந்த சபையின் நிகழ்வில் கலந்திட மண்டியிட்டது ஆனால் மனமோ
கொடியில் காயப்போட்ட உடைகளை எல்லாம் எடுத்து மடித்து வைக்க வேண்டும்
மதியம் மிஞ்சியதை குழைத்து வீதியில் திரியும் நாய்க்குட்டிக்கு வைக்க வேண்டும்
புதிதாய் ஏதும் சமைக்க வேண்டும்
வீடுவாசல் துப்பரவு செய்து சாமிப்படத்திற்கு 
விளக்கு வைக்கவேண்டும்
குளித்துவிட்டு நூலகத்தில் இரவல் 
வாங்கிய நாவலை வாசிக்க வேண்டும்
கடிதப்பெட்டியினுள் ஒரு கடிதமாவது 
இருக்குமா என எட்டிப் பார்க்கவேண்டும் என்றே என்னை ஏவியது. 
இருக்கட்டும் இன்று மழையில் தெப்பமாகத்தான் போகிறேன்
மழைக்காற்று என்னை துவட்டத்தான் போகிறது உங்கள் ஏவலை
நான் சரி செய்துகொள்வேன் எப்படியாவது
உலர்ந்த உடைகளை மீண்டும் துவைப்பதில் சிரமமில்லை 
மிஞ்சியதை இன்று அப்பளம் பொரித்து நானே உண்கிறேன்
மழையே என்னைக் குளிப்பாட்டி விடும் சாட்டாய் நாலு வாளி தண்ணீரில்
உடல் நனைப்பேன்
சுடச்சுட இஞ்சித்தேநீர் நாவல் வாசிக்க விழிப்பாய் இருக்கும்
கடிதம் இன்று மட்டும் அதிசயமாய் யார் எழுதிவிடப்போகிறார்
மழைக்காற்று வருடல் இன்றைய இரவிற்கு நிம்மதியான உறக்கம் தரும்

Thursday, April 30, 2020

மீண்டும் போலிச்சிரிப்புடன்



எள்ளி நகையாடிய காலமெல்லாம்
கிள்ளிப் பார்க்கையில் திடுக்கிடும்
புள்ளிக்கோலத்தின் ஒரு முடிச்சாய்
வள்ளி அவள் கனவுகளையெல்லால்
அள்ளிப்பருகிடும் பெருங்குவளை நீரில் கரையவிட்டாள்


பள்ளிப் பருவ காலோட்டத்தில் அவன் தந்த பவள
மல்லியாய் புன்னகை சூடி வதனம் மலர்ந்த நினைவெல்லாம்
கள்ளி அவள் கற்பனைக் கடிவாளமாய்  இன்று கட்டியிழுக்க 
சொல்லி ஆழ யாருமில்லா மெல்லிசையை
சுள்ளி விறகுடன் மூண்ட தீயில் மெல்ல
எரியவிட்டாள்


கொல்லிமலைச் சித்தர்களும் காணா கடும் தவமாய்
அல்லி மலர்ந்தொரு மொழி அரிதாய்க்கூட அந்நியரிடம்  பேசாள் வள்ளி இவள் ஒரு ஊமை என்றும் ஊராரின் பெயர் பெற்றாள்
தள்ளி நின்று பார்த்த தாய் மனம் கொதிக்க வண்ணமலரோ வண்டு வேண்டா மலராய் அவன் அன்று தந்த கற்பனை மலரை துணிமணியுடன் 
அடுக்கிவைத்தாள்


பொங்குதமிழ் எழுச்சியில் முதன்முதலாய் அவனைக் கண்டவள் அவன் செயற்பாட்டில் மெய் மறந்தாள்
தங்குதடையின்றி பாயும் வெள்ள நீரோட்டம் விவாசாயியின் வயிற்றில் பயிரிடத்தான் என ஆராய்ந்த அவள் அவன் உழைப்பினில் தன் சூழல் மறந்தாள்
மங்கும் பொன் சுரங்கம்  அவன் மார்போடு நீண்ட அன்பு அதில் அவள் சுற்றம் மறந்தாள்
பங்குகேட்கும் உலகில் என் பாகம் என்னைப் பெற்றவள் என புறங்களைத் தீண்டா அவன் குணங்களில்  அவள் தன்னையே மறந்தாள்


உறக்கம் அவள் நினைவுகளை உறங்கவிடவில்லை
தயக்கம் அவள் வார்த்தைகளை அவிழ்த்துவிடவில்லை
மயக்கம் காதலில் அவன் முகம் தவிர வேறு சுயமில்லை
நடுக்கம் அவள் கைப்பிடியில் இன்னும் அவன் கைவிரல்கள் பின்னப்படவில்லை


அன்னையின் ஆசி அப்பனின் ஆட்சி
அண்ணலின் கைப்பிடி அந்த சிறுவட்டம் தாண்டி வெளிவர
 விட்டில்பூச்சி விளக்கொளியில் ஏரிவதுபோல்
மங்கைக்கோ காத்திருந்தது பேரதிர்ச்சி


வானுலகம் சென்று பூமழை பெற்று பூமாலை சூடி 
புகைப்படத்துள் ஒளிந்துகொண்ட அவனை மீட்டுவர
அவளுக்குத் தெரியவில்லை மலர்வளையம் இட்டு மண்டியிட மனமும் விடைகொடுக்கவில்லை
உலகில் பல ஆடவர் இச்சையாய் கேட்கவும் மணக்கோலம்  காண மதியில் ஏனோ எட்டவில்லை
மாறாக கண்ணீரில் கடிதம் தீட்டினாள் கோதை விதியது வலியது


