கோபம் ஒரு போலி முகத்திரைதான்
காற்று வீசிடும் திசைக்கேற்ப
ஆடல் புரிந்துவிட்டு இளைப்பாறிவிடும்
கோபத்திற்கு அப்பால் பல உண்மை முகங்களும்
காண்பீரோ தெரியவில்லை
கோபம் வெறும் நாக்குநுனியில் முடிந்துவிடும்
ஆனால் அது உண்மை அல்ல நிலையானது அல்ல
கோபம் ஓர் போலி உணர்ச்சி
கோபம் கொள்பவன் கண்களை உற்றுப்பார்த்ததுண்டா?
அதில் ஏக்கம் கலந்த அன்பு மறைந்திருக்கும்
பிரிவைத் தாழாத வலி உறைந்திருக்கும்
எளிதில் ஆவியாகிவிடும் கண்ணீர் ஈரப்பதன்
விழியோரமாய் அணை உடைக்கக் காத்திருக்கும்
அவை கண்ணைச்சுற்றிய கருவளையத்துள் நீச்சல் குளம் போல் நீரை தேக்கிவைக்கும்
கோபம் கொள்பவன் தொண்டைக்குழியை
இரசித்ததுண்டா?
மூளை கட்டளை இடும் அனைத்து வார்த்தைகளையும் ஆதாரங்களையும் மெல்ல மெல்ல மென்று தின்றுவிட்டு எஞ்சியதை
கொடுக்கும். இடையிடையே தாகமும் எடுக்கும்
எச்சிலை முழுங்கி பின் மீண்டும் முயற்சித்துப் பார்க்கும்
கோபம் கொள்பவன் இதயத்துடிப்பைக் கேட்டதுண்டா?
பிரியாதே பிரியாதே என ஓலமிடும்
ஒரு அங்குல ஆழமாய் இதயம் சரிந்ததாய்
உணர்வு வரும்
குண்டூசிகள் ஊடுருவும் வலியால் இரத்தங்களும் சூடேரி கொதிக்கும் அனல்காற்றை உடலினால் வெளியேற்றும்
கைவிரல்களோ தெம்பாய் பற்றிக்கொள்ள ஏதுமின்றி நான்கு விரல்களை மாத்திரம் நடுக்கத்துடன் ஒன்று சேர்த்துக்கொள்ளும். மீதம் ஒரு விரல் எதிரில் உன்னை விழிப்பூட்டும்
இத்தனையும் கடந்து கோபம் கொள்ளவது எல்லாம்
அன்பிற்காய்த்தான். அன்பின் ஆழம் கடல் ஆழத்திலும் இல்லை
அன்பின் எல்லை ஆகாய எல்லையிலும் இல்லை
கோபம் தான். கோபத்தில் மட்டும் தான்
உனக்காய் என் கோபம்
எனக்கானது உன் கோபம்
எளிதில் கரைந்துவிடும் இந்தக்கோபம்
உனக்கும் எனக்குமான ஓர் அன்பின் பாலம்