Monday, November 5, 2018

ஏனோ என் வானிலையும் மாறிச்சென்றது


சற்று கூதலான காற்று தான் 
காதோரமாய் வளைந்து நெளிந்து 
நர்த்தனமாடிய கருங்கூந்தலை சற்று விலக்கிவிட்டு
ஏதோ சொல்லிச்சென்றது
விளக்கை சுமந்தபடி ஒளியால்
ஓவியம் வரையும் மின்மினிப்பூச்சியும்
ஒரு நிற ஒளியால்
ஏதோ சமிஞ்சை காட்டிச்சென்றது
பச்சை வயலோ இருளின் சூழ்ச்சியில்
கறுப்புக்கம்பளி போர்த்தி
என் மௌனத்தைக்கலைக்கும் வகையில்
ஏதோ ஒரு ஊந்துதல் தந்து சென்றது
மௌனக்கருவைக் கலைத்த நானோ
காதல் வலியால் துடிக்க
ஏனோ உன் பார்வையும் எனக்குப் பத்தியம் தந்தது
சொல்வதற்கு புதிதாய் ஏதுமில்லை
இதுவும் ஒரு இரயில் பயணம் தான்
அன்று மட்டும் புதிதாகியது
இதயவறை அருகே எனக்கொரு கருவறை கொண்டு
என்னவன் என்னைச் சுமந்து சென்ற நிமிடங்கள்
என் பயணத்தை சுவாரஸ்யமூட்ட பல குறும்புக்கதைகளைத்
திரட்டி வைத்திருந்தேன்
ஏனோ என் வார்த்தைகள் அனைத்தும் உன் பார்வைக்கு முன்னே நழுவிச் சென்றுவிட்டது
சற்று கதகதப்பு அதிகம் தான் இருந்தாலும் உன் வாடை பட்ட காற்றை நான் தவறவிடாமல் சுவாசத்தில் உள்வாங்கினேன்
உறக்கம் பெரிதாய் வரவில்லை இருந்தாலும்
என் தூக்கத்தில் உன் கவனிப்பு என்னவாக இருக்கும் என அறிய தூங்குவது போல் பாசங்கு செய்து பார்த்தேன்
ஏனோ உன் தீண்டல்களும் வருடல்களும் பிறர் கண் வைக்கும்படி பாசத்தைப் பறை சாற்றியது
மெதுவாகத் தட்டிக்கொடுக்கும் உன் விரல்கள்
என் தலை தடவ தவறியதில்லை
இருக்கமாய் என்னைப் பற்றிய உன் கரங்களோ
எச்சந்தர்ப்பத்திலும் என்னைத் தொலைத்ததில்லை
இதயத்துடிப்பிலும் எனக்கோர் தாலாட்டு இசை அரஞ்கேற்றி நின்றாய் நானும் ஏனோ ஒன்றும் அறிந்திராதவளாள்
உன் அரவணைப்பின் உச்சத்தில் என் நாடகத்தையும் அரஞ்கேற்றி முடித்தேன்
இம்முறை இரயிலின் ஒலி காதைப் பிளந்தது
சிணு சிணுவென கடுகாய் வெடுத்த என் பார்வைக்குப் பதில்
நாம் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது என்றாய்
சொல்லாத என் வார்த்தைகளோடு உன் பின்னால் வந்தேன்
நேரம் மட்டுமில்லை உன்னால்
ஏனோ என் வானிலையும் மாறிச்சென்றது

No comments:

Post a Comment

Your concern is appreciable. Thank you for the review

நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...