Monday, August 10, 2020

என் திருமணத்திற்கு வந்துவிடாதே!

  



















ஆகா ஓகோ என்று தடபுடலாய்

தட்டுமாற்றி தாலிகட்ட நாளும்

குறித்துவிட்டார்கள். பந்தற்கால் நட்டு

பொன்னுருக்கி மூலையில் அமரவைத்தார்கள்

இப்பொழுதுதான் உன்னிடம் ஆசையாய் பேசமுடிந்தது 

நீ நலம் தானா?

என் நலனில் அக்கறை இருப்பதால் 

கண்ணீரோடு கதை பேசுகின்றேன்.

இங்கு யாருமில்லை என்ற தைரியத்தை 

தக்கவைத்துக்கொண்டு கைபேசியில் 

கலகலப்பாய் பேச நான் ஒன்றும் 

பெண்ணியவாதியல்ல சராசரிப்பெண் தான்.

மாப்பிள்ளை வீட்டாரின் முழுசம்மதத்துடன்

மாங்கல்யம் ஏற்பதில் இத்தனை சுமைகளா என்ன?

தந்தையற்ற ஆண்துணையில்லா 

மூத்த பெண்ணாய்ப் பிறந்தவள் 

என்பதில் அடிக்கொருமுறை அன்னையைப் போல் அதட்டலும் 

அன்பும் அதிகாரமும் அக்கறையும் அளாவலற்ற ப்ரியமும்

இறுதியில் தான் என்னைப் பெண் என உணரவைத்தது. 

என் இளமை உணர்ச்சிகளை மீறி இனிதான ஒரு கூடலுக்கு 

சமூகத்தில் ஒருபடி அந்தஸ்து தரும் ஒரு தருணம் 

மிக விரைவில் வரப்போகிறது. தயவு செய்து 

என் திருமணத்திற்கு வந்துவிடாதே. 

மாங்கல்யம் சூட்டுவதில் எண்கணித சோதிடருக்கே 

என் முதல் வணக்கம். 

தலைவிதி நன்றாக இல்லை என்ற வருத்தத்தில் 

புரண்ட எனக்கு கோள்களும் கிரகங்களும் ஒன்றிசைந்து 

நன்மைக் காரியம் கிட்டும் என்பதோடு விடாது 

சிறப்பான வரன் என்று பல கட்டங்களுக்கு 

என் புகைப்படம் முதல் என் நற்சான்றிதழும் அனுப்பிவைத்தார்கள். 

பார்த்தவுடன் பிடித்துப்போக 

நான் என்ன ரதியா? ரம்பையா? 

தட்டிக்கழிக்கப்பட்டன பல வரன்கள்.

இருந்தும் சிலர் முறுக்கும் பலகாரமும் 

சுடச்சுட பால்த்தேநீர் குடிக்க வந்தவர்கள் போல 

வீட்டுற்குப்போய் என் வீட்டு விலாசத்தை மறந்துவிட்டார்கள் 

பின்புதான் நான் அறிந்தேன் 

மாப்பிள்ளை சீதனத்தில் தான் 

குடித்தனம் நடத்தப்போகிறார் என்று. 

நல்லவேளை முறுக்கோடு நறுக்கிவிட்டதாய் எண்ணிக்கடக்க 

அடுத்த மாப்பிள்ளை வீட்டார் அப்படியில்லை 

வரதட்சணை வேண்டாம் மகளாய்ப் பார்ப்போம் 

மகளை மட்டும் கட்டி அனுப்புங்கள் என்று 

என் தங்கையைக் கைகாட்டினார்கள். 

பரவாயில்லை அவளும் சற்று ரம்பையோ மேனகையையோ 

போல அழகாய்த்தான் இருப்பாள். 

வாழ்வில் பல அவமானங்களைக் கடந்துவிட்டேன் 

இது என்ன என் கையால் தாலித்தட்டை சுமந்து 

ஆசீர்வாதம் வாங்குவது ஒன்றும் பெரும் தவறில்லையே. 

அடுத்தமுறை பெண் பார்க்க வந்தவர்களிடம் 

உன்னைப்பற்றிக்கூற நான் விரும்பவில்லை 

காரணம் எனக்கோ வயது முப்பத்திரண்டு. 

