Showing posts with label Women. Show all posts
Showing posts with label Women. Show all posts

Saturday, June 1, 2019

விலைமாதுக்களே! வரவேற்கின்றேன்


பெண்ணாக நான் இருந்துகொண்டு
விலைமாதுக்கள் ஆகிய உங்களை
இன்முகத்துடன் வரவேற்பதில்
பெருமிதமடைகின்றேன்

நீங்கள் விருப்பம் கொண்டோ
அல்லது உங்கள் விருப்பத்திற்கு
பிறம்பாகவோ விலைகூறி உங்களை
சமூகத்தில் அவப்பெயர் பெற்று
இத்தொழில் செய்கிறீர்கள்
இருந்தாலும் நீங்களும் பெண் தானே
உங்களின் வலிகளும் வேதனைகளும்
சிறிதளவாயினும் நானும் புரிந்துகொள்வேன்

பருவமடையும் முன் நானும் உங்களைப்பற்றி
அவதூறாகக் கதைத்ததுண்டுதான்
மானத்தை உயிராய் நினைக்கும்
பெண்கள் மத்தியில் அதை கூலிக்கு
நீங்கள் விற்பனை செய்வதால்
ஆனால் இன்று உங்களைப்
பெருமளவில் காணக்கிடைப்பதில்லை

உங்கள் விலையை உயர்த்திவிட்டீர்களோ
சட்ட ஒழுங்குகளுக்குக் கட்டுப்பட்டுவிட்டீர்களோ தெரியவில்லை
நீங்கள் நலிந்துவிட்ட இக்காலகட்டத்தில்
பருவமங்கையரை மட்டுமல்ல
பிஞ்சுக்குழந்தைகளையும் வயது முதிர்ச்சி பெற்று
இறக்கும் காலத்தை எண்ணி பொழுதைக் கழிக்கும்
மூத்தோரையும் வக்கிரகுணம் கொண்ட
காமுகர்கள் விட்டுவைத்ததில்லை
இரவில் மட்டுமல்ல பகலிலும் பொதுமக்கள்
நிறைந்த நிலையிலும் அவர்கள்
தயங்காமல் முன்னேறுகிறார்கள்

அவனை ஈன்றவள் ஒரு பெண்
அன்பாய் அண்ணா என பாசம் பொழிந்தவள் ஒரு பெண்
தம்பி என தலைதடவியவள் ஒரு பெண்
அவனை மட்டும் பதியாய் மானம் துறப்பவள் ஒரு பெண்
அவன் உருவாய் பிறப்பெடுப்பதும் ஒரு பெண்
என்பதை மறந்துவிடுகிறான்

பொது இடங்களிலும் நாங்கள் நிம்மதியாய்  

மூச்சுவிட்டிருக்கமாட்டோம்
அதையும் தட்டிக்கேட்ட யாரும் அங்கு ஆண்மகனாய் தெரியவில்லை
பொதுமலசலகூடம் கூடச்சுதந்திரமாய் செல்லமுடியவில்லை
பாவி இரகசியக் காமராக்களை எங்கெல்லாமோ மறைத்துவைத்திருக்கின்றான்

எங்கள் ஆடைதான் அவன் உணர்ச்சியை ஈர்ப்பதாயின்
புடவையில் அவன் அம்மாவைப் பார்த்திருக்கமாட்டானா?
இல்லை சுடிதாரில் அவன் அக்காவைப் பார்த்திருக்கமாட்டானா?
இல்லை பாவாடை அணிந்த தோழியைப் பார்த்திருக்கமாட்டானா?இல்லை ஜீன்ஸ் அணிந்த அவன் தங்கையைத்தான் பார்த்திருக்கமாட்டானா?
வயதுதான் புணர்ச்சியைத் தூண்டுவதெனில்
பாட்டிமார்களையும் எங்கு சென்று பத்திரப்படுத்தி வைப்பது?

