அஹிம்சையின் பொக்கிஷம் ஒன்று கண்டீர்
அகிலமெல்லாம் அவர் புகழ் ஓங்கக்கண்டீர்
விழித்தெழும் மனிதம் விதையாய்
மண்ணின்மைந்தர் அகவிழியில்
முளைத்திட காரணம் கண்டீர்
பருத்தியின் பசுமை கண்டீர்
பணிவின் பெரும் சிகரம் கண்டீர்
கொடித்தொழும் செந்தணற்கோபம் கூட
முகச்சுருக்கத்தில் மறைந்திருந்த புன்னகையில்
மறையக் கண்டீர்
அக்கினிக் குஞ்சொன்று கண்டீர்
அப்பழுக்கற்ற தேசபக்தி கண்டீர்
சுவாசிக்கும் ஒட்சிசனினும் கலப்படம் இருக்க
சுதந்திரக்காற்றே உயிர் மூச்சான
மாமனிதன் கண்டீர்
முதுமையில் இளமை கண்டீர்
முகத்தில் கம்பீர பிரகாசம் கண்டீர்
ஓங்கி நிற்கும் பாரதக்கொடி
பல்தேச மக்களின் தொப்புள்கொடி
உறவெனக் கண்டீர்
ஈர்ப்புவிசை கண்டீர்
ஈரமற்ற இருதயம் கூட மாறக்கண்டீர்
அன்பு தான் அகராதி அகிம்சைதான்
இலக்கணம் என்ற இலக்கியம் தீட்டிய
எழுத்தாணி கண்டீர்
கற்களும் கரையக்கண்டீர்
கடமையுள்ளம் உயிர் நீர்க்கக்கண்டீர்
பெற்ற சுதந்திரம் ஒவ்வோர் வீட்டின்
நிம்மதி உறக்கத்தில் லேசான
புன்னகை பூக்கக்கண்டீர்
தாரகமந்திரம் கற்றுத் தந்தீர்
தலைவிதி புதுவிதியாய் மாற்றித் தந்தீர்
பாரத அன்னையின் மானங்காக்க
பாரத மைந்தனாய் காவியம் ஒன்று
தலைமுறைகள் தாண்டி கற்றுத் தந்தீர்