Showing posts with label Society. Show all posts
Showing posts with label Society. Show all posts

Saturday, August 8, 2020

தாழ்ச்சிக்குலம்



மண்ணோடு மனம் மங்கிப்போன மானிடா 

எங்கு தோன்றினான் 

நீ வரையறுக்கும் தாழ்ச்சிக்குலத்தவன்?

அவனும் நானும் பெண்ணுருப்பின் உதிரத்தின் 

உதிரிகளாய்ப் பிறக்க நீ மட்டும் செங்கதிரின் 

செஞ்சந்தனத்தில் பிறப்பெடுத்தாயா? 

வெடுக்கடிக்கும் பனிக்குட வாசனை நுகர நீ மட்டும்

பன்னீர் தெளித்து கமழமளித்தாயா?


நடமாடும் கல்லறைகளாய் நாடகம் அரங்கேற்றும் மானிடா 

என்ன வேறுபாடு கண்டாய் 

நீ வரையறுக்கும் தாழ்ச்சிக்குலத்தவனில்?

செங்குருதி வெண்குருதி தவிர கலங்கிய சேற்றுநீர் 

ஓடுகிறதா அவன் தேகத்தில்?

பசித்த தேகத்தில் வியர்வைத்துளியும் ஏக்கத்தில் 

உமிழ்நீர் சுரக்க உனக்கோ ஊற்றுநீர் சுரக்கிறதா?


வஞ்சகத்தின் வர்ணத்தை நாவில் நக்கிப்பிழைக்கும் பச்சோந்தி மானிடா 

என்னதான் செய்வாய் 

நீ வரையறுக்கும் தாழ்ச்சிக்குலத்தவனுக்கு?

ஒருபிடி சோற்றுக்கு ஏங்கும் ஒரு சாண் வயிற்றுக்கு 

ஓட்டைச் சிரட்டையில் களநீர் சொட்டச் சொட்ட 

குடுப்பதில் அவன் நா நனைந்திடுமா?

பெண்ணணியும் மார்புக்கச்சைக்கோ வரி கேட்கும்

குடுமிக்காரன் அதன் உள் சிறு இதயத்தின் தவிப்பை அறிந்திடுவானா?


கொடிய கருநாகம் கக்கும் விஷம் நாடி நரம்பெல்லாம் 

பாய்ந்து சர்ப்பமும் உனை கண்டு அஞ்சிடவைக்கும்  மானிடா 

என்ன செய்தான் 

நீ வரையறுக்கும் தாழ்ச்சிக்குலத்தவன்?

கல்வியில் சிறப்புற ஏட்டை விடுத்து உன் வீட்டு ஓட்டைப்பிரித்தானா? 

உயர்பணியில் உனக்கு சமமாய் அமர உறுத்தலான 

உன் மனக்கசப்பிடியிலிருந்து விலக பொன் 

பொருட்களால் அர்ச்சித்து அபிஷேகித்தானா?


மாயையினை போதையாய் சாயை கொண்டு சாதிக்கும் மானிடா 

என்ன செய்து அழித்தொழிப்பாய்  

நீ வரையறுக்கும் தாழ்ச்சிக்குலத்தவனுக்கு?

வன்புணர்வில் உன் சாதியம் சாதித்ததாய் 

மமதை கொள்கிறாள் உன் உயிர் அணுவும் கலப்புறும் என்பதை மறந்தாயா?

ஆணவக்கொலைகளை செய்கிறாய் நாளை 

புது விதை உன் வீட்டில் முளைக்காது என்ற துணிச்சலிலா? 


