Thursday, October 1, 2020

அஹிம்சையின் பொக்கிஷம்


 













அஹிம்சையின் பொக்கிஷம் ஒன்று கண்டீர்

அகிலமெல்லாம் அவர் புகழ் ஓங்கக்கண்டீர்

விழித்தெழும் மனிதம் விதையாய் 

மண்ணின்மைந்தர் அகவிழியில் 

முளைத்திட காரணம் கண்டீர்


பருத்தியின் பசுமை கண்டீர்

பணிவின் பெரும் சிகரம் கண்டீர்

கொடித்தொழும் செந்தணற்கோபம் கூட

முகச்சுருக்கத்தில் மறைந்திருந்த புன்னகையில் 

மறையக் கண்டீர்


அக்கினிக் குஞ்சொன்று கண்டீர்

அப்பழுக்கற்ற தேசபக்தி கண்டீர்

சுவாசிக்கும் ஒட்சிசனினும் கலப்படம் இருக்க

சுதந்திரக்காற்றே உயிர் மூச்சான 

மாமனிதன் கண்டீர்


முதுமையில் இளமை கண்டீர்

முகத்தில் கம்பீர பிரகாசம் கண்டீர்

ஓங்கி நிற்கும் பாரதக்கொடி

பல்தேச மக்களின் தொப்புள்கொடி

உறவெனக் கண்டீர்


ஈர்ப்புவிசை கண்டீர்

ஈரமற்ற இருதயம் கூட மாறக்கண்டீர்

அன்பு தான் அகராதி அகிம்சைதான் 

இலக்கணம் என்ற இலக்கியம் தீட்டிய 

எழுத்தாணி கண்டீர்


கற்களும் கரையக்கண்டீர்

கடமையுள்ளம் உயிர் நீர்க்கக்கண்டீர்

பெற்ற சுதந்திரம் ஒவ்வோர் வீட்டின்

நிம்மதி உறக்கத்தில் லேசான 

புன்னகை பூக்கக்கண்டீர்


தாரகமந்திரம் கற்றுத் தந்தீர்

தலைவிதி புதுவிதியாய் மாற்றித் தந்தீர்

பாரத அன்னையின் மானங்காக்க

பாரத மைந்தனாய் காவியம் ஒன்று 

தலைமுறைகள் தாண்டி கற்றுத் தந்தீர்


 

