Monday, July 20, 2020

நான் மீண்டும் அறிமுகமாகின்றேன்


















நான் மீண்டும் புதிதாக 

உனக்கு அறிமுகமாகின்றேன்


என் முழுப்பெயர் முதல் 

செல்லப்பெயர் வரை அறிய

நீ மீண்டும் முயன்றுகொள்


உனக்கு ஆவலான அலாதிப்பிரியமான

விடையங்களை அறிய மீண்டும் 

வினாக்களைத் தொடுக்கின்றேன்


நீண்ட உரையாடல்கள் நீளமான இரவுகள்

பகட்டான பகல் மாலை வேளையும் தாண்டி

புதிய ஒரு தினத்தை மீண்டும் அமைக்கட்டும்


மணித்துளிகளுடன் உன் நினைவுத்துளிகளும்

ஒட்டிக்கொண்டு நிமிடமுள் ஸ்தம்பித்துப்போகட்டும்


கைவண்ணங்கள் பல உன்வண்ணம் 

காண்பித்தலில் வெகுமதி பெற்ற இறுமாப்பு 

இதயத்தில் மீண்டும் துடிக்கட்டும்


புரிந்துணர்வற்ற புரிதல்கள் மூண்டுபோன 

கசப்பு வார்த்தைகள் பரிசுத்தமான அன்பை

மீண்டும் பரிசீலிப்பதை தவிர்த்துக்கொள்ளட்டும்


நான் என்னையும் நீ உன்னையும் நேசிக்கச்செய்யும்

பரிபாசை யுக்திகள் நிலைக்கண்ணாடி விம்பத்தில் 

மீண்டும் இரசிக்கும் இரசணையூட்டட்டும்


நீ நீவீராய் செல்ல நான் நலிவுற்றுப்போக 

சங்கடமான சந்தேகத்தேக்கத்தில் நறுமலரும் பூக்க மீண்டும் கடிகார முட்கள் சுழறட்டும்


பழைய புத்தகத்தில் புதிய அத்தியாயம் 

சுவாரஸ்யமான 

பகுதிகளை மென்மையான 

தோகை கொண்டு புனரமைக்கட்டும்


மீண்டும் மீண்டும் அறிமுகமாகும் 

புதியவர்கள் போல்

தேடலும் போலி ஊடலும் 

ஊக்கமளிக்கும் உறவுவிற்காய் 

நான் மீண்டும் அறிமுகமாகின்றேன்







Saturday, July 4, 2020

என்னை அழவைத்தவர்களுக்கு நன்றி



















என்னை அழவைத்தவர்களுக்கெல்லாம் மனமார நன்றி சொல்கின்றேன் இந்த வேளையில்


இந்தக் கல்லிலும் ஈரம் இருப்பதாய் உணர்த்துவதற்கு 

அன்பை தற்காலிகமாய் அடகு வைத்தீர்கள்


கண்ணில் ஈரம் வருவதற்காய் சொல்லால் எத்தனை

ஈட்டி அம்புகளை என் மனதில் பிரயோகித்திருப்பீர்கள்


நம்பிக்கையை விதைப்பதற்கு எத்தனை நாட்கள்

கண்ணயறாமல் நிஜமுகங்களை வேளாண்மை 

செய்யாமல் காத்திருந்திருப்பீர்கள்


பொய்யான வார்த்தைகளை நிஜமென உணர்த்த

எத்தனை அரும்பாடுபட்டு புன்னகையை

கண்களில் காண்பித்திருப்பீர்கள்


நிழலாய் பின்தொடர்ந்து உயிராய் காப்பதாய்

பொய் வாக்கினை அளிக்க மனதை எப்படி

திடப்படுத்தியிருப்பீர்கள்


கண்கலங்கிய நொடியெல்லாம் கரம்பற்றி 

பாசப்பிணைப்பை வலுப்படுத்த வலியவந்து

உறவாடும் நளினங்களை எப்படி கையாண்டிருப்பீர்கள்

 

