முகத்திரையிட்டுக் கடக்கின்றேன் சாலைகளில் மட்டுமல்ல முகத்திரையிட்டுக் கடக்கின்றேன் சில வேளைகளில் மட்டுமல்ல நான் அணியும் முகப்பூச்சுக்களையும் யாரும் அறிந்திருக்கவாய்ப்பில்லை ஏனெனில் அவை வர்ணமற்ற புன்னகைகளின் முகச்சுருக்கங்களில் அலங்கரிக்கப்பட்ட அழகியல் கலை என்பதனால் நான் செய்யும் மந்திரப்புன்னகையை யாரும் அறிந்திருக்கவாய்ப்பில்லை ஏனெனில் கேளிகை வாழ்க்கையில் கோமாளிகள் பல உணர்வற்ற முகபாவனையை நிரந்தரம் கொள்கையில் நான் உரைக்கும் இன்மொழி யாரும் அறிந்திருக்கவாய்ப்பில்லை ஏனெனில் நச்சு வார்த்தைகளை மென்றுகொண்டிருக்கும் கவர்ச்சிகரமான உதடுகளை நோட்டமிட்டுக்கொண்டு பலர் இருப்பதால் நான் சிந்தும் வியர்வைத்துளி யாரும் அறிந்திருக்கவாய்ப்பில்லை ஏனெனில் என் தாகத்திற்கு யாரோ நீர் பருகிக்கொண்டு என் வேட்கையை தீண்டுவதில் இன்பமுறுகின்றமையால் முகத்திரையிட்டுக் கடக்கின்றேன் சாலைகளில் மட்டுமல்ல முகத்திரையிட்டுக் கடக்கின்றேன் சில வேளைகளில் மட்டுமல்ல
Love, War, Nation, Sad, Life, Mother, Nature, Childhood, Society, Feminism, Father, Relationship, Friendship, Women, Beauty, Tamil, poem , emotion
Thursday, September 10, 2020
Thursday, September 3, 2020
உதட்டுச்சாயம்
அவள் உதட்டுச்சாயம் களைவதில்
அத்தனை ஆடவர்களின் கண்களும் தீவிரமாய்
மொய்த்துக்கொண்டிருந்தன
என்ன ஆச்சரியம்!
பூக்களே தேன் சுவைக்க ஏங்கும் போது
வண்டுகள் மட்டும் வர்ணித்துவிட்டுப்போகுமா?
சிவப்பு வெல்வெட் ரோஜா இதழை
உதட்டுரேகை வளைவை வானவில்
கோடுகளில் கூட இவ்வளவு
கற்சிதமாய் கண்டிருக்கமாட்டார் எவரும்
அவ்வப்போது அவள் எச்சிற்பனித்துளிகள்
ஈரமூட்டிக்கொண்டு இருக்கின்றன
இதையெல்லாம் அறிந்தும்
அவள் மேலும் மேலும் உதட்டுச்சாயத்தை
அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றாள்
ச்சீ என்ன பெண்தான் இவளோ?
இத்தனை கடுமை வர்ணம் தீட்டுகிறாள்
எவனை மயக்குவதற்கோ?
எவர் குடியைக் கெடுப்பதற்கோ?
ஊர்ப்பெண்கள் சாபம் இவளை சும்மா விட்டுவிடுமா?