விலைமகள்களே!
அரச அங்கீகாரம் பெற்று சுகநலதேகிகளாய்
வனப்புமிக்க தோற்றத்துடன் அரைகுறை ஆடையுடன்
வீதியில் நீங்கள் அலைந்து திரியுங்கள் அப்பொழுதாவது அவன் பார்வை சற்று விலகட்டும்

Wednesday, May 8, 2019

மௌனமான இரவு


இந்த இரவை மட்டும் பரிசாய்க் கொடுத்திடு
எனக்கான பல கேள்விகள் இருக்கு அதில் 
உன் மௌனம் மட்டும் பரிசாய்க் கொடுத்திடு 
என் உதடுகள் உன் பெயரை பல முறை சொல்லக்கூடும் 
உன் காதோரம் வெப்பக்காற்று வீசக்கூடும் 
பார்வைகள் இருட்டின் வெளிச்சத்தில் கெஞ்சக்கூடும் ஆனாலும் 
உன் மௌனமான பார்வையை மட்டும் 
பரிசாய்க் கொடுத்திடு 
என் வேதனைகள் எல்லாம் வார்த்தையாகிடும்
என் வலிகள் எல்லாம் கண்ணீராகிடும்
ஆனாலும் நீ மௌனமாய் என்னைப் பார்வையிடு
என் விம்மலான அழுகைக்கு உன் தழுவல் பலம் 
கொடுக்க கூடும் இருந்தாலும் மௌனமாய் இரு
எந்த அழைப்புகளையும் ஓரம்கட்டு
எந்த மொழிக்கும் செவிசாய்க்காதே
எந்த சிந்தனைகளையும் தூக்கிவீசு
எந்த நினைவுகளையும் நினைவுகொள்ளாதே
மௌனமாய் என்மீதுமட்டும் பார்வை கொள்
காந்தமான நெருக்கத்திற்கும் விரல்கள் தேடும் 
தேடல்களுக்கும் இந்த இரவை மட்டும் பரிசாய்க் கொடுத்திடு
இந்தனை நாட்கள் பிரிந்த ஏக்கத்திற்கும் என் கோபமான கொஞ்சிடும் மொழிக்கு 
இந்த இரவை மட்டும் பரிசாய்த் தந்து மௌனமாய் பார்வை வீசிடு 
உன் மார்போடு உறக்கத்தில் அதன் வலிகளைக் கரைத்துக்கொள்கின்றேன்