இத்தனையும் ஒருநாள் உதறலுக்காய் உங்களை 

மாற்றிக்கொண்டீர்களே என் கண்ணீரில்

இனி இவை இடம் பெறாத நன்றி மட்டுமே உங்களுக்கு


Friday, June 26, 2020

சிரிப்பு போலி பிரதிபலிப்பு

















என்றும் இனிமையான சிரிப்பொலியும்

செஞ்சந்தன முகப்பொலிவும்

மனதை வசப்படுத்தும் இன்மொழியும்

நேர்த்தியான இஸ்திரிக்கப்பட்ட உடையும்

பொய் கூறிவிடலாம்


மகவற்ற தாய் மடிக்கு நற்புதல்வனாய்

ஆடவண் துணையற்ற பெண்ணின் தமையனாய்

ஈன்றவனற்ற பிஞ்சு மழலையின் தகப்பனாய்

சகமும் பகிரும் தோழனாய்

உறவுமுறியடித்து விடலாம்


செஞ்சோலையும் சாலையோர நிழலும்

கொட்டும் அருவி மழைச்சாரலும்

வயலும் புல்வெளிநிலமும்

மலைத்தொடர் கடற்பரப்பு மணல் மண்ணும்

கண்ணிற்கு காட்சியற்றும் போகலாம்


முதல் விசும்பின் மழைத்துளியும் 

அதில் எழுnம் மண்வாசமும் 

பால்வாடை வீசும் மழலை அமுதும்

வெண்புகை பனித்துளி படர்ந்த மலர் மொட்டுக்களும் 

தேன் வண்டின் ரீங்காரத்தில் ஓடி விளையாடும் 

அணிலும் சிறு பட்சிகளும் இதமற்றுப் போகலாம்


அயலவர்களின் சலசலப்பான பேச்சுகளும் 

பத்திரிகை நடுப்பக்கத்து கிசுகிசுப்பான பேச்சுகளும் 

நவீன நங்கையின் நளினமான பேச்சிலும் 

காரியவாதியின் கபடமான பேச்சிலும் 

கடமையதிகாரியின் கடுமையான பேச்சிலும்

இனி சுவாரஸ்யம் குறைந்துவிடலாம்


அருளாசிபுரியும் இறைவனடி துணைநிற்காதென

அகவிழி சுடர் அணைந்து இருட்டான ஓர் 

ஓசையறியா அறையில் மேல் முகட்டில் கற்பனைத் திரையை 

அங்குமிங்குமாய் அலைய விடலாம்


காலன் பிடியில் கைவிலங்கின்றி இனி 

எவர் சித்தம் என்றே இங்ஙனம் இனிதாய் நிறைவேற்றிய 

மேடை நாடகத்தில் தன் கதாப்பாத்திரத்தை 

விருப்பு வெறுப்பின்றி நிறைவேற்றம் செய்யலாம்


நிர்க்கதியற்ற நிம்மதி தொலைத்தவனிற்கு 

அன்பாய் அருகில் அணைத்து அமர்ந்து 

தலைகோதி மடிமீது

ஒரு நிமிட பாசப்பிணைப்பிற்கு 

மனம் தேடும் அன்பானவர் இல்லாவிட்டால் 

அவன் சிரிப்பு போலி பிரதிபலிப்பாய் அமைந்துவிடலாம்






Wednesday, June 24, 2020

மறக்கமுடியுமா










மறக்கமுடியுமா

உன்னோடு பள்ளிப்பருவம் 

தொட்டு இன்று வரையிலான நினைவுச் சிற்பங்கள் 

ஒவ்வொன்றையும் அவை ஒவ்வொன்றாய் 

இதயத்தில் ஆழமாய் நான் பதித்த கல்வெட்டுக்கள்


இணையங்களில் இல்லை இதயங்களில் 

ஆரம்பித்த எம் அன்புப் பரிமாற்றங்கள் இடையிடையே 