Friday, September 11, 2020

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி



















கரு மை தீட்டி கருவிழி மெருகேற்றி 

சின்னஞ்சிறு குங்குமச்சிமிழ் பொட்டிட்டு

கூரிய அரிவாள் புருவங்களை சற்று 

உயர்த்தி தலை நிமிர்ந்து நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


முன்னழகு பின்னழகு கன்னியவளோ பேரழகு

ஒரு கணம் கண்ணிமைக் மறுக்கவே

தலைக்கேறும் போதை ஏற்ற 

அன்னம் அவளிடம் பழக வேண்டும்

ஓர் புதுநடை நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


தீயும் தீய்ந்துபோகும் பாவியவள் பார்வை

வளைவுகளே வியர்ந்து பார்க்கும் வஞ்சியவள் 

மெல்லிடை

கொடிகள் படரத்துடிக்கும் கொஞ்சுங்கிளி கொடியிடை

வேடிக்கை பார்ப்பவர் ஏக்கத்தில் வாடித்துடிக்க

இடையில் நளினநடை நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


சலனமற்ற பஞ்சு நடையாள் பவனி வரும் ஓசை 

மலர்களும் மலர்ந்திட விரும்பிடும் ஓர் இசை

திரண்டு வரும் மக்கட்கூட்டத்தின் நடுவே 

வேகவேகமாய் மின்னல்நடை நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


காற்றின் எடையில் இரட்டிப்பாய் இருந்திடுவாள்

கனத்த பையை தோளில் சுமந்தபடி

துணையற்ற பயணத்தில் பாதச்சுவடுகளின்றி 

தூயநடை நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


பேச நான் முயன்று முன்னேறுகையில்

முகபாவணையில் மிரட்டி மிரளச்செய்கிறாள்

போ என்று என் அறிவுக்கு அவள் தகவல் தெரிவிக்கமுன்

வெடித்துச்சிதறும் பல மனிதசடலங்களுள்

வெற்றி வேட்கை தணிந்தநடை நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


பட்டங்கள் பல பெற்றவள் பல துறையில் தேர்ச்சி கண்டவள் 

வறுமை எனும் கோட்டின் கீழ் கொடும்பிடியில் 

விடுபட இல்லையாம் அவளுக்கு ஓர்

நிரந்தர உத்தியோகம்

பலன் வேண்டி தேடித்திரிந்த இடமெல்லாம் 

சேலை அவிழ்க்க பணியாதவள்

பணமெனும் பேருதவிக்கு உயிர்துறக்க நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


அழகில் உண்டு ஆபத்தென அடுத்தவர்கள் 

சொன்னகதை நிஜம்படவே

ஆசிட் வீச்சில் உருகுலைந்த அழகிய முகம்

மறைத்துக்கொண்டு சமூகசீர்திருத்தவாதியாய் 

தற்கொலைக்குண்டுத்தாரியாய் நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி


இரும்பைக்கொண்டு பட்டை தீட்டினாலும்

அவள் உள் இலவம்பஞ்சு இதயம் ஒன்றின் ஓரத்தில்

பெண்மைக்கான காதல் காவியம் அவள் 

மறைத்துக்கொண்டு சீரற்ற இந்த சமூகம் சீர்கொள்ள

அஹிம்சையின்றி ஆயுதம் தேடி நடக்கின்றாள்

துப்பட்டா கொ(ள்ளை)லை(க்)காரி





Thursday, September 10, 2020

முகத்திரை














முகத்திரையிட்டுக் கடக்கின்றேன் சாலைகளில் மட்டுமல்ல முகத்திரையிட்டுக் கடக்கின்றேன் சில வேளைகளில் மட்டுமல்ல நான் அணியும் முகப்பூச்சுக்களையும் யாரும் அறிந்திருக்கவாய்ப்பில்லை ஏனெனில் அவை வர்ணமற்ற புன்னகைகளின் முகச்சுருக்கங்களில் அலங்கரிக்கப்பட்ட அழகியல் கலை என்பதனால் நான் செய்யும் மந்திரப்புன்னகையை யாரும் அறிந்திருக்கவாய்ப்பில்லை ஏனெனில் கேளிகை வாழ்க்கையில் கோமாளிகள் பல உணர்வற்ற முகபாவனையை நிரந்தரம் கொள்கையில் நான் உரைக்கும் இன்மொழி யாரும் அறிந்திருக்கவாய்ப்பில்லை ஏனெனில் நச்சு வார்த்தைகளை மென்றுகொண்டிருக்கும் கவர்ச்சிகரமான உதடுகளை நோட்டமிட்டுக்கொண்டு பலர் இருப்பதால் நான் சிந்தும் வியர்வைத்துளி யாரும் அறிந்திருக்கவாய்ப்பில்லை ஏனெனில் என் தாகத்திற்கு யாரோ நீர் பருகிக்கொண்டு என் வேட்கையை தீண்டுவதில் இன்பமுறுகின்றமையால் முகத்திரையிட்டுக் கடக்கின்றேன் சாலைகளில் மட்டுமல்ல முகத்திரையிட்டுக் கடக்கின்றேன் சில வேளைகளில் மட்டுமல்ல









Thursday, September 3, 2020

உதட்டுச்சாயம்

 













அவள் உதட்டுச்சாயம் களைவதில்

அத்தனை ஆடவர்களின் கண்களும்  தீவிரமாய்

மொய்த்துக்கொண்டிருந்தன

என்ன ஆச்சரியம்!