பேதமற்று புத்தி பேதலித்துப் பேசவில்லை மானிடா 

உன் அங்கவஸ்திரம் அங்கம் தீண்டலின்போதே 

நீயும் தீண்டாமை ஆகின்றாய் 

உதிரும் கேசமும் அவன் கையால் தீண்டுகையில் 

அதற்கும் உனக்கும் இல்லையடா வேறுபாடு 

தாழ்ச்சிக்குலத்தவனாய் பாகுபாட்டை ஏற்படுத்தமுன் 

பகுத்தறிந்து செயற்படு

தீண்டாமையை புறக்கணித்துக்கொள் அல்லது 

தீது நல்குவதில் உன்னைப் புறக்கணித்துக்கொள்

Wednesday, July 29, 2020

யசோதராக்களின் கனவு






















மின்னும் வேகத்தில் எத்தனை பேர் சூழ்ந்து 

சூழ்ச்சி வலை பின்னினும் இலக்கு ஒன்றை 

மட்டும் மனக்கண் முன் நிறுத்தி அவ்வலைதனை 

தகத்தெறிய காற்பந்தாட்ட பூமியில் கட்டைக்கால் 

காற்சட்டை முட்டி மேல் முழம் ஏறி சமூகத்தடை 

விலக்கத் தெரியாமலே அழிந்துபோகின்றன 

பல யசோதராக்களின் கனவு


வெள்ளைமுகம் தலைகாட்ட செங்கதிரோன் 

தலை சாய்க்க தேவைகள் காரியங்கள் பல 

ஆற்ற ஆண்துணையற்ற அங்கையர்க்கன்னி 

ஓரடி வாசற்படிதாண்டுதலில் கதி கலங்கிப்போகும் 

பெண்மையின் கற்பு பல அவச்சொற்களில் இருந்து 

அழிந்துபோகின்றன 

பல யசோதராக்களின் கனவு


காதல் கனவுகள் கல்லறைச்சுமைதாண்டி 

நீண்ட தூரம் பயணிக்க சாத்தானாகினும் 

ஒரே சாதியைத் தேடித் தேடி வேட்டைக்கு 

அனுப்பும் புள்ளிமான்கள் பல மனதால் 

உடலால் இரையாகி சுகமற்ற நோயில் வாடினும் 

இன்னும் அப்பன் அம்மை பிடியில் அழிந்துபோகின்றன 

பல யசோதராக்களின் கனவு


ஆடவன்  தன் சுகம் தேடி சலனம் தீர்க்க எத்தனை 

படி ஏறி இறங்கினாலும் பத்தினியாய் இவள் 

உடலைப் பட்டினி போட்டு பத்தியம் காப்பினும் 

பல் இழிக்கும் பல பங்காளிக்கூட்டம் சீண்டலுக்கு

பதில் மொழி கூறி மறுமணத்திலும் விவாகரத்திலும் 

கேலிப்பேச்சிற்கு தலைகுனிவதில் அழிந்துபோகின்றன 

பல யசோதராக்களின் கனவு


கற்பித்தலும் வியாபாரமாகிட கரும்பலகைகள் 

கூட தரம் பார்த்திட இலஞ்சங்கள் ஊழல்கள் 

தலைவிரித்தாட காஞ்சவன் பாலியல் இலஞ்சங்கள் 

பரிசாய்க்கேட்டிட  விண்வெளியில் பறக்கும் கனவுகள் 

விண்ணிலிருந்து விழுந்து மடிந்திட

அழிந்துபோகின்றன 

பல யசோதராக்களின் கனவு


அனைத்தும் துறப்பதில் மனம் கொண்ட புத்தன் 

தூக்கத்தில் யார் அறியாமலும் தன்சுமைகளில் 

இருந்து விடைபெற்று  ஞானம் பெறுவதில் மட்டும் 

சிந்தை கொண்ட ஒருகணம் குழந்தை குடும்பம் 

கடமைகள் மறந்து தன் சுகம் தன்நலன் கருதி 

வீட்டை விட்டு வெளியேறியிருப்பின் அவளை 

வேசி என்றே நாமம் சூட்டியிருக்கும் இந்த உலகின் 

மூர்க்கத்தால் அழிந்துபோகின்றன 

பல யசோதராக்களின் கனவு


Saturday, July 4, 2020

