Friday, August 14, 2020

நம்மவரின் சுதந்திரம்

 











அடிமைத்தனம் உணராத அடிமைகள்

கொண்டாடும் பகட்டான சுதந்திரம்

குரல் கொடுத்து வெற்றி கண்ட தியாகிகள்

பெற்ற பொக்கிஷத்தை நம்மவர் கைநழுவிடப்பட்ட சுதந்திரம்


தண்ணீரின் தட்டுப்பாட்டில் குடிநீர் வேண்டி 

அணைகள் திறக்க தலை தூக்கிய சுதந்திரம் 

போத்தல் நீரை காசுக்கு வாங்கி பக்குவமாய் 

சிந்தாமல் குடிக்க கிடைத்தது சுதந்திரம்


இதமான தென்றல் காற்றைக்கூட  தூய்மையாய் 

சுவாசிக்கக் கேட்ட சுதந்திரம்

ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளின் விசத்தை

பருகுவதில் கிடைத்தது சுதந்திரம்


வரிகளிலும் அரச கட்டணங்களிலும் கட்டணத்தொகை 

குறைக்க வேண்டிய சுதந்திரம்

தாரை தாரையாய் கறுப்புப்பணம் அரசு அறியாமல்

பதுக்கி வைக்க கிடைத்தது சுதந்திரம்


பெண்ணடிமை அழிய சுய அந்தஸ்தைப்பெற 

தற்துணிவும் நீதியும்  நிலைநாட்ட வேண்டிய சுதந்திரம்

இன்று கற்பழித்து கொலை செய்யும் மனித ஓநாய்களின்

அநீதி படலத்திற்கு மீண்டும் கிடைத்தது சுதந்திரம்


பசுமைப்புரட்சியாம் பச்சைப்பசேல் வயல்வெளிகளில்

நெல்மணியாய் குலுங்க வேண்டிய சுதந்திரம்

அம்மணமாய் அரைவயிற்றுக் கஞ்சிக்கு வட்டியில்லா கடன் வேண்டி 

அரசிடம் தீக்குளித்தது  சுதந்திரம்


புண்ணிய ஸ்தலங்களும் நதி மலை வயல் புகழ் ஓங்க 

பாதுக்காக்க வேண்டிய சுதந்திரம்

கனிம வளங்களாம் ஹைட்ரோக்கார்பன் அகழ்வுகளால்

மழுங்கும் இயற்கை அழிவுக்கே சுதந்திரம்


பிடித்த துறையில் ஊக்கமுடன் படித்து 

ஞானியாகிட வேண்டிய சுதந்திரம்

பட்டங்களை காகிதப்பட்டமாக்கி வானில் பறக்கவிடும் 

வேலையற்ற பட்டதாரிகளை உருவாக்கியது இன்றைய சுதந்திரம்


ஜாதிகள் இல்லையடி பாப்பா என்றே இருதயத்தில் 

முரசொலிக்கவேண்டிய சுதந்திரம்

ஆணவக்கொலை தேவதாசிகளை பகிரங்கமாய்

உருவாக்கியது இந்த சுதந்திரம்


வெள்ளையனிடம் வீரத்துடன் ஆவேசங்கொண்ட 

கட்டபொம்மன் கதை சுதந்திரம்

அஹிம்சை வழியே அன்பின் பெரும் ஆயுதமாய் 

காந்தியடிகளின் சத்தியசோதனை சுதந்திரம்

இன்று வெள்ளையனும் இல்லை 

கட்டபொம்மனும் இல்லை 

காந்தியடிகளும் இல்லை 

நம்மவரிடமே தொலைத்து அடிமையான சுதந்திரம்


No comments:

Post a Comment

Your concern is appreciable. Thank you for the review

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...