Monday, January 21, 2019

உண்மை தேவதைகள்


சிறுவயதில் நான் படித்த
கதைப்புத்தகங்களிலும் என் பொழுதை
களிப்புடன் கழிக்க நான் பார்த்த
கார்ட்டூன்களிலும் தான் நான் பார்த்திருந்தேன்
தேவதைகள்
கண்களை கூசிடச்செய்திடும் வெண்நிறமாய்
தூரமாய் இருந்து பார்த்திடவே
பால் நனைந்த பஞ்சாய்
மென்மையாய் காட்சியளித்திடுவார்கள்
முகத்தில் எப்பொழுதும் புன்சிரிப்புதான்
அழகான ஆபரணங்களும் விலைமிக்க
ஆடையும் சீராக அலங்கரிக்கப்பட்ட
வாரிய நீள்கூந்தலும்
அப்பப்பா இன்னும் அவர்களை
வர்ணித்துக்கொண்டே போகலாம்
முக்கியக்குறிப்பு குழந்தைகள்
ஆசையாய் எதைக்கேட்டாலும்
அவர்களின் அதீத சக்தியால்
ஒரு நொடியில் கொண்டுவந்துவிடுவார்கள்
நானும் ஓர் தேவதையின் மகள் தான்
சிறுவயதில்லை இது புரிந்து கொள்ளும் பருவம் தான்
கதைப்புத்தகங்களும் இல்லை என் பொழுதை
கழிக்கும் நேரமும் இல்லை
நிஜ வாழ்க்கை தேவதைகள்
பூசி மெழுகிடச் செய்திடும் வர்ணப்பூச்சுக்கள்
இல்லை சாதாரண வெயில்பட்டு கறுத்துப்போன தேகம்
வறுமையின் வரட்சி முகத்தில் ரேகைகளாய்
சுருக்கம் பெற்று பார்ப்பதற்கு முதிர்ச்சியுற்ற
தோற்றமாய் வாழ்கிறார்கள்
மாத வருமானம் கையைக் கடித்த போதிலும்
எதையும் சமாளித்து பிள்ளைகள் முன்காட்டிடாமல்
ஒரு புன்னகை செய்வார்கள்
அந்தப்புன்னகையில் கண் தெரியாமல் மூழ்கிப்போய்விடலாம்
தனக்காய் செய்த தாய்வீட்டு சீதனமான நகைகளை
அடகுபிடிக்கும் கடையில் அலங்கரித்தபோதும்
அழகாய் என்மகள் அணிந்திட
சிங்கப்பூர் நகை பத்திரமாய் அலுமாரியில் அடுக்கிவைப்பார்கள்
ஆங்காங்கே கிழிஞ்சல்களைத் தைத்தே
புத்தாண்டு முதல் நத்தார் வரை
பல ஆண்டுகள் கழித்திடுவார்கள்
பட்டுப்பாவாடை கட்டி செல்லமகள் வெட்கம் கொள்ள
புகைப்படமெடுத்து தினம் இரசித்திடுவார்கள்
அனைத்து சுமையையும் பிள்ளைகளிடம் இருந்து மறைத்தாலும் இளநரை காட்டிக்கொடுத்துவிடும்
அதை சீராக வாரி சிகை அலங்காரம் செய்திட
நேரம் செலவிடாமல் ஒற்றைக்குடும்பியுடன்
பெற்ற மக்களுக்கு கடமை புரிந்திட
அடுப்படியில் அரைவயிற்று உணவுடன்
ஆசையாய் ஆகாரம் செய்திடுவார்கள்
எத்தனை கோடி வைத்திருந்தாலும்
நாட்டினை செழிப்பாய் முன்னேற்றிட
உள்ளூர் அமைச்சு வெளிநாட்டில்
கையேந்தியும் முழுமைபெறவில்லை
பெண் தேவதைகளே கைப்பிடியிலும்
அரிசி மூட்டைகளிலும்
தலையணை உறையினுள்ளும் சேமித்து
வைத்திருக்கும் காசு எப்படி
உங்களுக்கு மட்டுமின்றி பிள்ளைகள்
எங்களுக்கும் பகட்டான வாழ்க்கைச் செலவிற்கு
போதுமானதாய் செலவு செய்கிறீர்கள்?
நான் கண்ட நிஜ தேவதைகள் நீங்கள் தான்
எந்தக் கட்டுக்கதையிலும் கற்பனைகளும்
எட்டாத சக்தி நீங்கள்
உண்மை தேவதைகள்