என்னை அழவைத்தவர்களுக்கு நன்றி



















என்னை அழவைத்தவர்களுக்கெல்லாம் மனமார நன்றி சொல்கின்றேன் இந்த வேளையில்


இந்தக் கல்லிலும் ஈரம் இருப்பதாய் உணர்த்துவதற்கு 

அன்பை தற்காலிகமாய் அடகு வைத்தீர்கள்


கண்ணில் ஈரம் வருவதற்காய் சொல்லால் எத்தனை

ஈட்டி அம்புகளை என் மனதில் பிரயோகித்திருப்பீர்கள்


நம்பிக்கையை விதைப்பதற்கு எத்தனை நாட்கள்

கண்ணயறாமல் நிஜமுகங்களை வேளாண்மை 

செய்யாமல் காத்திருந்திருப்பீர்கள்


பொய்யான வார்த்தைகளை நிஜமென உணர்த்த

எத்தனை அரும்பாடுபட்டு புன்னகையை

கண்களில் காண்பித்திருப்பீர்கள்


நிழலாய் பின்தொடர்ந்து உயிராய் காப்பதாய்

பொய் வாக்கினை அளிக்க மனதை எப்படி

திடப்படுத்தியிருப்பீர்கள்


கண்கலங்கிய நொடியெல்லாம் கரம்பற்றி 

பாசப்பிணைப்பை வலுப்படுத்த வலியவந்து

உறவாடும் நளினங்களை எப்படி கையாண்டிருப்பீர்கள்

 

இத்தனையும் ஒருநாள் உதறலுக்காய் உங்களை 

மாற்றிக்கொண்டீர்களே என் கண்ணீரில்

இனி இவை இடம் பெறாத நன்றி மட்டுமே உங்களுக்கு


Monday, June 8, 2020

விடைபெறுகிறேன்
















இன்றுதான் எனக்குக் கடைசிநாள் 
என்று அதிகாலைச்சேவல் உரக்கக் 
கூவுவதற்கு முன்னே நித்திரைப்பாயில் 
என் அகக்கண்கள் முழித்துக்கொண்டன


ஆர்ப்பாட்டமில்லா காலை வேளை 
எல்லோர்மனதிலும் ஓர் கலக்கத்தை
மௌனமாய் விதைத்திருப்பதை
என்னால் ஊகிக்கமுடிந்தது


அம்மா சுடும் முறுகலான நெய்த்தோசை
தட்டில் நிரம்பி வழிய காரமான மிளகாய்ச்சம்பல்
நாக்கின் சுவைநரம்புகளையும் தாண்டி 
நாசியில் புரக்கேறி என்னை விழிப்பூட்டவே
அம்மாவின் தலையில் மூன்று தட்டல்
உணவுக்குழாயை சீராக்கியது


கணக்கு வாத்தியார் கரும்பலகையை விட்டு
என் பயணப்பைகளில் பொருட்களை
திருப்தியற்றதாய் கணக்கிட்டுக்கொண்டிருந்தார்
வருடம் முழுவதும் நான் சுகவாசியாய் வாழ்வதற்கு


ஜாடி ஜாடியாய் இனிப்பு உறைப்பு உவர்ப்பில் 
உருப்படிகள் பல உலர்ந்ததாய் 
உருட்டித்திரட்டி வைத்துக்கொண்டிருந்தவளின்
கண்கள் சிவப்புக்கோவைப் பழமாய் பொங்கியிருந்தன
இரவிரவாய் அழுதிருப்பால் போலும்


பந்தாட்டம் விளையாட்டில் இன்று கவனம் 
செலுத்தாத மகள் நாளை பூப்படைந்தால்
பூவால் அலங்கரிக்க அருகில் இருப்பேனோ என்ற
அச்சம் தழுவிய தழுவல் ஏனோ நீங்க மனமில்லை


வீட்டின் வீரனாம் செல்லமகன் சற்றுக்கோபத்துடன்
மூலையில் மறைந்துகொண்டு என்னைப் பார்க்கும்
பார்வைக்கு விடைகொடுக்கத்தெரியாதவனாய்
தயங்கத்துடன் முன்னேறினேன்


ஐந்தறிவு ஜீவன் அவன் முகம்கூட இன்று 
வாடிப்போயிருந்தது ஏக்கத்தில் வாலாட்டி
என் காலைப்பின்னியிருந்தான் எடுத்துவிட
மனமில்லாமல் தலையைத் தடவிக்கொடுத்தேன்