பூக்களே தேன் சுவைக்க ஏங்கும் போது

வண்டுகள் மட்டும் வர்ணித்துவிட்டுப்போகுமா?

சிவப்பு வெல்வெட் ரோஜா இதழை


உதட்டுரேகை வளைவை வானவில் 

கோடுகளில் கூட இவ்வளவு 

கற்சிதமாய் கண்டிருக்கமாட்டார் எவரும்

அவ்வப்போது அவள் எச்சிற்பனித்துளிகள் 

ஈரமூட்டிக்கொண்டு இருக்கின்றன

இதையெல்லாம் அறிந்தும் 

அவள் மேலும் மேலும் உதட்டுச்சாயத்தை 

அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றாள்


ச்சீ என்ன பெண்தான் இவளோ?

இத்தனை கடுமை வர்ணம் தீட்டுகிறாள் 

எவனை மயக்குவதற்கோ? 

எவர் குடியைக் கெடுப்பதற்கோ?

ஊர்ப்பெண்கள் சாபம் இவளை சும்மா விட்டுவிடுமா?

கர்ஜனைக்கும் பெண்சிங்கங்கள் பல மனதினுள்

குமிறிக்கொண்டிருக்க கண்டும் காணாதவளாய் 

மேலும் மேலும் உதட்டுச்சாயத்தை 

அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றாள்


அவள் வர்ணம் தீட்ட தீட்ட கையில் 

இருந்த உதட்டுச்சாயமோ குறைவடைந்ததாயில்லை

வெறுமையான மென் இதழோடு 

அவள் வஞ்சனையற்ற மனதாய் புன்னகைத்துக் கடக்கையில் 

பாவம் ஓர் பெண்ணாய்க்கூட 

அவளைப்பார்க்காதவர்கள் இன்றும் 

அதே புன்னகைக்கு உதட்டுச்சாயம் பூசிட 

ஒவ்வோர் கோணங்களில் கணக்கிட்டுக்கொண்டு 

அவர்களின் புன்னகைகளை மறந்துவிட்டார்கள்

என்பதை உதட்டுச்சாயம் அறிந்துவிட்டது போல


Friday, August 14, 2020

நம்மவரின் சுதந்திரம்

 