ஆயிரம் பெரும் சண்டைகள்

ஒவ்வோர் சண்டை முடிவினிலும் 

புன்னகைத்தே உன்னிடம் வருவேன் 

நீண்ட மண்றாடலின் 

பின் மன்னிக்க வேண்டுவேன் 

பதிலாய் நீயும் கேலி செய்வாய்

கேலிகளே இன்று கேள்விகளாகின

ஒவ்வொரு பிரிவிலும் என் தேடல் இருக்கும்

தேடலின் பலனாய் நீ கிடைப்பாய்

ஊடலிலும் தேடலிலும் மாதங்களும் ஓட வருடமும் புரண்டோடியது


நீயும் வாலிபனானாய் நானும் இளவஞ்சியானேன்

இருந்தும் இந்த வாக்குவாதங்கள் நீண்டே தான் சென்றன 

இந்த வாய்ப்பேச்சுக்கள் இல்லாத நிலை 

வருமெனத் தெரிந்திருந்தால் நான் வாய்திறக்காமலே 

காலத்தை கடத்தியிருப்பேன்

அன்பான அக்கறைகளில் அடுக்களை சமையும்

என் உரையாடலோடே நடந்தது

எந்தன் பரிசு பொம்மைகள் உந்தன் கண்ணாடிப் 

பெட்டிகுள் காட்சியளித்தது

உனக்காய் வாங்கிய சட்டை கூட

உன் தம்பிக்கோ அளவானது


பக்குவமான வயதில்லை

பக்குவம் சொல்லித்தர யாருமில்லை

மண்ணோடு புரண்டழுது கண்ணீர் வடித்தாலும்

வானத்து விண்மீன்கள் கையில்

தவழ்வது இல்லை

நீயோ கடல்கடந்து போனாய்

நானோ எனை மறந்துபோனேன்

காலங்களும் கடந்தன

கடதாசி கணினி மயமாய் உருவெடுத்தன

மீண்டும் அழைப்பு விடுத்தேன்

மறுபக்கத்தில் பதிலளிக்க நீ


மீண்டும் நட்புக்கு பாலமிட்டேன்

நீயோ வேடம் என்றாய்

போகமனமில்லை என்றேன்

போடி என் வாழ்விலிருந்து என துரத்திவிட்டாய்

காரணம் என்னவோ நீயும் சொல்லவில்லை 

நானும் கேட்கவில்லை

கேட்பதிலும் பலனில்லை என்கே அறிந்தேன்


என்னதான் காரணமோ எதற்காய் இந்த காரியமோ

கானகமும் சொல்லும் என் சோகக்கதை

சோ எனப் பொழிந்த மழை

என் கண்ணீரைக் கழுவிக் கழுவி உப்பாய்போனது

உன் நிஜாபகங்கள் மட்டும் கரைந்திடாத

சிலைமேல் எழுத்தாகின


தொல்லைகளினால் தொலையட்டும்

இந்த அன்பின் இராச்சியம்

காலங்களின் கட்டளைகளை நிறைவேற்றியே

காத்திருக்கும் காத்திருப்புகள் 

பிரயோசமற்றதாய் களவாடிப்போன

இதயத்தில் உனக்கான நியாபகங்கள்

மட்டும் பகிரங்கமாக பதுக்கிவைக்கப்பட்டுள்ளன


ஆண்பெண் நட்பின் அளவும் அளவுகோலும்

நீ அறிந்துவிட்டாய் இன்னும் நான் அறியாமல்

இருப்பின் அது என்தவறே 

முட்டுக்கட்டைகளால் என்னுடன் முரண்பாடிடாதே

ஒதுங்கி ஓரமாய் இன்னும் மறவாமல் தவிக்கின்றேன்




Friday, June 12, 2020

நார்த்திகவாதி யார்?

               




