இனியும் காதில் பஞ்சை வைத்துக்கொண்டு 

வீதியில் நடக்கமுடியாது. அக்கம்பக்கம் அடுக்கும் 

கேள்விகளுக்கு விடையளிக்காது சிரித்துக்கொண்டு 

கடக்க இயலாது. வேறு சாதிக்காரனுடன் ஓடிவிட்டாள் 

என்றால் பலகாரம் கூட பல்லில் படாமல் ஓடியிருப்பார்கள். 

நீயும் நல்லபடியாய் குழந்தைகளைப் பெற்று மணவாழ்வில் 

மகிழ்ச்சியோடு வாழ்கிறாய் எந்தவித குற்ற உணர்வுகளும் இல்லாமல். 

நானும் உன்னைக்கடிந்து கொள்ளவிரும்பவில்லை. 

என்னதான் சோற்றைப்போட்டு நடுவீட்டில் வைத்தாலும் 

அதன் புத்தி மாறாது என்பதில் மிகத்தெளிவாய் இருந்தேன். 

இந்த உரையாடல் உன்னை அழைப்பதற்கல்ல தவறிக்கூட 

என் திருமணத்திற்கு வந்துவிடாதே!


Saturday, August 8, 2020

தாழ்ச்சிக்குலம்



மண்ணோடு மனம் மங்கிப்போன மானிடா 

எங்கு தோன்றினான் 

நீ வரையறுக்கும் தாழ்ச்சிக்குலத்தவன்?

அவனும் நானும் பெண்ணுருப்பின் உதிரத்தின் 

உதிரிகளாய்ப் பிறக்க நீ மட்டும் செங்கதிரின் 

செஞ்சந்தனத்தில் பிறப்பெடுத்தாயா? 

வெடுக்கடிக்கும் பனிக்குட வாசனை நுகர நீ மட்டும்

பன்னீர் தெளித்து கமழமளித்தாயா?


நடமாடும் கல்லறைகளாய் நாடகம் அரங்கேற்றும் மானிடா 

என்ன வேறுபாடு கண்டாய் 

நீ வரையறுக்கும் தாழ்ச்சிக்குலத்தவனில்?

செங்குருதி வெண்குருதி தவிர கலங்கிய சேற்றுநீர் 

ஓடுகிறதா அவன் தேகத்தில்?

பசித்த தேகத்தில் வியர்வைத்துளியும் ஏக்கத்தில் 

உமிழ்நீர் சுரக்க உனக்கோ ஊற்றுநீர் சுரக்கிறதா?


வஞ்சகத்தின் வர்ணத்தை நாவில் நக்கிப்பிழைக்கும் பச்சோந்தி மானிடா 

என்னதான் செய்வாய் 

நீ வரையறுக்கும் தாழ்ச்சிக்குலத்தவனுக்கு?

ஒருபிடி சோற்றுக்கு ஏங்கும் ஒரு சாண் வயிற்றுக்கு 

ஓட்டைச் சிரட்டையில் களநீர் சொட்டச் சொட்ட 

குடுப்பதில் அவன் நா நனைந்திடுமா?

பெண்ணணியும் மார்புக்கச்சைக்கோ வரி கேட்கும்

குடுமிக்காரன் அதன் உள் சிறு இதயத்தின் தவிப்பை அறிந்திடுவானா?


கொடிய கருநாகம் கக்கும் விஷம் நாடி நரம்பெல்லாம் 

பாய்ந்து சர்ப்பமும் உனை கண்டு அஞ்சிடவைக்கும்  மானிடா 

என்ன செய்தான் 

நீ வரையறுக்கும் தாழ்ச்சிக்குலத்தவன்?

கல்வியில் சிறப்புற ஏட்டை விடுத்து உன் வீட்டு ஓட்டைப்பிரித்தானா? 

உயர்பணியில் உனக்கு சமமாய் அமர உறுத்தலான 

உன் மனக்கசப்பிடியிலிருந்து விலக பொன் 

பொருட்களால் அர்ச்சித்து அபிஷேகித்தானா?


மாயையினை போதையாய் சாயை கொண்டு சாதிக்கும் மானிடா 

என்ன செய்து அழித்தொழிப்பாய்  

நீ வரையறுக்கும் தாழ்ச்சிக்குலத்தவனுக்கு?

வன்புணர்வில் உன் சாதியம் சாதித்ததாய் 

மமதை கொள்கிறாள் உன் உயிர் அணுவும் கலப்புறும் என்பதை மறந்தாயா?