அவன் நினைவுமலர் தினம் நீரூற்றி வளர்த்தாள் அதன் வாசனை அறியாமலே 
மலர் சூட அருகதை அற்ற அவள் கூந்தல் காற்றில் களைந்தாலும் அதை ஜடைபோட்டு கட்டிவிடுகிறது அவனுக்கான அவள் மனம் மீண்டும் போலிச்சிரிப்புடன்

செல்லப்பிராணிகள்




செல்லப்பிராணிகள் 
எம் வீட்டோடு வாழ்பவர்கள்
அன்பைச் செலுத்தி அதீதமாகப் பெறுகையில்
இவர்களும் எமக்குச் செல்லக்குழந்தைகள்


போதனையில்லா  மெய் நன்றி இவர்களின் இலக்கணமாகிட பாரினில் விசும்பும் மென் மழைத்துளிகூட இவர்களின் அன்புத்தூய்மையில் தோற்றுப்போய்விடும்


வாலினால் தலைவணங்குவது 
ரோமங்களினால் மெய் தீண்டுவது 
நாவினால் நன்றி நல்குவது
முன் புஜங்களினால் இறுகப்பற்றுவது 
நம் காலடியில் தஞ்சம் கொள்வது 
நீண்ட நேரத்தவிப்பை பாசமழையாய் அவர் அவர் மொழியில் பறைசாற்றுவது 
இதுவெல்லாம் அவர்களின் அன்பின் வெளிப்பாடு அதுவே அவர்களின் கோட்பாடு


ஒருபிடிசோற்றுக்கு வாழ்நாள் முழுவதும் 
உழைக்கும் உழைப்பாளிகள்
சற்று நேரம் உறங்கினாலும் துரிதமாய் சேவை செய்து கிறங்கடிக்கச் செய்திடுவார்கள்
பலவித வித்தை கண்டு வியப்புற்றேன் இவர்களின் அன்பு என்ன மாய வித்தையோ?


சேற்றிலும் சகதியிலும் துள்ளிக்குதித்து ஆனந்தம் கொண்டு வெண்சட்டையிலும் காற்தடம் பதித்திடுவார்
குறுகிய ஓசையில் தம் வரவைக் கண்டு குதூகலித்து ஆரவாரம் செய்திடுவார்
தட்டில் எத்தனைவகை உணவிட்டாலும் உம் கரத்தால் ருசி பார்த்திடுவார் 
காதலனுக்கோ பொறாமை விஞ்சிடும் அவர்களின் கன்னத்தில் பதியும் எண்ணற்ற முத்த மழையில் தமக்கான மகுடம் என சூடிடுவார்


படுக்கையில் குழவியாகினும் வயதுமுதிர்ந்த கிழவியாகினும் பேதமற்றவராய் கட்டளைக்காக காத்திருப்பார்
வளர்த்த கடனை திருப்பிக்கொள்ள ஆருயிர்த்தியாகமும் சுயவிருப்புடன் யாக்கைத்துறப்பார்





Wednesday, March 11, 2020

முதுமை





முதுமை ஒரு ஓரத்தில் பழைய கட்டில் மெத்தை தலையணை போட்டு என்னைப் பாடாய் படுத்திவிட்டது
வருபவர் போவோர் எல்லாம் நலன்விசாரிக்கும் கண்காட்சிப் பெட்டகம் ஆக்கிவிட்டது
கஞ்சி கூழ் போன்ற சத்துணவுகள் ஆகாரமோ இல்லை பானமோ இரண்டும் கலந்தவையோ என எண்ணியும் பார்க்கமுடியாத வேளையாகிவிட்டது
கூந்தலும் ஒன்றொன்றாய் கலன்றுவிட தேகமும்
நரைநிரப்ப வாலிபமும் வாழும் ஆசையும் சிதைந்து
போன கதையாகிவிட்டது
விக்கல் இருமல் சளி வாயுத்தொல்லை
இதற்கெல்லாம் எண்ணி எண்ணி மாத்திரை சாப்பிடுவது தினமும் தொல்லை
நிம்மதியான உறக்கம் தேடு நிம்மதியற்ற பல இரவுறக்கம் பகலில் பாசாங்கான உறக்கம்
பல ஜவுலிக்கடை சாம்ராஜ்யம் வீட்டின் அலுமாரியில்
நானோ விரும்பி உடுப்பது பழைய பருத்தியாடை
கொஞ்சம் சுவாத்தியமாய் இருக்கட்டும்
புதிது என் வாரிசுகள் ஆளட்டும்
படிப்பதற்கு பல புத்தகங்களும் பார்ப்பதற்கு தொலைக்காட்சியும் கேட்பதற்கு பழைய வானொலியும்
இருந்தும் என்ன பயன் எல்லாம் சிறிது சிறிதாய் பறிபோய்விட்டன புலன்கள்
பக்கத்து வீட்டு விடுப்புகள் எல்லாம் காதருகே மொய்க்கும் இலையான் இரைச்சல்போலாகிவிட்டது
இரவு அனைவரும் உறங்கும் வேளை யாரையும் தொந்தரவு செய்யாது நுளம்புகளுடன் பேசுவேன்
எனக்கு ஆயுள் குறைவாகிவிட்டது என்னைக்கடித்தால் என் வியாதி அவர்களுக்கும் வந்துவிடுமாம் என் காதுபடவே பேசிக்கொள்கிறார்கள்
அங்கும் கிழட்டு நுளம்புகள் போனால் போகட்டும் என்று என்னைத்தின்று பார்கிறார்கள்
எனக்குத்தான் வயதாகி பார்வை மங்கிவிட்டதால்
யார் இவர் என்று அடையாளம் காணமுடியாது 
பிள்ளைகளுக்குமா அடையாளம் காண சிரமமாகிவிட்டது?
போதும் இந்த முதுமை உடல் வலியைவிட
மனது வலிக்கிறது.




நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...