என் பயணப்பைகள் நிரம்பிவிட்டன
என்னுடனான புகைப்படங்கள் பெரிதாக்கி
சுவரில் அலங்கரிக்கப்பட்டிருந்தன
சாமி விளக்கு பிரகாசமாய் எரிந்துகொண்டிருந்தது
வீட்டில் அனைத்து மின் உபகரணங்களும்
துண்டிக்கப்பட்டிருந்தன
அனைவரும் என்னை வழியனுப்ப
வாசலில் நிற்கின்றார்கள்


அம்மாவின் கால்பிடிப்புக்கு தைலம்
தேய்க்கத்தவறியவன்
அப்பாவின் பழைய மூக்குக்கண்ணாடியை
சரி செய்ய இயலாதவன்
செல்லமகளுக்கு தைரியம் கற்பிக்க
அருகில் இல்லாதவன்
குட்டிப்பையனின் வாலுச்சேட்டையில்
பங்கு கொள்ளாதவன் 
மனைவியின் கண்களின் காதலை
இரசிக்கும் பாக்கியமற்றவன்
செல்லப்பிராணியின் நிகரற்ற அன்பிற்கு
தோழனாய் தலைவணங்காதவன்


மனைவி என்னை இறுக அணைத்து
என் இதயத்துடிப்பில் 
மனமாறினால் நானோ
இத்துடிப்பின் இறுதிவரை 
நம்நாட்டின் நன்மைக்கென்று
எண்ணிக்கொண்டேன்
தீர்காயுளுடன் வாழ்வாய்
என அன்னை ஆசீர்வதித்தாள் 
ஆயுள் வரை அன்னைநாட்டிற்கு என்னை 
அர்ப்பணம் செய்துவிட்டேன்
அப்பா கதை சொல்லுங்க என்று
கேட்ட மகளிடம் நாளைய
சரித்திரத்தின் வெற்றிவாகை 
பற்றிக் கூற எண்ணியிருந்தேன்


போய் வருகிறேன் என நம்பிக்கையாய்க் கூறமுடியவில்லை
எத்தனை பொதிகள் இருந்தாலும் தோள்பட்டையில்
நாட்டின் சுமையைத் தான் சுமக்கப்போகிறேன்
அலங்கரிக்கும் என் புகைப்படங்கள் ஒருநாள் 
மாலையுடன் வீரவணக்கத்திற்கு தயாராக இருக்கும்
சாமி விளக்கு ஒரு நாள் என் கல்லறையில் 
சுடர்விட்டு எரியும்
என்னை வீரசுவர்க்கம் செல்ல இராஜமரியாதையுடன்
உலகமே வழியனுப்புவதில் ஐயமில்லை என்று
என்னுள் நினைத்துக்கொண்டு விடைபெறுகிறேன்