ஆணவக்கொலைகளை செய்கிறாய் நாளை 

புது விதை உன் வீட்டில் முளைக்காது என்ற துணிச்சலிலா? 


பேதமற்று புத்தி பேதலித்துப் பேசவில்லை மானிடா 

உன் அங்கவஸ்திரம் அங்கம் தீண்டலின்போதே 

நீயும் தீண்டாமை ஆகின்றாய் 

உதிரும் கேசமும் அவன் கையால் தீண்டுகையில் 

அதற்கும் உனக்கும் இல்லையடா வேறுபாடு 

தாழ்ச்சிக்குலத்தவனாய் பாகுபாட்டை ஏற்படுத்தமுன் 

பகுத்தறிந்து செயற்படு

தீண்டாமையை புறக்கணித்துக்கொள் அல்லது 

தீது நல்குவதில் உன்னைப் புறக்கணித்துக்கொள்

Wednesday, July 29, 2020

யசோதராக்களின் கனவு






















மின்னும் வேகத்தில் எத்தனை பேர் சூழ்ந்து 

சூழ்ச்சி வலை பின்னினும் இலக்கு ஒன்றை 

மட்டும் மனக்கண் முன் நிறுத்தி அவ்வலைதனை 

தகத்தெறிய காற்பந்தாட்ட பூமியில் கட்டைக்கால் 

காற்சட்டை முட்டி மேல் முழம் ஏறி சமூகத்தடை 

விலக்கத் தெரியாமலே அழிந்துபோகின்றன 

பல யசோதராக்களின் கனவு


வெள்ளைமுகம் தலைகாட்ட செங்கதிரோன் 

தலை சாய்க்க தேவைகள் காரியங்கள் பல 

ஆற்ற ஆண்துணையற்ற அங்கையர்க்கன்னி 

ஓரடி வாசற்படிதாண்டுதலில் கதி கலங்கிப்போகும் 

பெண்மையின் கற்பு பல அவச்சொற்களில் இருந்து 

அழிந்துபோகின்றன 

பல யசோதராக்களின் கனவு


காதல் கனவுகள் கல்லறைச்சுமைதாண்டி 

நீண்ட தூரம் பயணிக்க சாத்தானாகினும் 

ஒரே சாதியைத் தேடித் தேடி வேட்டைக்கு 

அனுப்பும் புள்ளிமான்கள் பல மனதால் 

உடலால் இரையாகி சுகமற்ற நோயில் வாடினும் 

இன்னும் அப்பன் அம்மை பிடியில் அழிந்துபோகின்றன 

பல யசோதராக்களின் கனவு


ஆடவன்  தன் சுகம் தேடி சலனம் தீர்க்க எத்தனை 

படி ஏறி இறங்கினாலும் பத்தினியாய் இவள் 

உடலைப் பட்டினி போட்டு பத்தியம் காப்பினும் 

பல் இழிக்கும் பல பங்காளிக்கூட்டம் சீண்டலுக்கு

பதில் மொழி கூறி மறுமணத்திலும் விவாகரத்திலும் 

கேலிப்பேச்சிற்கு தலைகுனிவதில் அழிந்துபோகின்றன 

பல யசோதராக்களின் கனவு


கற்பித்தலும் வியாபாரமாகிட கரும்பலகைகள் 

கூட தரம் பார்த்திட இலஞ்சங்கள் ஊழல்கள் 

தலைவிரித்தாட காஞ்சவன் பாலியல் இலஞ்சங்கள் 

பரிசாய்க்கேட்டிட  விண்வெளியில் பறக்கும் கனவுகள் 

விண்ணிலிருந்து விழுந்து மடிந்திட

அழிந்துபோகின்றன 

பல யசோதராக்களின் கனவு


அனைத்தும் துறப்பதில் மனம் கொண்ட புத்தன் 

தூக்கத்தில் யார் அறியாமலும் தன்சுமைகளில் 

இருந்து விடைபெற்று  ஞானம் பெறுவதில் மட்டும் 

சிந்தை கொண்ட ஒருகணம் குழந்தை குடும்பம் 

கடமைகள் மறந்து தன் சுகம் தன்நலன் கருதி 

வீட்டை விட்டு வெளியேறியிருப்பின் அவளை 

வேசி என்றே நாமம் சூட்டியிருக்கும் இந்த உலகின் 

மூர்க்கத்தால் அழிந்துபோகின்றன 

பல யசோதராக்களின் கனவு


Monday, July 27, 2020

புற்றுநோயாளியின் கர்ப்பம்














உயிர்ப்பிணைப்பில் இன்று ஒரு முடிச்சு
புதிதாய் இடப்பட்டதாக ஒரு சிறு உணர்வு
அதற்கு ஆதாரமாய் தள்ளிப்போன பல நாட்கள்
மயக்கம் மற்றும் வாந்தி