கர்ஜனைக்கும் பெண்சிங்கங்கள் பல மனதினுள்
குமிறிக்கொண்டிருக்க கண்டும் காணாதவளாய்
மேலும் மேலும் உதட்டுச்சாயத்தை
அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றாள்
அவள் வர்ணம் தீட்ட தீட்ட கையில்
இருந்த உதட்டுச்சாயமோ குறைவடைந்ததாயில்லை
வெறுமையான மென் இதழோடு
அவள் வஞ்சனையற்ற மனதாய் புன்னகைத்துக் கடக்கையில்
பாவம் ஓர் பெண்ணாய்க்கூட
அவளைப்பார்க்காதவர்கள் இன்றும்
அதே புன்னகைக்கு உதட்டுச்சாயம் பூசிட
ஒவ்வோர் கோணங்களில் கணக்கிட்டுக்கொண்டு
அவர்களின் புன்னகைகளை மறந்துவிட்டார்கள்
என்பதை உதட்டுச்சாயம் அறிந்துவிட்டது போல
Friday, August 14, 2020
நம்மவரின் சுதந்திரம்
அடிமைத்தனம் உணராத அடிமைகள்
கொண்டாடும் பகட்டான சுதந்திரம்
குரல் கொடுத்து வெற்றி கண்ட தியாகிகள்
பெற்ற பொக்கிஷத்தை நம்மவர் கைநழுவிடப்பட்ட சுதந்திரம்
தண்ணீரின் தட்டுப்பாட்டில் குடிநீர் வேண்டி
அணைகள் திறக்க தலை தூக்கிய சுதந்திரம்
போத்தல் நீரை காசுக்கு வாங்கி பக்குவமாய்
சிந்தாமல் குடிக்க கிடைத்தது சுதந்திரம்
இதமான தென்றல் காற்றைக்கூட தூய்மையாய்
சுவாசிக்கக் கேட்ட சுதந்திரம்
ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளின் விசத்தை
பருகுவதில் கிடைத்தது சுதந்திரம்
வரிகளிலும் அரச கட்டணங்களிலும் கட்டணத்தொகை
குறைக்க வேண்டிய சுதந்திரம்
தாரை தாரையாய் கறுப்புப்பணம் அரசு அறியாமல்
பதுக்கி வைக்க கிடைத்தது சுதந்திரம்
பெண்ணடிமை அழிய சுய அந்தஸ்தைப்பெற
தற்துணிவும் நீதியும் நிலைநாட்ட வேண்டிய சுதந்திரம்
இன்று கற்பழித்து கொலை செய்யும் மனித ஓநாய்களின்
அநீதி படலத்திற்கு மீண்டும் கிடைத்தது சுதந்திரம்
பசுமைப்புரட்சியாம் பச்சைப்பசேல் வயல்வெளிகளில்
நெல்மணியாய் குலுங்க வேண்டிய சுதந்திரம்
அம்மணமாய் அரைவயிற்றுக் கஞ்சிக்கு வட்டியில்லா கடன் வேண்டி
அரசிடம் தீக்குளித்தது சுதந்திரம்
புண்ணிய ஸ்தலங்களும் நதி மலை வயல் புகழ் ஓங்க
பாதுக்காக்க வேண்டிய சுதந்திரம்
கனிம வளங்களாம் ஹைட்ரோக்கார்பன் அகழ்வுகளால்
மழுங்கும் இயற்கை அழிவுக்கே சுதந்திரம்
பிடித்த துறையில் ஊக்கமுடன் படித்து
ஞானியாகிட வேண்டிய சுதந்திரம்
பட்டங்களை காகிதப்பட்டமாக்கி வானில் பறக்கவிடும்
வேலையற்ற பட்டதாரிகளை உருவாக்கியது இன்றைய சுதந்திரம்
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்றே இருதயத்தில்
முரசொலிக்கவேண்டிய சுதந்திரம்
ஆணவக்கொலை தேவதாசிகளை பகிரங்கமாய்
உருவாக்கியது இந்த சுதந்திரம்
வெள்ளையனிடம் வீரத்துடன் ஆவேசங்கொண்ட
கட்டபொம்மன் கதை சுதந்திரம்
அஹிம்சை வழியே அன்பின் பெரும் ஆயுதமாய்
காந்தியடிகளின் சத்தியசோதனை சுதந்திரம்
இன்று வெள்ளையனும் இல்லை
கட்டபொம்மனும் இல்லை
காந்தியடிகளும் இல்லை
நம்மவரிடமே தொலைத்து அடிமையான சுதந்திரம்
Monday, August 10, 2020
என் திருமணத்திற்கு வந்துவிடாதே!
ஆகா ஓகோ என்று தடபுடலாய்
தட்டுமாற்றி தாலிகட்ட நாளும்
குறித்துவிட்டார்கள். பந்தற்கால் நட்டு
பொன்னுருக்கி மூலையில் அமரவைத்தார்கள்
இப்பொழுதுதான் உன்னிடம் ஆசையாய் பேசமுடிந்தது
நீ நலம் தானா?
என் நலனில் அக்கறை இருப்பதால்
கண்ணீரோடு கதை பேசுகின்றேன்.
இங்கு யாருமில்லை என்ற தைரியத்தை
தக்கவைத்துக்கொண்டு கைபேசியில்
கலகலப்பாய் பேச நான் ஒன்றும்
பெண்ணியவாதியல்ல சராசரிப்பெண் தான்.
மாப்பிள்ளை வீட்டாரின் முழுசம்மதத்துடன்
மாங்கல்யம் ஏற்பதில் இத்தனை சுமைகளா என்ன?
தந்தையற்ற ஆண்துணையில்லா
மூத்த பெண்ணாய்ப் பிறந்தவள்
என்பதில் அடிக்கொருமுறை அன்னையைப் போல் அதட்டலும்
அன்பும் அதிகாரமும் அக்கறையும் அளாவலற்ற ப்ரியமும்
இறுதியில் தான் என்னைப் பெண் என உணரவைத்தது.