Saturday, June 6, 2020

தோழா சற்றுத் தோள்கொடு


















உயிர்நண்பா

மாற்றான் தாய் வயிற்று சகோதரா

ஆண் உலகின் அன்புயிரே

எனக்கு உதவி செய்


இருட்டைக் கண்டு எனக்குப் பயமில்லை 

ஆனால் 

மனித வேட்டைக்காக பின்தொடரும் 

மனிதமிருகங்களின் கால் தடத்திற்கு அஞ்சுகிறேன்


நீண்ட தூரம் தனிமையில் பயணிப்பதில் 

அலுத்துக்கொள்ளவில்லை

ஆனால்

வேண்டா உரசுதலில் தேகத்தில் வெறுப்பை 

வளப்போரும் வார்த்தைகளால் வஞ்சனை செய்வோரும் 

அருகில் அமர்வதை எண்ணி அஞ்சுகிறேன்


பொறுப்புக்களை சுமப்பதில் சளைக்கவில்லை 

ஆனால்

கடமைக்குச் செல்லுமிடத்தில் கயவர்கள் 

சூழ்ந்திருப்பதை எண்ணி அஞ்சுகிறேன்


காதலில் கண்கவரப்பட்டு களத்திலிறங்க தயக்கமில்லை 

ஆனால்

காதல் என்ற வார்த்தை மட்டும் கூறி

காமுகரின் மூர்க்கச்செயலுக்கு

மனதில் இடம்கொடுக்க அஞ்சுகிறேன்


ஆண்களால் அழிவேற்படும் காலத்திலும்

கண்ணியமாய் கடந்து செல்லும்

நல்வர்க்க தலைவன் 

வழி கடைப்பிடிக்கும் ஆடவன் 

கண்ணில் உருத்தலின்றி

வாழும் யோகியன் நீ பார்த்தா

கலக்கமுற்றவேளைகளில் எல்லாம்


உயிர்நண்பா

மாற்றான் தாய் வயிற்று சகோதரா

ஆண் உலகின் அன்புயிரே

எனக்கு உதவி செய்



Saturday, May 30, 2020

மண்ணைக் காதலித்திருக்கலாம்
























உன்னைக் காதலித்ததற்கு 

மண்ணைக் காதலித்திருக்கலாம். 

இரண்டின் முடிவிலும் 

மண்ணோடு மண்ணாய்ப் போவதுதானே நியதி


அன்பான வார்த்தைகளுக்கும் கனிவான 

கரிசணைக்கும் கரைந்துபோகாமல் 

வீரத்தமிழ் வீழாது விண்ணிலும்

ஆலம் வித்துக்காளாய் விளைச்சல் காட்ட

உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம். 


காஞ்சிவரம் பட்டுக்களின் இஸ்திரி மடிப்புக்கள்

நேர்த்தியாய் நேர்கோட்டிட வர்ணங்களில் 

வனப்பேன் உன் கருவிழியில் கண்ணா 

என்று கர்வம் கொள்ளாமல் 

காக்கி உடையோ கிழிஞ்சல் கந்தையோ

மண்மகள் அடையாளம் எனக்காட்ட

உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம். 


பத்துப்பவுன் திருமாங்கல்யம் வெகுவிரைவாய் 

கழுத்தில் ஏற மஞ்சல் மேனி மையல் 

கொண்டு நாணம் கூடி செக்கச்

சிவப்பதற்கு எதிரியின் பிடியிலும்

உன் விதி நீ எழுத மரணமே

மந்திரமாம் சைனைட்டுக் குப்பியுடன் 

கறுப்புக்கயிறு வீரவணக்கத்தைக்காட்ட

உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம். 


பூச்செண்டு கையில்லேந்தி மணமேடை 

மணம் கமழ வாச ரோஜா வாடிவிடாமல்

பன்னீர்த்தெளித்து புதுமலர்ச்சி கொடுக்க

பூமாரி பொழியும் தோட்டாக்களின் உறைவிடம்

துப்பாக்கி முனையுன் துஸ்டனை தூளாக்கும்

துடிக்கும் கரங்களிற்கு துர்பாக்கியவதி நான்

உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம். 


ஒற்றைக்கையொப்பத்தில் உன்னைச் சரண்டைந்து

இருவர் சாட்சியில் இறுதிவரை உன்னில் மாட்சி காண 

நாமம் பொறித்த கல்லறைகளில் எரியும்  

விளக்குக்கூட தலைவணங்கி என் மண்ணின் 

காதற்புகழ் பாடி வையமும் வரவேற்க

உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம். 


உனக்கும் உற்றாருக்கும் உறங்காமல் 

ஊதியமற்ற ஊழியம் பார்த்து உயிர்மூச்சுத்துறந்து

மண்ணில் உறங்கிக்கிடப்பதிலும்

தளர்வான நிலையிலும் தைரியமாய் போரடி

மண்ணில் மக்கிய உரமாகிப்போனாலும் 

ஒரு விதையை விளையச் செய்து அதன் 

கொடும்விசத்தில் விரோதி வீழ்த்தப்பட

உன்னைக் காதலித்ததற்கு மண்ணைக் காதலித்திருக்கலாம். 



நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...