வைத்தியரின் ஆலோசனை தெய்வத்தின் வாக்காய்
காதில் ஒலிக்க கையில் இருந்த ஆதாரச்சான்றிதழில் 
புலன் செலுத்தப்பட்டு ஒருவகை மயக்கநிலை அடைந்திருந்தேன்


மருந்துமாத்திரைகளும் தடுப்பூசிகளும் என்
சின்னஞ்சிறு ஊந்துதுடிக்கும் உயிருக்கு 
வலு என்பதில் எனக்கு வலியே மறந்துவிட்டது 


கணவனின் இருசக்கரவண்டி மென்மையாய்ச் 
செல்லவும் என்னை ஆட்கொண்ட பயம் அவர்
இடுப்பை கைகளால் வளைத்துக்கொள்ள கண்களும்
இறுக சொருகிக்கொண்டன


மண்ணில் சாயமுன் உலகிற்கோர் என்னுதிரத்தின்
சாயலை அவரின் கைகள் தாங்கி முத்தமிடும் சுவடு
என் மனக்கண்ணிற் பதிந்து இதயத்தோடு ஒத்துத்துடித்தது


வாரம் இருமுறை வைத்தியநிபுணரின் வாடிக்கையாளராய் 
குருதி தானம் பெறும் யாசகி 
என் மழலைக்காய் சிறிது திருடிவைத்திருக்கிறேன்


உதிர்ந்த கேஷங்கள் தரை தவழ மிகுதி இருப்பவை 
பின்னலிட்டு நிலைக்கண்ணாடியில் விம்பமாய் 
ஜொலிக்க வயிற்றின் தொந்தியின் அழகு இமைக்க மறுக்கிறது


முதுகெலும்பின் தண்டுவடம் ஊசி வலியில் 
நொய்தலாக பேழை வயிற்றின் சுமை சுகத்தின் 
கணமாய் தலை நிமிர்த்திய நேர் நடையில் கௌரவம் பெறுகிறது


மெலிந்த தேகத்தில் சுவாசிக்கத் திடம் இன்றி 
ஒட்சிசன் முகக்கவசத்தின் துணையோடு 
என் சிறு உயிரும் சுவாசிக்கின்றது


ருசியறியா நா உணர்வற்று உணவை 
வெறுப்பினும் உட்சாகமாய் வேண்டி 
விரும்பி உண்கின்றேன் ஊட்டச்சத்தின் பிரதிபலன் 
என் சிசுவிற்கு வந்தடையட்டும்


சீராட்டி பாராட்டிட உன் பக்கமில்லா 
பாவியாவேன் என்றே உன் பாதம் தொட 
இறையாசியுடன் ஒரு பெண் குழந்தைக்காய் 
அனுதினமும் வேண்டிநிற்கின்றேன்


பாவ விமோட்ஷனம் பெற தகுதியற்றவள் நான் 
சுயநலக்காரி இவ்வுலகில் உன்னைப் பிரசவிக்க 
புற்றுநோய் பூண்ட தேகத்தை ஆடையாய் அணிந்துள்ளேன் நிரந்தரமாய்


தாயாய் கடமையாற்ற என் இன்னுயிர் உலகுநீர்ப்பினும் 
சேயாய் எனை பாவனை செய்ய
உன் அப்பாவின் மறு தாயாய் தாலாட்ட தினமும்
உன்னைத் தடவிக்கொடுத்து மன்றாடுகின்றேன்


எத்தனையோ சாகசங்கள் புரியும் பெண்மணிகள் 
பலர் மத்தியில் சாதனையாய் உனை கருவிற்சுமந்து 
சுகநலத்துடன் ஈன்றெடுப்பதே
என் வாழ்நாட்சுமைகளிற்கேற்ற செல்வம்