Sunday, January 20, 2019

அவள் ஒரு புதிய அகராதி


காலை எட்டு மணிபோல தான்
அவள் தரிசனம் தருவாள்
அதற்காக அவள் சோம்பேறியும் அல்ல
செல்லப்பிள்ளையும் அல்ல
அதிகாலையிலே மதிய உணவுவரை
அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு
வயோதிபம் காணும் தாயையும்
கவனித்து விட்டு
வீட்டில் வளரும் செல்ல நாய்க்குட்டிக்கும்
பால் ஊட்டி விட்டு பறந்து வரும்
பட்டாம்பூச்சி தான் அவள்
நடுத்தரமான உயரமாகவும்
மாநிறமேனியும் வளைந்த புருவத்தின் மத்தியில்
கறுப்பு நிறப் பொட்டும்
ஆடம்பரமற்ற நேர்த்தியாய்
உடுக்கப்பட்ட ஆடையும்
கைகளுக்கு அடக்கமாய் வளையலும்
கரு நதியாய் கூந்தலும் தான்
அவள் அடையாளம்
சற்றுப்பருமனான தேகம் தான்
காற்றில் மிதப்பது போல
பாதம் வைத்து நடந்திடுவாள்
பார்ப்பதற்கு மென்மையான
தேகம் கொண்டவள்
பாதுகாப்பு தேவையறிந்து
வார்த்தையில் கடினம் காட்டிடுவாள்
ஆண்கள் கூட்டத்தின் மத்தியில்
ஒரு தோழியாய் திகழ்ந்திடுவாள்
ஆண்துணை ஒன்று தேடிடாதவள்
அதன் காரணம் பலர் கேட்டிட
சாட்டுகள் பல சொல்லிடுவாள்
கோவில் குளம் என சென்றிடாதவள்
மனதுருகி வேண்டிடுவாள்
வேண்டிய தெய்வமெல்லாம் பொய் என
நார்த்திகமும் பேசிடுவாள்
அதிகமாய் அனைவரிடமும் பேசிடாதவள்
அனைவருக்கும் அளவுகோல் ஒன்றை
தீர்மானித்த பின்பே பேசவும் செய்வாள்
புலன்களை மாற்றிட அவளிடம்
கல்வி பயில வேண்டும்
துன்பத்திலும் சிரித்திடும்
பெண் சிலையவள்
சோகங்களை மௌனமாய் காத்திடுவாள்
எத்தனை நபர்கள அவள் வட்டத்தில் இருந்தாலும்
அவள் வாட்டத்தை தனிமைக்கே காட்டிடுவாள்
அவளை இலக்கணப்படுத்தவே வேண்டும்
ஒரு புதிய அகராதி

Tuesday, October 30, 2018

நான் என்பது சமூகத்தின் பிரதிபலிப்புக்களே




நான் சற்று கடினமானவள் தான்
என்னைச் சுற்றி போலியாய் சிரிக்கும் 
முகங்கள் பல கண்டும் புன்முறுவல் செய்யும்
முகத்துடன் கடந்து செல்கையில்
நான் சற்று திமிர் பிடித்தவள் தான்
சுயமரியாதையற்று சீவிக்கும்
சில சமூகங்களிடமிருந்து
சற்று விலகிச் செல்கையில்
நான் சற்று எளிமையானவள் தான்
ஆடம்பரத்தில் தான் அழகு இருப்பதாக
தங்களைத் தாங்களே ஏமாற்றும்
ஒரு கூட்டம் கண்டு உள்ளூரச்சிரிக்கையில்
நான் சற்று வேடிக்கையானவள் தான்
உண்மையை நான் அறிந்ததை அறிந்திராமல்
அதை மெருகூட்டுவதற்குப் பல பொய்களைச்
சொல்லி கதை ஆசிரியர் ஆவோர் பல மத்தியில்
நான் சற்று கோபக்காரி தான்
உண்மை நேர்மை சத்தியம் இதையணைத்தையும்
ஏளனமாய் ஓரம்கட்டி அதை ஏற்பதில்
என் மனம் சம்மதிக்காமல் வார்தைகளை கொட்டும் வேளையில்
நான் சற்று தனிமையானவள் தான்
அனைத்து உயிர்களும் அவர் அவர் கடமைகள் முடிந்தபின்
விலகிடும் தற்காலிகமான ஒரு பிணைப்புத் தான் இந்த
உறவுகள் என்று அறிந்த வேளையில்
நான் சற்று துணிந்தவள் தான்
ஆண் துணையற்ற பெண்ணின் வாழ்க்கை
சமூகத்தின் பார்வையில் இருந்து பாதுகாப்பாய்
விலகி நடக்க மனித ஓநாய்கள் பல தோன்றிய சந்தர்ப்பத்தில்
நான் சற்று விரக்தியானவள் தான்
இறப்பும் பிறப்பும் நிலையானது என்பது போல்
என் வாழ்வில் எதிலும் ஏமாற்றம் என அறிந்தும்
முயற்ச்சிகளைக் கைவிடாது விரைந்து செயற்படுகையில்
நான் சற்று அன்பானவள் தான்
ஒவ்வொரு உயிருக்கும் உண்டான மதிப்பை
அவர்களுக்காக பிறர் சிந்திடும் கண்ணீரின்
வலியை நன்கு அறிந்தமையினால்
நான் சற்று ஏமாளி தான்
அன்பெனும் போர்வை போர்த்திய விஷப்பாம்புகள்
எனத் தெரிந்திருந்தும் அன்பால் சாதித்துவிடலாம்
என இன்னும் நம்பிக்கை எனும் மாயையில் சஞ்சரிக்கையில்
இங்கு நான் என்பது சமூகத்தின் பிரதிபலிப்புக்களே
இதில் குறை தெரிந்தால் மாற்றவேண்டும் இந்த சமூகத்தையே