என் இளமை உணர்ச்சிகளை மீறி இனிதான ஒரு கூடலுக்கு
சமூகத்தில் ஒருபடி அந்தஸ்து தரும் ஒரு தருணம்
மிக விரைவில் வரப்போகிறது. தயவு செய்து
என் திருமணத்திற்கு வந்துவிடாதே.
மாங்கல்யம் சூட்டுவதில் எண்கணித சோதிடருக்கே
என் முதல் வணக்கம்.
தலைவிதி நன்றாக இல்லை என்ற வருத்தத்தில்
புரண்ட எனக்கு கோள்களும் கிரகங்களும் ஒன்றிசைந்து
நன்மைக் காரியம் கிட்டும் என்பதோடு விடாது
சிறப்பான வரன் என்று பல கட்டங்களுக்கு
என் புகைப்படம் முதல் என் நற்சான்றிதழும் அனுப்பிவைத்தார்கள்.
பார்த்தவுடன் பிடித்துப்போக
நான் என்ன ரதியா? ரம்பையா?
தட்டிக்கழிக்கப்பட்டன பல வரன்கள்.
இருந்தும் சிலர் முறுக்கும் பலகாரமும்
சுடச்சுட பால்த்தேநீர் குடிக்க வந்தவர்கள் போல
வீட்டுற்குப்போய் என் வீட்டு விலாசத்தை மறந்துவிட்டார்கள்
பின்புதான் நான் அறிந்தேன்
மாப்பிள்ளை சீதனத்தில் தான்
குடித்தனம் நடத்தப்போகிறார் என்று.
நல்லவேளை முறுக்கோடு நறுக்கிவிட்டதாய் எண்ணிக்கடக்க
அடுத்த மாப்பிள்ளை வீட்டார் அப்படியில்லை
வரதட்சணை வேண்டாம் மகளாய்ப் பார்ப்போம்
மகளை மட்டும் கட்டி அனுப்புங்கள் என்று
என் தங்கையைக் கைகாட்டினார்கள்.
பரவாயில்லை அவளும் சற்று ரம்பையோ மேனகையையோ
போல அழகாய்த்தான் இருப்பாள்.
வாழ்வில் பல அவமானங்களைக் கடந்துவிட்டேன்
இது என்ன என் கையால் தாலித்தட்டை சுமந்து
ஆசீர்வாதம் வாங்குவது ஒன்றும் பெரும் தவறில்லையே.
அடுத்தமுறை பெண் பார்க்க வந்தவர்களிடம்
உன்னைப்பற்றிக்கூற நான் விரும்பவில்லை
காரணம் எனக்கோ வயது முப்பத்திரண்டு.
இனியும் காதில் பஞ்சை வைத்துக்கொண்டு
வீதியில் நடக்கமுடியாது. அக்கம்பக்கம் அடுக்கும்
கேள்விகளுக்கு விடையளிக்காது சிரித்துக்கொண்டு
கடக்க இயலாது. வேறு சாதிக்காரனுடன் ஓடிவிட்டாள்
என்றால் பலகாரம் கூட பல்லில் படாமல் ஓடியிருப்பார்கள்.
நீயும் நல்லபடியாய் குழந்தைகளைப் பெற்று மணவாழ்வில்
மகிழ்ச்சியோடு வாழ்கிறாய் எந்தவித குற்ற உணர்வுகளும் இல்லாமல்.
நானும் உன்னைக்கடிந்து கொள்ளவிரும்பவில்லை.
என்னதான் சோற்றைப்போட்டு நடுவீட்டில் வைத்தாலும்
அதன் புத்தி மாறாது என்பதில் மிகத்தெளிவாய் இருந்தேன்.
இந்த உரையாடல் உன்னை அழைப்பதற்கல்ல தவறிக்கூட
என் திருமணத்திற்கு வந்துவிடாதே!
Saturday, August 8, 2020
தாழ்ச்சிக்குலம்
மண்ணோடு மனம் மங்கிப்போன மானிடா
எங்கு தோன்றினான்
நீ வரையறுக்கும் தாழ்ச்சிக்குலத்தவன்?
அவனும் நானும் பெண்ணுருப்பின் உதிரத்தின்
உதிரிகளாய்ப் பிறக்க நீ மட்டும் செங்கதிரின்
செஞ்சந்தனத்தில் பிறப்பெடுத்தாயா?
வெடுக்கடிக்கும் பனிக்குட வாசனை நுகர நீ மட்டும்
பன்னீர் தெளித்து கமழமளித்தாயா?