ஆர்த்திகன் என தன்னைத் தானே தம்பட்டம் 

அடித்துக்கொள்பவனை எதேற்ச்சையாய்

கண்டேன் அவனோ என்னை 

நார்த்திகன் என ஏளனமாய்ப் பார்த்தான்

எள்ளளவேனும் இடைவெளி நிரப்ப கிள்ளும் 

வார்த்தைகளால் வினவ நினைத்தவன் 

போலிப் புன்முறுவலுடன் சகா என்றான்


உங்கள் வயலில் விளைச்சல் எப்படி 

எல்லாம் இறைவன் சித்தம் என்றான் 

பாடுபட்டு வியர்வை சிந்தியவன் விவசாயி 

அவன் நலனை வேண்டுங்கள் என்றேன் 

மழையும் வெயிலும் இறைவனின் படைப்பு 

ஏன் வார்த்தைகளில் நையப்புடைப்பு என்றான்

பனை மூழ்கும் வெள்ளத்தையும் விறகெரியும்

கொழுந்தணல் வெயிலையும் அதே இறைவன் தானே

படைத்திருக்கவேண்டும் என்றேன் நான்


வாணிவிழாவில் சிறப்புறையாற்ற 

வரவேற்கிறேன் என்றான் 

எதற்காக வாணிவிழா அதன் முக்கியத்துவம் 

தான் என்ன என்றேன்

கல்வியின் அதிபதி சரஸ்வதிதேவி உள்ளம் மகிழ்ந்தால் 

மாணவர் கல்வி சிறக்கும் என்றான்

காதுச்சவ்வு கிழிய காணொளிப் பாடலை காலை மாலை 

இடைவெளியற்று உரக்க ஒலிபெருக்கினால் 

சாந்த சொரூபிணி சரஸ்வதியே ஓடிவிடுவாள் என்றேன்


மாரிமுத்துவின் மகள் அம்மைபோட்டு படுத்திருக்காள் 

அந்தப்பக்கம் போய்விடாதே என்றான் 

அம்மனை தரிசிக்கத்தானே ஆலயத்தோறும் ஆராதனை செய்வீர்கள் 

அம்மனே நேரில் வந்தால் ஏன் ஓடுகிறீர்கள் என்றேன்

அம்மனின் குறைபாடு அம்மன் கோபிக்கும்

தொற்றிவிடும் சரியான உபத்திரம் என்றான்

நீதான் பல தொண்டுகள் செய்கிறாயே

எப்படி அம்மனுக்கு குறைவரும் 

அம்மை எப்படி உனக்கு வரும் என்றேன்


கோவில் சந்நிதானம் நேரே கால் நீட்டாதே என்றான் 

காலில் இரத்த ஓட்டம் சிறிது சரிவரும்வரை பொறு என்றேன் 

கூடாது கூடாது

சுவாமி கோபிக்கும் என்றான் 

சந்நிதானத்திலும் கற்பகிரகத்திலும் மட்டும் தான் 

கடவுள் இருக்கிறாரா

சர்வவியாபகம் என்று சமயப்புத்தகத்தில் படித்தது 

பொய்யா என்று கேட்டேன்


பால்குடம் பவனிவர பாலமுருகன் கோயில் திருப்பணியில் 

கலந்துகொள்ள வருவாயா என்றான்

பசியில் வாடும் தாயற்ற பிஞ்சுக்கும் 

பட்டினியில் வறுமை வாட்ட கஞ்சி குடிக்கும் ஏழைக்கும் 

இந்தப்பால் கிடைத்திருந்தால் ஏன் கள்ளிப்பாலை

வலுக்கட்டாயமாய் பருக்கப்போகிறான் என்றேன்

எல்லாம் தங்கத்தால் வெய்யப்பட்ட கூரையில் 

குடிகொண்ட சந்நிதியான் பார்த்துக்கொள்வான் என்றான் 

அந்த தங்கக்கூரையை விற்றாலே வேறு நாட்டில் 

கையேந்தும் நிலை 

நம் நாட்டுக்கே தேவையில்லையே என்றேன்


போடா போ நீ இன்னும் மாறவில்லை என்றான் சலிப்போடு 

உங்கள் இதயங்களிலும் எண்ணங்களிலும் மாற்றம் காணும் வரை 

பரம்பரை அலகில் இதுவும் ஒட்டிக்கொள்ளும் கசடாக 

அதை என்னைப்போல் ஒருவன் முளைத்துக்கொண்டே இருப்பான் 

தூய்மையாக்க என்றேன் 




Wednesday, June 10, 2020

மதுகிண்ணமும் கதைபேசும்



















கண்ணே உன் நினைவுகள் எல்லாம்

கற்பனைக் கனவுகளாய் கலைத்திட

கையில் ஏந்தினேன் மதுக்குவளை

கவலைகள் தீர வேறு மருந்தில்லை


குவளை வளைவுகளை உன்

கமலக்கன்னங்கள் தாமரை இதழாய்

கையேந்தினேன் நீயும் தவழ்ந்தாய் என்

கரங்களில் அந்திசாயும் வேளை எல்லாம்


கிண்ணத்தின் கழுத்துப்பிடியை

கைபற்றும் போதெல்லாம் உன் சங்குக்

கழுத்துவளைவை என் விரல்கள் மீட்டும்

கல்வி சரஸ்வதி வீணையாய் இசைத்தேன்


கூவும் முகமறியா கருங்குயிலும்

கீச்சிடும் சின்ன அணில் பிள்ளைகளும்

காலைவேளையில் துயில் களைய

கண்ணீராய் ஓடுகிறது என் ஏக்கங்கள் 


கேலியாய் நோட்டம் விடும் அயலவர்

கண்களுக்கு கேளிக்கை வேடம் பூண்ட

கோமாளி நான் மாது உன்னை மறக்க 

கிண்ணத்தில் மது உன்னைப் புசித்தேன்


கைதியாய் மனச்சிறையில் அடைக்கப்பட்டு

குற்றவாளிக்கூண்டில் உன்னை சிந்தையால்

கட்டிக்கொண்டு அவிழ்க்கமுடியா வலிகளை

குவளையில் மதுவோடு பேசித்தீர்க்கின்றேன்


களவாடிய பொழுதுகள் எல்லாம் கன்னி

கைவளையலாய்  கடிவாளமிட

கையில் குவளையின் முகமும் அவள் 

கண்ணாடி வளையலாய் கதைபேசுகின்றேன்


கதை கதையாப் பேசுகின்றேன்

கண்ணீரும் தீரவில்லை கண்ணிலிருத்து

கற்பனையும் மீளவில்லை உன்னிலிருந்து

கைக்குவளை மதுவும் போதவில்லை பெண்ணே

கணத்த காதல் கசடிலிருந்து



நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...