Sunday, October 28, 2018

யார் உனக்கு அதிகாரம் தந்தது?


என்னை வருடிச் செல்லும் மெல்லிய தென்றல் காற்றே!
அவன் நினைவுகளைத் தாங்கிடும் இந்த தேகத்தை
கூதல் செய்து செல்ல
யார் உனக்கு அதிகாரம் தந்தது?
என் நெற்றி வழி வழிந்தோடிய வியர்வைத் துளி
அவன் உதடுகளால் ஒற்றி எடுக்கும் நொடி
பூவாய் மலர்ந்திட அதை உதிர வைக்க
யார் உனக்கு அதிகாரம் தந்தது?
அவன் பார்வையில் உருகிவிடும் சந்தனத்தேகம்
அதைப் பொக்கிஷமாய் பாதுகாத்திடும்
பட்டுப் புடவை அதை மெதுவாய் நகர வைக்க
யார் உனக்கு அதிகாரம் தந்தது?
பாதத்திலாடிடும் வெள்ளிக் கொளுசுமணி
அவன் பார்வை என் திசை திரும்பும்படி
காற்றில் அவன் மேல் கொண்ட காதல் கீதம் இசைத்திட
அவன் இல்லா நேரத்தில் அதை இரசிப்பதற்கு
யார் உனக்கு அதிகாரம் தந்தது?
அந்திசாயும் வேளையில் நித்தமும்
ஏனோ ஏக்கமாய் அவன் வாங்கித்தந்த
வாசம் வீசும் கொடி மல்லிகை மாலை
அவன் மயங்கிக்கிடக்க ஆசையாய்
நான் சூட்டி அழகு பார்க்கையில்
அதன் வாசனை சற்று களவாடிச் செல்ல
யார் உனக்கு அதிகாரம் தந்தது?
இத்தனை இலட்சணமாய் அலங்கரித்து
பெண்ணாணவள் உனக்காய் உருகி உருகிக் காத்திருந்து
கண்ணீர் கன்னம் வழியே வழிந்தோடிட அதைத் துடைப்பதற்கு
யார் உனக்கு அதிகாரம் தந்தது?
உன் நினைவாலே வாடிய இந்த மலர்
உன் நிரந்தரப் பிரிவைத் துயர் தாங்காது
உயிர் நீக்க
அவ்வுயிரை காற்றோடு சங்கமிக்க
என் காதலனே உன்னைத் தவிர
இந்தக் காற்றுக்கு
யார் அதிகாரம் தந்தது?