நடமாடும் கல்லறைகளாய் நாடகம் அரங்கேற்றும் மானிடா
என்ன வேறுபாடு கண்டாய்
நீ வரையறுக்கும் தாழ்ச்சிக்குலத்தவனில்?
செங்குருதி வெண்குருதி தவிர கலங்கிய சேற்றுநீர்
ஓடுகிறதா அவன் தேகத்தில்?
பசித்த தேகத்தில் வியர்வைத்துளியும் ஏக்கத்தில்
உமிழ்நீர் சுரக்க உனக்கோ ஊற்றுநீர் சுரக்கிறதா?
வஞ்சகத்தின் வர்ணத்தை நாவில் நக்கிப்பிழைக்கும் பச்சோந்தி மானிடா
என்னதான் செய்வாய்
நீ வரையறுக்கும் தாழ்ச்சிக்குலத்தவனுக்கு?
ஒருபிடி சோற்றுக்கு ஏங்கும் ஒரு சாண் வயிற்றுக்கு
ஓட்டைச் சிரட்டையில் களநீர் சொட்டச் சொட்ட
குடுப்பதில் அவன் நா நனைந்திடுமா?
பெண்ணணியும் மார்புக்கச்சைக்கோ வரி கேட்கும்
குடுமிக்காரன் அதன் உள் சிறு இதயத்தின் தவிப்பை அறிந்திடுவானா?
கொடிய கருநாகம் கக்கும் விஷம் நாடி நரம்பெல்லாம்
பாய்ந்து சர்ப்பமும் உனை கண்டு அஞ்சிடவைக்கும் மானிடா
என்ன செய்தான்
நீ வரையறுக்கும் தாழ்ச்சிக்குலத்தவன்?
கல்வியில் சிறப்புற ஏட்டை விடுத்து உன் வீட்டு ஓட்டைப்பிரித்தானா?
உயர்பணியில் உனக்கு சமமாய் அமர உறுத்தலான
உன் மனக்கசப்பிடியிலிருந்து விலக பொன்
பொருட்களால் அர்ச்சித்து அபிஷேகித்தானா?
மாயையினை போதையாய் சாயை கொண்டு சாதிக்கும் மானிடா
என்ன செய்து அழித்தொழிப்பாய்
நீ வரையறுக்கும் தாழ்ச்சிக்குலத்தவனுக்கு?
வன்புணர்வில் உன் சாதியம் சாதித்ததாய்
மமதை கொள்கிறாள் உன் உயிர் அணுவும் கலப்புறும் என்பதை மறந்தாயா?
ஆணவக்கொலைகளை செய்கிறாய் நாளை
புது விதை உன் வீட்டில் முளைக்காது என்ற துணிச்சலிலா?
பேதமற்று புத்தி பேதலித்துப் பேசவில்லை மானிடா
உன் அங்கவஸ்திரம் அங்கம் தீண்டலின்போதே
நீயும் தீண்டாமை ஆகின்றாய்
உதிரும் கேசமும் அவன் கையால் தீண்டுகையில்
அதற்கும் உனக்கும் இல்லையடா வேறுபாடு
தாழ்ச்சிக்குலத்தவனாய் பாகுபாட்டை ஏற்படுத்தமுன்
பகுத்தறிந்து செயற்படு
தீண்டாமையை புறக்கணித்துக்கொள் அல்லது
தீது நல்குவதில் உன்னைப் புறக்கணித்துக்கொள்
Wednesday, July 29, 2020
யசோதராக்களின் கனவு
மின்னும் வேகத்தில் எத்தனை பேர் சூழ்ந்து
சூழ்ச்சி வலை பின்னினும் இலக்கு ஒன்றை
மட்டும் மனக்கண் முன் நிறுத்தி அவ்வலைதனை
தகத்தெறிய காற்பந்தாட்ட பூமியில் கட்டைக்கால்
காற்சட்டை முட்டி மேல் முழம் ஏறி சமூகத்தடை
விலக்கத் தெரியாமலே அழிந்துபோகின்றன
பல யசோதராக்களின் கனவு
வெள்ளைமுகம் தலைகாட்ட செங்கதிரோன்
தலை சாய்க்க தேவைகள் காரியங்கள் பல
ஆற்ற ஆண்துணையற்ற அங்கையர்க்கன்னி
ஓரடி வாசற்படிதாண்டுதலில் கதி கலங்கிப்போகும்
பெண்மையின் கற்பு பல அவச்சொற்களில் இருந்து
அழிந்துபோகின்றன
பல யசோதராக்களின் கனவு
காதல் கனவுகள் கல்லறைச்சுமைதாண்டி
நீண்ட தூரம் பயணிக்க சாத்தானாகினும்