அடிமைத்தனம் உணராத அடிமைகள்

கொண்டாடும் பகட்டான சுதந்திரம்

குரல் கொடுத்து வெற்றி கண்ட தியாகிகள்

பெற்ற பொக்கிஷத்தை நம்மவர் கைநழுவிடப்பட்ட சுதந்திரம்


தண்ணீரின் தட்டுப்பாட்டில் குடிநீர் வேண்டி 

அணைகள் திறக்க தலை தூக்கிய சுதந்திரம் 

போத்தல் நீரை காசுக்கு வாங்கி பக்குவமாய் 

சிந்தாமல் குடிக்க கிடைத்தது சுதந்திரம்


இதமான தென்றல் காற்றைக்கூட  தூய்மையாய் 

சுவாசிக்கக் கேட்ட சுதந்திரம்

ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளின் விசத்தை

பருகுவதில் கிடைத்தது சுதந்திரம்


வரிகளிலும் அரச கட்டணங்களிலும் கட்டணத்தொகை 

குறைக்க வேண்டிய சுதந்திரம்

தாரை தாரையாய் கறுப்புப்பணம் அரசு அறியாமல்

பதுக்கி வைக்க கிடைத்தது சுதந்திரம்


பெண்ணடிமை அழிய சுய அந்தஸ்தைப்பெற 

தற்துணிவும் நீதியும்  நிலைநாட்ட வேண்டிய சுதந்திரம்

இன்று கற்பழித்து கொலை செய்யும் மனித ஓநாய்களின்

அநீதி படலத்திற்கு மீண்டும் கிடைத்தது சுதந்திரம்


பசுமைப்புரட்சியாம் பச்சைப்பசேல் வயல்வெளிகளில்

நெல்மணியாய் குலுங்க வேண்டிய சுதந்திரம்

அம்மணமாய் அரைவயிற்றுக் கஞ்சிக்கு வட்டியில்லா கடன் வேண்டி 

அரசிடம் தீக்குளித்தது  சுதந்திரம்


புண்ணிய ஸ்தலங்களும் நதி மலை வயல் புகழ் ஓங்க 

பாதுக்காக்க வேண்டிய சுதந்திரம்

கனிம வளங்களாம் ஹைட்ரோக்கார்பன் அகழ்வுகளால்

மழுங்கும் இயற்கை அழிவுக்கே சுதந்திரம்


பிடித்த துறையில் ஊக்கமுடன் படித்து 

ஞானியாகிட வேண்டிய சுதந்திரம்

பட்டங்களை காகிதப்பட்டமாக்கி வானில் பறக்கவிடும் 

வேலையற்ற பட்டதாரிகளை உருவாக்கியது இன்றைய சுதந்திரம்


ஜாதிகள் இல்லையடி பாப்பா என்றே இருதயத்தில் 

முரசொலிக்கவேண்டிய சுதந்திரம்

ஆணவக்கொலை தேவதாசிகளை பகிரங்கமாய்

உருவாக்கியது இந்த சுதந்திரம்


வெள்ளையனிடம் வீரத்துடன் ஆவேசங்கொண்ட 

கட்டபொம்மன் கதை சுதந்திரம்

அஹிம்சை வழியே அன்பின் பெரும் ஆயுதமாய் 

காந்தியடிகளின் சத்தியசோதனை சுதந்திரம்

இன்று வெள்ளையனும் இல்லை 

கட்டபொம்மனும் இல்லை 

காந்தியடிகளும் இல்லை 

நம்மவரிடமே தொலைத்து அடிமையான சுதந்திரம்


Monday, August 10, 2020

என் திருமணத்திற்கு வந்துவிடாதே!

  



















ஆகா ஓகோ என்று தடபுடலாய்

தட்டுமாற்றி தாலிகட்ட நாளும்

குறித்துவிட்டார்கள். பந்தற்கால் நட்டு

பொன்னுருக்கி மூலையில் அமரவைத்தார்கள்

இப்பொழுதுதான் உன்னிடம் ஆசையாய் பேசமுடிந்தது 

நீ நலம் தானா?

என் நலனில் அக்கறை இருப்பதால் 

கண்ணீரோடு கதை பேசுகின்றேன்.

இங்கு யாருமில்லை என்ற தைரியத்தை 

தக்கவைத்துக்கொண்டு கைபேசியில் 

கலகலப்பாய் பேச நான் ஒன்றும் 

பெண்ணியவாதியல்ல சராசரிப்பெண் தான்.

மாப்பிள்ளை வீட்டாரின் முழுசம்மதத்துடன்

மாங்கல்யம் ஏற்பதில் இத்தனை சுமைகளா என்ன?

தந்தையற்ற ஆண்துணையில்லா 

மூத்த பெண்ணாய்ப் பிறந்தவள் 

என்பதில் அடிக்கொருமுறை அன்னையைப் போல் அதட்டலும் 

அன்பும் அதிகாரமும் அக்கறையும் அளாவலற்ற ப்ரியமும்

இறுதியில் தான் என்னைப் பெண் என உணரவைத்தது. 

என் இளமை உணர்ச்சிகளை மீறி இனிதான ஒரு கூடலுக்கு 

சமூகத்தில் ஒருபடி அந்தஸ்து தரும் ஒரு தருணம் 

மிக விரைவில் வரப்போகிறது. தயவு செய்து 

என் திருமணத்திற்கு வந்துவிடாதே. 