Saturday, October 27, 2018

உன் செல்லமான சண்டைக்காரி


குழந்தைத்தனமான சிறு சண்டை
கொஞ்சும் மொழியில் பின் கெஞ்சல்கள்
வாட்டிவிடும் மௌனங்கள்
கர்வம் நிறைந்த காதல் பார்வைகள்
பேசிவிடத்துடிக்கும் இதயங்கள்
இடைவெளி குறையும் தூரங்கள்
வெட்கம் கொட்டும் பார்வைகள்
அதை இரசிக்கும் இரட்சகன் நீ
உன் அணைப்பில் மெய் மறந்த நான்
இந்த ஒரு நொடிக்காய் தான் என் இத்தனை நிமிட
வாக்கு வாதங்கள்
உன் செல்லமான சண்டைக்காரி நான்
அர்த்தமற்றதாய் அரும்பிடும் வாதங்களில்
உன்னை வெல்பவளாய் தினமும் புதிதாய்
சண்டைகள் பிடித்திடவே காத்திருப்பேன்
என்ன புதிதாய் பார்க்கிறாய்?
காதலில் இருக்கத்தானே வேண்டும்
சண்டைகளும் பின் தழுவல்கள் நிறைந்த சமாதானமும்
கட்டியணைத்து நீ பார்க்கும் பார்வையில் தெரியுமடா
ஓராயிரம் மன்னிப்புகள்
அதில் இலயித்துப்போகவே என் குறும்புத்தனமான சண்டைகள்
வேடிக்கையான இந்தத் தழுவலில் என்ன சுகம் இருக்கிறது
என விநோதமாய் பல முறை கேட்டிருப்பாய்
நீண்ட நேரம் திட்டித்தீர்த்த உதடுகள் களைத்திருக்கும்
நீண்ட நேரம் சொரிந்த கண்ணீரால் கண்கள் வற்றிப்போயிருக்கும்
காதலையும் உன்னையும் சுமக்கும் தேகமோ சோர்வடைந்திருக்கும்
கரங்களோ பற்றிக்கொள்ள ஒரு துணை தேடும்
அச்சந்தர்ப்பத்தில் நீ என்னைக் கட்டியணைக்கும்
ஒவ்வொரு நொடியும் இன்னும் கொஞ்ச நேரம் எனக்
கேட்கும் தேவாமிர்த நொடிகளே
காலங்களும் கடந்து போயின
நம் காதலும் திருமணபந்தத்தில் கனிந்தது
பொறுப்பான கணவனாக இன்று நீ
உன்னைச் சீண்டிப் பார்க்கும் அதே
செல்லமான சண்டைக்காரி நான்
இம்முறை என் சண்டைகள் அனைத்தும்
உன்மீது அக்கறை கொள்பவையே
வெகுநேரத்தின் பின்னான உறக்கம்
தட்டிக்களிக்கும் என்னுடனான நேரம்
கால்வாசி வயிறு நிரம்பிடா உணவு
உன்னை நீயே திட்டிக்கொள்ள தனிமை
எப்படி ஏற்றுக்கொள்ளும் என் மனம்?
அன்பே துணைவி எனும் மரியாதை ஊரார் அறிய
நீ எனக்குத் தந்த பொக்கிஷம்
அதைவிட என்றும் உன் காதலியாய் துணை நிற்கவே
விரும்புகிறேன்
பொறுப்புகளாளும் சொல்ல முடியா வேதனைகளாளும் என்னை ஓரம் கட்டி விடாதே
அதே காதலுடன் உன்னிடம் உன் காதல் நிரம்பிய தழுவலுக்காய் உன்னிடம் சண்டை போடக்காத்திருக்கின்றேன்
உன் செல்லமான சண்டைக்காரி

Tuesday, October 23, 2018

அவள் தான் என் அம்மா


ஆங்கிலம் பெரிதாய் தெரிந்திராதவள்
என் ஆசைக்காய் முயற்சித்து உச்சரித்து விடுவாள்
என் விருப்பங்கள் பெரிதாய் அறிந்திராதவள்
விரும்பியதை வாங்கித் தந்து என்னை சமாதானம் செய்திடுவாள்
தன்விருப்பத்தில் தெரிவுகளை மேற்கொள்ளாதவள்
என் விருப்பத்தை எப்பொழுதும் ஏற்றிடுவாள்
தன் பசி அறியாது அடுப்படியில்
என் பசி போக்க காய்ந்திடுவாள்
வண்ணங்களில் சேலை அணிந்திடாதவள்
வண்ணமயமாய் என் வாழ்வை மாற்றிட போராடிடுவாள்
துன்பங்கள் பல சகித்துக்கொண்டவள்
என் முகம் துவண்டதைக்கண்டு
கண்ணில் உதிரம் வடிப்பாள்
கணவன் அவன் உயிர்துறக்கையில் கைம்பெண்ணாய்
தந்தையுமாகி நின்றவள் அவள்
பெற்றகடனுக்கு நான் பெரிதாய் உனக்கு
ஏதும் செய்யவில்லை எனினும்
மற்றோர் முன் என்றும் உயர்வாய்க்கூறிடுவாள்
தூய்மை அது வெண்மை மட்டுமில்லை
அதை நான் அச்சொட்டாய்க் கண்டதில்லை
கருமை நிறத் தேகத்திலும் தூயவள்
அவள் தான் என் அம்மா