ஒரே சாதியைத் தேடித் தேடி வேட்டைக்கு
அனுப்பும் புள்ளிமான்கள் பல மனதால்
உடலால் இரையாகி சுகமற்ற நோயில் வாடினும்
இன்னும் அப்பன் அம்மை பிடியில் அழிந்துபோகின்றன
பல யசோதராக்களின் கனவு
ஆடவன் தன் சுகம் தேடி சலனம் தீர்க்க எத்தனை
படி ஏறி இறங்கினாலும் பத்தினியாய் இவள்
உடலைப் பட்டினி போட்டு பத்தியம் காப்பினும்
பல் இழிக்கும் பல பங்காளிக்கூட்டம் சீண்டலுக்கு
பதில் மொழி கூறி மறுமணத்திலும் விவாகரத்திலும்
கேலிப்பேச்சிற்கு தலைகுனிவதில் அழிந்துபோகின்றன
பல யசோதராக்களின் கனவு
கற்பித்தலும் வியாபாரமாகிட கரும்பலகைகள்
கூட தரம் பார்த்திட இலஞ்சங்கள் ஊழல்கள்
தலைவிரித்தாட காஞ்சவன் பாலியல் இலஞ்சங்கள்
பரிசாய்க்கேட்டிட விண்வெளியில் பறக்கும் கனவுகள்
விண்ணிலிருந்து விழுந்து மடிந்திட
அழிந்துபோகின்றன
பல யசோதராக்களின் கனவு
அனைத்தும் துறப்பதில் மனம் கொண்ட புத்தன்
தூக்கத்தில் யார் அறியாமலும் தன்சுமைகளில்
இருந்து விடைபெற்று ஞானம் பெறுவதில் மட்டும்
சிந்தை கொண்ட ஒருகணம் குழந்தை குடும்பம்
கடமைகள் மறந்து தன் சுகம் தன்நலன் கருதி
வீட்டை விட்டு வெளியேறியிருப்பின் அவளை
வேசி என்றே நாமம் சூட்டியிருக்கும் இந்த உலகின்
மூர்க்கத்தால் அழிந்துபோகின்றன
பல யசோதராக்களின் கனவு
Monday, July 27, 2020
புற்றுநோயாளியின் கர்ப்பம்
உயிர்ப்பிணைப்பில் இன்று ஒரு முடிச்சு
நாடோடிக்காதல்
நாடோடியாய் நானும் நீயும் நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம் நமக்கு நாமா...
-
பதிவுத் திருமணமும் முடிந்துவிட்டது சட்ட ரீதியாக மட்டும் மனைவி ஆகிவிட்டேன் ஊர் அறிய உறவறிய திருமணத்திற்கு நாள் பார்க்கிறாள் உன் மாமியார் ...
-
பேனைமுனை கண் நனைக்க காகிதங்களோ கைக்குட்டையாய் அதை வாங்கிக்கொள்ள காகிதச்சிற்றபம் ஒன்று இறுதியாய் வரைந்தெடுக்கப்பட்டது கருவில் சு...
-
பிரபஞ்சத்தினளவு காதல் கொண்டும் அதை வார்த்தைகளால் வரிகளால் விபரிக்க தயங்கிய உள்ளங்களே இரகசியக் காத(லி)(லன்) எல்லையற்ற ப்ரியங்களை மொழியால் ...
-
அவள் உதட்டுச்சாயம் களைவதில் அத்தனை ஆடவர்களின் கண்களும் தீவிரமாய் மொய்த்துக்கொண்டிருந்தன என்ன ஆச்சரியம்! பூக்களே தேன் சுவைக்க ஏங்கும் போது...
-
ஓடாதே என் ஆசைக் கணவா அன்று தொட்ட காலம் முதல் உன் மீது கொண்ட காதல் பூமாலை மணக்கோலம் தாண்டி இப்பூவுலகில் இருவரின் பாதமும் ஒருமித்தப் பதி...
-
யாருமில்லாத மாலைவேளையில் தூறிய மழை நின்றபின் வரும் சிலிப்பான காற்றுக்கு சுடச்சுடத் தேநீரும் போற்றிக்கொள்ள கதகதப்பான கம்பளியும் தா...
-
சிறுவயதில் நான் படித்த கதைப்புத்தகங்களிலும் என் பொழுதை களிப்புடன் கழிக்க நான் பார்த்த கார்ட்டூன்களிலும் தான் நான் பார்த்திருந்தேன் த...