மாங்கல்யம் சூட்டுவதில் எண்கணித சோதிடருக்கே 

என் முதல் வணக்கம். 

தலைவிதி நன்றாக இல்லை என்ற வருத்தத்தில் 

புரண்ட எனக்கு கோள்களும் கிரகங்களும் ஒன்றிசைந்து 

நன்மைக் காரியம் கிட்டும் என்பதோடு விடாது 

சிறப்பான வரன் என்று பல கட்டங்களுக்கு 

என் புகைப்படம் முதல் என் நற்சான்றிதழும் அனுப்பிவைத்தார்கள். 

பார்த்தவுடன் பிடித்துப்போக 

நான் என்ன ரதியா? ரம்பையா? 

தட்டிக்கழிக்கப்பட்டன பல வரன்கள்.

இருந்தும் சிலர் முறுக்கும் பலகாரமும் 

சுடச்சுட பால்த்தேநீர் குடிக்க வந்தவர்கள் போல 

வீட்டுற்குப்போய் என் வீட்டு விலாசத்தை மறந்துவிட்டார்கள் 

பின்புதான் நான் அறிந்தேன் 

மாப்பிள்ளை சீதனத்தில் தான் 

குடித்தனம் நடத்தப்போகிறார் என்று. 

நல்லவேளை முறுக்கோடு நறுக்கிவிட்டதாய் எண்ணிக்கடக்க 

அடுத்த மாப்பிள்ளை வீட்டார் அப்படியில்லை 

வரதட்சணை வேண்டாம் மகளாய்ப் பார்ப்போம் 

மகளை மட்டும் கட்டி அனுப்புங்கள் என்று 

என் தங்கையைக் கைகாட்டினார்கள். 

பரவாயில்லை அவளும் சற்று ரம்பையோ மேனகையையோ 

போல அழகாய்த்தான் இருப்பாள். 

வாழ்வில் பல அவமானங்களைக் கடந்துவிட்டேன் 

இது என்ன என் கையால் தாலித்தட்டை சுமந்து 

ஆசீர்வாதம் வாங்குவது ஒன்றும் பெரும் தவறில்லையே. 

அடுத்தமுறை பெண் பார்க்க வந்தவர்களிடம் 

உன்னைப்பற்றிக்கூற நான் விரும்பவில்லை 

காரணம் எனக்கோ வயது முப்பத்திரண்டு. 

இனியும் காதில் பஞ்சை வைத்துக்கொண்டு 

வீதியில் நடக்கமுடியாது. அக்கம்பக்கம் அடுக்கும் 

கேள்விகளுக்கு விடையளிக்காது சிரித்துக்கொண்டு 

கடக்க இயலாது. வேறு சாதிக்காரனுடன் ஓடிவிட்டாள் 

என்றால் பலகாரம் கூட பல்லில் படாமல் ஓடியிருப்பார்கள். 

நீயும் நல்லபடியாய் குழந்தைகளைப் பெற்று மணவாழ்வில் 

மகிழ்ச்சியோடு வாழ்கிறாய் எந்தவித குற்ற உணர்வுகளும் இல்லாமல். 

நானும் உன்னைக்கடிந்து கொள்ளவிரும்பவில்லை. 

என்னதான் சோற்றைப்போட்டு நடுவீட்டில் வைத்தாலும் 

அதன் புத்தி மாறாது என்பதில் மிகத்தெளிவாய் இருந்தேன். 

இந்த உரையாடல் உன்னை அழைப்பதற்கல்ல தவறிக்கூட 

என் திருமணத்திற்கு வந்துவிடாதே!


Saturday, August 8, 2020

தாழ்ச்சிக்குலம்



மண்ணோடு மனம் மங்கிப்போன மானிடா 

எங்கு தோன்றினான் 

நீ வரையறுக்கும் தாழ்ச்சிக்குலத்தவன்?