Thursday, October 18, 2018

கலியுகத்திலும் இன்னும் தசரதர்கள்


எழில் கொஞ்சும் அன்னம் அது
உன் நடையழகை சாயல் கொண்டு
மெல்ல வர அதனழகில் காதல் வயப்பட்டு
அந்நாளில் பெண் மேல் காதல் புரிந்தானொருவன்
விரிந்த செந்தாமரை இதழ் மென்மையில்
இடையழகை வர்ணித்து ஒப்பீடுகளில்
வரைமுறை பேணி பெண் மேல் காதல் புரிந்தானொருவன்
சிவதனுசை வில்லொடித்து மணமாலை மணமகன்
சூட்டிட சுயம்வர வேளையில் வீரமகன் வதனம் கண்டு
வெட்கத்தால் அவள் சிவந்திட வீரம் கொண்டு
வில்லொடித்து பெண் மேல் காதல் புரிந்தானொருவன்
இப்படி இதிகாசங்களிலும் புராணங்களிலும் காதல் கற்பு
நெறி தவறாமல் உரைத்து நின்ற பெருமான்களே
உம்போல் உரைப்பதற்குப் பலர் இருந்தும் கேளாய்ச் சமூகமாய் மாறிவிட்டார்கள் எம்மவர்கள்
விதைத்தவன் நன்கு செழித்து வளரந்த பயிரை உரிய முறையில் அறுவடை செய்யக்காத்திருக்கும் வேளை
தீ மூட்டி அதில் குளிர்காய்ந்து கருக வைத்த பாவிகள்
வாழும் உலகம் இது
பாவம் நாளை அவர்கள் விதைக்கையில் அவர்களின் பயிர்களுக்கும் இதே கதி என்பதை மறந்துவிட்டார்கள்
இராமவதாராம் முடிந்தும் கலியுகத்திலும் இன்னும் தசரதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்
இதயத்தால் காதல் கற்பற்ற கன்னியர்கள் நினைவில்
நீங்காச் சிலை எழுத்துப்போல

Monday, October 15, 2018

ஓடாதே என் ஆசைக் கணவா


ஓடாதே என் ஆசைக் கணவா
அன்று தொட்ட காலம் முதல் 
உன் மீது கொண்ட காதல்
பூமாலை மணக்கோலம் தாண்டி
இப்பூவுலகில் இருவரின் பாதமும் 
ஒருமித்தப் பதிந்திட தவம் இல்லா
வரம் ஒன்று கைகளில் ஏந்தியும்
எல்லையில்லா மகிழ்ச்சியை
விழிகளால் வழிந்தோடிடும் கண்ணீரும்
உரைத்து நிற்கும்
என் வாழ்நாள் முழுவதும் சேர்த்துவைத்த
ஆசை எல்லாம் திகட்டத்திகட்ட
பாசமாய் ஊட்டிவிட உன் மார்பின் அருகில்
சற்று இடம் தந்து
என்னை அணைத்துக் கொள்
கழுத்தில் நீ கட்டிய மாங்கல்யம்
வேலி மட்டுமல்ல உன் மீது நான் கொண்ட
அதீத காதலையும் கர்வத்துடன் தினமும்
நினைவூட்டி நிற்கும் எவ்வேளையும்
வேலை மக்கள் குடும்பம் என்று ஓடிவிடாது
என்னைக் கொஞ்சம் அணைத்துக் கொண்டு
அமைதியாய் இரு
அந்த நிசப்பத்தில் எனக்காக மட்டும் துடிக்கும் உன்
இதயத் துடிப்பை கேட்டுக் கொண்டே என் வாழ்நாளைக்
கழித்துவிட ஒரு கணம் ஓடாதே என் ஆசைக் கணவா