Monday, July 20, 2020

நான் மீண்டும் அறிமுகமாகின்றேன்


















நான் மீண்டும் புதிதாக 

உனக்கு அறிமுகமாகின்றேன்


என் முழுப்பெயர் முதல் 

செல்லப்பெயர் வரை அறிய

நீ மீண்டும் முயன்றுகொள்


உனக்கு ஆவலான அலாதிப்பிரியமான

விடையங்களை அறிய மீண்டும் 

வினாக்களைத் தொடுக்கின்றேன்


நீண்ட உரையாடல்கள் நீளமான இரவுகள்

பகட்டான பகல் மாலை வேளையும் தாண்டி

புதிய ஒரு தினத்தை மீண்டும் அமைக்கட்டும்


மணித்துளிகளுடன் உன் நினைவுத்துளிகளும்

ஒட்டிக்கொண்டு நிமிடமுள் ஸ்தம்பித்துப்போகட்டும்


கைவண்ணங்கள் பல உன்வண்ணம் 

காண்பித்தலில் வெகுமதி பெற்ற இறுமாப்பு 

இதயத்தில் மீண்டும் துடிக்கட்டும்


புரிந்துணர்வற்ற புரிதல்கள் மூண்டுபோன 

கசப்பு வார்த்தைகள் பரிசுத்தமான அன்பை

மீண்டும் பரிசீலிப்பதை தவிர்த்துக்கொள்ளட்டும்


நான் என்னையும் நீ உன்னையும் நேசிக்கச்செய்யும்

பரிபாசை யுக்திகள் நிலைக்கண்ணாடி விம்பத்தில் 

மீண்டும் இரசிக்கும் இரசணையூட்டட்டும்


நீ நீவீராய் செல்ல நான் நலிவுற்றுப்போக 

சங்கடமான சந்தேகத்தேக்கத்தில் நறுமலரும் பூக்க மீண்டும் கடிகார முட்கள் சுழறட்டும்


பழைய புத்தகத்தில் புதிய அத்தியாயம் 

சுவாரஸ்யமான 

பகுதிகளை மென்மையான 

தோகை கொண்டு புனரமைக்கட்டும்


மீண்டும் மீண்டும் அறிமுகமாகும் 

புதியவர்கள் போல்

தேடலும் போலி ஊடலும் 

ஊக்கமளிக்கும் உறவுவிற்காய் 

நான் மீண்டும் அறிமுகமாகின்றேன்







Saturday, July 4, 2020

என்னை அழவைத்தவர்களுக்கு நன்றி



















என்னை அழவைத்தவர்களுக்கெல்லாம் மனமார நன்றி சொல்கின்றேன் இந்த வேளையில்


இந்தக் கல்லிலும் ஈரம் இருப்பதாய் உணர்த்துவதற்கு 

அன்பை தற்காலிகமாய் அடகு வைத்தீர்கள்


கண்ணில் ஈரம் வருவதற்காய் சொல்லால் எத்தனை

ஈட்டி அம்புகளை என் மனதில் பிரயோகித்திருப்பீர்கள்


நம்பிக்கையை விதைப்பதற்கு எத்தனை நாட்கள்

கண்ணயறாமல் நிஜமுகங்களை வேளாண்மை 

செய்யாமல் காத்திருந்திருப்பீர்கள்


பொய்யான வார்த்தைகளை நிஜமென உணர்த்த

எத்தனை அரும்பாடுபட்டு புன்னகையை

கண்களில் காண்பித்திருப்பீர்கள்


நிழலாய் பின்தொடர்ந்து உயிராய் காப்பதாய்

பொய் வாக்கினை அளிக்க மனதை எப்படி

திடப்படுத்தியிருப்பீர்கள்


கண்கலங்கிய நொடியெல்லாம் கரம்பற்றி 

பாசப்பிணைப்பை வலுப்படுத்த வலியவந்து

உறவாடும் நளினங்களை எப்படி கையாண்டிருப்பீர்கள்

 

இத்தனையும் ஒருநாள் உதறலுக்காய் உங்களை 

மாற்றிக்கொண்டீர்களே என் கண்ணீரில்

இனி இவை இடம் பெறாத நன்றி மட்டுமே உங்களுக்கு


நாடோடிக்காதல்

நாடோடியாய் நானும் நீயும்  நகரெல்லம் வலம் வருவோமா ஒரு இரவு ஒரு பகல் தாண்டி  பயணத்தை தொடர்வோமா ஊரும் வேண்டாம் உறவுகளும் வேண்டாம்  நமக்கு நாமா...