அவனும் நானும் பெண்ணுருப்பின் உதிரத்தின் 

உதிரிகளாய்ப் பிறக்க நீ மட்டும் செங்கதிரின் 

செஞ்சந்தனத்தில் பிறப்பெடுத்தாயா? 

வெடுக்கடிக்கும் பனிக்குட வாசனை நுகர நீ மட்டும்

பன்னீர் தெளித்து கமழமளித்தாயா?


நடமாடும் கல்லறைகளாய் நாடகம் அரங்கேற்றும் மானிடா 

என்ன வேறுபாடு கண்டாய் 

நீ வரையறுக்கும் தாழ்ச்சிக்குலத்தவனில்?

செங்குருதி வெண்குருதி தவிர கலங்கிய சேற்றுநீர் 

ஓடுகிறதா அவன் தேகத்தில்?

பசித்த தேகத்தில் வியர்வைத்துளியும் ஏக்கத்தில் 

உமிழ்நீர் சுரக்க உனக்கோ ஊற்றுநீர் சுரக்கிறதா?


வஞ்சகத்தின் வர்ணத்தை நாவில் நக்கிப்பிழைக்கும் பச்சோந்தி மானிடா 

என்னதான் செய்வாய் 

நீ வரையறுக்கும் தாழ்ச்சிக்குலத்தவனுக்கு?

ஒருபிடி சோற்றுக்கு ஏங்கும் ஒரு சாண் வயிற்றுக்கு 

ஓட்டைச் சிரட்டையில் களநீர் சொட்டச் சொட்ட 

குடுப்பதில் அவன் நா நனைந்திடுமா?

பெண்ணணியும் மார்புக்கச்சைக்கோ வரி கேட்கும்

குடுமிக்காரன் அதன் உள் சிறு இதயத்தின் தவிப்பை அறிந்திடுவானா?


கொடிய கருநாகம் கக்கும் விஷம் நாடி நரம்பெல்லாம் 

பாய்ந்து சர்ப்பமும் உனை கண்டு அஞ்சிடவைக்கும்  மானிடா 

என்ன செய்தான் 

நீ வரையறுக்கும் தாழ்ச்சிக்குலத்தவன்?

கல்வியில் சிறப்புற ஏட்டை விடுத்து உன் வீட்டு ஓட்டைப்பிரித்தானா? 

உயர்பணியில் உனக்கு சமமாய் அமர உறுத்தலான 

உன் மனக்கசப்பிடியிலிருந்து விலக பொன் 

பொருட்களால் அர்ச்சித்து அபிஷேகித்தானா?


மாயையினை போதையாய் சாயை கொண்டு சாதிக்கும் மானிடா 

என்ன செய்து அழித்தொழிப்பாய்  

நீ வரையறுக்கும் தாழ்ச்சிக்குலத்தவனுக்கு?

வன்புணர்வில் உன் சாதியம் சாதித்ததாய் 

மமதை கொள்கிறாள் உன் உயிர் அணுவும் கலப்புறும் என்பதை மறந்தாயா?

ஆணவக்கொலைகளை செய்கிறாய் நாளை 

புது விதை உன் வீட்டில் முளைக்காது என்ற துணிச்சலிலா? 


பேதமற்று புத்தி பேதலித்துப் பேசவில்லை மானிடா 

உன் அங்கவஸ்திரம் அங்கம் தீண்டலின்போதே 

நீயும் தீண்டாமை ஆகின்றாய் 

உதிரும் கேசமும் அவன் கையால் தீண்டுகையில் 

அதற்கும் உனக்கும் இல்லையடா வேறுபாடு 

தாழ்ச்சிக்குலத்தவனாய் பாகுபாட்டை ஏற்படுத்தமுன் 

பகுத்தறிந்து செயற்படு

தீண்டாமையை புறக்கணித்துக்கொள் அல்லது 

தீது நல்குவதில் உன்னைப் புறக்கணித்துக்கொள்

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...