Saturday, October 13, 2018

அம்மா எனக்கோர் மாப்பிள்ளை பாருங்கள்


அம்மா எனக்கோர் மாப்பிள்ளை பாருங்கள்
திருமணவயதை ஓரளவு அடைந்துவிட்டேன்
உங்கள் கைப்பக்குவத்தில் அறுசுவை விருந்தளிப்பேன்
இல்லத்தரசிக்கேற்ப ஓடியாடி உங்கள் பெயரைக் காப்பாற்ற 
மாமியார் வீட்டில் வேலை செய்வேன்
சடங்கு சம்பிரதாயங்களைக் கொஞ்சம் சொல்லித்தாருங்கள் போகும் இடத்தில் கடைப்பிடிக்க
மாப்பிள்ளை அவர் உங்கள் விருப்பம்
உங்களின் எந்தத் தெரிவையும் நான் ஏற்றுக்கொள்வேன்
உயரம் வயது நிறம் குணம் அழகு படிப்பு பதவி பணம் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை
ஏனெனில் பார்த்துப் பார்த்து நான் தேடிய தேடலில் ஏமாற்றப்பட்டுவிட்டேன்
அவன் நிறம் சற்று கறுப்பு அதில் எனக்கோர் விருப்பு
அவன் வார்த்தைகளால் மட்டுமல்ல அவ்வப்போது பார்வைகளாலும் என்னை வளைத்துவிடுவான்
எனக்கேற்ற உயரம்தான் அதை அளந்துபார்க்க அருகில் பலமுறை நின்றிருப்பேன்
அவன் மொழி தமிழ்தான் ஆதலால் தமிழ் மேல் அதீத பற்றுக் கொண்டேன்
அவன் குணம் குழந்தைத்தனமானதுதான் என் கோபத்திலும் இரசித்திருந்தேன்
அவனுடனான நேரம் எல்லாம் புன்னகை மட்டும்தான் அதனால் செல்லச்சண்டை போட்டு வாக்குவாதின் பின் அவன் சமாதானத்திற்காய் காத்திருந்தேன்
இத்தனையுமாய் அவனை நான் இரசிக்கையில் இரசிப்பதற்கு மட்டும் என்னை தேர்ந்தெடுத்து
பின் இரசிக்கப்பட்ட பொருளாக மாற்றிவிட்டான்
இத்தனை காலம் பொறுமையாய் இருந்து தேர்ந்தெடுத்த தெரிவு என்னை ஏளமாய் பார்க்கையில் உங்கள் தெரிவு எதுவாக இருந்தாலும் மனமில்லாத நிலையில் ஏற்றுக்கொள்கின்றேன் அம்மா

Thursday, October 11, 2018

காதல் கொண்டேன் பெண்ணே

நீள் கருங்கூந்தலிலும் இல்லை
வளைந்தெடுத்த புருவங்களிலும் இல்லை
செவ்விதழ் ரேகையிலும் இல்லை
பஞ்சணை மேனியிலும் இல்லை
செஞ்சந்தன நிறத்திலும் இல்லை
தாமரைப் பாதங்களிலும் இல்லை
வெண்மெழுகு நகத்திலும் இல்லை
காந்தவிழி அழகிலும் இல்லை
மென்மொழி செப்புதலிலும் இல்லை
கொச்சை பேசும் உலகம்தனை ஓரம்கட்டி
நித்தம் நெஞ்சில் துணிவுடன் ஒற்றை வழிப்பாதையில்
தடம் பதித்து செல்கையில் உன் திமிர் கண்டு
நான் காதல் கொண்டேன் பெண்ணே




நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...